எதற்குமே சின்னதாய் மென்னகை. அதற்குமேல் எந்தவித எதிர்ப்பையும் காண்பித்ததில்லை.
அழுததில்லை. எதிர்த்து கேள்வி கேட்டதில்லை. சோர்ந்து பார்த்ததில்லை. என்று கண்ணுக்கு தெரிந்த உருவத்தின் பின் கௌசல்யா மௌனமாய் எரிந்துகொண்டிருப்பதை அறியாமல் போனார் ராம்நாத்.
இப்போது உயிரை தக்கவைத்துக்கொள்ள காத்திருக்கும் அந்த நபரின் மீது எந்தவித பற்றும் இல்லாத ஒரு பார்வையை செலுத்தினார் கௌசல்யா.
தனக்கு எப்படியோ. பிள்ளைகளிடம் அவர் அப்படி இல்லையே. பிள்ளைகளுக்காக இருக்கவேண்டுமென்று நினைத்தவர்,
“அப்பாவுக்கு சரியாகிடும் கௌரவ். கவலைப்படாத…” என்றார் மகனிடம் திரும்பி மெல்லிய குரலில்.
“சரியாகிடனும். சரியாகட்டும்…” என்ற கௌரவ்வின் குரலில் என்ன இருந்ததென்று தெரியவில்லை.
அவனுடன் வெளியே வந்துவிட்டார் கௌசல்யா. அவரை மீண்டும் அறையில் கொண்டுவிட்டவன் ராம்நாத்திற்கு அறுவைசிகிச்சை செய்யவிருக்கும் ஆகர்ஷனை காண சென்றான்.
அவனுக்கு தெரிந்திருந்தது ஆகர்ஷன் தான் ராம்நாத்தின் உயிரை காப்பாற்ற இருக்கிறான் என்று.
ஷ்யாமளா கௌசல்யாவிடம் சொல்லியதை வைத்து அவனும் அவனை தேடி செல்ல மற்ற மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் ஆகர்ஷன்.
முடியவே முடியாது என்று மறுத்தவனை கிருஷ்ணகுமார் தான் பேசி அழைத்து வந்திருந்தார்.
இப்போது பேசி முடித்த பின்னும் மற்ற மருத்துவர்கள் கிளம்ப ஆகர்ஷன், கிருஷ்ணகுமாருடன் அமர்ந்திருந்தான். இப்போதுமே அதனை தான் செய்வதில் விருப்பமில்லை.
“அவங்க ஆகர்ஷன் இல்லையே. நீ தான் செய்யனும். நீ செய்யற…” என்றவர்,
“ஒரு டாக்டரா இருந்துட்டு நீ சொல்றது எத்திக்ஸ் இல்லையே ஆர்ஷ்…” என கேட்க,
“இது என் எமோஷன்ஸ் சம்பந்தப்பட்டது ப்பா. ஐ கான்ட்…” என்றான்.
“நாம எல்லாம் ஸ்டெதஸ் எடுக்கும்போதே நம்மளோட தனிப்பட்ட உணர்வுகளுக்கு முன்னுரிமை குடுக்க கூடாது. அங்க இருக்கிறது ஒரு உயிர்…”
“இதயமே இல்லாத உயிர் ப்பா. ஹார்ட்லெஸ் மேன். ஷிட்…” என்றான் ஆகர்ஷன்.
ஆஸ்திரேலியா சென்றே தீருவேன் என்ற பொழுதில் இத்தனை சீற்றம் காண்பித்தவன் அவன். அதன்பின் உட்சபட்ச கோபம் என்றெல்லாம் அவனை கண்டதில்லை.
இன்று இப்போது இயலாமை, தவிப்பு, பிரிவின் ஆற்றாமை என்று நிலைகுலைந்து போயிருக்கும் மகனிடம் இந்தளவிற்கேனும் கோபம் இல்லை என்றால் எப்படி என்றுதான் தோன்றியது.
“உடம்புல உயிர் இருந்துட்டா மட்டும் அவங்கல்லாம் இதயம் இருக்கிறவங்கன்னா நினைக்கிற ஆர்ஷ்?…” என்ற கிருஷ்ணகுமார்,
“சிலருக்கு அது ஒரு பாடி பார்ட். ஜஸ்ட் ஒரு ஆர்கன். அவ்வளோ தான். அவங்க செயல்பட அவங்க உடம்புக்கு தேவையான உயிரை குடுக்கற இதயம். மிஷினுக்கு கரண்ட் மாதிரி…”
“அக்ரி…” என சொல்லியவன் கண் முன்னே கண்ணீருடன் கௌசல்யாவின் பரிதாபமுகம்.
“நான் சிட்னி கிளம்பலாம்ன்னு டிஸைட் பண்ணிட்டேன்…”
“ஆர்ஷ்…”
“எந்த ஆர்க்யூமென்ட்டும் வேண்டாம் ப்பா…”
“அப்போ பிரத்யு…” என்று கிருஷ்ணகுமார் கேட்க ஆகர்ஷனின் உள்ளத்தில் உயிர் பிரியும் வலி.
எத்தனை ஆசையாய் நேசித்து, எவ்வளவு ஆவலாய் இந்த நாளுக்காக காத்திருந்து. அவனால் அதற்குமேல் முடியவில்லை.
எழுந்து நின்றவன் அங்கிருந்த திரையை விலக்க ஐஸியூ வெளியில் பிரத்யுக்ஷா கௌசல்யாவின் அருகில் அமர்ந்திருக்க கண்டான்.
தொண்டை அடைத்து நெஞ்சம் துடிப்பை குறைப்பதை போலிருந்தது அவளை காணுகையில்.
“ஒருநாள், ஒரே ஒருநாள் என்னை அவங்க பார்த்ததும் இந்தளவுக்கு ஆகிட்டாங்க. இந்த உறவால நித்தம் நித்தம் அவங்க வலியை அனுபவிக்கிறதா ப்பா?…” என்றான் கரகரக்கும் குரலோடு கண்ணீரை உள்ளிழுத்து.
“ஆர்ஷ்…”
“மிஸ்டர் ராம்நாத் பிரத்யுவோட தாய்மாமா. என் அம்மா என்னை பார்க்காம எப்படி? ப்பா நான் சொல்றது புரியுதா உங்களுக்கு?…”
“அதுக்காக பிரத்யு? அவ பாவமில்லையா? இது தப்பு ஆர்ஷ். அவ என்ன பண்ணினா?…”
“நானும் என் அம்மாவுக்கு இதைவிட வேற என்ன பண்ணமுடியும்? அவங்களோட நிம்மதியை தர்றதை விட…” என்றவன்,
“இங்க இங்க பாருங்க. அவங்க உக்கார்ந்திருக்காங்க…” என்று அவரை கூட்டிவந்து காண்பித்தான்.
“பாருங்க, என் அம்மா. கௌசல்யாம்மா…” அவன் அந்த பெயரை சொல்லுகையில் அதில் உருகிய பாசத்தில் கிருஷ்ணகுமாரின் இதயம் வலித்தது.
“பக்கத்துல அவங்களோட சின்ன மகன். பொண்ணு. பிரத்யு. சொந்தங்கள். இதுதானே அவங்க குடும்பம். இல்லையா ப்பா?…”
“டேய் ஆர்ஷ். கண்ணா. நீயும் தான்டா அவங்க பிள்ளை…”
“அதுக்காக தான் சொல்றேன். நான் அமைதியா நிக்கறேன்னு நினைக்கறீங்களா? உள்ளுக்குள்ள செத்துட்டிருக்கேன். என் அம்மா என்னை தூக்கி கொஞ்சின ஞாபகமில்லை. அவங்க மடில தூங்கின ஞாபகமில்லை. என்னோட அவங்க எதுவும் பேசின ஞாபகம் கூட இல்லை….”
“அம்மாவை அணைச்சிருப்பேனா? கழுத்தை கட்டிட்டு அவங்க முடியை பிடிச்சு இழுத்து சேட்டை பண்ணிருப்பேனா? பல்லில்லாத வாயோட அவங்க கன்னம் கடிச்சு முத்தம் குடுத்திருப்பேனா? சொல் பேச்சு கேளுடான்னு அம்மா என்னை அதட்டியிருப்பாங்களா? பொய் கோபத்தோட என் முதுகுல வலிக்காம அடிச்சு என்னை தூக்கி கொஞ்சியிருப்பாங்களா?…”
“இது எதுவுமே தெரியலையே ப்பா. எனக்கு ஞாபகம் இல்லை. ஆனா இதை எல்லாம் அனுபவிக்கனும்ன்னு ஆசையா இருக்கு. என்னை அவங்க பார்த்த பார்வை, என்னை தவற விட்டுட்ட வலியை காமிக்குது. எப்படிப்பா?…”
“இப்பவும் என்னோட கால் என் புத்தியோட கட்டுப்பாட்டை மீறி மனசோட ஏக்கத்தை தீர்த்துக்க ஓட பார்க்குது. போய் அவங்க மடில சாய்ஞ்சுக்க தோணுது. கட்டி புடிச்சு ஓன்னு அழனும்ன்னு தோணுது. ஆனா…”
“ப்பா, என் பேரை சொல்ல முடியலை அவங்களால. ஆனா அதை அவங்க முகம் காமிச்சதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சதே. அவங்களுக்கு எதுவுமே செஞ்சதில்லை. எனக்காக, என் அப்பாவுக்காக….” என்றவன் மனதினுள் கிருஷ்ணகுமார் உயிர்த்தெழுந்தார் மகனின் மனவுறுதிக்காக.
“கிருஷ்ணாப்பாவுக்கும் அம்மான்னா உயிர் இல்ல. எவ்வளோ ஆசையா எழுதியிருந்தாங்க. அம்மாவுக்காக எல்லாத்தையும் விட்டுக்குடுத்து விட்டுட்டு வந்தவங்க. அவங்க பையன் நான், நான் செய்யமாட்டேனா? என் அம்மாவுக்காக, அப்பாவுக்காக….” என்று சொல்லி,
“கஷ்டம் ப்பா. நான் அனுபவிச்சிருக்கேன். இத்தனை வருஷம் அவன் அம்மான்னு நினைச்சவங்க அம்மா இல்லைன்ற சூழ்நிலை அவனுக்கு வரவே வேண்டாம். வரவும் கூடாது. அதை கௌசல்யாம்மாவும் தாங்கமாட்டாங்க. சில வலிகளை அனுபவிச்சவங்களால இன்னொருத்தருக்கு அதை குடுக்க தோணாது. இதுவும் அப்படி தான்…”
“அம்மா, அவங்க பிள்ளைங்க, கௌரவ் எல்லாருக்கும் சரி. அப்போ பிரத்யுக்காக? ஆர்ஷ் கொஞ்சம் யோசி. அவ மனசுல ஆசையை வளர்த்துக்கிட்டா…” என்று சொல்ல,
“அவ புரிஞ்சுப்பா ப்பா….” என்றவனின் கண்கள் நிறைந்துவிட்டது பிரத்யுக்ஷாவை காணுகையில்.
“என்னால இதையுமே கடந்து வாழ முடியும். எப்பவுமே சிலர் நினைவுகளோட வாழறது புதுசா என்ன? ஏன் எனக்கு நீங்க இல்லையா?…” என்றவன்,
“எல்லாரோட வாழ்க்கையும் இங்க சிறப்பா, காதலா, நிம்மதியா அமைஞ்சிடாது இல்லையா? நான் ரொம்ப ஸ்ட்ராங் போல ப்பா. அதான் மேலும் மேலும்…” என்றவனை கிருஷ்ணகுமார் இழுத்து அணைத்துக்கொண்டார்.
“உனக்கென்னடா, உனக்கு ஒன்னும் இல்லைடா ஆர்ஷ்….”
“ஹ்ம்ம், எதுவுமே இல்லை. எல்லாமே எல்லாமே. ப்ச், ப்பா நான் கிளம்பறேன். இந்த சர்ஜரி முடிஞ்சதும். டாட். தட்ஸ் இட்…” என்று சொல்லி நிமிர்ந்தவன் கண் சிமிட்டி புன்னகைத்து,
“இந்த பிரத்யுவோட சேர்ந்து இப்போலாம் எனக்கும் கண் சிமிட்டல் பழக்கம் ஆகிடுச்சு. இல்ல?…” என்றான் கண்ணீர் புன்னகையுடன்.
“மனசெல்லாம் பதறுது ஆர்ஷ். நீ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பேசற. கொஞ்சம் பொறுமையா…”
“எஸ், ஐ’ம்…” என்றவன் கதவை தட்டும் ஓசையில் திரும்பி பார்க்க,
“கமின்…” என்றார் கிருஷ்ணகுமார் சப்தமாய்.
ஆகர்ஷன் சட்டென முகத்தை டிஷ்யூ எடுத்து துடைத்தவன் திரும்பி பார்க்க, உள்ளே நுழைந்தது கௌரவ்.
வந்தவன் பார்வை கிருஷ்ணகுமாரை தாண்டி ஆகர்ஷனிடம் பதிந்தது. அதில் அவனுக்கருகில் தெரிந்த திரை மறைக்காத கண்ணாடியின் அந்த பக்கமிருந்த கௌசல்யாவும் தான் பதிந்தார்.
“வாங்க மிஸ்டர் கௌரவ்…” என இயல்பான குரலில் கிருஷ்ணகுமார் அழைக்க,
“ஹலோ டாக்டர்…” என்ற கௌரவ் மீண்டும் ஆகர்ஷனை பார்த்தான்.
——————————–
பெட்டிகள் அடுக்கப்பட்டு எல்லாம் தயார் நிலையில் இருந்தது. மறுநாள் விமானம்.
அவன் கிளம்புவான் என்று தெரியும். ஆனால் என்ன காரணம் சொல்லி கிளம்புகிறான் என்பதனை கிருஷ்ணகுமார் பிரத்யுக்ஷாவை அழைத்து சொல்லிவிட்டார்.
“ஆமா, இதுல என்ன இருக்கு? நான் வந்த வேலை முடிஞ்சது. கிளம்பறேன்…” என்றான் ஆகர்ஷன்.
“வந்த வேலை முடிஞ்சதா?…”
“ஹ்ம்ம், அனுவோட வெடிங் முடிஞ்சது. இடையில சம் இஷ்யூஸ். இல்லைன்னா முன்னாடியே கிளம்பியிருப்பேன்…” என்று சொல்லியவன் மேல் ஆத்திரம் கூடிக்கொண்டே இருந்தவளுக்கு கண்ணீரும் உடைப்பெடுத்தது.
“விளையாடாதீங்க சீனியர். நாம, என்கிட்ட, நம்மோட…” என்றவளுக்கு வார்த்தைகள் பிடிபடாமல் தடுமாறி தவிப்புடன் அவனை பார்க்க ஆகர்ஷனுக்கு அவளின் நிலையை விழிகளால் மெல்ல முடியவில்லை.
உள்ளமெல்லாம் என்னெவோ செய்தது. உயிரை கசக்கும் உணர்வு அந்த கண்ணீர் கண்களை கண்டதும்.
“நீ,,, நீ கிளம்பு பிரத்யு. நானும் வெளில போகனும்…” என ஒருவாறு இதனை சொல்லும் முன்பே அவன் உள்ளுக்குள் உடைந்து சிதற,
“என்கிட்ட சொல்ல வேற எதுவும் இல்லையா?…” என்றாள் பிரத்யுக்ஷா அவனிடம்.
குரலெல்லாம் தழுதழுத்து பேசமுடியாமல் தள்ளாட்டத்துடன் அவனை பார்த்தாள்.
“எதுவுமில்லை…” உணர்வற்ற வார்த்தையை அவன் உதிர்க்க,
“அப்போ அவ்வளோ தான் இல்ல?…”
“ஆமா, ஆமா, ஆமா. லீவ் மீ அலோன்…” என்று ஆகர்ஷன் கத்திவிட விக்கித்து போய் அவனை பார்த்தாள் பிரத்யுக்ஷா.