“தேதி சொன்னா ஞாபகம் இருக்குமா?…” என்று தேதியை, மாதத்தை, இடத்தை எல்லாம் கூறியவன்,
“பிரத்யு அம்மா காவேரி ஆன்ட்டிக்கு ஆக்ஸிடன்ட் ஆனா நாள் ஞாபகம் இருக்கா?…” என்று கேட்க ராம்நாத்தின் ரத்தம் உறைவதை போலிருந்தது.
வெளுத்துவிட்ட முகத்துடன் கண்கள் அகல அச்சத்தோடு ஒருவித ஒவ்வாமையுடன் அவனை பார்த்தார் ராம்நாத்.
“இதுவும் ஒரு கெஸ் தான். அந்த தேதி, அதே நாள் பிரத்யு அவ அம்மாவோட அங்க இருந்திருக்கா. வந்திருக்கா. அன்னைக்கு தான் அந்த ஆக்ஸிடென்ட் நடந்திருக்கு. இப்ப வரை அவ வாழ்க்கைல வெறுக்கற அந்த நாள் என்னால எப்படி மறக்க முடியும். இப்போ ஒன்னொன்னும் யோசிக்கும் போது இருக்குமோனு தோணாம இல்லை…” என்றான் ஆகர்ஷன் ஸ்திரமாக.
அத்தனை சுலபத்தில் மறக்க முடியாதே அவரால். கௌசல்யாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும்பொழுதே அவரின் முன் வாழ்க்கை என்ன ஏதென்று விசாரித்து புகைப்படம் முதற்கொண்டு கண்டுபிடித்து கவனித்திருந்தாரே.
ஷ்யாமளா, அவரின் கணவர் கிருஷ்ணகுமார் என்றெல்லாம் எதையும் யோசிக்கவில்லை. பிள்ளையை வாங்கிக்கொண்டு வேறு மாநிலத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர் என்பது வரை தகவல் அறிந்திருந்தார்.
அவர்களை மனதில் பதிக்கவும் இல்லை. அவர் கண்டுகொண்டது எல்லாம் கிருஷ்ணகுமாரின் புகைப்படமும், அவரின் தாயும் மட்டுமே.
அந்த கோவிலில் வைத்து ஆகர்ஷன் கௌசல்யாவை சந்தித்ததும் மகனை பார்க்கமுடியாமல் கண்ணில் விழுந்த தூசியுடன் மனைவி நகர்ந்ததும் ஆகர்ஷனின் பாட்டி பேசியதும் என்று எல்லாம் கேட்டிருந்தவர் அந்த வேகத்தில் நிகழ்த்தியது தான் அந்த விபத்து.
மனதை பாதித்த அந்த உருவமும், கேட்டும் கேளாத பெயரும் தான் அவரின் நினைவடுக்கில் புதைந்திருந்தது.
எந்த சூழ்நிலையிலும் தன்னை எதிர்க்காத ஒரு துணை தான் வேண்டுமென்று தேடியவருக்கு சிக்கியவர் தான் கௌசல்யா.
பிள்ளையை பிரித்து சுயநலமாய் தன் மகனை மட்டுமே சீராட்டவேண்டும் என்று சத்தியம் வாங்கி இத்தனை வருடங்கள் வாழ்ந்த பின்னும் விதி இப்படி அந்த ஒருவனின் கையினாலேயே தன் உயிரை திருப்பி தந்திருக்கின்றதே என நினைக்க நினைக்க வெறுப்பு மண்டியது.
ஆகர்ஷன் யார் என்று இந்த நிமிடம் முழுதாய் புரிந்துவிட அவரின் கண்டுகொள்ளளில் எள்ளலாய் அவரை பார்த்தான் ஆகர்ஷன்.
“கௌரவ்…” என்று உச்சஸ்தானியில் ராம்நாத் முடிந்தமட்டும் குரலை உயர்த்த அவரை அலட்டிக்கொள்ளாமல் பார்த்தான் ஆகர்ஷன்.
“கௌரவ்…” என்றார் மீண்டும் ராம்நாத்.
கோபம் கோபம் அத்தனை கோபம். அவரால் சட்டென அங்கிருந்து செல்ல முடியாத சூழ்நிலை வேறு.
“ஆர்ஷ் போதும். ஸ்டாப் இட். இது சரியில்லை. உயிரையும் காப்பாத்தி இப்படி அவரை கஷ்டப்படுத்த. அதுவும் இங்க வச்சே. என்னாச்சு உனக்கு?…” என்றார் ஷ்யாமளா.
அதற்குள் கிருஷ்ணகுமார் கௌரவ்வை உள்ளே வரவழைக்க உடன் நுழைந்தார் கௌசல்யாவும்.
வரும்பொழுதே அவரின் பார்வை ஆகர்ஷனிடம் தான் ஆசையாய் தழுவி நின்றது.
அதனை பார்க்க பார்க்க ராம்நாத்திற்கு பற்றிக்கொண்டு வர கோபமாய் மகனிடம் திரும்பினார் அவர்.
“கௌரவ்…” என்று அவர் பேச ஆரம்பிக்க,
“நீங்க டென்ஷன் ஆகக்கூடாது மிஸ்டர் ராம்நாத். இப்போதான் சர்ஜரி முடிஞ்சிருக்கு. ஏன் எங்க ஹாஸ்பிட்டல் நல்ல ஹாஸ்பிட்டலா உங்களுக்கு தெரியலையா?…” என்றான் ஆகர்ஷன் இடையிட்டு.
“என்ன டாக்டர்?…” என்றான் கௌரவ் ஆகர்ஷனிடம்.
“உங்க அப்பாவுக்கு எங்க ட்ரீட்மென்ட்ல நம்பிக்கை இல்லையாம். வேற ஹாஸ்பிட்டல் ஷிப்ட் ஆகனும்ன்னு சொல்றாங்க. அதான் கன்வின்ஸ் பண்ணிட்டிருந்தேன்…” என அசராது ஆகர்ஷன் பேச ஷ்யாமளாவும், கிருஷ்ணகுமாரும் வாயடைத்து பார்த்தனர் மகனை.
இத்தனை தூரம் ஆகர்ஷன் நடந்துகொள்ள கூடும் என்று அவர்கள் இதுவரை அறிந்திருக்கவில்லை.
இப்படி ஒருவன் அவனுள் உறங்கிக்கொண்டிருக்கிறானே என்று தான் பதட்டமாய் பார்த்தனர்.
“என்ன?…” என்ற கௌரவ் ராம்நாத்தை பார்க்க, ஸ்ரீவத்சனும் உள்ளே வந்துவிட்டார்.
“ஏன் ஹாஸ்பிட்டல் மாத்தனும்?…” என அவரும் உள்ளே வர,
“மாப்பிள்ளை நான்…” என்ற ராம்நாத்தை கையமர்த்தி தடுத்த ஸ்ரீவத்சன்,
“இப்போதான் சர்ஜரி முடிஞ்சிருக்கு. இன்னும் ஐஸியூல இருந்து ரூம்க்கு கூட மாறலை. அதுக்குள்ள இதென்ன கலாட்டா?…” என அவர் முகம் சுருக்கி கூறியவர்,
“நான் கிளம்பறேன். ஆப்டர்நூன் ப்ளைட். நீங்க கண்ணு முழிக்கவும் சொல்லிட்டு போகலாமேன்னு தான் வெய்ட் பண்ணேன். ஓகே டேக் கேர்…” என்று சொல்லி முடிந்தது என்பதை போல கிளம்பிவிட்டார் ஸ்ரீவத்சன்.
செல்லும் முன் ஆகர்ஷனை ஒருபார்வை பார்க்க அவனுமே அவரின் கவனிப்பை கவனித்தான்.
ஸ்ரீவத்சன் கிளம்பவும் அனைவரையும் இயலாமையுடன் பார்த்தபடி ராம்நாத் இருக்க அவரை கூர்ந்து கவனித்தான் கௌரவ்.
ஆகர்ஷனின் முகத்தையும், அவன் ராம்நாத்தை பார்க்கும் விதத்தையும் கண்டுகொண்டவனுள் மீண்டும் பிரளயம்.
‘ஆக இவனுக்கும் அவனின் தாய் கௌசல்யா என்று தெரிந்திருக்கிறது’ என்பதினை கண்டுபிடிக்க பெரிய பிரயத்தனங்கள் எதுவும் தேவையிருக்கவில்லை அவனுக்கு.
“ஹாஸ்பிட்டல் எதுவும் மாற முடியாது. ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் தான் கிளம்பறோம்…” அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தான் கௌரவ்.
அதில் ஆகர்ஷன் ராம்நாத்தை பார்த்து புருவம் உயர்த்த ராம்நாத் கொலைவெறியில் பார்த்தார் அவனை.
போதாததிற்கு கௌசல்யாவின் பார்வை வேறு. மகனை கண்களாலேயே வாரி அணைத்துக்கொண்டார் அவர்.
“கௌரவ் அம்மாவை கிளம்ப சொல்லு. நீ இருந்து பார்த்துக்கோ. மத்த யாரும் வேண்டாம்…” என்று அவர் சொல்ல,
“அம்மா இங்க தான் இருப்பாங்க. என்னோட. வேற?…” என்றான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு கேள்வியாய்.
ஆகர்ஷன் பேச்சினூடே நகர்ந்து கௌசல்யாவின் அருகில் வந்திருந்தான். சம்பாஷணையின் நடுவில் தாயின் அருகாமையில் அவன் கண்கள் பனித்தது.
உள்ளமும், உடலுமே நடுங்கியது. தாயின் ஸ்பரிசம் காண தவிக்கும் குழந்தையாய் அவன் மெல்ல மெல்ல தன் கையை நகர்த்த விழிகள் கௌசல்யாவின் பக்கவாட்டு தோற்றத்தில் பதிந்தது.
புகைப்படத்தில் பார்த்ததை போலவே இப்போதும் அதே ஒடிசலான தோற்றம். கண்கள், கன்னங்கள் எல்லாம் அந்த வயதிலேயே சுருக்கம் பெற்றிருந்தது.
மஞ்சள் பூசிய முகம், காதோரம் கூந்தல் கற்றை சீரற்று காற்றிலாட தலைமுடியில் பாதி வெள்ளையும், பாதி கருமையுமாய் இருந்தது.
‘அம்மா அம்மா’ என்று அவனுள்ளம் பிதற்ற வாய்விட்டு அழைக்க முடியாமல் தொண்டை அடைக்க அவரின் அருகாமையில் வெம்மை கொண்டான்.
தாயின் அணைப்பின் சூட்டில் அமிழ்ந்துவிட ஏங்கிய மனமொன்று அனாதையாய் தன்னை வரித்துக்கொண்டு கதற இதோ ஒருவிரல், இதோ இருவிரல், சுண்டுவிரல் என்று மூவ்விரல்களை அவன் தன்னிச்சை போல தொட்டு பார்க்க கௌசல்யாவின் உயிரெல்லாம் மகனின் ஒற்றை தொடுகையில் ஆவலாதி கொண்டது.
அவனை பாராமலேயே கண்கள் நிறைய நெஞ்சம் விம்மி வெடிக்க அவன் தொட்ட விரலோடு கருத்தினை இறுக்க பற்றிக்கொள்ளும் ஆவேசம்.