கௌரவ் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற ஆகர்ஷன் ராம்நாத்தினை பார்த்தான்.
“என் அம்மாவை என் கண்ணை விட்டு தள்ளி வச்சா அவங்க என்னோட அம்மா இல்லைன்னு ஆகிடுமா? தப்பாச்சே…” என்றவனின் புன்னகை ராம்நாத்தின் நிம்மதியை கொன்றது.
கருவறுக்கும் பார்வையுடன் ராம்நாத் ஆகர்ஷனை வெறிக்க அவரை கொஞ்சமும் மதித்தான் இல்லை.
“நான் பார்ப்பேன். என் அம்மாவை நான் நினைக்கிற நேரம் பார்ப்பேன். என்ன செய்யமுடியுமோ செய். இல்லை உன் பிள்ளைங்க கிட்ட சொல்லு. பார்க்கலாம். என்ன நடக்குதுன்னு. சீக்கிரமே என்னை விலக்கி வைக்கமுடியாத பந்தத்தோட உன் முன்னாடி வருவேன்…” என்றவன்,
“என்ன சவுண்ட் கூடுது? ஆங். என் முன்னாடியே என் அம்மாவை அதட்டி பேசற மேன்? பி கேர் ஃபுல். உயிரை காப்பத்த மட்டும் தான் எனக்கு தெரியும்ன்னு நினைக்காத. என் அம்மாவுக்காக எதுவும் செய்வேன். மரியாதையா இருக்கனும்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ஆகர்ஷன்.
கிருஷ்ணகுமார் ஷ்யாமளா இருவரும் ஸ்தம்பித்த பார்வையுடன் அவரை பார்க்க, ராம்நாத்திற்கு அதனை கவனிக்கும் மனநிலை முற்றிலும் இல்லை.
பதட்டமும், ரத்த அழுத்தமும் கூட மீண்டும் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றார் ராம்நாத்.
“என்ன கிருஷ்ணா இதெல்லாம்?…” ஷ்யாமளா பதட்டமாய் கேட்க,
“ப்ச், கொஞ்சம் அமைதியா இரு ஷ்யாமா….” என ராம்நாத்தை கவனிக்க அதிர்வில் உண்டான மயக்கம் தான்.
அதன் பின்னரே நிம்மதியானார் கிருஷ்ணகுமார். அன்றைக்கு முழுவதும் ஐஸியூவில் இருக்கட்டும் என்று உத்தரவை பிறப்பித்துவிட்டு வெளியே வர அங்கே கண்ட காட்சியில் இருவருமே உறைந்து போயினர்.
வெளியே வந்த ஆகர்ஷன் பார்வை கௌசல்யாவை தேடி அலைய பக்கவாட்டில் கௌரவ்வுடன் நின்றார் கௌசல்யா.
“கௌரவ்…” உதடு துடிக்க மீண்டும் அந்த பெயரை அவர் கூறினார்.
“ம்ஹூம். ஆகர்ஷன். ஆகர்ஷன் பேரை சொல்லுங்க. சொல்லுங்க ம்மா…” என்று சொல்ல அந்த அழைப்பை கேட்டுவிடமாட்டோமா என ஆகர்ஷனும், அழைத்துவிட வேண்டுமே என்று கௌசல்யாவும் தவித்து போய் பார்த்தனர்.
“கௌரவ்…” என்றார் மீண்டும் கண்ணீருடன்.
அந்த கண்ணீர் முகத்தை, அவரின் இயலாமையை ஆகர்ஷன், கௌரவ் இருவராலும் காண சகிக்கவில்லை.
“ம்மா…” என்று கௌரவ் மீண்டும் கூற,
“விடுங்க ப்ரோ. பேர் சொன்னா தானா?…” என்ற ஆகர்ஷன்,
“உங்களுக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படியே கூப்பிடுங்க. பெயர்ல என்ன இருக்கு. மனசுல இருக்கு. ஏன் கௌரவ்ன்னு கூட கூப்பிடலாம்…” என்றான் கண் சிமிட்டி கண்ணுக்குள் கலங்கும் நீரினை உள்ளிழுத்து.
“ம்மா, பேசுங்க. பேசலாம் தானே?…” கௌரவ் கூற தலையசைத்த கௌசல்யா ஆகர்ஷனை பார்த்தார்.
‘உனக்கு புள்ளைன்னா அது என் மகன் கௌரவ் மட்டும் தான். இனிமே நமக்குன்னு பிறக்க போற பிள்ளைங்க. உன் வயித்துல வந்துச்சே ஒன்னு அது பேர் கூட இனிமே உன் வாய்ல வர கூடாது. சத்தியம் பண்ணு கௌசி’ என இரண்டுமாதமேயான பச்சிளம் குழந்தையின் உச்சந்தலையில் கைவைத்து சத்தியம் செய்யும் வரை குழந்தைக்கு பால் கொடுக்கவிடாத கணவனின் வார்த்தைகள் தீயாய் இப்போதும் தவித்தது.
பசியில் பிள்ளையின் தொண்டை வரண்டு வீலென்று கத்தி கையை காலை உதைத்துக்கொண்டு அவரின் மாரை முட்டிக்கொண்டு கதறிய குழந்தையின் மீது வைத்த சத்தியம் அவரை ஊமையாக்கி நிற்க வைத்தது இப்போதும்.
‘அந்த பேரே உன் வாய்ல வரக்கூடாது.’ எத்தனை ஆக்ரோஷமாய் கூறினார். பேர் தானே சொல்ல கூடாது என மனதினோரம் பளிச்சென்று ஒரு எண்ணம்.
ஆனாலும் பயந்து பயந்து ஆயிரம் தெய்வங்களை கோடிமுறை வேண்டியவர், ‘இந்த ஒருதடவை மட்டும் பேசிக்கறேனே’ என மனத்தால் மண்டியிட்டவர் தன் முகத்தினை ஏக்கமே உருவாய் பார்த்து நின்றவனை பார்த்தார்.
“நல்லா இருக்கியாப்பா? நல்லா இருக்கனும். சந்தோஷமா இருக்கனும்…” என்று தொண்டை அடைக்க கூற ஆகர்ஷனுக்கு அந்த வார்த்தைகளே போதுமானதாய் இருந்தது.
அவரின் கைகளுக்குள் சென்று கூடு சேர்ந்துவிட்ட நிம்மதி. சின்ன விஷயத்திலும் கூட தன் சந்தோஷங்களை பார்த்துக்கொள்பவனுக்கு இது விலைமதிக்க முடியாத ஒன்றாய் தான் இருந்தது.
எதிரிக்கும் இந்த நிலை வந்துவிடவே கூடாதென்று தான் மனதார நினைத்தார் ஆகர்ஷன்.
“சரி புறப்படறேன்…” என்றவன் கௌரவ்விடம் கை நீட்ட,
“வாங்க ஆகர்ஷன்…” என்றான் கௌரவ்வும் அவனிடம் கை குலுக்கி.
அவனிடம் நீட்டியதை போலவே இயல்பு போல ஆகர்ஷன் கௌசல்யாவிடம் கை நீட்ட,
“ஹ்ம்ம், குடுங்க…” என்ற கௌரவ் கௌசல்யாவின் கரத்தினை எடுத்து ஆகர்ஷனின் உள்ளங்கையினுள் பொறுத்த இருவரின் உள்ளமும் ஆனந்த கொண்டாட்டம் அடைவதற்கு பதில் ஆவேசமாய் கதறி தீர்த்தது.
ஒற்றை தொடுகை. இதயமெல்லாம் ரணவேதனை. பிள்ளையின் கருத்தினை பிடித்திருந்தவர் கண்கள் கண்ணீர் உகுக்க சட்டென குனிந்துகொண்டார் மற்றவர்கள் காணாமல்.
அவரின் பரிதவிப்பை பார்க்க முடியாது விழியோரம் துளிர்த்த நீரினை சுண்டிவிட்ட ஆகர்ஷன்,
“வர்றேன். வர்றேன் ம்மா…” என அடிவயிற்றிலிருந்து ஆசையுடன் சொல்லிவிட்டு அவர்களின் பார்வையிலிருந்து மறைந்தான்.
“அம்மாவா?…” கௌசல்யா திகைத்து நின்றதோடு அவரின் காதினுள் ஆகர்ஷனின் குரலே ரீங்காரமாய் ஒலித்துக்கொண்டிருந்தது.
“நீங்க அம்மா தானே? ஆகர்ஷனும் உங்களுக்கு மகன் தானே?…” என்ற கௌரவ்,
“ஐ மீன் என் வயசுக்கு ஒன்னுரெண்டு கூட போல…” என்றான் சமாளிப்பு போல.
அதையெல்லாம் கேட்கும் நிலையில் அவர் இல்லையே. மீண்டும் மீண்டும் எந்த அம்மா என்னும் அழைப்பு.
வற்றிவிட்ட பாலையில் நீரூற்று போல ஈரம் கசிய அமர்ந்துகொண்டார் கௌசல்யா.
ஆகர்ஷன் கிளம்பி சென்ற அதே நேரம் ஸ்ரீவத்சன் பிரத்யுக்ஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
“ராம்நாத் டிஸ்சார்ஜ் ஆனதோட நீயும் ஊருக்கு வந்து சேரனும் பிரத்யு. வந்தே ஆகனும்…” என உத்தரவிட,
“கண்டிப்பா வருவேன். கண்டிப்பா நீங்க சொல்ற எல்லாமே பண்ணலாம். இங்க இருக்க கூடாதா இருக்கலை. ஆனா என் லைப் ஆகர்ஷன் கூட மட்டும் தான். உங்களை சண்டை போட்டு, எதிர்த்துட்டு எல்லாம் நான் போகவே மாட்டேன். ஸ்ரீவத்சன் பொண்ணா தான் இருப்பேன். ஆனா நீங்களா என்னை ஆகர்ஷனுக்கு தர்ற வரைக்கும் நானா என் கல்யாணத்துக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்கமாட்டேன்…” என்றவள்,
“என் மேல நம்பிக்கை இல்லைன்னா சொல்லுங்க இப்பவே நான் என் வேலையை விட்டுட்டு வர்றேன். எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை டாடி. என்னால எங்க வேணா இருக்க முடியும். நீங்க அடைச்சு வைக்கறீங்களா வச்சுக்கோங்க. ஆனா ஒன்னு, நான் மிஸ் பிரத்யுக்ஷா ஸ்ரீவத்சனா இருந்து பிரத்யுக்ஷா ஆகர்ஷனா மட்டும் தான் மாறுவேன்….” என்றிருந்தாள் பிடிவாதமாய்.
இதனை பேசவேண்டாம் என்றுதான் அவளும் நினைத்தது. ஸ்ரீவத்சனுமே நேரடியாக கேட்காமல் அங்கே வேலை செய்வது பிடிக்கவில்லை அது இதென்று காரணத்தை அடுக்க நேரடியாகவே தெரிவித்துவிட்டாள் தன் விருப்பத்தினை.
இதற்கு தானே சுற்றி வளைத்து பேசுகிறீர்கள் என்று சொல்லிவிட ஸ்ரீவத்சன் முகத்தில் ஈயாடவில்லை.
அவர் கிளம்பி சென்றதுமே தான் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவிற்கு வந்தவள் ஷ்யாமளாவிடம் பேசி அதற்கு ஆவன செய்துவிட, அடுத்த அழைப்பு காஞ்சிபுரத்திற்கு.
ஸ்ரீவத்சன் காவேரியின் திருமண நாள் அன்று அவர்கள் திருமணம் நடைபெற்ற கோவிலுக்கு செல்வது வழக்கமாகி இருக்க சென்றதென்னவோ மன நிம்மதிக்கு தான்.
ஆனால் ராம்நாத்தின் நிம்மதியை கொத்தாக பிடிங்கிக்கொண்டு வந்துவிட்டாள் ஸ்ரீவத்சன் முன்னிலையிலேயே.
அவளே எதிர்பாராதது ஆகர்ஷன் மீண்டும் இந்தியாவிலேயே இருப்பதற்காக திரும்பி வந்தது.
அவன் வந்த பத்து நாட்களில் பிரத்யுக்ஷா மீண்டும் சிட்னிக்கு புறப்பட்டுவிட்டாள்.
“உங்களுக்கு ஒரு சூழ்நிலை சொன்னீங்களே, மூச்சு முட்டுது. நான் போகனும்ன்னு. இப்போ எனக்கு அப்படி தான். நானும் போறேன். வருவேன். எங்க போயிடுவேன்…” என்று கிளம்பியிருந்தாள் மனஅழுத்தம் தாளாமல்.
இதோ ஏழு மாதங்கள் ஆமை வேகத்தில் நகர்ந்திருந்தது. மீண்டும் படிப்பினை துவங்கிவிட்டாள்.
‘பீடியாட்ரிக்’ என்றதற்கு ஒரு பேயாட்டம் ஸ்ரீவத்சன். அவரும் மகள் ‘ஹார்ட் சர்ஜன்’ என்று பீற்றிக்கொள்ள நினைக்க பிரத்யு செவி சாய்க்கவில்லை.
சிட்னியில் பால்கனியில் நின்றிருந்தவள் மனம் அலைப்புறுதலில் தத்தளித்து கொண்டிருந்தது.
இரண்டு நாட்களாக காவேரிக்கு உடல்நிலை சரியில்லை. செல்லும் சூழ்நிலையும் இல்லாது தாயை தேடி தவித்தபடி இருந்தவள் மீண்டும் அறைக்குள் நுழைந்து ஆகர்ஷன் இருந்த வீட்டின் சாவியை எடுத்துக்கொண்டாள்.
அவள் கிளம்பும் பொழுதே ஷ்யாமளா அவளிடம் ஒரு சாவியை ஒப்படைத்து தேவையானால் உபயோகிக்கும்படி கூறியிருக்க சஞ்சலம் கொள்ளும் பொழுதுகள் எல்லாம் அவளின் தாய்மடி அந்த வீடு தான்.
கதவினை திறந்து உள்ளே சென்றவள் வீட்டின் விளக்குகளை ஒளிரவிட்டு விட்டு மாடிக்கு சென்றாள் ஆகர்ஷனின் அறைக்கு.
யாருமற்ற வெறுமையான வீடு இன்னும் அவள் துக்கத்தினை தூண்டிக்கொண்டே செல்ல விம்மலை அடக்கிக்கொண்டு அங்கிருந்த புகைப்படங்களில் கவனத்தை பதிக்க அவனின் ஒவ்வொரு புகைப்படமும் அவன் மீதான தேடலை அதிகரித்தது.
“சீனியர்…” என்றவளின் மெல்லிய குரல்
“ஹ்ம்ம் பிரத்யுடா…” என தன்னை நெருங்கி நிற்கும் அவனின் குரலும் அவன் வாசமும்.
திடுக்கிட்டு திரும்பியவள் இதுவும் கனவாகிவிட கூடாதே என அத்தனை வேண்டுதலுடன் அவன் தானா என்று பார்க்க அவனே தான்.
“பேனிக் ஆகிடாத பிரத்யு. நான் தான்…” என்றான் ஆகர்ஷன் கண் சிமிட்டி புன்னகைத்து.
“சீனியர்…” என்றவள் பாய்ந்துவந்து அவனை அணைத்துக்கொள்ள அவளிடம் இதனை எதிர்பாராதவன் தடுமாறி பின் சுதாரித்து நின்றான்.
‘ரொம்ப மிஸ் பண்ணியிருக்கா’ என ஆதுரமாய் நினைத்தவன் அணைப்பும் நிமிடத்திற்கு நிமிடம் பிடிமானத்தை கூட்ட மனம் அவன் கட்டுப்பாட்டை இழக்க துவங்கியது.
அணைப்பு மட்டுமே பிரத்யுக்ஷா துவக்கியது. உச்சந்தலையில் இதழ் பதித்து, நெற்றியின் இறங்கி, கன்னத்தில் காயத்துடன் கள்ளம் செய்து கவிதையாய் ஒரு இதழ் பதிப்பு ஊர்வலத்தினை ஆகர்ஷன் மேற்கொள்ள கண்ணீரில் காதலாய் கரைந்தாள் பிரத்யுக்ஷா.