மற்றவர்களும் வீடு வந்து சேர ஸ்ரீவத்சன் செல்லவேண்டாம் என்று நினைத்தாலும் மனைவிக்காக செல்லவேண்டிய கட்டாயம்.
மயக்கம் தெளிந்த ராம்நாத்தின் பார்வை பிரத்யுக்ஷாவை பயத்துடன் பார்க்க ஸ்ரீவத்சன் அவரை பார்க்க கூட உள்ளே வரவில்லை.
காவேரி ஒருபுறம் அழ, சாருலதா இன்னொருபுறம் அழ என்று அழுகையில் கழிய ராம்நாத்தின் பார்வையெல்லாம் கௌசல்யாவிடம் தான் இப்போது.
அவருக்கு குடிக்க எடுத்து வந்தவர் அதனை கொடுக்க வாங்க தெம்பில்லாததை போலொரு நடிப்பு ராம்நாத்திடம்.
“நீயே குடு கௌசி…” என்று அவர் கேட்க,
“ம்மா அப்பா சொல்றார்ல…” என்றாள் சாருலதா.
அனைவரும் இருக்க கண்டு ராம்நாத்திற்கு அவரே புகட்ட கௌசல்யாவின் கையை பிடித்துக்கொண்டார் ராம்நாத்.
வெகுநாட்களுக்கு பின்னான அவரின் தொடுகை. ராம்நாத்தின் முகம் பார்த்த பிரத்யுக்ஷாவிற்கு முகச்சுளிப்புடன் பற்றிக்கொண்டு வந்தது.
“இந்தாள் மத்தவங்க பார்க்கத்தான் எம்டன் டாடி மாதிரி காமிச்சுக்கறது. ஆனா உள்ளுக்குள்ள பொன்மேனி உருகுதே என்னாசை பெருகுதே ஸாங் பேக்ரவுண்ட ஓடவிட்டு இல்லாத வேலை பார்க்கறது. இந்தத்தை எப்படித்தான் சகிச்சிட்டு போறாங்களோ…” என சத்தமின்றி முணங்கத்தான் முடிந்தது.
அதேநேரம் ராம்நாத்தும் பிரத்யுக்ஷாவினை பார்க்க, ‘கையை விடுய்யா’ என கண்களால் மிரட்டினாள் பிரத்யுக்ஷா.
விந்தையிலும் விந்தை. ராம்நாத் கௌசல்யாவின் கணவன். ஆனால் அந்த அருகாமையும் தொடும் விதமும், கௌசல்யாவை பிடித்து வைத்திருப்பதும் பார்க்க ஒப்பவில்லை மனதிற்கு.
பிரத்யுக்ஷாவின் சமிஞ்சையை கண்டுகொண்டவரும் வேறு வழியின்றி கையை எடுக்க கௌசல்யா விலகி சென்றுவிட்டார்.
சற்றுநேரத்திற்கெல்லாம் அவர்கள் கிளம்பி செல்ல காவேரியின் மனது வேதனையுடன் இருந்ததது.
“என் அண்ணன் பாவம், எத்தனை கஷ்டத்தை தான் தாங்குவார்…” என்று வழியில் கூற,
“அவங்கவங்க விதிச்சதுக்கு தான் அனுபவிக்கிறாங்க. இந்த பேச்சை விடு காவேரி…” என்றுவிட்டார் ஸ்ரீவத்சன்.
மனதிற்கு ஆகர்ஷன் பற்றிய உண்மை அறிந்தவறினால் அந்த அதிர்வில் இருந்து மீள முடியவில்லை.
காவேரி சொல்லியதில் இருந்து, அவர் அறிந்தது வரை கௌசல்யாவிற்கு அது முதல் திருமணம் என்பது தான்.
அதுவும் ஒரு குழந்தை இருப்பது எதிர்பார்க்காத ஒன்று. ராம்நாத்தும், அவரின் பெற்றவர்களுமே பெண்ணை பார்த்துவிட்டு வந்திருக்க அவரும் பெரிதாய் அதில் தலையிடாதிருந்தார்.
இன்று அந்த உறவு தன் மகள் மூலமாகவே நெருங்கி வருவது என தடுமாறி கொண்டிருந்தார் ஸ்ரீவத்சன்.
இத்தனை குழப்பத்தில் மகள் சிட்னி கிளம்புகிறேன் மேல்படிப்பிற்கு என்று சொல்ல, அப்போதும் ஆகர்ஷனுக்கு அவர் பச்சைக்கொடி காட்ட இயலாது என்று பிரத்யுக்ஷாவின் பிபியை ஏற்றிவிட்டார்.
“உங்க விருப்பம். என் லவ்க்கு ஓகே சொல்றதும் சொல்லாததும். சொல்லுங்கன்னு நானும் கட்டாயப்படுத்த மாட்டேன். நீங்களும் வேற விஷயத்துக்கு என்னை கட்டாயப்படுத்தாதீங்க….” என்றுவிட்டாள் உறுதியாக.
காவேரியும் கவலையுடன் வேறு வழியின்றி மகளை மனதில்லாமல் அனுப்பிவைத்திருந்தார்.
அதுவே பிரத்யுக்ஷாவின் மனவுளைச்சலை கூட்டியது. இப்படி அனைவரையும் நோகடித்துவிட்டு வந்துவிட்டோமே என்று ஒருபுறம்.
இத்தனை வருடங்கள் கழித்து விரும்பியதை போலவே இந்தியா சென்றும் அங்கே இருக்க முடியாத சூழ்நிலை.
அப்போதிருந்த மன அழுத்தம் அவளால் அங்கே நீடிக்க முடியும் என்று தோன்றவில்லை. வந்துவிட்டாள்.
வந்ததில் இருந்து மீண்டும் அந்த தனிமை. எதிர்வீட்டின் வெறுமை, நிசப்தம் எல்லாம் நாளுக்கு நாள் அவளை வதைத்தது.
இதோ அனைத்திற்கும் மகுடமாய் அவன் அவளருகில் கண்ணீர் கரையும் மட்டும் அழுது தீர்த்தாள் அவனின் நெஞ்சத்தில் சாய்ந்து.
“தினமும் என்னன்னு தேடுற நீ? சொல்லேன்…” சரசமாய் புன்னகைக்க அவனின் கரங்கள் அவளை விட்டு பிரியேன் என்பதை போல் இறுக்கிக்கொண்டது.
“வேண்டாம்ன்னு சொன்னவங்க கிட்ட எல்லாம் என் பீலிங்க்ஸ ஷேர் பன்றதில்லைன்னு பாலிஸி வச்சிருக்கேன்…”
“வேணும்னு நினைகிறவங்கக்கிட்ட தான் என்னோட மொத்த உணர்வுகளையும் காட்டனும்ன்னு நானும் பாலிஸி வச்சிருக்கேன் பிரத்யு. தெரியுமா?…” என்றவன் முகம் அவளின் தோளில் சாய,
“சீனியர்…”
“ஹ்ம்ம், எல்லாத்துலையும் சீனியர் தான். கேளு பிரத்யு…” என்றான் மயக்கும் குரலில்.
“என்ன பன்றீங்க?…” என்றவள் குரல் காற்றாகி போக,
“பேசுடா. எவ்வளோ வேகம்? இப்படி இவ்வளோ டைட் ஹக். காட், ஐ கான்ட் பிரத்யு. இப்பவே இங்கயே எல்லாத்துக்கும் சேர்த்து தீர்வு சொல்லிடுவோமா?…” என்றான் இன்னுமின்னும் அவளை நெருங்கி அணைத்துக்கொண்டே.
“எல்லாத்துக்கும்ன்னா? என்ன?…” வார்த்தைகள் திக்கி திணறி தடுமாறி வந்தது.
“மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஆகர்ஷன் பிரத்யுக்ஷா. சொல்லி பாரேன் அழகான தீர்வு. சொல்லும்போதே ஸ்வீட்டா. பிரத்யு நீ சொல்லு…” என்றான் மொத்தமாய் அவளை அவன் வசமாக்கி.
இருவருமே அவர்களின் நிதானத்தில் இல்லை. நிமிடங்கள் உறைந்துவிட ஒருவருக்குள் ஒருவர் இணைந்துவிடும் வேகம்.
ஆகர்ஷனிடம் ஆதுரமான அணைப்பை அனுசரணையை மட்டுமே அனுபவித்திருந்தவள் அவளை மொத்தமாய் எடுத்துக்கொள்ளும் விதமான இந்த தேடலை எதிர்பார்க்கவில்லை.
நொடிகள் நீண்டால் நிச்சயம் எல்லை மீறும் அழகான அபாயம். முற்றிலும் நிலைகுலைந்திருந்தவள் அவனின் ஷர்ட்டை பற்றி தன்னை நிதானப்படுத்த பார்க்க முடியவில்லை.
தள்ளிவிட்டு செல்லும் திராணியுமின்றி முழுதாய் அவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்து நின்றவளின் மௌனத்தில் பனியாய் அவளுள் கரைய துவங்கினான் ஆகர்ஷன்.
மெல்ல மெல்ல இடைவெளிகள் சிக்கி திணறி மூச்சுக்கு ஏங்கி மொத்தமாய் விடுபட்டு விடைபெற்று செல்ல நெருக்கங்கள் அலைமோதியது.
கண்மூடி நின்றவளின் முகத்தினை நிமிர்த்தி அவளின் சிவந்த மூக்கின் நுனியில் மீண்டும் ஒரு இதழொற்றல் இதமாய் அவன் பதிக்க,
“கல்யாணத்துக்கு முன்னாடியே ஸ்வாஹாவா சீனியர்?…” அவன் கைகளுக்குள் மயக்கத்துடன் கேட்டாள் பிரத்யுக்ஷா.
“ஹ்ம்ம், சும்மா ஒரு டெஸ்ட் ட்ரைவ் பிரத்யு. ரொம்ப கஷ்டமில்லாம, உன்னை மறந்து, என்னை மறக்கடிச்சு இந்த சொந்தபந்தம், ஊர் ஜனங்க எல்லாம் தள்ளி வச்சு நீயும் நானும் மட்டும். நமக்குள்ள அந்த இடைஞ்சலும் இல்லாம, இடைவெளி இல்லாம. ஹ்ம்ம் சொல்லு…” என்று அவளை மயக்கிக்கொண்டே இருந்தான் ஆகர்ஷன்.
அவனின் சொல்லில் மெல்ல சிரித்தவள் ஆமோதிக்கவும் இல்லை. ஆட்சேபிக்கவும் இல்லை.
“யூர் விஷ் சீனியர்…” என்று சொல்லி கண் சிமிட்டிய நொடி அவளின் இதழ்களை மொத்தமாய் எடுத்துக்கொண்டான் ஆகர்ஷன்.
ஆழமாய், ஆத்மமாய், அற்புதமான ஒரு முத்த தீற்றல் இருவரின் மனதினுள் வர்ணஜாலங்களை காண்பித்தது.
றெக்கை கட்டிய நெஞ்சங்கள் விண்ணில் மேகமாய் சேர்ந்து கலந்து வீழ்ந்து வான்விட்டு இறங்க உள்ளமெல்லாம் கள்ளுண்டு துள்ளியது.
மெதுவாய் அவளை விடுவித்தவன் இன்னும் தன் கைகளுக்குள் அவனுக்கென நின்றவளை அணைத்தவன், கைபிடித்து இழுத்து கீழே தள்ளி அவளின் மடிசாய்ந்தான் ஆகர்ஷன்.
பிரத்யுக்ஷாவின் விரல்கள் ஆகர்ஷனின் தலை கோத அவளின் முகம் பார்த்தபடி சாய்ந்திருந்தவன்,
“காதல்ன்னா உன்னோட ஒபீனியன் என்ன பிரத்யு?…” என்றான்.
“நீங்களே பெட்டரா ஒன்னு யோசிச்சு வச்சிருப்பீங்க சீனியர். நான் ஏன் மொக்கையா சொல்லிட்டு மொக்கை வாங்கனும். நான் வரலைப்பா இந்த ஆட்டைக்கு…” என்று எழுந்துகொள்ள பார்க்க, தான் எழுந்து தன் நெஞ்சத்தில் அவளை சாய்த்துக்கொண்டான் ஆகர்ஷன்.
“காதல் காதலிக்கப்படறதும், காதலிக்கிறதும் மட்டும் இல்லை. அந்த காதலே நம்மை விரும்பனும். காதலிக்கனும். நம்மை விட்டு ஒருநொடி கூட பிரிஞ்சிட முடியாத அளவுக்கு இறுக்கி பிடிச்சுக்கனும். அந்த காதலால நாம காதலிக்கப்படனும். எல்லாருக்கும் அது சாத்தியம்ன்னா காதலும் காதலிக்கும். அது மேஜிக்கல். டிவைன். அப்படி வாழ்க்கையை தான் வாழனும். நாமளும் வாழனும்…” என்றான் ஆத்மார்த்தமாய் ஆகர்ஷன்.
அவளை ஆகர்ஷிக்க என்றே வந்தவனை போலிருந்தது அவனின் அருகாமையும், பேராண்மையும்.
நெஞ்சமெல்லாம் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க அவனின் பார்வை அவளின் அணுக்கள் ஒவ்வொன்றையும் ஆகர்ஷிக்க அந்த உணர்வு பிரத்யுக்ஷாவின் மூச்சை அடைத்தது.
உணர்வின் உந்துதலில் மேல்மூச்சு வாங்கி தன்னை நிதானிக்க முயன்றாள் பிரத்யுக்ஷா.
“ஹேய் என்னாச்சுடா?…” என ஆகர்ஷன் கேட்க,
“நீங்க சொன்ன டிவைன், கொஞ்சம் முன்னாடி மூச்சு விட முடியாம பண்ணுனீங்களே அதுவா சீனியர்?…” என்றவள்,
“நீயாடா என்னை கொலை பண்ண பார்த்தன்ற பீலாகி போச்சு. ஹ்ம்ம்…” என்று உதட்டை பிதுக்கி அவனின் பார்வையில் அடித்துபிடித்து எழுந்து ஓட,
“அடிங் ராஸ்கல்…” என்றவன் அவளை வீடு முழுவதும் விரட்டிக்கொண்டு துரத்தினான்.
காதலும் அவர்களை தான் துரத்தியது காதலாய், காந்தமாய், காற்றாய், கார்மேகமாய் என்று பஞ்சபூதங்களுக்குமான பொல்லாத நேசக்கடல் அவர்களை தங்களுக்குள் வாரி சுருட்டிக்கொண்டது.