“நான் காலி…” என்று அவனை தள்ளிக்கொண்டு இறங்கி ஓட பார்க்க,
“நில்லு பிரத்யு. உனக்காக ஒன்னு கொண்டுவந்திருக்கேன். இதுக்காக தான் உன்கிட்ட போன்ல எதுவுமே சொல்லலை…” என்று தன் கை வளைவினுள் அவளை நிறுத்தியவன் அவளின் பின்னின்று தனது கைப்பேசியை எடுத்து காண்பித்தான்.
அது பதினைந்து நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சாருலதாவின் திருமண நிகழ்வு.
அந்த புகைப்படத்தில் மணமக்களுடன் சாருலதா அருகில் கௌசல்யா, அவரின் அருகில் ஆகர்ஷன், கௌரவ் ஷ்யாமளா, விக்ரம் என்று அடுத்தடுத்து நின்றிருந்தனர்.
முதல் படத்தில் ஆகர்ஷன் கௌசல்யாவை பார்த்து புன்னகைப்பதை போலவும், அதன்பின் நேராய் பார்ப்பதை போலவும் இரண்டு புகைப்படங்கள்.
மீண்டும் மீண்டும் அதனை பார்த்தவள் கண்கள் சந்தோஷத்தில் லேசாய் கலங்கியது.
“ஆமா எங்க அந்த உத்தமர்? பார்த்தா பத்தியிருக்குமே?…” என்று சிரித்தபடி கேட்க,
“இதோ…” என்றான் அடுத்து ஒரு புகைப்படத்தை காண்பித்து.
அதில் ராம்நாத் மணமகனின் மறுபக்கம் நின்றிருந்தவர் பார்வை எல்லாம் கௌசல்யாவின் மீதும், ஆகர்ஷனின் மீதும் தான்.
“நீங்க இருக்கீங்களே? கொஞ்சமாச்சும் மாமனார்ன்னு பார்க்கறீங்களா? ஏன் வயசுல மூத்தவர் தானே…” என்றாள் அவனின் தோளில் அடித்து
“ஏன் அவருக்கும் தெரியும் தானே நான் தான் அவருக்கு வரப்போற மருமகன்னு. ஏன் அந்த மரியாதையை அவர் குடுத்தா என்னவாம்?…” என்றான் பதிலுக்கு.
“ஹப்பா செம்ம காரம் தான். எப்படி இப்படி எல்லாம்? இன்னும் உங்களுக்குள்ள என்னென்ன இருக்கோ?…”
“ஏன் பார்க்கனுமா? நோ இஷ்யூஸ்…” என்றதும் அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு வாசலுக்கு செல்ல,
“நில்லுடா. நானும் வர்றேன்…” என்று அவளின் பின்னே வந்தவனின் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
அது கௌசல்யாவை பார்த்ததனால் என்பது புரிந்த பிரத்யுக்ஷாவிற்கும் நிறைவாய் இருந்தது.
ராம்நாத்தின் உடல்நிலையும், சில ஜாதக கோளாறும் என்று சாருலதாவின் திருமணம் தள்ளி வைத்திருக்க இதோ இத்தனை மாதங்கள் ஆகிவிட்டது.
அதற்குமே பிரத்யுக்ஷா செல்லவில்லை. காவேரிக்கு அதில் ஏக வருத்தம். சமாளித்துவிட்டாள்.
ஆனால் அவளே எதிர்பாராதது கௌரவ் சாருலதாவின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க கௌசல்யாவுடன் சென்றது.
மருத்துவமனைக்கு தான் சென்றிருந்தான் கௌரவ். அங்கே வைத்து கௌசல்யாவின் கையினால் ஆகர்ஷனிடம் கொடுக்க செய்திருந்தான்.
அத்தனை சந்தோஷம். கிட்டத்தட்ட துள்ளி குதித்துவிட்டாள் பிரத்யுக்ஷா. அதிலும் திருமணத்திற்கு சென்றுவிட்டு வந்தபின் அத்தனை முறை கேட்டுமாகிற்று.
அங்கே என்ன நடந்தது, ராம்நாத் எப்படி பார்த்தார் என்றெல்லாம் கேட்க கேட்க எதற்கும் பதிலில்லை ஆகர்ஷனிடம்.
‘போனோம் விஷ் பண்ணிட்டு வந்துட்டோம்’ என்று மட்டுமே சொல்லிவிட சப்பென்றானது பிரத்யுக்ஷாவிற்கு.
அவள் அறியாதது ராம்நாத்தை வாசலுக்கு அழைத்து வந்து ஷ்யாமளா, ஆகர்ஷனை வரவேற்று மேடை வரை அவரை வைத்து அவர்களை கவனித்து, மணமகன் வீட்டினரிடம் அறிமுகம் செய்யவைத்து என்று வைத்து செய்திருந்தான் அவரை.
எல்லாவற்றிற்கும் மேல் கௌசல்யாவின் கையினால் ஆகர்ஷனுக்கு பரிமாற செய்தது தான் அந்த நிகழ்வின் முக்கிய அம்சம்.
மகன் முகம் பார்த்து பார்த்து அவரின் கையாலேயே பரிமாறி, அவனுக்கு என்னென்ன பிடிக்கிறதென கேட்டு செய்து என்று அவரின் ஆன்மா அன்றடைந்த முக்திக்கு இணையில்லை எனலாம்.
அதனை ஷ்யாமளா சொல்லி கேட்டிருந்தாள் பிரத்யுக்ஷா. மற்றவை எல்லாம் அவனிடமே கேட்டுக்கொள் என்றுவிட்டார் அவர்.
வேறு என்ன வேண்டுமாம் அவனுக்கும்? கௌரவ் அவளின் மனதில் இப்போது உயர்ந்து தெரிந்தான்.
ஆகர்ஷன் வருகையில் அவளின் யோசனைகள் முற்றுபெற அருகில் வந்தவன் அவளிடம் பையை நீட்டினான்.
“இதெல்லாம் உனக்கு அம்மா குடுத்தனுப்பினது…” என்று சொல்லவும் வாங்கிக்கொண்டவள்,
“கௌரவ் மாமா இப்படி ஒருத்தரோட பழகி இப்போ தான் கேள்விப்படறேன்…” என்றாள் அவனிடம்.
“அதுக்குள்ள நீ வந்து என்னை கட்டிப்புடிச்சு, நான் மெல்ட்டாகி உன்னை கரைச்சுட்டேன்…” என்று சொல்ல பிரத்யுக்ஷாவின் முகத்தில் கவலை ரேகைகள்.
எதுவும் கூறாமல் முகம் வாட சோபாவில் வந்து மீண்டும் அமர்ந்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
“என்னடா?…” என அவளருகில் வந்தமர்ந்து அவளை தன் புறம் திருப்பி முகம் நிமிர்த்தி.
“மம்மிக்கு ஹெல்த் சரியில்லை. என்னால போக முடியாது இல்லையா?…”
“ஏன் முடியாது? வாயேன். போகலாம்…”
“ம்ஹூம். முடியாது. வேண்டாம்…” என்றவள்,
“அதோட இங்க எனக்கு ரொம்ப தனியா தோணுச்சு….” எனும்பொழுதே அழுகையில் மூக்கு விடைத்துக்கொண்டது.
“எப்பவும் இந்த ஸாங் போட்டா நீங்களோ, இல்லை அனு அக்காவோ என்னை கூப்பிட்டுடுவீங்க. அட்லீஸ்ட் என்னன்னாச்சும் எட்டி பார்ப்பீங்க. ஆனா இங்க வந்ததுல இருந்து பாட்டு போட்டுட்டே இருக்கேன். இந்த வீடு எனக்கு ஏமாற்றத்தை குடுத்துட்டே இருக்கு. யாருமே வரலை….” என்று முடித்து விசும்ப ஆரம்பித்துவிட,
“ஓகே ஓகே. அதான் வந்துட்டேனே…” என்று அவளை ஆறுதலாய் அணைத்துக்கொண்டான் ஆகர்ஷன்.
“அதுவும் இன்னைக்கு மம்மியை வீடியோகால்ல பார்த்துட்டு ரொம்பவே அப்செட். அவங்களால பேச முடியலை. அதான் இங்க வந்துட்டேன்…” என்று சொல்ல,
“சரியாகிடும். வேற எதுவும் மேஜர் ப்ராப்ளம் இல்லை தானே?…”
“இல்லை தான். இருந்தாலும் இந்தநேரம் நான் கூட இருக்கனுமே. அதான்…”
“சரி, சரி. திரும்ப பேசு. இப்படி அழாம அவங்களுக்கு எனர்ஜி தர்ற மாதிரி இருக்கவேண்டாமா நீ? இவ்வளோ தூரம் இருக்க, அவங்களுக்கும் கஷ்டமா இருக்குமே…”
“ஹ்ம்ம், ஆமா…” என்றவள்,
“சரி நான் வர்றேன். ரொம்பநேரம் ஆகிடுச்சு. இப்போ போய் நான் பால்கனிக்கு வருவேன். நீங்களும் வந்து நிக்கனும். நிப்பீங்க தானே?…”
“கண்டிப்பா….” என்றான் அவளின் உச்சந்தலையில் கை வைத்து.
“அப்போ வாங்க பார்க்கலாம்…” என்றவள் எழுந்து சுஷ்மாவின் வீட்டிற்கு சென்று தான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து பால்கனியில் நிற்க அவள் விரும்பியவன் அவள் விருப்பத்திற்கேற்ப அவள் எதிர்பார்த்த இடத்தில் இப்போது தவிக்க செய்தபடி புன்னகையுடன் தான் நின்றிருந்தான்.
“ஆகர்ஷன் பிரத்யுக்ஷா…” சொல்லிப்பார்த்தவளின் இதழ்கள் தேனாய் தித்திக்க முகம் குழைவாய் ஒரு புன்னகை.
ஆகர்ஷன் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே இரு கைகளையும் இதழில் வைத்து ஒரு பறக்கும் முத்தத்தை அழுத்தமாய் அவனை நோக்கி அனுப்பிவைத்தாள் பிரத்யுக்ஷா.
அதேநேரம் ஸ்ரீவத்சனுக்கு ஆகர்ஷன் சிட்னி சென்றிருக்கும் விஷயம் தெரியவந்திருக்க மகளுக்கு அழைத்தார் அவர்.