“பட் என் சம்மதம் இல்லாம என்னை அத்தனை சீக்கிரம் நீங்க தெரிஞ்சுக்க விடமாட்டேன் நான். ஒரு ட்ரை குடுப்போமா?…” என்றும் சொல்லியிருந்தவன் சிட்னி செல்லும் வரை மருத்துவமனை நேரம் தவிர்த்து மற்ற நேரம் எங்கே செல்கிறான், வருகிறான் என்று எதையும் அவர் கவனத்திற்கு கொண்டுசெல்ல விடாமல் பார்த்துக்கொண்டான்.
அதனை எல்லாம் அவர் யோசிக்கும் முன் இது மகளுக்கு தெரியுமோ இல்லையோ என்று அன்றைக்கு குழம்பி தத்தளித்தது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.
இப்போதும் ஆகர்ஷன் சிட்னி சென்றதனை அவன் சென்ற பின்னர் தான் அவரால் அறிந்துகொள்ளவே முடிந்தது.
அதுவே மிகப்பெரிய கோபம் தான். சொல்லியதை போலவே அவனை கவனிக்கும் ஆட்களின் மூலம் வேறு எந்தவித தகவலையும் பெறமுடியவில்லை.
இப்போது சிட்னி சென்றிருக்க அத்தனை பயம். எங்கே மகளை மனம் மாற்றி அங்கேயே திருமணம் எதுவும் செய்துகொள்வானோ என்று.
அத பதட்டமும், தற்போதைய அவர்களின் சூழலும் ஸ்ரீவத்சனை நிதானம் இழக்க செய்தது.
ஆகர்ஷனை சமாளித்து அத்தனை சுலபத்தில் மகளை விட்டு விலக்கி தள்ள முடியும் என்னும் நம்பிக்கை துளியும் இல்லை.
அதுவும் தன்னிடமே சிறிதும் அச்சமின்றி மகள் பேசியதில் இன்னுமே கோபமுற்றவர்,
“உன்னை கவனிக்கவேண்டியது என் கடமை பிரத்யு. அதுமட்டுமில்லை உன் மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லி உன்னை என்னால வரவழைக்க முடியாதுன்னு நினைக்கிறியா பிரத்யு?…” என்றார் மகளிடம்.
“நீங்க சொல்றதா இருந்தா சொல்லியிருப்பீங்க. நினைக்கிறதை எல்லாம் சொல்லமாட்டீங்களே டாடி. எனக்கு என் டாடி மேல நம்பிக்கை இருக்கு…” என்றவள்,
“நீங்க என்ன நினைச்சு கூப்பிட்டிருந்தாலும் சரி, என்னோட ஆன்ஸர் இதுதான். நீங்க சம்மதிக்காம எங்க கல்யாணம் நடக்காதுன்னு நான் ஏற்கனவே சொல்லிட்டேன். அதே மாதிரி எங்க கல்யாணம் நடக்கும் போது நீங்க என்னை கை பிடிச்சு தரும் வரை நான் உங்க பொண்ணா மட்டும் தான் இருப்பேன்…” என்றாள் ஆணித்தரமாக.
எத்தனை தெளிவாய் பேசிவிட்டாள் தன் பெண் என்று கொஞ்சமே அசந்துபோனார் ஸ்ரீவத்சன்.
இதைவிட அவரின் எண்ணத்தின் ஓட்டங்களுக்கு கடிவாளம் கட்டிவிடமுடியுமா என்றிருந்தது மகள் சொல்லிய அந்த சூசகமான வார்த்தைகள்.
“நான் ஆகர்ஷனை பார்ப்பேன். பேசுவேன். என்னோட விருப்பம் எந்த காலத்துலயும் மாறவே செய்யாது….” என அதுவரை தைரியமாக பேசியவள்,
“ப்ளீஸ் டாடி. நீங்க கண்டிப்பா, மத்தவங்கக்கிட்ட இறங்கி போகாதவரா இருந்தாலும் சில டிக்னிட்டிஸ் உங்களுக்கு அழகு. இப்படி தேவையில்லாம யோசிச்சு…” என்று வார்த்தைகலியா விழுங்கிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
இருவருக்குமே அது கடினமான தருணமாக இருந்தது. ஸ்ரீவத்சன் ஒன்றும் சொல்லவில்லை. அழைப்பையும் துண்டிக்கவில்லை.
தன் முடிவுகளுக்கு அப்பாற்பட்ட சில நடைமுறைகள் உள்ளதை ஏற்க தான் முடியவில்லை அவரால்.
“டாடி…” என்றாள் மெதுவாய்.
“ஹ்ம்ம்…” என்பதை தவிர அவளிடம் அவரால் பேசமுடியவில்லை.
“உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்தறேனா?…” கேட்கும்பொழுது இருவருமே சற்று உடைந்து தான் போயினர்.
ஸ்ரீவத்சன் தன்னுடைய ஈகோவை விட்டு இறங்க முடியாமலும், மகளுக்காக பார்க்க முடியாமலும் ஒருவித தடுமாற்ற மனநிலையில் தான் இருந்தார்.
“இல்லைன்னு சொல்லலையே. அப்போ கஷ்டம் தான் இல்ல?…” என்றவள்,
“எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனாலும் என்னால இந்த கஷ்டத்தை உங்களுக்கு குடுக்காம தவிர்க்க முடியலை டாடி. நீங்க காவேரியோட ஸ்ரீவத்சன். கொஞ்சம் அந்த உலகம் தாண்டி வந்து பாருங்களேன்…” என்றாள் இறைஞ்சுதலுடன்.
எங்கே மகளின் வார்த்தைகள் தன்னை அசைத்துவிடுமோ என்று இளகியவரின் மனதினை விடாப்பிடியாக இறுக்கினார்.
“திரும்பவும் சொல்றேன். மிஸ் பிரத்யுக்ஷா ஸ்ரீவத்சன்னுக்கு அடுத்து மிஸஸ் பிரத்யுக்ஷா ஆகர்ஷன் தான். இது என்னைக்கும் மாறாது. உங்க விருப்பம் இல்லாம நடக்கவும் செய்யாது…” என்றவள்,
மனமெல்லாம் ரணப்பட்டு போயிருந்தது. அத்தனை சுலபத்தில் அவரால் தன்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவளுக்கும் அப்படியே. தொண்டை அடைக்க மீண்டும் எதனுள்ளோ சிக்கிக்கொண்ட உணர்வு.
சுருண்டு படுத்துவிட்டாள் பிரத்யுக்ஷா. சற்று முன்னிருந்த உற்சாகம், சந்தோஷம் எல்லாமே வற்றிவிட்டது.
மீண்டும் தனியாய் இருப்பதை போல் தோன்ற இதனை எல்லாம் சொல்லி ஆகர்ஷனை வருந்த செய்ய எண்ணாமல் கண்ணை மூடி படுத்துவிட்டாள்.
கண்ணீர் எல்லாம் வரவே இல்லை. ஸ்ரீவத்சன் என்ன நினைத்து தனக்கு அழைப்பு விடுத்தார் என்பதிலேயே மொத்தமாய் வற்றி விட்டதை போலிருந்தது.
இனி இப்படியான சூழ்நிலைகள் நிறையவே தான் கடந்து வரவேண்டும் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
அந்த கவலை, வருத்தம், ஆதங்கம் எல்லாம் அன்றைய நாள் மட்டுமே அவளிடம் நிலைத்திருந்தது.
“ப்ச், அப்பான்னா வேற எப்படி? ஈஸி பிரத்யு…” என தன்னை தானே தட்டிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.
மறுநாளில் இருந்து அவளின் கலகலப்பு மீண்டுவிட்டது. மறுநாள் காவேரியின் உடல்நிலை சரியாகி வருவதாய் தேவான்ஷ் கூறி இருக்க இரட்டிப்பு சந்தோசம்.
தாயிடம் பேசியவள் கண்ணீரை மறைத்து தைரியம் காண்பித்து அவரையும் தேற்றினாள்.
“நான் வரும்போது ஸ்ட்ராங்கா இருக்கனும். புரியுதா மம்மி…” என மிரட்டல் போல் சொல்லியிருந்தாள்.
மறுநாளே ஆகர்ஷன் அவளின் முகம் பார்த்து என்னவென கேட்டுவிட மேலோட்டமாய் சொல்லியவள் முழுதாய் கூறவில்லை.
“ஸோ நான் இங்க வந்ததுக்கு உனக்கு டோஸ் விழுந்திருக்கு. அதையும் எவ்வளோ அசால்ட்டா சொல்ற? எப்படி ஹேண்டில் பண்ணின நீ?…” என்றான் அவளிடம்.
“பாவம் பண்ணிட்டேன் டாடின்னு கால்ல விழுந்து கதறவா முடியும்? என் டாடி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார்…” என்று சொல்லியவளை ஆகர்ஷன் முறைப்பாய் பார்க்க,
“சரி நான் சரிப்பட்டு வரமாட்டேன். இது ஆப்ட்டா இருக்கா?…” என்று கேட்டு அவனிடம் ஒரு குட்டையும் வாங்கிக்கொண்டவள்,
“கொஞ்சம் ஸ்ட்ராங்கா பேசினேன்….”
“என்னன்னு?…”
“வேற என்ன? உங்க சம்மதம் இல்லாம கல்யாணசுந்தரம் கல்யாணம் ஆகல்லே கதை தான் எனக்குன்னு என் ஸ்டெயில்ல சொன்னேன். கொஞ்சம் அப்செட். கொஞ்சம் கோபம். கொஞ்சமேகொஞ்சம் பயம். இதுதான் டாடி சிட்டிவேஷன். ப்ச், இதெல்லாம் சகஜம் தானே?…” என்றாள்.
சாதாரணமாய் அவள் சொல்லிவிட்டாலும் அதன் பின்னிருக்கும் வேதனையை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஸ்ரீவத்சன் எண்ணவோட்டத்தையும் ஓரளவு யூகித்து தான் இருந்தான் ஆகர்ஷன்.
அவர் முன்பே மறுத்திருப்பார் தான். இப்போது கௌசல்யாவின் மகன் என்னும் உறவுமுறையும் அவரை தேங்க செய்யும். விடாப்பிடியாய் மறுக்கவும் சொல்லுமென்பது புரிந்தது.
“அவசரம் வேண்டாம்ன்னா? எனக்கொண்ணும் இல்லை. உங்களுக்கு தான் வயசாகுது…” என்றவள்,
“ஆனாலும் பாருங்க, என்னை வேண்டாம்ன்னு சொல்லி ஓடி போக இருந்த உங்களுக்காக நானா என்னென்ன ஸ்டன்ட் எல்லாம் பண்ண வேண்டியதிருக்கு. என் நேரம்…” என தலையில் தட்டிக்கொண்டாள் பிரத்யுக்ஷா.