வீடெங்கும் சாம்பிராணி மணம் நாசியில் நுழைந்தது. பூஜை செய்யும் சத்தம் கேட்கவும் ஒரு தலையசைப்புடன் அங்கே சென்றார் ஸ்ரீவத்சன்.
அவரின் மனைவி காவேரி பூஜை அறையில் தீபாராதனை காண்பித்துக்கொண்டிருக்க அருகில் தன் மகன் தேவான்ஷ் நின்றிருந்தான்.
தேவான்ஷ் அருகில் அவனின் மனைவி ஸ்வேதா. கையில் இரண்டு வயது குழந்தை ஷிவான்யா.
குடும்பமாய் அவர்கள் பூஜை அறையில் இருக்க அன்று முக்கியமான நாள் அவர்களுக்கு.
எஸ்எஸ் பில்டர்ஸ் கோவையிலேயே மிகப்பெரிய அளவில் பெயர்பெற்ற கட்டுமான நிறுவனம்.
அன்றைக்கு அரசாங்க டெண்டர் ஒன்று வரவிருக்க அதற்காக கிளம்பிக்கொண்டிருந்தார்கள் தந்தையும் மகனும்.
பூஜையில் நின்றவர்களுடன் தானும் சேர்ந்து நின்றவர் கடவுளை வணங்கவெல்லாம் இல்லை.
அது மனைவியின் நம்பிக்கை. அவருக்கு நம்பிக்கை இல்லையென்றும், உள்ளதென்றும் சொல்லிவிடமுடியாது.
அவர் ஒரு தனி வகையறா. எதை சரி என்று பேசுவாரோ அதையே மற்றவர்கள் சரி என்றால் அதில் என்ன தவறு உள்ளதென்று ஆராய்ந்து அதனை பிடித்துக்கொண்டு சண்டித்தனம் செய்யும் மனிதர்.
அதற்கென்றே அவர் வழியிலேயே சென்றுவிடுவது குடும்பத்தினரின் வழக்கமாகிற்று.
பிள்ளைகளையும் அப்படியே பழக்கியிருந்தார் காவேரி. ஸ்ரீவத்சன் சொல்லுக்கு வீட்டில் மறுபேச்சு கிடையாது.
மகனை தன் தொழிலுக்கு ஏற்ப படிக்க வைத்து உருவாக்கியவர் அதற்கேற்ப மருமகளையும் தேடி அவனுக்கு முடித்துவிட்டார்.
இப்போது கௌரவத்திற்கு மகளை மருத்துவத்துறையில் கால் பதிக்க அனுப்பியிருக்க அதிலுமே அவரின் வியாபார மூளை தான் பின்னிருந்தது.
தீப ஆராதனை முடிந்து மகன் மருமகள் இருவரும் அதனை நெற்றியில் ஒற்றிக்கொள்ள ஸ்ரீவத்சன் தன் மனைவியின் முன் லேசாய் தலை குனிந்தார்.
காவேரி புன்னகையுடன் அவரின் நெற்றியில் சிறுகீற்றாய் விபூதியை வைத்ததும் தானாய் ஒரு நேர்மறை எண்ணம்.
“சாப்பிட்டு கிளம்புங்க…” என்றவர் ஆரத்தி தட்டை கீழே வைக்க குனிய,
“என்கிட்ட குடும்மா…” என்று வாங்கி தானே இறைவன் பாதத்தில் வைத்தவர் காவேரி அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தார்.
“தேவ் நீ என்னோடவே டெண்டர்க்கு வந்திடு. ஸ்வேதா ஆபீஸ் போய்டட்டும்….” என்று சொல்லியவர் காவேரியை உணவு மேஜையில் நிறுத்திவிட்டு தானும் அருகில் அமர்ந்துகொண்டார்.
குழந்தைக்கு வேறு லேசாய் உடல் கொதிக்க ஸ்வேதாவிற்கு மகளை விட்டுவிட்டு செல்ல மனதில்லை.
“ஸ்வேதா கொஞ்சம் லேட்டா வரட்டுமே. என்னோட ஹாஸ்பிட்டல் வரவேண்டியதிருக்கு…” என்று காவேரி தானே மருமகளுக்கு உதவியாய் வர,
“ஏன் என்ன பண்ணுது காவேரி? டாக்டரை வர சொல்லவா?…” என்றார் உண்டுகொண்டே.
“அதெல்லாம் வேண்டாம். நானே நேர்ல போய் பார்த்துட்டு வர்றேன்…” என்றவர் பார்வை ஸ்வேதாவை தீண்ட,
“ப்பா, குழந்தைக்கு ஃபீவர். அவ ஹாஸ்பிட்டல் போய்ட்டு ஆபீஸ் வரட்டும்…” என்றான் தேவான்ஷ்.
“ஹ்ம்ம், ஓகே…” என்று மட்டும் சொல்லி பேச்சை நிறுத்தினார் ஸ்ரீவத்சன்.
பார்வை பேத்தியை தான் கவனித்தது. சோர்வாய் தலையை சாய்த்துக்கொண்டு ஸ்வேதாவின் கழுத்தை கட்டியபடி படுத்திருந்தாள் குழந்தை.
“இப்படியே ஒட்டுப்புல்லு மாதிரி வளர்க்காம கொஞ்சமாச்சும் பொறுப்போட வளர்க்க பாருங்க…” என்று சொல்லிவிட அனைவருமே மௌனமாகிவிட்டனர்.
அவரிடம் எதிர்த்து பேசிவிட முடியுமா என்ன? மௌனமாய் சிலநிமிடங்கள் கலைய ஸ்ரீவத்சன் அலைபேசி அழைப்பில் வந்தது.
“ராம்நாத்….” என்று அதனை எடுத்து பார்த்தவர்,
“உன் அண்ணன் தான்…” என காவேரியிடம் சொல்லிவிட்டு,
“சொல்லுங்க ராம்நாத்…” என்றார் ஸ்ரீவத்சன்.
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை? வீட்டுல எல்லாரும் சௌகர்யமா?…” என்று நலம் விசாரிக்க,
“எங்க நலத்துக்கு என்ன? எல்லாருமே சந்தோஷமா இருக்கோம்…” என்று அனைவருக்கும் சேர்த்தே பேசினார்.
“ஓகே, வீட்டுல இருக்கீங்களா? மீட் பண்ணலாமேன்னு தான் கேட்டேன். பிஸின்னா இன்னொருநாள் பார்க்கலாம்…” என்று எப்படி பேசவேண்டுமோ அப்படி அவர் கேட்க,
“ஓஹ், பார்க்கலாமே. இப்போ ஒரு டெண்டர் விஷயமா வெளில கிளம்பறோம். ஈவ்னிங் பார்க்கலாம். நீங்க வாங்க. என் வொய்ப் இருக்கா…” என்று சொல்ல,
“ஓகே, அப்போ நாங்க அந்த டைம் வர்றோம். மத்த விசிட் எல்லாம் முடிச்சிட்டு…” என்று ராம்நாத்தும் கூற ஸ்ரீவத்சன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
“அனுவோட அம்மாவும் அங்க நேத்து தான் போயிருந்திருப்பாங்க போல. பேசாம அவங்கட்டையாவது குடுக்காம போய்ட்டேன்…” என்றார்.
அவ்வளவு தான் ஸ்ரீவத்சன் முகம் கோபத்தில் கனலாகிவிட்டது மனைவி சொல்லியதை கேட்டு.
“வாட் நான்சென்ஸ் காவேரி? என் பொண்ணுக்கு என்ன செய்யனும்னாலும் நாம தான் செய்யனும். இன்னொருத்தர்ட்ட போய் என் பொண்ணுக்காக இதை செய்ங்கன்னு நான் நிக்கிறதா?…” என்றவர்,
“எனக்கு இந்தமாதிரி விஷயங்கள் எல்லாம் பிடிக்காதுன்னு தெரியும்ல…” என்று சொல்லியவர்,
“தேவா…” என்று அழைத்து கையசைத்துவிட்டு கிளம்பிவிட்டார்.
கணவன் செல்லும்வரை அசையாமல் அமர்ந்திருந்த காவேரிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.
“போய்ட்டாங்க…” என்று ஸ்வேதா பாவம் போல் சொல்லவும் சிரித்துவிட்டார் அவர்.
“உன் மாமாவுக்கு அவர் ரூல்ப்படி நாம போய்ட்டா நம்மளை மாதிரி ஒரு நல்லவங்க யாருமே இல்லைன்னு சொல்லுவார். என் அண்ணன் மாதிரியே இவரும்…” என்ற காவேரி,
“வா நாம ஹாஸ்பிட்டல் போவோம். போறவழில மனசு மாறிட்டா உன்னை வர சொல்லிடுவாங்க…” என்று சொல்லி நாற்காலியை நகர்த்த,
“நான் பன்றேன் த்தை…” என்றாள் ஸ்வேதா.
“இருக்கட்டும் ம்மா. நீ குழந்தையை பாரு. காரை எடுத்துட்டு வர சொல்லு…” என்றதும் காவேரி செல்வதற்கான பிரத்யேக கார் வந்து நின்றதோடு அவரை உள்ளே ஏற்றி வசதியாய் அமர வைத்துக்கொண்டது.
செல்லும் வழியிலேயே மருத்துவருக்கு அழைத்து வருவதாய் முன் அனுமதியை பெற்றுவிட்டு நிம்மதியாக, சற்றுநேரத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரத்யுக்ஷா அழைத்துவிட்டாள்.
“பிரத்யு வீடியோ கால்…” என்று சொல்லி அழைப்பை ஏற்க ஏதோ ஒரு ஏரியின் அருகில் பிரிட்ஜின் மீது நிற்பது தெரிந்தது.
“ஹாய் டா…” என்று காவேரியோடு ஸ்வேதாவும் கையசைத்து,
“ஹேப்பி பர்த்டே பிரத்யு…” என்றாள் ஸ்வேதா.
“ஒருநாளைக்கு எத்தனை விஷ்? அதுதான் அண்ணாவோட சொன்னீங்களே அண்ணி…” என்று கண் சிமிட்ட,
“அப்போ வாய்ஸ் நோட் அனுப்பினேன். இப்போ உன்னை பார்க்கவே செய்யறேன். அதான் திரும்பவும்…” என்றதும் மீண்டும் கண் சிமிட்டினாள் பிரத்யுக்ஷா.
“எங்கடா இருக்க?…” என்ற காவேரி,
“நல்லவேளை உன் அப்பாக்கிட்ட நீ வெளில இருக்கன்னு சொல்லலை. படிக்காம இவ எதுக்கு வெளில போறான்னு கேட்டிருப்பாங்க…” என்றதும்,
“ஆமா, ஏற்கனவே கொஞ்சம் டோஸ் தான் வாங்கியாச்சு…” என ஸ்வேதாவும் கூற,
“ஷ்ஷ்ஷ்…” என்றார் காவேரி மருமகளிடம்.
“என்னண்ணி, கேட்கலை…” என்று இன்னும் தள்ளி வந்து பிரத்யுக்ஷா நிற்க அவளை யாரோ அழைக்கும் குரல்.
“ஓகே, ஓகே. நான் அப்பறமா பேசறேன். பை ம்மீ, பை அண்ணி…” என துள்ளலாய் கொண்டாட்ட புன்னகையுடன் சொல்லிவிட்டு,
“இது என் க்யூட்டிக்கு…” என பறக்கும் முத்தத்தையும் குழந்தைக்கு தந்தவள் அழைப்பை துண்டித்தாள்.
“அந்த டாக்டர் பேமிலி கூட வெளில போயிருக்கா போல…” என்றாள் ஸ்வேதா.
“ஹ்ம்ம், இங்க வந்ததும் அவளை என்னலாம் ஆட்டுவிக்க போறாரோ உன் மாமனார். ஹேப்பியா இருக்கட்டும்…” காவேரி முகத்தில் மென்னகை.
“என்னன்னாலும் மாமா ஏன் யார்கிட்டையுமே எதையுமே ஹெல்ப்பா கூட கேட்க கூடாதுன்னு இருக்காங்க. அங்க நம்ம பிரத்யுக்கு அவங்க தானே சப்போர்ட்டிவா இருக்காங்க…”
“அது அப்படியே வந்த பழக்கம் ஸ்வேதா. மாத்த முடியாது…” என்றவர்,
“என்னோட வருத்தம் எல்லாம் இப்படி பொண்ணை கட்டாயப்படுத்தி படிக்க அனுப்பனுமான்னு தான். முதல்வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா பிரத்யு. சிவில் படிக்க எவ்வளோ ஆசைப்பட்டா. யாரோ சொன்னதுக்காக பிள்ளையை அங்க கொண்டுபோய் விட்டு…” காவேரியின் விழிகள் லேசாய் கலங்கியது.