சிட்னியிலிருந்து திரும்பி வந்தா பிரத்யுக்ஷாவின் வருகையை அறிந்த ராம்நாத் உடனடியாக கிளம்பி வந்துவிட்டார்.
எப்போதும் ஸ்ரீவத்சனிடம் ஒருவார்த்தை பேசிவிட்டு வருபவர் அன்றைக்கு எதுவுமே சொல்லாமல் கிளம்பி வந்திருந்தார்.
அதனை ஸ்ரீவத்சன் பிரத்யுக்ஷா இருவருமே எதிர்பார்க்கவில்லை. தேவான்ஷ் ஸ்வேதாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருக்க அன்றைக்கு அதிகாலை தான் பிரத்யுக்ஷா சிட்னியிலிருந்து வந்து சேர்ந்திருந்தாள்.
காவேரி மூலம் ராம்நாத்திற்கு விஷயம் எதேர்ச்சையாக தெரிவிக்கப்பட காலை உணவு நேரமே வந்தாகிற்று.
ஸ்ரீவத்சன் வாஎன்றும் கூட கேட்கவில்லை. காவேரி மட்டுமே தன் அண்ணனை வரவேற்றார்.
ஸ்ரீவத்சன் ராம்நாத்துடன் பேசாததில் என்னவோ இருவருக்கும் மனவருத்தம் என்று புரிந்திருந்தாலும், தன்னை தன கணவன் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாததில் வெகுசாதாரண மனக்கசப்போ என்று நினைத்திருந்தார் காவேரி.
அதனைகொண்டே இருவரிடமும் ஒருமுறை கேட்டதோடு சரியாகட்டும் என்றுவிட்டுவிட்டார்.
ஸ்ரீவத்சன், ராம்நாத் என்ன பிரச்சனை என்று காவேரியிடம் சொல்ல முன்வரவில்லை.
“லீவ் இட்…” என்று ஸ்ரீவத்சனும்,
“இதெல்லாம் குடும்பத்துக்குள்ள இருக்கறது தானே காவேரி. சரியாகிடும்…” என ராம்நாத்தும் சொல்லிவிட இருவரிடமுமே மீண்டும் கேட்கமுடியாதே.
அப்படிப்பட்ட குணவாளன்ங்களாகிற்றே இருவரும். அவரும் விட்டுவிட இதோ ஒன்றரை வருடங்களுக்கு பின் மீண்டும் தன் அண்ணனை காண்கிறார் காவேரி.
ஆம், காஞ்சிபுரத்தில் அவர்களின் திருமண நாள் பூஜைக்கு சென்றதுடன் சரி.
அதன்பின் இன்றுவரை இருவருமே சந்தித்துக்கொள்ளவில்லை. அவ்வப்போது போனில் பேசுவதோடு நாட்களும் கடந்துவிட்டன.
இப்போதும் திடீரென்று சொல்லாமல்கொள்ளாமல் அவர் வந்து நிற்க ஒன்றும் தோன்றவில்லை காவேரிக்கு.
ஒன்றரை வருடங்களுக்கு பின் அன்றுதான் மகள் வந்திருக்க, அதற்கே அங்கே அவள் காதல் விவகாரத்தில் என்ன நடக்குமோ என்ற பதட்டம்.
இப்போது தன் அண்ணன் வேறா என்று பார்த்தாலும் அவரை வரவேற்க தவறவில்லை.
“எப்படி இருக்கீங்க ண்ணா?…” என்ற காவேரி,
“அண்ணி வரலையா?…” என்றார் ராம்நாத்திடம்.
“இல்லம்மா, வருவா. எல்லாம் நல்லபடியா நடந்தா வருவா…” என்ற ராம்நாத்,
“எப்படி இருக்க பிரத்யு?…” என்றார் மருமகளைபார்த்து.
‘சோழியன் குடுமி அத்தனை சுலபத்தில் வெறுமனே ஆடிவிடுமா என்ன?’ என்பதை போல் பார்த்த பிரத்யுக்ஷா,
“கௌரவ்க்கு வயசாகிட்டே போகுது. பிரத்யுவும் கல்யாண வயசுல இருக்கா. படிப்பு பத்தி எல்லாம் எனக்கு எந்த தடையும் சொல்ல தோணலை. அவ படிக்கட்டும். கௌரவ் என் பேச்சை மீறமாட்டான். நான் சொன்னா கேட்பான். பிரத்யுவை படிக்க அனுப்ப சம்மதிக்க வைக்க நான் இருக்கேன். உனக்கு நான் சொல்லனுமா என்ன?…”
கடகடவென்று ராம்நாத் சொல்லி முடிக்க காவேரிக்கு இன்னுமே இது அதிர்ச்சி தான்.
தன் அண்ணன் பிள்ளைகளாக இருந்தாலும் இன்றுவரை அவர்களின் எதிர்காலம், திருமணம் இவர்களுடன் என்று பேசியதே இல்லை.
அதனை ஸ்ரீவத்சன் அறவே விரும்பமாட்டார். தேவான்ஷ் திருமண பேச்சின் பொழுதே சாருலதாவை பேசும்படி உறவுகளிடையே பேச்சுக்கள் எழுந்தபோதும் மறுத்துவிட்டார் ஸ்ரீவத்சன்.
‘சொந்தம்ன்றது வேற, அவங்க தனிப்பட்ட வாழ்க்கை வேற. இதெல்லாம் எங்களுக்கா தோணனும். யாரும் தலையிடாதீங்க.’ என்று பளாரென்று அனைவரின் முகத்திலும் அறைவதை போல் சொல்லியிருந்தார் ஸ்ரீவத்சன்.
அதனைகொண்டே சாருலதா நிச்சயதார்த்தத்தின் பொழுது கௌரவ், பிரத்யுக்ஷாவை பற்றி திருமண பேச்சுக்கள் உறவுகளிடையில் எழுந்தபோது பதறி போனார்.
எங்கே கணவனின் காதில் விழுந்து இதுவேறு பிரச்சனையா என்று தான் அத்தனை பயம்.
இப்போது எல்லாவற்றிற்கும் மேல் மகளின் விருப்பம். அதனை தாண்டி காவேரியால் யோசிக்கமுடியவில்லை.
கௌரவ்வை பிடிக்கும் தான். ஆனாலும் அதனை பற்றி பேச்சு எழுந்தபோது அவர் நினைத்ததெல்லாம் தன் மகளுமே தன்னை போல் ஒரு வாழ்க்கையை வாழத்தான் வேண்டுமா என்று.
என்னதான் தன்னை தனிப்பட்ட முறையில் ஸ்ரீவத்சன் தாங்கினாலும் அந்த அன்புமே ஒருவித விலங்கு தான்.
முடிவுகள் எதையும் சுதந்திரமாய் எடுத்ததில்லை. ஒருமுறை மட்டுமே அத்தை கெஞ்சி கேட்டு ராம்நாத்துடன் சென்று கால்களை இழந்து வந்திருந்தார்.
அதன்பின் என்றுமே காவேரிக்கென்று தனிப்பட்ட முடிவுகள், விருப்பங்கள் என்று எதுவும் இருந்ததில்லை.
கௌசல்யாவின் நிலை அதைவிட கொடுமை என்று தான் தோன்றும் காவேரிக்கு.
அப்படி இருக்க ஸ்ரீவத்சன், ராம்நாத் இருவரையும் சேர்த்தார்போன்ற குணாதிசயம் கொண்ட கௌரவ் எப்படி மகள் வாழ்க்கையில் என்று தோன்றாமல் இருந்ததில்லை.
“என்னம்மா நான் கேட்டுட்டே இருக்கேன். நீ என்னடான்னா இப்படி அமைதியா இருக்க?…” என்றார் ராம்நாத்.
“இல்ல ண்ணா, உங்களுக்கு தெரியாதா? இந்த முடிவெல்லாம் அவர் தான் எடுக்கனும்….” என்றார் காவேரி பதட்டத்துடன்.
“என்னம்மா நீ? நீயும் பிரத்யுவுக்கு அம்மா. சிலவிஷயங்கள் மாப்பிள்ளைக்கு தெரியலைன்னாலும் நீ தான் எடுத்து சொல்லனும். நமக்கப்பறம் நம்ம அண்ணன் தங்கை உறவு பலப்பட போறது நம்மோட சந்ததிகள் சேர்ந்தா மட்டும் தான்…” என்றவர்,
“நீ பேசு. நீ சொல்லி புரிய வை. கௌரவ்க்கு பிரத்யு தான் சரியா இருப்பா…” என்றார் ராம்நாத்.
கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தும் தொனி. சம்மதித்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தும் தொனி.
காவேரி திணறி போனார். சட்டென பிரத்யுக்ஷாவின் விருப்பம் பற்றி சொல்லிவிட்டால் என்ன என்றும் தோன்ற உடனே மனம் மாறியது.
அதுவேறு விளைவுகளை ஏற்படுத்தி மகளின் சந்தோஷம் கெட்டுவிடுமோ என்று வாயை மூடிக்கொண்டார் காவேரோ.
“லீவ்ல வந்திருக்கும் போதே பேசி முடிச்சிடலாம். நீ மாப்பிள்ளைகிட்ட சொல்லி இதுக்கு சம்மதிக்க வை…” என்றார்.
“இல்ல ண்ணா, அது சரிவராது. பிரத்யு விஷயத்துல அவர் எடுக்கற முடிவு தான்…”
“இருக்கட்டும் காவேரி, ஆனா நம்ம பிள்ளைங்க எதிர்காலத்துக்காக இப்படி அமைதியா இருந்தா ஆச்சா? பேசினா தானே இதை நடத்தறதா இல்லையான்னு தெரிய வரும்…” என்ற ராம்நாத்,
“இல்லைன்னா நான் கௌரவ்க்கு வேற பொண்ணை பார்ப்பேன்ல…” என்றார் வேண்டுமென்றே.
“என்ன பாருங்கண்ணா? அப்போ உனக்கே கௌரவ்க்கு பிரத்யுவை குடுக்க விருப்பம் இல்லை போல? அப்படிதானே?…” என்றவர்,
“நீ இப்படி யோசிப்பன்னு நான் நினைக்கவே இல்லை. என் தங்கச்சி சந்தோஷமா இதுக்கு சம்மதிப்பான்னு நினைச்சேன்…”
“அண்ணா என்ன பேசறீங்க? எனக்கு சம்மதம் இல்லைன்னு இல்லை. இது பிரத்யுவோட வாழ்க்கை. அவளோட சம்மதம் முக்கியம். அவ அப்பா இதுக்கு ஒத்துவரனும். அவங்களுக்கெல்லாம் விருப்பம்ன்னா நான் ஏன் மறுக்க போறேன்?…” என்றார் காவேரி.
“இப்படி நழுவி பேசறது நல்லாவே இல்ல காவேரி. நான் எவ்வளோ எதிர்பார்ப்போட வந்தேன். நானே இறங்கி வந்து கேட்கிறதால ஈஸியா நினைச்சிட்ட இல்ல?…” என்றார் ஆவேசத்துடன்.
“அப்படி இல்லை ண்ணா. நான் என்னைக்குமே உங்களை, கௌரவ்வை குறைவா நினைக்கவே மாட்டேன். இது கல்யாணம். சட்டுன்னு இப்படி பேசறது சரியா? சரி விடுங்க. நான் பேசி பார்க்கறேன்…”
“அப்படி இல்லம்மா, நீ சொல்லு. சம்மதிக்க வை. கௌரவ்க்கு தான் பிரத்யு. நாம பேசிக்கிட்டதில்லை தான் இதெல்லாம். ஆனாலும் என் மனசுல பிரத்யு பிறந்ததுல இருந்தே ஆசை. அதோட நம்ம காலத்துக்கு பின்னாடி நம்ம பிள்ளைங்க ஒத்துமையா இருக்கனும்ல…” என்றார் நயமாய்.