“பார்த்தியா காவேரி. இதுதான் எனக்கு குடுக்கற மரியாதையா? உனக்காக தானம்மா எல்லாமே பொருத்து போனேன்…” என்று சொல்ல சொல்ல வெறிகொண்டு இரைந்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
“மனுஷனா நீங்க? இப்பவும் உங்க சுயநலம் தான் முக்கியம். அதானே?…” என்றவள்,
“மம்மி, உங்கண்ணன் ஒன்னும் அவ்வளவு யோக்கிய சிகாமணி கிடையாது….” என்று சொல்லி பிரத்யுக்ஷா திரும்ப, ராம்நாத் பதறிவிட்டார்.
“மரியாதையா பேசு பிரத்யு. இப்ப என்ன? என் மகனை கல்யாணம் செஞ்சுக்க விருப்பமில்லை. எப்படி இருக்கும்? உனக்கு தான் அந்த டாக்டர் மேல மயக்கம் தலை விரிச்சாடுதே. நீ எங்க குடும்பம், கௌரவம், மானம், ஈனம்ன்னு எல்லாம்பார்த்து…” என சொல்லிக்கொண்டிருக்க,
“வாய மூடுய்யா. இன்னொரு வார்த்தை பேசின…” என்று பிரத்யுக்ஷா அலற,
“ராம்நாத், இதுக்கு மேல ஒருநிமிஷம் கூட நீங்க இந்த வீட்டுல இருக்க கூடாது. வெளில போங்க…” என வந்துவிட்டார் ஸ்ரீவத்சன்.
அதையும் ராம்நாத் எதிர்பார்க்கவில்லை. அதற்குமேல் அங்கிருந்தால் காவேரியின் முன்னிலையில் பிரத்யுக்ஷா பேசிவிட கூடும் என்று சுதாரித்து கிளம்ப பார்க்க,
“அப்படியெல்லாம் போயிட முடியாது. நில்லுங்க…” என பிரத்யுக்ஷா அவரை நிறுத்திவிட்டாள்.
“பிரத்யு, இப்படி ஒருத்தன் இந்த வீட்டுக்குள்ள இருக்கறதை நான் அனுமதிக்க முடியாது. சில பேச்சுக்கள் இந்த வீட்டுக்குள்ள பேசப்படறதையும் நான் விரும்பலை. போகவிடு…” என்றார் ஸ்ரீவத்சன் முகம் சுளித்து.
எங்கே காவேரிக்கு தெரிந்தால் தாங்கிக்கொள்ளமாட்டாரோ என்றுதான் அவரின் கவலை எல்லாம்.
“தாராளமா போகட்டும். ஆனா உண்மை தெரியத்தானே வேணும். சொந்த அண்ணனே தன் கால் போக காரணமா இருந்ததை மம்மியும் தெரிஞ்சுக்கட்டும் டாடி…” என்றவள்,
மகளின் ஆவேசம், கணவரின் முகச்சுளிப்பு, அண்ணனின் பதட்டமும், படபடப்பும் என்று காவேரிக்கு தான் பயந்து வந்தது என்னவோ என்று.
“கௌசல்யாத்தைக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி, அவங்க குழந்தைக்கு ஒருவயசு இருக்கும்போது அவங்க ஹஸ்பன்ட் தவறிட்டாங்க. அது தெரியுமா?…” என கேட்க காவேரியின் முகத்தில் பெரும் அதிர்வு.
“பச்சை குழந்தையை தாய்க்கிட்ட இருந்து பிரிச்சு, கௌசல்யாத்தைக்கும் அது ரெண்டாவது கல்யாணம்ன்னு யாருக்கும் சொல்ல கூடாதுன்னு சத்தியம் வாங்கி உங்கண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டார். அது தெரியுமா? அதுக்கு கௌசல்யாத்தை அம்மாப்பா, தம்பி, உங்கம்மாப்பா எல்லாம் உடந்தை…” என்றவள்,
“ஆகர்ஷனோட பேரை கூட சொல்ல கூடாதுன்னு கல்யாணம் முடிஞ்சப்பவே கௌரவ் மாமா குழந்தையா இருக்கும் போது அவங்க தலையில அடிச்சு சத்தியம் செய்ய வச்ச பின்னாடி தான் பசியாத்தவே விட்டாங்களாம். அது தெரியுமா?…” என்று கூற காவேரிக்கு அப்போதே தலை சுற்றிக்கொண்டு வந்தது.
“உங்க ஆக்ஸிடன்ட் ஆனா அன்னைக்கு திரும்ப ஆகர்ஷனை, அவங்க பாட்டியை எல்லாம் பார்த்ததனால தான் எங்க திரும்ப கௌசல்யாத்தை அவங்களை பார்த்திருவாங்களோன்னு பதட்டத்துல எல்லாரையும் கூட்டிட்டு கார் ட்ரைவ் பண்ணிட்டு வந்ததால நடந்த ஆக்ஸிடென்ட்ல உங்க கால் போச்சு. அது தெரியுமா?…” என்று வரிசையாய் சொல்ல சொல்ல காவேரி நம்பவும் முடியாமல், ஜீரணிக்கவும் முடியாமல் ராம்நாத்தை பார்த்தார்.
“இதெல்லாம்…” என நடுங்கும் குரலால் மகளிடம் கேட்க,
“கௌசல்யாத்தை தான் சொன்னாங்க…” என்று வாய் தவறி சொல்லியவள் பின் ராம்நாத்தை கவனித்துவிட்டு,
“ஆகர்ஷனை பார்த்த அன்னைக்கு அவங்க சுயநினைவு இல்லாதப்போ அவங்க ஆழ்மனசுல இருந்ததெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டோம்…” என்றாள் சுதாரித்து.
எங்கே அவரே கூறியது என்று தெரியவந்தால் ராம்நாத் என்ன செய்வாரோ என்று தான் மறைத்து கூறியது.
“இன்னும் என்ன? வெளில போங்க நீங்க…” என்ற ஸ்ரீவத்சன்,
“என் பொண்ணுக்கு யாரை எடுக்கனும், யாருக்கு குடுக்கனும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன். நீங்க கேட்டா குடுத்திருவேனா? கெட் லாஸ்ட்…” என்று சொல்லவும் ராம்நாத் அவமானத்துடன் பிரத்யுக்ஷாவை முறைத்துவிட்டு வெளியேறினார்.
“என் அண்ணனா?…” என கேட்க முயன்ற காவேரியின் வார்த்தைகள் தடுமாறி, திக்கி திணறி வந்தது கண்ணீருடன்.
எத்தனை இரக்கமற்ற செயல் அவர் செய்தது. அதனையும் விட பெரும் பாவமாகிற்றே.
ஒருவயது குழந்தையை பிரித்து என நினைக்கையிலேயே தாயாய் அவர் அடிமடி வலியை உணர்ந்தது.
கண்களுக்குள் சாந்தமான முகத்துடன் கௌசல்யா வந்தது இம்சிக்க ஆரம்பித்தார் காவேரியை.
இத்தனை நாட்கள் அவரின் கண்களில் மறைந்திருந்தது அமைதி என்று நினைத்தவருக்கு மரணவலி என்பது இன்றைக்கு புரிந்தது.
ஆகர்ஷன் கௌரவ் என இரு பிள்ளைகள். மனதெல்லாம் பாரமேறிய உணர்வு அவருள்.
“இது இந்த விஷயம்…” என காவேரி கேட்க,
“ஆகர்ஷன் வீட்டுல எல்லாருக்குமே தெரியும். எனக்கும் டாடிக்கும் கூட…” என்று சொல்லியவள் குரல் உடைந்திருந்தது.
அப்போதும் ஸ்ரீவத்சன் கல்லென தான் இறுகி போய் நின்றார். அவரின் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை போலிருந்தது.
“எனக்கு தெரியலை மம்மி. நானும் உங்ககிட்ட சொல்லவேண்டாமேன்னு தான் மறைச்சேன். ஆனா இன்னைக்கு…” என்றவள் அவரின் அருகில் மடிந்து அமர, மகளையே பார்த்து நின்ற ஸ்ரீவத்சன்,
“காவேரி பிரத்யு இனிமே சிட்னி போகவேண்டாம். போறதா இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிட்டு பார்த்துக்கலாம்….” என்று சொல்ல இருவருமே என்ன பேசுகிறார் இந்தநேரத்தில் என்றுதான் விக்கித்து பார்த்தனர்.
“ஆனா மாப்பிள்ளை நான் பார்க்கிறவர் தான். இதுதான் என் பைனல் டெஷிஷன்…” என்றும் உறுதியாய் கூற,
“டாடி, நான் என் முடிவை ஏற்கனவே சொல்லிட்டேன். இது,,, இது நாட் ஃபேர்…” என்றாள் பிரத்யுக்ஷா கோபமாய்.
“எது சரி, தப்புன்னு அனுபவப்பட்ட எனக்கு தெரியும். நீ விரும்பிட்டன்றதுக்காக யார் யாரையோ எல்லாம் என்னால இந்த வீட்டு மருமகனா ஏத்துக்க முடியாது. அவன் எத்தனை பெரிய பேக்ரவுண்ட் இருக்கறவனா இருந்தாலும் கூட…” என்றார் அவளை போலவே ஆவேசமாய்.
“இதுக்கு நான் ஒத்துக்கமாட்டேன். உங்க விருப்பப்படி ஆகர்ஷனை ஏத்துக்கவே வேண்டாம். அதுக்காக நான் பலியாக முடியாது…” என பிரத்யுக்ஷா கத்த,
“உன்னோட காதல் இப்ப எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. கொஞ்சமும் தகுதி இல்லாதவன் எல்லாம் காசு இருக்குன்ற மிதப்புல பொண்ணு கேட்டு வர்றான்….” என்று ராம்நாத்தை மட்டுமல்லாது, தயாளராஜையும் சேர்த்தே தான் கூறினார்.
சமீபகாலமாக அவரின் தொழில்ரீதியாக சில குடைச்சல்களை எல்லாம் தயாளராஜ் உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து கொடுத்துக்கொண்டிருந்தார்.
“குள்ளநரி எல்லாம் புலியை உதாரணம் காமிக்குது…” என வெகுண்டிருந்தார் ஸ்ரீவத்சன்.
இந்த சூழ்நிலையில் ராம்நாத் வேறு. மகளின் பிடிவாதம் ஒருபுறம் என்று ஒவ்வொன்றும் இக்கட்டில் நிறுத்துவதை போலிருக்க அந்த சூழ்நிலையிலும் ஆகர்ஷனை அவர் தேர்ந்தெடுக்க முயலவில்லை.
கௌசல்யா எத்தனை தான் நல்லவராகவே, பாதிக்கப்பட்டவராகவே இருந்தாலும் பின்னாளில் என்று ஒன்றை நினையாமல் இருக்கமுடியவில்லை.
அதிலும் ஆகர்ஷன் தன்னிடம் காண்பித்த தெனாவெட்டு. விரும்பும் பெண்ணின் தந்தையாக இருக்கும்பொழுதே தனக்கு பதிலடி கொடுப்பதை போல் அவன் நடந்துகொண்ட விதம்.
அதில் எடுத்த முடிவு வேண்டவே வேண்டாம். அவன் வரவு தன் குடும்பத்திற்கு தேவையற்றது என்று வந்திருக்க இதோ மகளின் கண்ணீருடனான கோபமுகம்கூட அவரை இளக்கம் கொள்ள செய்யவில்லை.
“ஆகர்ஷன் யாரோ இல்லை டாடி. ஏன் இப்படி யோசிக்கறீங்க?…” பிரத்யுக்ஷா மீண்டும் தன்மையுடன் பேச முயல,
“அந்த ஒரு காரணம் தான் வேண்டாம்ன்னு சொல்றேன். இது காலத்துக்கும் தொடரப்போற விஷயம். எனக்கு, என் பொண்ணுக்கு வேண்டாம்…”
“என்னையும் ஏன் நீங்க சொல்றீங்க? உங்க விருப்பத்துக்கு தலையாட்ட நான் பொம்மை இல்லை…”
“உன்னை பெத்து வளர்த்து படிக்க வச்ச எனக்கு வாழ்க்கையை அமைச்சு குடுக்க தெரியாதா?…”