ஸ்ரீவத்சனிடமும் தொழில்ரீதியான குடைச்சல்களை தந்ததன் ஆதாரங்களுடன், தயாளராஜ் பேசியதன் பதிவுகளையும் அவர் முன்னெச்சரிக்கையாக சேகரித்தும் வைத்திருந்தது அந்த சூழலில் அவர்களுக்கு பெரிதும் கை கொடுத்தது.
இப்போது அனைத்துடனும் ஆளுநரிடம் விஷயத்தை பகிர்ந்திருக்க, தினேஷை பிடிக்க முயன்ற பொழுதில் பணியில் இருந்த காவலரை தாக்கிவிட்டு தப்பி ஓடியதினால் அவனையும் தேடுதல் பணியில் முடுக்கி இருந்தனர்.
எடுத்ததும் கைது நடவடிக்கைக்கு சாத்தியமில்லை, விசாரணை என்று தான் அவரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயலும் என்றிருந்தது அரசாங்கம்.
உள்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் அமைச்சரை அத்தனை சுலபத்தில் உடனடியாக கைது செய்யமுடியாதென்று கூறி விசாரணைக்கு உடனடி உத்தரவிட்டு அதன் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது.
அதிலும் பிரத்யுக்ஷாவின் வாக்குமூலம், தினேஷ் அடைத்து வைத்து துன்புறுத்திய அந்த இடத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற சில ஆதாரங்கள் என தயாளராஜ், தினேஷிற்கு அது எதிராகவே இருந்தது.
பேசிவிட்டு வெளியே வர ஆளுநர் மாளிகையின் வெளியே கௌரவ் நின்றிருந்தான்.
ஸ்ரீவத்சன் கௌரவ்வை அங்கே எதிர்பார்க்கவில்லை. பார்த்ததும் பேசவும் தோன்றவில்லை.
“ஹ்ம்ம், கஸ்டடில எடுக்கறதா சொல்லியிருக்காங்க. அந்த தினேஷ் தான் தப்பிச்சிட்டான்…” என்று சொல்லவும், தலையசைத்த கௌரவ்,
“எங்க போய்டுவான். பார்த்துக்கலாம்…” என கூற,
“நாங்க இங்க இருக்கோம்ன்னும், விஷயம் இதுதான்னும் எப்படி தெரியும்?…” என கேட்டார் ஸ்ரீவத்சன் கௌரவ்விடம்.
ராம்நாத் மீதான கோபம் கௌரவ் மேலும் வியாப்பித்தது. அவரின் செயலுக்கு அவன் என்ன செய்வான் என்று யோசிக்கவில்லை ஸ்ரீவத்சன்.
ஒருவேளை அவனுக்குமே அப்படி எதுவும் எண்ணமிருந்து கேட்க சொல்லியிருக்க வாய்ப்பிருக்குமோ என்று சிறு யோசனை.
அதுவே அவரை கௌரவ்விடமிருந்து தள்ளி நிறுத்த அவருக்கு மேல் பார்த்தான் கௌரவ்.
“நீங்க சொல்லனும்ன்னு அவசியமில்லையே. ப்ரோ சொன்னாங்க…” என பதில் சொல்லவேண்டுமே என்பதை போல கூறிவிட்டு, ஆகர்ஷனிடம் பேசியபடி நகர்ந்தான் கௌரவ்.
“எப்படி?…” என கௌரவ் ஆரம்பிக்கவுமே,
“சொன்னேனே, வீட்டுல இருந்து கிளம்பின வேகத்துல வழில ஒரு கேப்ல ஏறியிருக்கா. பிரத்யு வந்திருக்கிற விஷயம் கேள்விப்பட்டு தினேஷ் கோவை போயிருக்க, அவன் கவனிச்சதுல, பிரத்யு வெளில வந்து கேப்ல தனியா கிளம்பினதை பார்த்திருக்கான்…” என்றவன்,
“புக் பண்ணாத லோக்கல் கேப். சிக்னல் க்ராஸ் பண்ணி வேற ரூட் போகவும் பின்தொடர்ந்து போனவன் கன்னோட காரை ப்ளாக் பண்ணி கிட்நாப் பண்ணியிருக்கான். செகென்ட் டைம் பிரத்யு தனியா சிட்னி கிளம்பும்போது நான் குடுத்திருந்த ரிங்ல ஜிபிஎஸ் செட் பண்ணியிருந்தது. அதை வச்சு தான் ட்ரேஸ் பண்ண முடிஞ்சது….” என்று சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றான் கௌரவ்.
“ஆனா இந்த பிரத்யு இருக்காளே, ரிங் குடுத்த அன்னைக்கு வேண்டவே வேண்டாம்ன்னு அவ்வளோ ஆர்க்யூ பண்ணினா….” என ஆகர்ஷன் சிரிக்க, கௌரவ்வின் இதழ்களும் லேசாய் விரிந்தது.
இருவருமாக தினேஷ் எங்கே சென்றிருக்க கூடும் என்பதை எல்லாம் பேசியபடி இருக்க ஸ்ரீவத்சன் அவர்களையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்ட கிருஷ்ணகுமார்,
“அவங்கப்பாவுக்கு செக்கப் பன்றதுக்கு எப்பவும் எங்கக்கிட்ட கால் பண்ணி பேசிட்டு தான் அப்பாயிண்மென்ட் பிக்ஸ் பண்ணுவான் கௌரவ். அதுக்கு கால் பண்ணும்போது தான் விஷயம் தெரிஞ்சிருக்கும்…” என்றார்.
ஸ்ரீவத்சன் முகத்தில் அவன் ஏன் இங்கே வரவேண்டுமென்ற கோபமும், பிடித்தமின்மையும்.
ஆனால் பிரத்யுக்ஷாவிற்கு அவை எல்லாம் தோன்றவில்லை. ஆகர்ஷன், கௌரவ் இருவரையுமே மாறி மாறி பார்த்தாள்.
ஆகர்ஷனுக்கு தன் முன் கதை தெரிந்திருக்க அவனோடு உறவு வளர்க்கிறான். ஆனால் கௌரவ்?
இத்தனை கனிவுடன் கௌரவ்வை இதுவரை அவள் கண்டதே இல்லை. எப்போதும் இறுமாப்பும், இறுக்கமும் மட்டுமே அவன் அடையாளம்.
அப்படித்தான் வளரவேண்டும். அதுதான் பெருமை என்று நினைத்து வளர்ந்தவன். அவனிடம் இத்தனை தன்மையா என்று தான் ஆச்சர்யம்.
“சரிம்மா, நாம கிளம்பலாம். உனக்கும் கைல ட்ரெஸ்ஸிங் பண்ணனுமே….” என்ற கிருஷ்ணகுமார்,
“கிளம்பலாம் ஸ்ரீவத்சன்…” என்றார் அவரிடமும்.
“ஹ்ம்ம்…” என்றவருக்கு ஆகர்ஷன், கௌரவ்விடையே தெரியும் இந்த பந்தத்தில் மனம் கசங்கியது.
எதையும் பேசக்கூடிய சூழ்நிலை இல்லை. மகளை திரும்பி பார்த்தவரின் மனது ஒருமுறை குலுங்கி பின் நிலையானது.
அவளை இழந்து தவித்த அத்தனை மணிநேரங்களே போதுமானதாக இருந்தது அவருக்கு.
இத்தனை மாதங்களில் எத்தனையோ முறை கௌரவ்வோடு கௌசல்யாவை வீட்டிற்கு அழைத்து பார்த்துவிட்டனர் கிருஷ்ணகுமாரும், ஷ்யாமளாவும்.
அவனும் மறுத்துவிட்டான், கௌசல்யாவும் மறுத்துவிட்டார். இருவரின் மறுப்பிற்கு இருவேறு காரணங்கள் இருந்தாலும் அவரின் வருகைக்காக அவர்கள் தவமிருந்தனர் என்பது முற்றிலும் உண்மை.
இன்றுவரை ஆகர்ஷன் கௌசல்யாவை அழைக்கவில்லை. அவருக்காகவே அவரின் பார்வைக்காகவே இந்தியாவில் வந்து தஞ்சமடைந்துவிட்டவன் தாயை அழைக்கவும் நேரம் பார்த்திருக்க, அவரை அழைத்து செல்லும் காலத்தை கௌரவ்வும் எதிர்நோக்கி இருக்க, அங்கே சென்றால் தான் உடைந்துவிடுவோமோ என்று கௌசல்யாவும் மறுத்திருந்தார்.
ஸ்ரீவத்சன் கிருஷ்ணகுமாரை ஆச்சர்யம் ததும்பும் பார்வையுடன் தான் பார்த்தார்.
எந்தவித பெருமிகு பாவனையும் இன்றி பெருந்தன்மையுடன் தங்களை அழைத்து வந்ததாகட்டும், கவனித்துக்கொண்டதாகட்டும் ஸ்ரீவத்சன் பிரமித்து தான் போனார்.
எப்படி பெற்ற மகனை போல ஆகர்ஷனை வளர்த்ததோடு, உண்மை தெரிந்த பிறகும், கௌரவ்வை அவர் பார்ப்பதும், பேசுவதும் என என்ன மனிதர்கள் இவர்கள் என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை.
ஆனாலும் முகத்தில் அதனை காண்பித்துவிட முடியாதே. அந்த பழக்கமில்லாதவர் இன்னொன்றை முதன்முறையாக பழகி இருந்தார்.
எப்போதும் தங்களுடைய வீடு, பிளாட் என்று மட்டுமே தங்கிக்கொள்ளும் பழக்கமுடைய ஸ்ரீவத்சன் முதன்முறையாக ஆகர்ஷனின் வீட்டில் தங்கியது பிரத்யுக்ஷாவின் வீட்டினரை வியப்பில் ஆழ்த்தியது.