ஸ்ரீவத்சன் அவன் பேச்சில் சிலையென நின்றவர் இறுதியில் அவன் கூறியதை புரியாமல் பார்த்தாள்.
“உங்க பொண்ணுக்கு அவங்க அம்மா பாடின பாட்டு. பிரத்யுவை அமைதிப்படுத்தற தாலாட்டு, கஸ்தூரி மான்குட்டியாம் பாட்டு. கேட்டு பாருங்க. அவளுக்கு அது தாய்மடி மாதிரி. அந்த பாட்டோட வாழ்ந்த நாட்கள் தான் ஏராளம். இதுவரை தெரியலைன்னா நீங்க இப்போ தெரிஞ்சுக்கோங்க….” என்று சொல்லி,
“போகலாம். நிறையவே பேசிட்டேன். இன்னும் நிறையவே பேசுவேன். வேண்டாம். இதே மனநிலையில நாம கிளம்பிடுவோம்…” என்று சொல்லி கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான் ஆகர்ஷன்.
அனைவரின் பார்வையும் அவர்களை தான் ஆர்வமும், ஆவலுமாய் பார்த்தது. ஸ்ரீவத்சனும் ஆகர்ஷனுடன் வெளியே வர,
“ஆர்ஷ்?…” என்றார் ஷ்யாமளா கேள்வியாய்.
“குட் ந்யூஸ் தான். மேரேஜ்க்கு ஓகே சொல்லிட்டாங்க ம்மா….” என்று ஆகர்ஷன் சொல்ல அத்தனைபேரின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம்.
ஸ்ரீவத்சன் இதனை எதிர்பார்க்கவே இல்லை. தான் எங்கே சம்மதம் கூறினோம் என்பது போல திகைத்த பார்வையை அவனிடம் கொடுக்க,
“இங்க பிரத்யுவோட ப்ளாட்க்கு இப்போ கிளம்பறாங்க. எங்கேஜ்மென்ட் எப்படி, எங்க வச்சுக்கலாம்ன்னு அவங்க ஃபேமிலியோட கலந்து பேசிட்டு சொல்லுவாங்களாம்….” என்று சொல்லியவன் இப்போது திரும்பி ஸ்ரீவத்சன் முகம் பார்த்து கண்சிமிட்ட தடுமாறி போனார் அவர்.
“நிஜமாவாப்பா? எனக்கு ரொம்ப சந்தோஷம்…” என தேவான்ஷ் வந்து தந்தையிடம் கூறி ஆகர்ஷனுக்கு வாழ்த்து தெரிவிக்க,
‘அடேய்’ என்று பிரத்யுக்ஷா கண்டுகொண்டாள் அவனின் சேட்டையை. கூடவே தகப்பனை பார்த்தவளுக்கு பதறியது.
பட்டென்று எதுவும் பேசிவிடுவாரோ என்று. ஆகர்ஷனை பார்க்க அவன் கண்ணமர்த்தி புன்னகைத்தவன் கிளம்பும்படி சொல்லி,
“ட்ரைவரை வர சொல்லுங்க ம்மா. அவங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்து பேசறேன்னு சொல்லியிருக்காங்க…” என்றும் அடுக்கடுக்காய் ஸ்ரீவத்சனை நகரவிடாமல் பிடித்துக்கொள்ள திணறி போனார் ஸ்ரீவத்சன்.
அவர்கள் கிளம்ப ஆயத்தமாக வெளியே வந்து நின்ற ஆகர்ஷனை திரும்பி பார்த்தார் ஸ்ரீவத்சன்.
“உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா என்ன ஆனாலும் எனக்கு கால் பண்ணியிருக்கமாட்டீங்க. இங்க வந்து தங்கியிருக்கமாட்டீங்க. நான் பேசறதுக்கு எல்லாம் சைலண்ட்டா இருந்திருக்கமாட்டீங்க. ஸோ என்னோட கடமையை நான் செஞ்சுட்டேன்…” என்று தோளை குலுக்கியவன் புன்னகையில் ஸ்ரீவத்சன் விழித்து பார்க்க,
“கிளம்புங்க. நாளைக்கு பார்க்கலாம்…” என்றான் அவன்.
“நாளைக்கு வரும்போது மறக்காம பிரத்யுவை கூட்டுட்டு வாங்க. கை காயத்துக்கு ட்ரெஸ்ஸிங் மாத்தனும்…” என்றான் அப்போதும் கள்ளப்புன்னகையுடன்.
ஒன்றும் பேசமுடியவில்லை. சட்டென்று அவனை போல இலகுவாய் இறங்கிவர முடியவில்லை.
ஆனாலும் சிறு இடைவெளி. இப்போதும் மாமா என்று அழைக்காமல் வெறுமனே அவன் பேச, யோசனையுடன் கிளம்பிவிட்டார் ஸ்ரீவத்சன்.
பிரத்யுக்ஷா தான் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். அவனிடம் பேசவேண்டும், கேட்கவேண்டும் என்று அத்தனை இருந்தும் கிளம்பவேண்டிய கட்டாயம்.
மறுநாள் ஆகர்ஷன் சொல்லியதை போலவே பிரத்யுக்ஷா வர உடன் ஸ்ரீவத்சன் வரவில்லை. அவரை தவிர்த்து மற்றவர்கள் வந்திருந்தனர்.
அவருக்கு அத்தனை சந்தோஷம். அது முகத்திலேயே ஒளிர மகளின் சந்தோஷத்தில் பூரித்து போயிருந்தார் காவேரி.
“சீனியர் எங்க ஆன்ட்டி?…” என பிரத்யுக்ஷா ரகசியமாய் கேட்க,
“மேல அவன் ரூம் பக்கத்துல ஒரு வொய்ட் கோல்டன் ஸ்ட்ரிப்ஸ் வச்ச டோர் இருக்கும். அந்த ரூம்ல இருக்கான் பிரத்யு….”
“நான் பார்க்கனுமே…”
“நீ போ, நான் மேனேஜ் பண்ணிக்கறேன்…” என்ற ஷ்யாமளா,
“வாங்களேன், அப்படியே வீட்டை சுத்தி பார்க்கலாம். இங்க இருந்தப்பவும் யாரும் பார்க்க கூடிய சூழ்நிலை இல்லை. இப்போ பார்ப்போம்…” என்று அவர்களை அழைத்து செல்ல,
“நான் இங்கயே இருக்கேன் மம்மி. நீங்க போய்ட்டு வாங்க…” என்று பிரத்யுக்ஷா அமர்ந்துகொண்டாள்.
அவர் செல்லவும் வேகமாய் படியேறி ஷ்யாமளா சொல்லியதை போலிருந்த அந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
ஆகர்ஷன் அங்கே தான் அமர்ந்திருந்தான். மௌனமாய் எவ்வித சத்தங்களும் அற்ற அந்த விசாலமான அறையில்.
முதன்முதலாக அந்த அறைக்குள் வருகிறாள் அவள். அறை முழுவதும் கௌசல்யா, கிருஷ்ணகுமார் புகைப்படம். அதில் குழந்தையாய் ஆகர்ஷனுமே இருந்தான்.
“வா பிரத்யு…” என அவளின் அரவம் உணர்ந்து திரும்பி பார்க்க,
“இங்க என்ன பன்ற நீன்னு கேட்பீங்கன்னு நினைச்சேன் சீனியர்…” என்றாள் அவளும் இலகுவாய் இருப்பதை போல்.
ஆனால் முடியவில்லை. கௌசல்யாவின் முகமும், அதிலிருந்த சந்தோஷமும், கண்களின் உயிர்ப்பும்.
சத்தியமாய் இதில் ஒரு துளி கூட அவரிடம் இப்போது கிடையவே கிடையாதென்று அடித்து கூறமுடியும்.
உயிரெல்லாம் அவர்களுக்காக பதறி தவிக்க ஆரம்பித்தது. என்ன முயன்று அந்த காட்சிகளை கண்களின் நீர் மறைக்க துவங்க,
“நாங்க ஊருக்கு கிளம்பறோம். அதை சொல்லிட்டு போக தான் வந்திருக்கோம்…” என்றாள் குரலை செருமியபடி.
“ப்ச், எதுக்கு இந்த எமோஷன்? ரிலாக்ஸ்…” என்றான் அவளருகே வந்து தலையில் கைவைத்து.
“ஹ்ம்ம்…” என்றவள் முகம் மேலும் கலங்க, அதற்குள் கௌரவ்விடமிருந்து அழைப்பு. ஆகர்ஷன் காதில் வைக்க,
“தினேஷை தட்டியாச்சு…” என்றான் கௌரவ் எடுத்ததுமே.
“வாட்?…” ஆகர்ஷன் திகைக்க,
“நாக்பூர் சைட் இருக்கிறதா தெரிஞ்சது. ஸோ ஆல்மோஸ்ட் பினிஷ்ட். இதை நான் டீல் பண்ணிக்கிறேன். நீங்க உங்க கல்யாண வேலையை பாருங்க….” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க திகைப்பில் இருந்து மீளவில்லை ஆகர்ஷன்.
“என்னாச்சு? என்னன்னு சொல்லுங்க…” என பிரத்யுக்ஷா ஆகர்ஷனின் கை பிடித்து கேட்க,
“ஹ்ம்ம்….” என்றவன் முகத்தில் சொல்லொண்ணா உணர்வு.
“கௌரவ் தான்…” என்று ஆகர்ஷன் விஷயத்தை கூற பயத்தில் வெடவெடத்து போனாள் பிரத்யுக்ஷா.
‘கௌரவ்வா? இப்படி?’ என்று அச்சத்தில் விழிகள் விரிய,
“அவங்க ஏன்? இது ரிஸ்க். அது தான் ஆக்ஷன் எடுத்தாச்சே…” என்றாள் பதட்டம் குறையாமல்.
“இதுவும் ஆக்ஷன் தான்…” என்றவன்,
“எனக்காக கௌரவ் எதுவும் செய்வான்….” என்றான் ஆத்மார்த்தமாக.
“இதை பார்த்தியா பிரத்யு…” என்றவன் ஒரு டைரியை காண்பிக்க அதில் இருந்த எழுத்துக்களில் பிரத்யுக்ஷாவின் உள்ளமெல்லாம் கனம் கூடியது.
‘பொண்ணுன்னாலும் கிருஷ்ணா மாதிரி. பையன் பிறந்தாலும் கிருஷ்ணா மாதிரி. சரியா?’ நேசங்கள் அங்கே முள்ளில்லா ரோஜாவாய் மணம் வீசியது.
‘கௌசிக்கு கிருஷ்ணா மாதிரி வேணும். எனக்கு கௌசி மாதிரியெல்லாம் இல்லாம, கௌசியாவே வேணும்.’ என்னும் இன்னொரு ஒரு கையெழுத்து.
கிருஷ்ணாவினுடையது என புரிந்தது. அதன் கீழ் கௌசல்யாவின் கையெழுத்து. இருவரின் மனங்களும் ஓரிடத்தில் இளைப்பாறிய தருணங்கள் அவை என்பதை பார்த்ததும் புரிய முடிந்தது.
‘ரெண்டு குழந்தை பெத்துக்கனும். பையன் பிறந்தா ஆகர்ஷன், கௌரவ். பொண்ணு பிறந்தா ஆதர்ஷினி, கெளரி. கிருஷ்ணா செலெக்ட் பண்ணினது தான். ரொம்ப ஆசை.’ என ஆசை ஆசையாய் காதலே கொண்டாடும்படி எழுதியிருந்த வரிகளை எல்லாம் பிரத்யுக்ஷாவின் கண்ணீர் நனைக்க ஆரம்பித்தது.
“ஏன் ஏன் இவங்களை போய் வாழவிடாம…” என்ற பிரத்யுக்ஷாவின் கேவல் ஆகர்ஷனின் தோளில் எழுந்தடங்க கண்ணீர் அவன் நெஞ்சத்தை நனைத்தது.
நெஞ்சம் மட்டுமல்ல கண்ணீரில் பரிசுத்தமான நேசங்களும் அங்கே விதியின் சுழற்சியால் நனையத்தான் செய்தது.