பிரத்யுக்ஷாவினால் அந்த வார்த்தைகளை அதற்கு மேல் படிக்க முடியவில்லை.
அந்த காதலில் கண்ணீர் கரைபுரண்டது. எத்தனை நேசம், எவ்வளவு எதிர்பார்ப்புகள்?
அத்தனையும் கடற்கரை மணலில் செதுக்கப்பட்டு நொடியில் கலைக்கப்பட்ட வடிவமைப்பு போலாகி விட்டதை ஜீரணிக்க முடியவில்லை.
அந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் பிறந்த குழந்தையின் பிஞ்சு பாதங்களுக்கு இணையான மென்மையை, இனிமையை கொண்டதாகவே இருந்தது.
விசும்பியபடி இருந்தவள் அதனை மூடிவைத்துவிட்டு ஆகர்ஷனை நிமிர்ந்து பார்க்க கல்லை மென்றவனை போல அனைத்தையும் விழுங்கிவிட்டு நிற்கும் அந்த தோற்றம்.
இன்னுமே நெஞ்சை அறுத்தது. இவனால் எப்படி இருக்க முடிகிறது என்றுதான் தோன்றியது.
எத்தனையோ முறை அதனை நிச்சயம் அவன் படித்து பார்த்திருக்க வேண்டும் என்பதை டைரியின் ஓரங்கள் கண்ணீர் தடங்களில் ஊறி காய்ந்து வெடவெடத்திருக்கும் அந்த தாள்கள் பறைசாற்றியது.
“ப்ச், இதுக்கு போய் அழுதுட்டு….” என்றவன் அந்த டைரியை வாங்கி பத்திரமாய் அதனிடத்தில் வைத்துவிட்டு திரும்பியவன் அந்த அறையை சுற்றி பார்த்தான்.
“இதுதான் என் அப்பா அவங்க கல்யாணத்துக்கு முன்னாடி இருந்த ரூமாம்….” என அவளிடம் சொல்லிக்கொண்டே மெல்ல நகர்ந்தான்.
“அப்பாவோட ஒவ்வொரு நினைவுகளும், அவங்களோட காலகட்டத்தோட பயணமும் இந்த ரூம் ஃபுல்லா இருக்கும்…” என்றவன்,
“இங்க எப்படி என் அம்மா திங்ஸ் வந்ததுன்னு தோணுமே…” என்று ஒரு மேடையின் அருகில் ஒற்றை காலை தரையில் ஊன்றி சாய்ந்தமர்ந்தான் ஆகர்ஷன்.
“பேசுடா, நீ எதையாச்சும் கேட்டா தானே எனக்கும் சொல்ல தோணும்?…” என பிரத்யுக்ஷாவிடம் கூற,
“என்னால முடியலை. நான் ரொம்ப லைட் ஹார்ட்….” என்றவள் முகத்தில் துளியும் சந்தோஷம் இல்லை.
“நான் உன்கிட்ட ஷேர் பண்ணாம என்ன பண்ணுவேன்?…” என்றவன் அவளை நோக்கி கை நீட்ட,
“நிஜமாவே முடியலை. எப்படி உங்களால எல்லாம் தெரிஞ்சும், திரும்ப இதை படிச்சு வேதனைப்பட்டு…”
“வேதனையா?…” என்றவன் முகத்தில் மின்னல் நேர வலியின் வெளிப்பாடு மின்னி மறைந்தது.
“அதைவிட ஒரு சந்தோஷம்ன்னு வச்சுக்கோயேன். அந்த டைரி படிக்கும்போது எனக்கும் அவங்க கூடவே இருக்கற ஒரு ஃபீல். ஹ்ம்ம், இல்லைன்றது கஷ்டம் தான். ஆனாலும் அந்த கொஞ்சநாள் வாழ்க்கையை கூட எவ்வளவு அழகா வாழ்ந்திருக்காங்க என் அம்மாவும் அப்பாவும்…” என்றான் ஆகர்ஷன்.
அவன் சொல்லும்பொழுதே அன்றொருநாள் தன்னிடம் காதலை பற்றி அவன் விவரித்த அந்த தருணம் தான் இந்தநொடி மனதில் எழுந்துநின்றது.
‘காதலே காதலிக்கவேண்டும்’ அன்றைக்கு பெரிதாய் தோன்றவில்லை. நேசத்தின் மிகுதியில் உள்ளார்ந்த ஒரு ஆசை என்றுதான் நினைத்தாள்.
ஆனால் இன்றோ இதோ அந்த ஓரிரு வரிகள் உணர்த்திவிட்டதே காதல் எத்தனை தூரம் கொண்டாடியதோ, அத்தனை தூரம் தன்னுடனே எடுத்துக்கொண்டதை போல்.
நினைக்க நினைக்க தவிப்புகள் கூட பிரத்யுக்ஷா ஓடி சென்று அவனை அணைத்து நின்றவளால் தன்னை அமைதிப்படுத்தவே முடியவில்லை.
அவனின் எதிர்பார்ப்பும், தாங்கள் ஒருவரின் மேல் ஒருவர் கொண்டிருக்கும் பந்தமும் என்று பயத்தில் இழுத்து சென்றது.
“ஓகே ஓகே. பிரத்யு. கூல்…” என்றான் அவளின் தலை கோதி.
“ஒன்னு சொல்லனும்…” மெல்லிய குரலில் பிரத்யுக்ஷா கூற,
“ஒன்னு என்ன ஓராயிரம் சொல்லலாம். என் முகம் பார்த்து சொல்லு…” என அவளின் முகம் நிமிர்த்தினான் ஆகர்ஷன்.
“ம்ஹூம் இந்த ஒன்னு மட்டும். நான் சொல்றது மாதிரி கேட்கனும். இது மட்டும்…” என மீண்டும் அவள் விழிகள் சஞ்சலத்தில் மிதக்க கூற,
“சரி சொல்லு…” என்றான் அவன்.
“நீங்க அன்னைக்கு சொன்னீங்களே அதை திரும்ப சொல்லுங்க…”
“எதை?…”
“அதான் சிட்னி வந்திருக்கும் போது சொன்னீங்க தானே? அதுதான்…” என்றாள் மீண்டும்.
“கேட்கிற விஷயத்துக்கும், உன் முகத்துக்கும் சம்பந்தமே இல்லை. இதேன் கண்ணீரோட பார்வையும், காதலான கேள்வியும்?…” என அவளின் நெற்றியில் முட்டியவன், அதில் முத்தமிட்டு,
““காதல் காதலிக்கப்படறதும், காதலிக்கிறதும் மட்டும் இல்லை. அந்த காதலே நம்மை விரும்பனும். காதலிக்கனும். நம்மை விட்டு ஒருநொடி கூட பிரிஞ்சிட முடியாத அளவுக்கு இறுக்கி பிடிச்சுக்கனும். அந்த காதலால நாம காதலிக்கப்படனும். இதுதானே?…”
“ஹ்ம்ம், ஆமா…”
“அப்படி ஒரு வாழ்க்கையை வாழ தயாரா மிஸஸ் ஆகர்ஷன்…” என்றான் அவளின் கன்னம் தொட்டு.
“அதுதான், நாம கொஞ்சம் குறைச்சே லவ் பண்ணுவோம். இவ்வளோ வேண்டாம். எனக்கு ஒவ்வொரு நிமிஷமும் இப்போ பயமா இருக்கு. அதிகபட்ச காதலோட உட்சம், மரணத்தோட வலியை விட கொடுமையானது. என்னால எழுத்தா கூட படிக்க முடியலை. அவங்க…” என்றவள் பார்வை அங்கிருந்த கௌசல்யா கிருஷ்ணகுமாரின் புகைப்படத்தில் நிலைத்தது.
கௌசல்யாவின் தற்போதைய நிலையும், புகைப்படத்தின் காட்சியும் கூடவே கிருஷ்ணகுமாரின் புகைப்படமும்.
அவ்விடத்தில் அவரின் பிரதி பிம்பமான ஆகர்ஷன் மேல் தான் கவனம் திரும்ப இலக்கில்லா ஒரு பார்வையாகி போனது பிரத்யுக்ஷாவின் நிலை.
“ஆகர்ஷன்…” என்றவளின் முணுமுணுப்பில் தன் புறம் அவளை திருப்பியவன் மனமும் அவளின் எண்ணவோட்டத்தில் பரிதவித்தது.
“முத்திடுச்சு போ. என்னவாகிடும்? எங்க போயிடுவேன்? நானும் என் அப்பா மாதிரி…” என ஆகர்ஷன் சொல்லவும் பளாரென்று ஒரு அறை வலிக்காமல் ஆனால் அவளின் வலிமிகுந்த பார்வையோடு.
“யாரை மாதிரியும் வேண்டாம். ஆகர்ஷனா, பிரத்யுக்ஷாவா மட்டுமே இருப்போம். அவ்வளோ தான். இன்னொருதடவை காதல் காதலிக்கனும்ன்னு ஏதாவது பினாத்தின பேச வாயிருக்காது ராஸ்கல்….” என்றவள்,
“எதுவா இருந்தாலும் நமக்கு தெரிஞ்சமாதிரி எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வாழ ஆரம்பிப்போம். சண்டை, கோபம், அடிதடி எதுனாலும் நம்மோட அந்தந்த நேரத்தோட வெளிப்பாடு. புரிஞ்சதா?…” என கேட்டு அவன் அசையாத புன்னகை பார்வையில்,
“இப்பவும் என்னை அழ வைக்கிற நீ. பயப்படுத்திட்ட. போடா…” என்று அவனின் நெஞ்சில் கைவைத்து தள்ளிவிட்டு அறையிலிருந்து வெளியேறியவள் கதவை தாண்டி செல்லும் முன் மீண்டும் பார்த்தாள்.
ஆளுயர புகைப்படமான கிருஷ்ணகுமார், கௌசல்யாவின் திருமண புகைப்படமும், அதன் முன்னே நடுவில் இப்போது ஆகர்ஷனும் நிற்க கண்டவள், நெஞ்சம் இன்னும் சமநிலைக்கு வரவில்லை.
அதிலும் ஆகர்ஷன் கூறிய அந்த வார்த்தை, ‘நான் எங்கப்பாவை மாதிரி’ என்று கேட்டதன் பொருளை எண்ணி தானே அவளுமே அஞ்சியது.