அந்தநொடி அந்த அறைக்கே வந்திருக்க கூடாதென நினைத்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
இத்தனை கனத்தை தன்னால் தாங்க முடியாது போகும் என்றும் நினைத்ததில்லை, இப்படி ஒரு பயம் நெஞ்சை கவ்வி பிடிக்கும் என்றும் யோசித்ததில்லை.
ஷ்யாமளாவின் வாயிலாக அவள் கேட்டறிந்த விஷயங்களிலேயே பெரும் பாதிப்பு.
இப்போது கௌசல்யா கிருஷ்ணகுமாரின் இந்த நினைவுகளும், புகைப்படமும், அதனுடன் தானும் அவனும்.
பைத்தியம் பிடிப்பதை போலானது பிரத்யுக்ஷாவிற்கு. இதென்ன எல்லாம் கூடிவரும் நேரம் இப்படி ஒரு சஞ்சலம் என்று தன்னை தானே நிந்தித்துக்கொண்டாள் அவள்.
“பிரத்யூ…” என்று அவளருகில் ஆகர்ஷன் வர,
“நான் கொஞ்சம் சுயநலம் தான். நானும் வாழனுமே. நினைச்சுட்டே வாழ என்னால முடியாது. முழுசா வாழனும். வெளில வாங்க. ப்ளீஸ்…” என்று மனதில் தோன்றியதை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் பிரத்யுக்ஷா.
அவளின் இதயம் பெரிதும் பலவீனப்பட்டு போயுள்ளது என்று புரிந்தது ஆகர்ஷனுக்கு.
மீண்டும் ஒருமுறை அந்த அறையை திரும்பி பார்த்தவன் இதழ் விரியாத புன்னகையை அங்கிருக்கும் அரூப உணர்வுகளுக்கு தந்துவிட்டு கதவை அடைத்துவிட்டு கீழே செல்ல மற்றவர்களும் வந்திருந்தனர்.
ஸ்ரீவத்சன் கூட அப்போதுதான் அங்கே வந்து சேர்ந்தார். வந்ததும் ஆகர்ஷனிடம் எதுவும் பேசவில்லை.
நேரடியாக கிருஷ்ணகுமார் ஷ்யாமளாவிடம் தான் பேச்சுக்கள். வீட்டில் கலந்து பேச நினைத்தவரால் அதனை செயல்படுத்த முடியவில்லை.
வீட்டிலுமே பிரத்யுக்ஷாவின் திருமணம் பற்றி ஒரு தகவலாக தான் அவர்களுக்கு கூறினார் ஸ்ரீவத்சன்.
“கல்யாணம் கண்டிப்பா நம்ம ஊர்ல தான். ரிசப்ஷன் வச்சுக்கறது வேணும்னா இங்க சென்னையில வச்சுக்கட்டும். இதுதான் என் முடிவு…” என்றவர்,
“பிரத்யூவோட ஹையர் ஸ்டடிஸ் எல்லாம் அதுக்கப்பறம் அவங்க டிசிஷன். என்ன செய்யனுமோ செய்யட்டும்…” என்று விரைப்பாய் சொல்லிவிட்டார்.
சந்தோஷம் தான். ஆனாலும் இப்படி சொல்லியிருக்க வேண்டாமே என்றிருந்தது காவேரிக்கு.
அவரின் அடுத்த கவலை கௌசல்யா. அவரை எப்படியும் திருமணத்திற்கு அழைக்கவேண்டும்.
அதுஒருபுறம் இருக்க அவர் வரவேண்டுமென்றால் தாய்மாமனாக தன் மகளுக்கு ராம்நாத் வந்து நிற்கவேண்டுமே.
இப்படியாக அடுத்தடுத்த கவலைகள். இதனை ஸ்ரீவத்சனிடம் யார் சொல்லமுடியும்?
அதுவும் தன் அண்ணன் செய்து வைத்திருக்கும் விஷயத்திற்கு அழைப்பாரோ இல்லையோ என ஒவ்வொன்றும் காவேரியை குழப்ப அதனுடனே இங்கே வந்திருந்தார் காவேரி.
இப்போது ஸ்ரீவத்சன் வந்தும் அதே பாணியில் தான் கிருஷ்ணகுமாரிடம் கூறிக்கொண்டிருந்தார்.
என்ன ஒன்று தங்களிடம் தகவலாய் அதிகாரத்துடனும், கிருஷ்ணகுமாரிடம் அதிகாரம் மழுங்கிய ஒரு பாவனை.
ஆனாலும் அந்த விரைப்பில் ஒன்றும் குறைவில்லை. இதுதான் காவேரி, பிரத்யுக்ஷா கவனித்தது.
ஆனால் அவர்கள் அறியாத ஒன்று ஸ்ரீவத்சனால் கிருஷ்ணகுமார், ஷ்யாமளா, ஆகர்ஷனிடம் அந்த அகந்தையை சட்டென்று வெளிப்படுத்த முடியவில்லை.
அதேநேரம் அதிகத்திற்கும் இறங்கி செல்லவில்லை. அவரளவில் தன்மையுடன் சொல்லிவிட்டார் தன் விருப்பத்தினை.
அதீத சந்தோஷம் தான். இருந்தாலும் ஆர்ப்பரிப்பு இல்லாத பாவனையுடன் தான் அமர்ந்திருந்தனர்.
“ஒரு வெடிங் ப்ரப்போசல் முடிஞ்சிருக்கு. இதென்ன இவ்வளோ சைலண்டா?…” என அனன்யா தான் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தாள்.
ஆகர்ஷன் பார்வை எல்லாம் பிரத்யுக்ஷாவிடம் தான். அனைவரிடமும் சொற்பமாய் பேசிக்கொண்டவன் மனம் அவளின் தெளிவில்லாத முகத்தில் தான் சுழன்றது.
“என்ன ஆர்ஷ், எல்லாம் ஒகே தானே? ஏன் பிரத்யூ முகமே டல்லா இருக்கு. வந்தப்போ கூட இப்படி இல்லையே…” என ஷ்யாமளா தனியாய் கேட்க,
“அவ இன்னும் அந்த தினேஷ் பண்ணினதுல இருந்து வெளில வரலை. அதுதான். சரியாகிடுவா ம்மா…” என்றான் ஆகர்ஷன்.
“ஹ்ம்ம், ஓகே…” என்று சொல்லிவிட்டு வந்தவர்களை கவனிக்க,
“அனு…” என்று தங்கையை அழைத்து அவளிடம் என்னவோ சொல்ல,
“நீ இருக்கியேண்ணா…” என சிரித்தபடி நகர்ந்தாள்.
சற்று நேரத்தில் அனைவரும் கிளம்ப ஆயத்தமாகும் பொழுதில் ‘கஸ்தூரி மான்குட்டியாம்’ ஒலிக்க பிரத்யுக்ஷாவின் விழிகளில் மழுக்கென்று நீர்.
“வா…” என்றான் அவள் தன்னை பார்ப்பதை கண்டு.
“போய் பேசிட்டு வா…” என்றார் ஸ்ரீவத்சன். கூடவே,
“கிளம்பனும்,ப்ளைட்க்கு டைம் ஆகிடுச்சு…” என்றும் சொல்ல,
“இவர் இருக்காரே…” என்று சலித்தாள் ஸ்வேதா.
“ஷ்ஷ், பேசாம இரு…” என அதட்டியவன் அட்டென்ஷனில் தகப்பனின் சொல்லுக்கிணங்க நின்றான் தேவான்ஷ்.
ஸ்ரீவத்சன் சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடக்க பிரத்யூக்ஷா ஆகர்ஷனிடம் வந்தாள்.
“டென்ஷன் பண்ணிட்டேனா?…” அவளே உணர்ந்து கேட்க,
“அன்டர்ஸ்டேன்ட். நீ ஓகே தானே?…” என்றான்.
“ஹ்ம்ம், கொஞ்சம்…” என லேசாய் புன்னகைத்தவளுக்குமே புரிந்தது தன் சற்றுமுன் தனக்குள் தோன்றிய எண்ணங்களும், அர்த்தமற்ற அச்சமும் அதீதம் என்று.
ஆனாலும் அந்தநொடி அவளுள் எழும் பயத்தினை விரட்ட முடியாமல் தானே இத்தனை தவிப்பும்.
அனைவரும் திருமணம் பற்றி பேச பேச மற்றவர்களுக்கு இருந்த மகிழ்ச்சியை விட தன்னிடத்தில் குறைவு என்றுதான் தோன்றியது.
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள். இன்று நிறைவேறும் நாளில் இப்படி தானும் குழம்பி, அவனையும் வருத்தம் கொள்ள செய்து என்று அத்தனை கவலை.
கிளம்பும் நேரம் இப்படி ஆகர்ஷன் அவளுக்கு பாடலை ஒலிக்க செய்ய ஸ்ரீவத்சன் முகம் போன போக்கில் ஆகர்ஷன் பிரத்யுக்ஷாவை விடுத்து அவரை தான் பார்த்தான் அந்த நிமிடம்.
“நான் கிளம்பனும். நானே மூட் ஸ்பாயில் பண்ணிட்டேன். ஸாரி சீனியர்…” என கேட்க,
“அக்ஸப்ட் எல்லாம் அத்தனை சீக்கிரம் பண்ண முடியாது. வெய்ட் பண்ணு. பெண்டிங்ல இருக்கட்டும்…” என சொல்லிவிட்டு,
“ஒருநிமிஷம்…” என உள்ளே சென்றான்.
இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தவன் கையில் இருந்தவற்றை பார்த்தவளுக்கு சந்தோஷத்தில் முகம் விகசித்து பூரித்தது.
“இது தான் பிரத்யூ. இந்த பொண்ணை வெளில கொண்டுவர கஸ்தூரி மான்குட்டி, ஹாட் சாக்லேட், தாமரை பூங்கொத்து இதெல்லாம்…”
“இதெல்லாத்தோட ஆகர்ஷனும் வேணும்…” என பிரத்யூக்ஷா அவன் கொடுத்ததை பெற்றுக்கொண்டு வாக்கியத்தை முடிக்க,