“ம்ஹூம், நீங்க ராங் ரூட்ல நடக்க ஆரம்பிச்சிட்டீங்க. நான் கிளம்பறேன்ப்பா…” என்றாள் தலையசைத்துவிட்டு.
அட்டகாசமான சிரிப்புடன் அவளோடு இணைந்து நடந்து ஆகர்ஷன் வெளியே வர, ஒரு கையில் பூங்கொத்தும், இன்னொரு கையில் ஹாட் சாக்லேட்டும் வைத்துக்கொண்டு பிரத்யூக்ஷா.
‘உங்க பொண்ணுக்கு என்னென்ன பிடிக்கும், அவ ரசனைகள் எதெல்லாம்ன்னு தெரியுமா உங்களுக்கு?’ முதல்நாள் ஆகர்ஷன் கேட்ட கேள்வி இப்போதும் ஸ்ரீவத்சன் நெஞ்சத்தை குத்தியது.
அதோடு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்த அந்த பாடல். மகளின் முகத்தில் ஏதோ ஒரு வித்தியாசம், சட்டென்று அது பெற்ற மாற்றம் இந்தளவிற்கு தான் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
ஒரு பாடல் அவளிடம் இத்தனை தூரம் உடன் சென்றிருக்கிறதே எனும் பொழுது தகப்பனாய் ஒரு சுணக்கம் தான் எதையுமே தெரிந்திருக்கவில்லை என்று.
“போலாம் டாடி…” என்று வந்தாள் பிரத்யூக்ஷா.
அவர்களிடம் விடைபெற்று ஸ்ரீவத்சன் குடும்பத்தினர் புறப்பட ஆகர்ஷனை வந்து அணைத்துக்கொண்டார் கிருஷ்ணகுமார்.
எல்லாம் எல்லாமே நடந்த அனைத்திற்குமே ஆரம்பப்புள்ளி பிரத்யூக்ஷா ஒருவளே.
அவளின் சிட்னி வருகை, ஆகர்ஷன், அனன்யாவின் பந்தம், அவள் மீதான ஆகர்ஷன் வைத்த ப்ரியம், என்று ஒவ்வொன்றும் தொட்டு தொட்டு ஆகர்ஷனின் ஜனிப்பின் சுவடியை சேர்ந்துவிட்டதே.
எல்லாவற்றையும் விட மனம் உடைந்து அங்கிருந்து அவன் கிளம்பி சென்றதென்ன, வரவே முடியாதென்று எத்தனை வருடங்களை கடத்தியதென்ன?
எல்லாமே ஓய்ந்து முடிந்து இதோ தங்களின் அருகில், தங்களின் எதிரில் தங்களின் பெறாத மகன்.
ஆகர்ஷனை என்றுமே பெறாத பிள்ளை என்று நினைத்ததே இல்லை ஷ்யாமளாவும், கிருஷ்ணகுமாரும். அனன்யா பிறந்த பிறகும் கூட சில வருடங்கள் அவளுக்குமே எந்த விஷயமும் தெரிந்திருக்கவில்லை.
அதன்பின் நடந்தவை அனைத்தும் வலி மிகுந்த பக்கங்கள் தான்.இப்போது இந்த நிமிடம் மகனின் முகத்தில் மிதமிஞ்சியே இருக்கும் சந்தோஷத்தில் அவர்களின் மனமும் ஆனந்தத்தில் அலைமோதியது.
“கௌசல்யாம்மாவும்…” என்று சொல்லிவிட்டு சென்றான் அவன்.
இந்த விஷயத்தை கௌசல்யாவிடம் சொல்லவேண்டும் என்று உயிரெல்லாம் அத்தனை தவிப்பு.
ராம்நாத் பேசிவிட்டு சென்றதை பற்றி பிரத்யூக்ஷா தெரிவித்திருக்க வீட்டில் இதனை சொல்லியிருப்பாரா என்று எதுவும் தெரியவில்லை.
அதே நினைவுடன் தன் அறைக்கு வந்தவன் அப்போதுதான் பிரத்யூக்ஷாவிடம் காண்பிக்க வைத்திருந்த அந்த புகைப்படத்தை மறந்திருந்ததையே நினைவு கூர்ந்தான்.
“இதை எப்படி மிஸ் பண்ணேன்…” என்று நெற்றியில் தட்டிக்கொண்டவன் அந்த புகைப்படத்தை சுற்றியிருந்த கவரை பிரிக்க அனன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
ஆகர்ஷன் பிரத்யூக்ஷா இருவரும் மட்டுமிருக்கும் அதனை பெரிதாய் மாற்றியிருந்தான் ஆகர்ஷன்.
அதனை காண்பித்துவிட்டு தங்களின் திருமணம் முடிந்ததும் தான் தாய் தந்தையரின் நினைவுகள் அடங்கிய அறைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று நினைத்திருக்க எல்லாம் மாறாய்.
“இது காதலே காதலிக்கும் காதல் இல்லாம வேற என்னடா பிரத்யூ?…” என்றான் அதில் அவனிடம் புன்னகைக்கும் எதிர்கால மனைவியிடம்.
தன்னை பார்த்ததும் ராம்நாத் என்னவிதமாய் முகம் மாற்றுவார் என்று நினைக்கையில் சிரிப்பும், கூடவே கோபமும்.
மாதாமாதம் அழைத்து வந்து என்றும் சொல்லமுடியாமல் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்துவிடுவான் கௌரவ்.
“இப்படி பார்த்தே எனக்கு எதுவும் ஆகிடும்…” என ஆகர்ஷன் முன்னிலையிலேயே பல்லை கடித்துக்கொண்டு பேசுபவரிடம்,
“ரொம்ப நெகட்டிவா பேசறாங்க. இதுவும் ஏதாவது மனநிலை கோளாறா இருக்குமோ?…” என கௌரவ் கேட்டு அதன் பரிசோதனை,சிகிச்சை பற்றி பேச ஆரம்பித்துவிட அரண்டுவிட்டார் ராம்நாத்.
“விட்டா என்னை இங்கயே படுக்க வச்சிடுவ…” என்று மகனிடம் ஆகர்ஷனின் எதிரிலேயே அவர் அலற,
“இந்த வயசோல் சர்ஜரி முடிஞ்சு கொஞ்ச நாள்ல இவ்வளோ டென்ஷன் கூடவே கூடாது. நீங்க சொன்ன மாதிரி இன்னொரு கம்ப்ளீட் செக்கப் பண்ணி ஒன் வீக் இங்கயே அப்சர்வேஷன்ல வச்சி பார்த்திடலாம்…” என சீரியஸாக ஆகர்ஷனும் பேசி வைக்க சிறையில் அடைபட்ட நிலை தான் ராம்நாத்தின் நிலை.
இப்போதும் ஆகர்ஷனின் அறைக்கு ராம்நாத் கௌரவ்வுடன் உள்ளே வர,
“நர்ஸ்….” என்ற ஆகர்ஷன், அவர் வரவும்,
“இவருக்கு வழக்கமா எடுக்கற எல்லா டெஸ்ட்டும் எடுத்திருங்க….” என்று அனுப்பிவைத்தான்.
எப்போதும் அவனுமே தான் உடன் இருப்பது. இன்றைக்கு என்ன என்று மண்டை குடைய துவங்க,
“நீ வரலையா கௌரவ்?…” என்றார் மகனிடம்.
அது ஆகர்ஷன் வருகிறானா இல்லையா என்பதை தெரிந்துகொள்வதற்கு. கௌரவ்வுமே என்ன என்பதை போல ஆகர்ஷனை பார்க்க,
“என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட முக்கியமான ஒரு விஷயத்தை கௌரவ்க்கிட்ட பேசவேண்டியதிருக்கு…” என்ற ஆகர்ஷன்,
“யார் யார் வாழ்க்கை? என்ன விஷயம்?அதுவும் என் பிள்ளை, பொண்டாட்டிக்கிட்ட? நான் இல்லாமலா?…”என்று குதிக்க ஆரம்பிக்க,
“நர்ஸ், இவருக்கு முதல்ல ப்ளட் பிரஷர் செக் பண்ணுங்க. அப்படியே ரூம் நம்பர் 420ல அட்மிட் பண்ணிடுங்க. நான் வந்து பார்க்கறேன்…” என்ற ஆகர்ஷன் அழுத்தமாய் அவரை பார்க்க,
“யாரை பார்த்துடா 420 சொன்ன? நான் யார் தெரியுமா?…” என்று இரைந்தவர் கௌரவ்வின் அமைதியில் அவன் புறம் துணுக்குற்று திரும்பினார்.
“டாக்டர் உங்களை எதுவும் சொல்லலையே.நீங்க ஏன் இப்படி ரியாக்ட் பன்றீங்க?…” என்ற கௌரவ்வின் அழுத்தமான கேள்வியில் ஸ்தம்பித்த பார்வை பார்த்தார் ராம்நாத்.
“அதை நான் சொல்றேன்…” என்று ஆகர்ஷன் கூற,
“என்னன்னு சொல்லுங்க…” என கௌரவ்வும் கேட்க,
“நெஞ்சு வலிக்குதுடா. நெஞ்சு வலிக்குதே…” என நெஞ்சை பிடித்துவிட்டார் ராம்நாத்.
“அதுக்கு தான் அட்மிஷன். ரூம் நம்பர்…” என ஆகர்ஷன் சொல்ல,
“420…” என கௌரவ் எடுத்து கொடுக்க,
“அட்மிட் பண்ணிடுங்க….” என்றான் ஆகர்ஷன்.
உண்மைக்கும் மயக்கம் வரும் போலிருந்தது. என்ன நடக்கிறது? எதை பேச போகிறார்கள் என்று தெரியும் முன்னரே ராம்நாத் பாதி செத்து பிழைத்தார் அங்கே.
“கூட்டிட்டு போங்க…” என்று ஆகர்ஷன் கட்டளையிடவும் நர்ஸ் அவரை அழைத்து செல்லவும், ஆகர்ஷன், கௌரவ் இருவரின் முகத்திலும் வருத்தம்.
“கௌரவ்…” என ஆகர்ஷன் பேசவர,
“ப்ச், ரொம்பவே டென்ஷன் ஆகிட்டிருக்கார். சரி விஷயத்துக்கு வருவோம். ந்யூஸ் குட்ந்யூஸ் தானே?…” என்றான் கௌரவ் மெல்லிய சிரிப்புடன்.
“ஹ்ம்ம், எஸ்…” இப்போது ஆகர்ஷனின் முகமும் சந்தோஷத்திலும், கௌசல்யாவை எதிர்பார்த்தும் காத்திருக்க,
“கூட்டிட்டு வர்றேன். நீங்களே சொல்லுங்க…”
“இன்னும் அம்மாவுக்கு தெரியாதா?…” என்றான் ஆகர்ஷன்.
“அம்மாக்கிட்ட நீங்க தானே சொல்லனும். அப்போ தானே அவங்களுக்கும் சந்தோஷம்…” என்றவன் சென்று வெளியில் இருக்கும் கௌசல்யாவை அழைத்து வர ஆர்வமாய் உள்ளே வந்தார் கௌசல்யா.