“வாங்கம்மா…” என ஆகர்ஷன் அழைக்க கண்ணில் மின்னி தெறித்த பாசத்திலும் நெஞ்சை கவ்வும் வேதனையிலும் அவரின் முகம் கசங்கியபடி,
“நல்லாயிருக்கியா கண்ணா?…” என்றார் மகனிடம்.
மீண்டும் தலையசைத்து ஒரு புன்னகை. ஆகர்ஷன் என்னும் அழைப்பை அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் மனதோரம் பொங்கி பிராவகம் புரியும் மன்றாடல் அவனை எள்ளி நகையாடியது.
‘உனக்கு எதிர்பார்ப்பில்லையா? யாரை ஏமாத்திக்கற?’ என அவனிடமே வாதிட்டு, ‘நான் எதிர்பார்க்கிறேன்’ என கூக்குரல் விட்டது அவனின் ஆழ்மனம்.
‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதற்கு சான்றாய் அவன் மனம் தாயின் பார்வையில் தான் இருப்பதே போதும் என்பதை போல தன்னை தானே சமாதானம் செய்துகொள்ளும் பிள்ளையாய் மாறிவிட்டது எப்போதோ.
என்னவொன்று அவரின் தோற்றம் இப்போது அவன் மனதை குத்தி கிழித்தது. என்ன வயதாகிவிட்டது கௌசல்யாவிற்கு.
முதிர்ந்த பெண்மணியை போல பச்சை நரம்புகள் அவரின் விரல்களை தாண்டி வெளியே தெரிந்தது.
தோல் என்ற போர்வை உடலோடு ஒட்டியதை போலொரு வெளிர்ந்த ரத்த பசையற்ற தேகம்.
வாழ்க்கையில் பிடிப்பில்லாத ஒரு உருவத்தை போலிருந்தவரின் கண்களில் துளியளவு ஜீவனை கவனித்தான் ஆகர்ஷன்.
நினைத்தால் தன் தாய் என உரிமை கொண்டாடிவிட முடியும். மீண்டும் விழிகள் கௌரவ்வின் அருகில் கௌசல்யாவின் பிணைப்பை கண்டவன் தன்னை தானே தேற்றிக்கொண்டான்.
அவருக்குமே பரிசோதனைகள் எல்லாம் செய்தாகிவிட்டது. குறை உடலில் இல்லை.
மனதில் எனும்பொழுது எந்த மருந்தை கொடுத்து சிகிச்சை செய்து அவரின் காயத்தை போக்குவது?
கையாலாகததை போல் உணர்ந்ததென்னவோ ஆகர்ஷன் மட்டுமல்லாது கௌரவ்வுமே தான்.
ஆகர்ஷனின் பார்வையை கவனித்தவன் தன் தாயின் கைவிரலையும் பார்த்துவிட்டு லேசாய் புன்னகைத்து மீண்டும் நிமிர மிதமிஞ்சிய வலி ஆகர்ஷன் முகத்தில்.
கௌரவ்வுமே தாயின் தோற்றம் கண்டு வருந்தியிருக்கிறான் தான். அதன் காரணம் எல்லாம் முதலில் உடல்வாகு என்று நினைத்திருக்க சமீபமாக அல்லவா தெரிந்தது உயிரோடு இருப்பதற்கு உண்டு வாழ்ந்தால் போதும் என்பதை போல் அவர் வாழ்ந்து வருவதை பற்றி.
“உட்காருங்கம்மா…” என்ற கௌரவ் அவருக்கு இருக்கையை எடுத்து கொடுத்துவிட்டு தானும் அருகில் அமர்ந்தான்.
ஆகர்ஷன் சட்டென அறையின் குளிரை குறைத்து வைத்தவன் தனது அலைபேசியை எடுத்து ஷ்யாமளாவிற்கு அழைத்தான்.
“ம்மா, வாங்க…” என்று சொல்லிவிட்டு நிமிர்ந்தவன் மீண்டும் கௌசல்யாவை பார்த்து புன்னகைத்தான்.
“நீங்க எப்படி இருக்கீங்க?…” என விசாரித்த மகனிடமிருந்த வாஞ்சையில் நெக்குருகியபடி தலையசைத்த கௌசல்யா,
“நான் கேட்டேன்…” என்றார் அவனிடம்.
சிறுபிள்ளை போல மகனின் நலனை கேட்டோமே, பதில் இல்லை என்று அவர் நலிந்த குரலோடு கேள்வி வர,
“என்ன சொல்லனும்? சொல்லுங்களேன்…” என்று சிரித்தான் ஆகர்ஷன்.
“கௌரவ்…” என்று இளையமகனிடம் அவர் திரும்ப,
“ஆகர்ஷன்…” என்றான் கௌரவ்.
“கண்ணாவும் நல்ல பேர் தான்…” எப்போதும் அவர்களுக்குள் வழக்கமாக நடக்கும் சம்பாஷனை தான்.
ராம்நாத்தை அழைத்து வரும்பொழுதுகளில் பெரும்பாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கௌரவ் கௌசல்யாவையும் அழைத்து வந்துவிடுவான்.
லேசாக தலைவலிக்கிறது, காய்ச்சல், சோர்வு என்ன சொல்லிவிட்டாலும் அதற்கு கௌரவ்வின் உடனடி தீர்வு ஆகர்ஷன் தான்.
“சரி கிளம்புங்க…” என்று உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு கிளம்பிவிடுவான்.
“மேலுக்கு சுகமில்லைன்னா இங்க ஹாஸ்பிட்டலே இல்லையா என்ன? அங்க ஏன் போகனும்?…” என்று குறுக்கே ராம்நாத் வந்தால்,
“ஏன் போக கூடாதுன்னு சொல்லுங்க…” என்று கேட்டு அடக்கிவிடுவான் கௌரவ்.
“கொஞ்சமாவது புத்திசாலித்தனமா பேசு கௌரவ். என்ன பன்ற நீ?…” என்பவரிடம்,
“இப்போ தான் புத்தி வந்திருக்கு. அதான் இப்படி பன்றேன்…” என அவரை சட்டையே செய்யமாட்டான்.
இந்தமுறையும் கௌசல்யாவை அழைத்து வந்துவிட ஒருவார்த்தை கேள்வி எழுப்பவில்லையே ராம்நாத்.
தான் கேட்டால் அதற்கு மகன் கேட்கும் எதிர்கேள்வியில் அவர் தான் சிக்கிக்கொண்டு முழிப்பதாக இருக்கும்.
இந்தமுறை அமைதியாக வந்தாலும் கௌசல்யாவை அவர் முறைக்காமல் இல்லை.
“முன்னாடி என் பக்கத்துல உக்காருங்கம்மா…” என அவரை தன் அருகில் அமரவைத்து தான் அழைத்து வந்தான்.
“உங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கு. பின் சீட்ல ப்ரீயா இருங்க…” என்று ராம்நாத்திடமும் அதற்கொரு காரணம் சொல்லிவிட பொறுமத்தான் முடிந்தது அவரால்.
எத்தனை செய்தும் இந்த ஆகர்ஷன் என்னும் பெயர் மட்டும் கௌசல்யாவின் வாயில் இருந்து வரவே இல்லை.
அதில் கௌரவ்விற்கு தான் அத்தனை வருத்தமும். அவர் தன் மீது கொண்டிருக்கும் அன்பு ஒன்றே அவனை கட்டி வைக்க அந்த பாசம் எல்லாம் கோபமாய் ராம்நாத் மீது தான் திசை திரும்பியது.
“கண்ணா ரொம்ப நல்ல பேர். அதுவும் நீங்க சொல்லும்போது எனக்குன்னே சொல்ற மாதிரி இருக்கு…” என்ற ஆகர்ஷன்,
“ஏன் கௌரவ், கண்ணா நல்ல பேர் தானே? அப்படியே இருக்கட்டும். ஆகர்ஷன் பெயரை என் பேரன்ட்ஸ் வச்ச மாதிரி கண்ணாவை கௌசல்யாம்மா மட்டும் வச்சதா இருக்கட்டுமே…” என்றான் சிரித்தபடி.
“சமாளிச்சுக்கறீங்க ப்ரோ…” என்றான் கௌரவ்.
“ஆமா உங்களுக்கு இந்த பேர் யார் வச்சா? இதுவரை கேட்க தோணலை. இப்போ இந்த நிமிஷம் தோணுது…” என்று ஆகர்ஷன் கேட்க,
“என்னோட அம்மா தான் வச்சாங்களாம்….” என கௌசல்யாவை பார்த்துக்கொண்டே கௌரவ் கூற அவருமே கண்கள் பொங்க தலையசைத்து கண்ணீரை முகம் சாய்த்து மறைத்துக்கொண்டார்.
ஆகர்ஷனுக்குமே முன்பே அது தெரிந்திருந்ததே பிரத்யுக்ஷாவின் மூலம். காவேரியிடம் பேச்சுவாக்கில் அவளும் கேட்டு தெரிந்து ஆகர்ஷனிடம் பகிர்ந்திருந்தாள்.
“கௌரவ் மாமாவோட அம்மா அவங்க பிறந்ததுமே உடல்நிலை சரியில்லாம போய் இறந்துட்டாங்க போல. அந்த சூழ்நிலையில பேர் எதுவுமே வைக்காம இருக்கவும் கௌசல்யாத்தை கல்யாணம் முடிஞ்சு வந்ததும் அவங்க தான் இந்த பேரை வச்சாங்களாம்….” என்றவள்,
“அதுக்குமே என் பேரனுக்கு பேர் சூஸ் நீ யாருன்னு பாட்டி கேட்டப்போ டாடி தான் சப்போர்ட் பண்ணிருக்காங்க. அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு நீங்களே வளர்த்துப்பீங்களான்னு பேர் வைக்கிற அன்னைக்கு செம்ம சீனாம். அப்பறம் தான் அமைதியானாங்கலாம்….” என்று பிரத்யுக்ஷா கூறியிருந்தாள்.
அதன்பொருட்டே முதல்நாள் டைரியில் அந்த பெயர்களை படித்ததும் அவள் அத்தனை பயந்ததும், உணர்ச்சிவசப்பட்டதும்.
இப்போதும் கௌரவ் அதனை சொல்ல மௌனமாய் தலையசைத்தான் ஆகர்ஷன்.