“இதோட நிக்காம இந்த கல்யாணத்துல ஒவ்வொரு விஷேஷத்துலையும் நீங்க முன்ன நிக்கனும். பிரத்யூவுக்கும் நீங்க நெருங்கின உறவு. அவளோட தாய்மாமா குடும்பம் நீங்க…” என்று ஷ்யாமளா கூற கௌசல்யா பதறினார்.
ஏன் என்றே தெரியாமல் ராம்நாத் கோவை சென்றுவந்ததில் இருந்து தன்னை ஸ்ரீவத்சன் குடும்பம் அவமதித்துவிட்டதாக சொல்லி அந்த உறவே இனி இல்லை என்று காரணம் சொல்லாமல் குதித்துக்கொண்டு இருந்தாரே.
கௌசல்யாவிற்கு அது ஒருவகையில் பயம் என்றால், ஆகர்ஷன் யார் என்று தெரிந்தவருக்கு தன்னை இங்கே பரிசோதனைக்கே அழைத்துவர விருப்பமில்லாதபொழுது திருமணத்திற்கா? நடக்குமா என்றுதான் உள்ளம் தவித்தது.
“எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா?…” என்று கௌரவ் ஷ்யாமளாவிடம் கேட்க,
“நீ என்ன அடுத்தவனா உன்னை தனியா கூப்பிட. இது நம்ம வீட்டு கல்யாணம். நானும் உன் அம்மா மாதிரி தான். ஆர்ஷ்க்கு நீ கூட நிக்க வேண்டாமா? கேள்வியை பாரு?…” என்ற ஷ்யாமளா,
“இங்க அவனுக்கு ப்ரெண்ட்ஸ்ன்னு யாரும் கிடையாது. அதனால நீ தான் எல்லாமே செய்யனும்ன்னு எனக்கொரு ஆசை. அதுக்கு மேல உன் இஷ்டம்…” என்றார் கௌரவ்விடம்.
“அப்போ என் இஷ்டம் போல கல்யாணத்த நடத்தனும்….” என்று சொல்லிவிட்டு,
“என்ன ப்ரோ?…” என்றான் ஆகர்ஷனிடம்.
“செய்யலாமே…” என உடனடி ஒப்புதல் கொடுத்து அவனின் கரத்தை கை நீட்டி பற்றிக்கொண்டான் ஆகர்ஷன்.
கௌரவ்வின் கண்கள் பனித்தது. தொண்டையை செருமியவன் சுதாரிக்கும் முன் ஆகர்ஷனுக்கு அழைப்பு.
எடுத்து காதில் வைத்தவன் அங்கே கேட்ட சத்தத்தில் புருவம் சுருக்கினான். ராம்நாத் தான் தன்னை வெளியே விடும்படி இரைந்துகொண்டிருந்தார்.
“டாக்டர் இவர் ரொம்ப பிரச்சனை பன்றார். வெளில வரனும்ன்னு பிடிவாதம் பன்றார்…” என்று நர்ஸின் குரல்.
“பிரச்சனை பன்றாரா?…” என கேட்டு,
“ம்ஹூம், என்ன செஞ்சாலும் விடாதீங்க. கண்ட்ரோல் பண்ணுங்க…” என சொல்லிக்கொண்டே ஆகர்ஷன் கௌரவ்வை பார்த்தான்.
“ஓஹ், அப்போ விடவேண்டாம்…” என கௌரவ்வும் கூற,
“யாரை?…” என்றார் கௌசல்யா.
“ஒருத்தர் இன்னைக்கு தான் வசமா சிக்கியிருக்கார். அதான் விடவேண்டாம்ன்னு சொன்னேன். வேண்டாம் தானே?…” எனும் ஆகர்ஷனின் கேள்வியில்,
“அப்போ வேண்டாம்…” என்றார் கௌசல்யாவுமே.
இடது கைவிரல்களால் மீசையுடன் அதரங்களையும் மறைத்துக்கொண்டு லேசாய் முகம் திருப்பி சிரிப்பை கௌரவ் அடக்க,
“நீங்க சொன்னா சரி…” என்ற ஆகர்ஷன்,
“விடவே வேண்டாம். ரூம் அரஸ்ட் பண்ணுங்க. நான் வர்ற வரை பேசவே கூடாது…” என்று சொல்லி வைத்துவிட்டு,
“நாம ரிலாக்ஸ் பண்ணுவோம்…” என்று சொல்லி கௌரவ்வை பார்த்து கண் சிமிட்ட தோளை குலுக்கினான் அவன்.
“பிரத்யூ திரும்ப சிட்னி கிளம்பலாம். கூட ஒரு பதினஞ்சு நாள் லீவ் போட சொல்லி கல்யாணத்தை முடிச்சிட்டே அனுப்பலாமேன்னு பேசியிருக்கோம்…” என்றவர்,
“எல்லாமே பேசியாச்சு கௌசல்யா. சம்பிரதாயமா பொண்ணு பார்க்கனும் இல்லையா? எப்போன்னு கௌரவ்க்கிட்ட சொல்றேன். கண்டிப்பா நீங்க அங்க வரனும்…” என்று கூற கௌசல்யா பதில் சொல்லமுடியாமல் பார்த்தார்.
“கண்டிப்பா பார்க்கலாம்….” என்ற கௌரவ்,
“பொண்ணுக்கு பாட தெரியுமான்னு கேட்டு வச்சிடுங்க….” என்றும் சொல்லி மேஜையை தட்ட,
“இவனுக்கு நீ தான் சரி கௌரவ்…” என்றார் ஷ்யாமளா.
சொல்லியதை போலவே இரண்டேநாளில் பெண் பார்க்கும் படலம் அமோகமாக கோவையில் அரங்கேற கூண்டில் அடைப்பட்டதை போல கௌரவ் அவரை நகர்த்திக்கொண்டு வந்திருந்தான் கோவைக்கு.
அவர்கள் வரும் முன்னரே பிரத்யூக்ஷா தாய், தந்தையரிடம் சொல்லிவிட்டாள் தெரிந்ததை போல் கௌசல்யாவிடம் காண்பித்துக்கொள்ள வேண்டாம் என்று.
அதன்படி எப்போதும் போல அவரை வரவேற்றாலும் அவர்மீது படியும் அந்த பரிதாபமான பார்வையை தவிர்க்க முடியவில்லை.
உறவுகளின் மத்தியில் வீட்டின் கூடத்தின் நடுவில் மணப்பெண்ணாய் ஆகர்ஷனின் மனம் கவர்ந்தவள் வருகையும், அவள் பார்வையும் அவனின் உயிரெல்லாம் தித்திப்பாய் நினைக்கும் மானசீக முத்தங்களின் ஈரங்களாய் குளிரூட்டியது.