அதையும் தாண்டி இது அவருக்காக. இனியாவது வாழ்க்கையில் சிற்சில சந்தோஷங்களை அவருக்கு தருவது தன் தலையாய கடமை என்று நினைத்தவனுக்கு ஆகர்ஷன் மீதான அன்பு அதைவிட மேலாக இருந்தது.
எந்தவிதத்திலும் தன் மனம் நோகும்படி ஆகிவிட கூடாதென்று தானே இன்றுவரை நட்பு எனும் போர்வையில் அவனுடன் உறவாடி வருகிறான்.
அவனும், ஷ்யாமளா, கிருஷ்ணகுமார், அனன்யா இவர்களுக்காகவும் தான் என்றால் மிகையில்லை.
கௌசல்யா என்பவருக்காக தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராக தன்னை உரிமையோடு அணைத்துக்கொண்ட குடும்பம்.
“என்னோட ரெண்டு குட்டீஸ்க்கும் மொட்டை போடும்போது ஆர்ஷ் அண்ணா பக்கத்துல நீங்களும் உக்கார்ந்து தாய்மாமாவா ஒரு குட்டியை மடில வச்சு காது குத்த வைக்கனும். இப்பவே என் பொண்ணுக்கு மாமா சீர் என்னன்னு யோசிச்சு வச்சுக்கோங்க கௌரவ் அண்ணா…” என்று உரிமையுடன் மிரட்டி இருந்தாள் அனன்யா.
தற்போதுதான் பிள்ளை உண்டாகியிருக்கும் பெண். தனக்கென கௌசல்யா மூலம் கிடைத்த அந்த சொந்தத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான் கௌரவ்.
இப்போதும் தன்னை விட்டு எப்படி செல்வது என்று பரிதவிக்கும் தாயின் அன்பின் முன் எதுவும் பெரிதில்லை என்று தோன்றியது.
“நானும் ரெண்டுநாளைக்கு ஒருதடவை அங்க வர்றேன். நீங்க போய்ட்டு வாங்கம்மா…” என அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் அவன்.
விக்ரமிற்கு அடுத்த அதிர்ச்சி இது. ஊர் போய் சேரும்வரை ராம்நாத்தை தொடர்புகொள்ள கூடாதென்று எச்சரித்து அனுப்ப, ‘என்னடா இது?’ என்று ஒன்றும் புரியாமல் சென்றான் விக்ரம்.
வீட்டிற்கு வந்த ராம்நாத் ஆட்டமாய் ஆடி தீர்க்க அவர் பேசி முடிக்கும் வரை மௌனமாய் அன்றைய நாளிதழில் இருந்தவன்,
“கௌரவ் உன்கிட்ட தான்…” என்றார் மகனிடம்.
“நீங்க பேசற அளவுக்கு பக்கம் பக்கமா எல்லாம் பேச முடியாதுப்பா. சிம்பிளா சொல்லிடறேன், நீங்க கூட்டிட்டு போனதனால தான் காவேரி அத்தைக்கு கால் போச்சு. இப்போ அவங்க வீட்டுல ஒரு விசேஷம்ன்றப்போ யார் ஹெல்ப் பண்ணுவா? ஒரு பிராயச்சித்தம்….” என்றதற்கே ராம்நாத் அடங்கியிருக்க வேண்டும்.
“ஏன் தேவான்ஷ் கல்யாணம் நடக்கும் போது நம்ம ஹெல்ப் பண்ணினோமா என்ன?…” என்றார்.
“அப்போ புத்தி இல்லை. இப்போ புத்தி வந்திருச்சு…” அவர் கேட்பதற்கு முன்பே சொல்லியவன்,
“அன்னைக்கு ஏன் அத்தனை வேகமா ட்ரைவ் பண்ணுனீங்க ப்பா? நீங்க அப்படி ராஷ் ட்ரைவிங் செய்யாம இருந்திருந்தா அத்தை அம்மாவை போல இருந்திருப்பாங்க…” என்று சொல்ல இதென்ன இவன் இதற்குள்ளே சுற்றுகிறான் என பகீர் என்றானது.
எதுவும் இல்லாததற்கே ஆகர்ஷன் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் அத்தனை நெருக்கம் காண்பிக்கிறான். இதில் தான் செய்ததெல்லாம் தெரியவந்தால்? என்று பல்லை கடித்து அடக்கிக்கொண்டவர்,
“என்னவோ பண்ணி தொலையட்டும்…” என்று செல்வதை தவிர வேறு வழி என்று எதுவும் இருக்கவில்லை.
ஆகர்ஷன் வீட்டில் அத்தனை கொண்டாட்டம். அனன்யாவும் தன் கணவனுடன் அங்கே வந்திருந்தாள்.
“உன்னையே ஒருத்தர் கவனிக்கனும், இங்கயும் அங்கயுமா சுத்திட்டிருக்காம ஒரு இடத்துல இருடா…” என அவளை பிடித்து அமர்த்தவேண்டியதாகி போனது.
ஐந்துமாதத்தில் இருந்தாள் அனன்யா. அத்தனை சந்தோஷம், அதிலும் தன் அண்ணனின் திருமணம் இத்தனை சுலபத்தில் எந்தவித இடைஞ்சல்களும் இல்லாமல் நடந்தேற இருப்பதில் அவளை கையில் பிடிக்க முடியவில்லை.
முன்பே பிரத்யுக்ஷாவுடன் அத்தனை நெருக்கம். இப்போது சொல்லவும் வேண்டுமா என்பதனை போல் நித்தமும் அவளுடன் கலந்து பேசி எப்படி ரிசப்ஷன் எல்லாவற்றையும் மேற்கொள்ளவேண்டும் என்று அந்த உலகத்திற்கே சென்றுவிட்டனர்.
எல்லாம் சரியாக இருந்தாலும் நாட்கள் நெருங்க நெருங்க ஆகர்ஷன் மனதில் பெரும் சஞ்சலம். சந்தோஷத்தை தாண்டிய ஒரு தவிப்பு.
“எல்லாம் ஓகே தானே ஆர்ஷ்?…” என்றார் ஷ்யாமளா தனித்திருந்தவனிடம்.
“ம்ஹூம். ம்மா, இங்க வாங்க….” என்றவன் அவரை அணைத்துக்கொண்டான்.
“என்னடா? என்னன்னு அம்மாட்ட சொல்லு…” என மகனிடம் கேட்க,
ஆகர்ஷன் என்ன கேட்க வருகிறான் என்று அவருக்கு தெளிவாய் புரிந்துவிட்டது.
“நீ எதையும் நினைச்சு கவலைப்படாத ஆர்ஷ். இந்த கல்யாணம் உன் வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். இதுல நீ எதையும் நினைச்சு கவலைப்பட்டா எங்களுக்கு கஷ்டமா இருக்கனும் ஆர்ஷ்…” என்றார் ஷ்யாமளா.
“ம்மா, வர்றவங்க கௌசிம்மாவை பார்த்து எதுவும் கேட்டா? அவங்க அவங்க தாங்கிக்க மாட்டாங்களே. அவங்களால தாங்கிக்கவும் முடியாது…” என்று கூறியவனின் முகம் கசங்கி, கண்கள் கலங்கியது.
இன்னொரு குடும்பத்துடன் வாழும் பெற்ற தாயை தன் திருமணத்தில் உரிமையாய் மற்றவர்களிடம் அறிமுகப்படுத்த முடியாத தன் நிலையில் மனம் கலங்கியது.
அதேநேரம் எங்கே இதனால் கௌசல்யாவின் வாழ்வில் சங்கடங்கள் வந்துவிடுமோ என்று நினைத்தான்.
ராம்நாத்தை எல்லாம் மனிதனாக கூட எண்ணவில்லை. அதேநேரம், கௌரவ். அவனோடு தன் கௌசல்யா அம்மாவின் இரு பிள்ளைகள்.
இதனை எல்லாமே யோசிக்கவேண்டுமே. இதுவே அனைவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தால் இத்தனை தவிப்பிற்கே அவசியமில்லை.
இன்னும் தானே அவரை மகனாய் உரிமையாய் நெருங்காத போது அந்த சூழல் எப்படி மாறுமோ என்றிருந்தது ஆகர்ஷனுக்கு.
அதுவே ஆகர்ஷனை பெரும் அழுத்தத்திற்கு ஆளாக்கியது. அதனை உணர்ந்த ஷ்யாமளா,
“எது நடக்கனுமோ அதுதான் நடக்கும் ஆர்ஷ். எதையுமே நாம தடுத்து நிறுத்த முடியாது. எப்பவோ எங்கையோ எழுதப்பட்டது தான். அதுக்கு நாம வடிவம் குடுக்கறோம். இதெல்லாம் நடந்திட வேண்டாம்ன்னு நாம என்ன நினைச்சாலும் நடக்கவேண்டியது நடக்காம போகாது…” என்றவர்,
“சமாளிப்போம் ஆர்ஷ். அது நம்மால முடியும். முடியும் தானே?…” என்றார் மகனின் முகத்தினை தன்னை நோக்கி திருப்பி.
“கல்யாணத்துக்கு உங்களுக்கு எடுத்த சேரி பத்தி இன்னும் எதுவும் சொல்லலையே?…” என்று கேட்க,
“நீ தான் சொல்லிட்டியே ஸ்ட்ரிக்ட்லி உன்னோட சாய்ஸ் தான்னு. நீ தேர்ந்தெடுத்த எது எனக்கு பிடிக்காம இருக்கும் ஆர்ஷ். ரொம்ப அழகா இருக்கு…” என்ற தாயின் அன்பில் எப்போதும் போல உருகினான் ஆகர்ஷன்.
என்னதான் அவரின் அண்ணன் மகனாக தானிருந்தாலும் விவரம் தெரிந்ததில் இருந்து இன்றுவரை அவனுக்காகவே வாழும் தாயும், தகப்பனும்.
சொந்த தாய் தந்தையை இழந்த தான் என்ன செய்தோம் என்று நினைத்தாலும், இன்னொருவகையில் ஷ்யாமளா, கிருஷ்ணகுமார், அனன்யா இவர்களின் மூலம் தன்னை ஆசிர்வதிக்கப்பட்டவனாக தான் உணர்ந்தான் ஆகர்ஷன்.
“எனக்கில்லையா?…” என தன் கன்னம் காண்பித்து அவரிடம் கேட்க ஷ்யாமளாவின் விழிகளிலும் நீர்.
எப்போதாவது அதிகபட்ச உணர்ச்சி பெருக்கில் இப்படி அவனாகவே அவர்களுக்கு கொடுத்து பெறுவதுண்டு.
“உனக்கில்லாதது எதுவுமில்லை ஆர்ஷ்…” என்றவர் மகனின் நெற்றி கன்னம் என்று பிள்ளை முத்தம் கொடுக்க,
“என்னை டீல்ல விட்டாச்சா?…” என்று கிருஷ்ணகுமார் இடையில் வர,
“நானும், எனக்கும் அம்மா முத்தம் இல்லையா? இருங்க என் குட்டீஸ் கிட்ட சொல்றேன்…” என அனன்யாவும் வந்துவிட பாந்தமாய் அவளை நடுவில் அமர்த்தி நால்வரும் ஒருவரை ஒருவர் கை பற்றிக்கொண்டனர்.
நிச்சயதார்த்தத்தன்று காலையே ஆகர்ஷன் குடும்பத்துடன் கோவை வந்து சேர ஸ்ரீவத்சன் முன் நின்று அவர்களை வரவேற்று அழைத்து சென்றார்.
வந்து சேர்ந்தாகிவிட்டதா என்று அத்தனை அழைப்பு அழைத்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
ஆனால் அத்தனையும் ஷ்யாமளா, கிருஷ்ணகுமார், அனன்யா இவர்களுக்கு மட்டுமே.
ஆகர்ஷனுக்கு அழைக்கவே இல்லை. இரண்டு நாட்களாக இத்தனை கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறாள்.
“இப்போ தான் ரீச்சாகிருக்கோம். இன்னும் இல்லடா. இனிமே தான். ரூம்க்கு போய் ப்ரெஷப் ஆகிட்டு கூப்பிடறேன்…” என காதில் வைத்த போனுடன் அனன்யா நடந்து செல்ல அவளருகில் தான் ஆகர்ஷனும் வந்துகொண்டிருந்தான்.
“அண்ணாவா? இங்க இல்லையே. முன்னாடி பேசிட்டு போய்ட்டிருக்கான்…” என்று அவனுக்கு கண் சிமிட்டிவிட்டு பிரத்யுக்ஷாவிடம் பொய் கூற,
“நீங்க எப்படி எதுக்கெல்லாம் சிரிப்பீங்கன்னு தெரியாதா என்ன? அவ்வளவு பொய். வைங்க…” என்றிருந்தாள் பிரத்யுக்ஷா.
அதற்குள் ஆகர்ஷன் போனை பிடுங்கி காதில் வைக்க அந்த மௌனத்தை கூட கவனிக்காமல் ஆகர்ஷனை பேசிக்கொண்டிருந்தாள்.
“ப்ச், இப்போ எதுக்கு இவ்வளோ கோவம்?…” என்றவன் குரலில் ஸ்தம்பித்து அவள் அமர்ந்துவிட,
“பிரத்யூ. டேய்,…” என்றவனின் அழைப்பில் கண்கள் கலங்கியது.
இத்தனை தூரம் திருமணம் வரை வந்துவிட்டிருக்க எத்தனை எளிதாய் அன்று கிளம்புகிறேன் என்றானே. அதனை விடவே முடியவில்லை.