ஒருமணிநேரம் சென்றிருக்கும். ஹாலில் சலசலவென்று சப்தம். சொந்தங்கள் என்று ஒருசிலர் மட்டுமே வந்திருந்தனர்.
அதுவும் பார்த்துவிட்டு மண்டபம் செல்வதற்கு. திருமணம் வீட்டிற்கான ஆட்கள் பெரிதாய் இல்லை.
போட்டிருக்கும் மெஹந்தி நன்றாய் காய்ந்துகொண்டிருக்க கீழே கேட்ட பரபரப்பில் என்னவென்று எட்டி பார்த்தாள்.
கௌரவ் ராம்நாத்துடன் வந்திருக்க விக்ரமும் அவர்களுடன் நிற்பது மட்டுமே தெரிந்தது.
“இவங்களுக்காகவா?…” என்றபடி மெதுவாய் கீழே இறங்கி வர வரத்தான் தெரிந்தது வந்திருந்தது அந்த வீட்டிற்கு மாப்பிள்ளையாக போகின்றவன் என்று.
ஆம், ஆகர்ஷன் ஷ்யாமளா, அனன்யாவுடன் வந்திருந்தான். கன்னம் குழியும் புன்னகையுடன் அவன் நின்றிருக்க அனன்யா கையில் என்னவோ வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
“ஹேய் கல்யாணப்பொண்ணு…” என ஆர்ப்பாட்டமாய் அவள் கை விரித்துக்கொண்டு வர,
“அச்சோ அனு அக்கா…” என்று ஓடிவந்து தானே அணைத்துக்கொண்டாள்.
“பார்த்து நடக்கமாட்டீங்களா?…” என்று அனுவின் தலையில் நறுகென்று ஒரு குட்டு வேறு பிரத்யுக்ஷா வைக்க,
“பிரத்யு…” என்று காவேரி பதறிவிட்டார்.
“விடுங்க காவேரி, அவங்க ரெண்டுபேரும் எப்பவும் அப்படித்தான்…” என சகஜமாகவே அவர் எடுத்துக்கொள்ள பெருமிதமாய் தோளை குலுக்கிக்கொண்டவள் பார்வை ஆகர்ஷனிடம் சென்றது.
அவளை பார்வையால் வருடியபடி அங்கிருந்தவர்களிடம் ஆகர்ஷன் பேசிக்கொண்டே பிரத்யுக்ஷாவின் முகம் காண புதிதாய் ஒரு வெக்கம்.
மீண்டும் மீண்டும் அவனின் மனம் மயக்கியது மணமகளாய் அவளின் இந்த பார்வையும், பதட்டமான வெட்கமும்.
“அவங்களுக்கு என்ன வேணும்ன்னு கவனி தேவான்ஷ்…” என்ற ஸ்ரீவத்சன்,
“பிரத்யூக்கு ஜ்வெல்ஸ் கொண்டுவந்திருக்காங்க….” என்றார் மனைவியிடமும், அவரருகில் நின்ற கௌசல்யாவிடமும்.
“அந்த ஜ்வெல்ஸ் எல்லாம் ஆர்ஷ் அண்ணாவோட அம்மாவுக்கான ஜ்வெல்ஸ். அதை பிரத்யூவுக்கு குடுக்கனுமாம். அதான் அம்மாவும் நானும் வந்தோம். நிச்சயத்துக்கு அதை போட்டுட்டு தான் வரனும்…” என்றாள் அனன்யா.
அனைவருமே ஒவ்வொருவிதமான மனநிலைக்கு சென்றுவிட விஷயம் அறிந்தவர்கள் அனைவரின் பார்வையும் கௌசல்யாவிடம் தான்.
கௌசல்யா ஆகர்ஷனை மட்டுமே தான் பார்த்திருந்தார். அந்த நகைகளில் கௌசல்யாவின் வளையலும், சங்கிலியும் மட்டும் முதன்மையில் இருந்தது.
கிருஷ்ணகுமார் இறந்த பொழுது அத்தனையும் கழற்றியவர். ஆகர்ஷனை எடுத்து செல்லும் பொழுது தன் மகன் ஞாபகார்த்தம், அது என் பேரனுக்கு சொந்தம் என்று வாங்கிக்கொண்டு தான் சென்றிருந்தார் அவரின் மாமியார்.
இன்று அதனை பார்த்ததுமே கௌசல்யாவிற்கு தலையெல்லாம் கிறுகிறுத்து வர அவர் விழுவதற்குள் அம்மா என்னும் குரல்.
அத்தனைபேரும் என்னவென்று பார்க்க ராம்நாத் தான் நெஞ்சை பிடித்துக்கொண்டு சாய்ந்து கதற ஆரம்பித்திருந்தார்.
“என்னாச்சு? என்னாச்சு?…” என சட்டென்று ஒரு பதட்டமான சூழ்நிலை.
கௌரவ் விக்ரமுடன் சேர்த்து அவரை தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் அறைக்கு செல்ல,
“பிரத்யூ, மெடிக்கல் கிட் எடுத்துட்டு வா…” என்ற ஆகர்ஷன் அவரை பரிசோதிக்க பிரத்யூக்ஷாவும் வர, அறைக்குள் கௌரவ், கௌசல்யா, பிரத்யூக்ஷா, ஆகர்ஷன் மட்டுமே.
அவரை பரிசோதித்தவன் புருவங்கள் சுருங்க அவரை முறைப்பும், புருவச்சுளிப்புமாய் பார்த்துக்கொண்டே நிமிர்ந்தான்.
“என்னாச்சு ப்ரோ?…” என கௌரவ் கேட்கும்பொழுதே ஆகர்ஷன் முகம் பார்த்து புரிந்துகொண்டான்.
“கேஸ் ட்ரபிள் தான். சீக்கிரம் சரி பண்ணி குடுத்திடலாம்…” என ஆகர்ஷன் கூற,
“ஹ்ம்ம், சரி பண்ணினா தான் ஈவ்னிங் நிச்சயத்துக்கு, மார்னிங் கல்யாணத்துக்கு வர்றவங்களை எல்லாம் நின்னு வரவேற்க முடியும்….” என கௌரவ் சொல்லிவிட்டு செல்ல,
“என்னதிது உடைஞ்ச பர்னிச்சரை, ப்ளம்பிங் வொர்க்கை சரி பண்ணி தர சொல்ற மாதிரி இப்டி சொல்லிட்டு போறார்? யோவ் வீரபாகு, தேவையா உனக்கு?…” என்றாள் பிரத்யுக்ஷா ராம்நாத்தை பார்த்து.
அப்போதும் ராம்நாத் அடங்காமல் அவர் பார்வை, கௌரவ்வுடன் செல்லும் கௌசல்யாவையே பின்தொடர,
“கண்ணு வேண்டாமா மிஸ்டர் ராம்நாத்?…” என பல்லை கடித்துக்கொண்டு கேட்டான் ஆகர்ஷன்.
“எனக்கொண்ணும் இல்லை. விடு…” என அவர் எழுந்துசெல்ல பார்க்க,
“பேசாம ஈவ்னிங் வரை இங்கயே தூங்குங்க. கிளம்பும்போது எழுப்பறோம்…”
“அதெல்லாம் முடியாது…” என்று சொல்லிக்கொண்டே ராம்நாத் கண்கள் சொருகிப்போய் அப்படியே மயங்கினார்.
“மைல்ட் ஸ்லீப்பிங் டோஸ் தான். தூங்கி மெதுவாவே எழுந்துக்கட்டும்…” என்றான் ஆகர்ஷன் பிரத்யூக்ஷாவிடம்.
அதேநேரம் ஸ்ரீவத்சன் உள்ளே வந்துவிட மேலும் பேசும் நேரமின்றி இருவரும் வெளியே வந்துவிட்டனர்.
ஹாலுக்கு வந்ததும் ஷ்யாமளா கௌசல்யாவின் அருகில் இயல்பு போல பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்து நிற்க அனன்யா கையிலிருந்த நகைகள் அடங்கிய வெள்ளித்தட்டை அவரிடம் தர,
“அவுச், இதை ஒரு கை பிடிங்களேன் கௌசல்யா. இந்த விரல் வேற லைட்டா பெய்ன்….” என்று சொல்லி கௌசல்யாவின் நடுங்கும் கைகளில் தட்டை வைத்து இருவரும் சேர்ந்தே பிரத்யூக்ஷாவிற்கு தரும்படி செய்ய தொண்டை அடைத்தது உண்மையறிந்தவர்களுக்கு.
“ஏன் இப்படியெல்லாம்?…” என கௌசல்யா சத்தமின்றி ஷ்யாமளாவிடம் கேட்க,
“இது உங்களோட உரிமை கௌசல்யா. என் ஆர்ஷோட சந்தோஷம். மறுக்காதீங்க…” என்று சொல்லி அவரை தோளோடு அணைத்துக்கொள்ள கௌசல்யாவின் மருகும் முகம் காணமுடியாமல் ஆகர்ஷன் வெளியேறிவிட்டான்.
செல்லும்பொழுதே துளிர்த்த கண்ணீரை சுண்டுவிட்டு செல்ல பிரத்யூக்ஷாவிற்கு மனம் தாங்கவில்லை.
சற்றுநேரத்தில் அவர்களும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றுவிட நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிக்கொண்டிருந்தான் ஆகர்ஷன்.
மண்டபம் வரும்வரை மனமெல்லாம் அந்த பாரம் சூழ்ந்துகொண்டு அழுத்தத்தான் செய்தது.
வழக்கம் போல தன்னை தானே தேற்றிக்கொண்டான் அவன். சொந்தங்களில் சிலர் மட்டுமே வந்திருந்தனர்.
சென்னையில் வரவேற்பு வைத்துவிட்டதில் மற்ற சொந்தங்களுக்கு அங்கே வைத்து கலந்துகொள்ளலாம் என்றிருக்க நெருங்கிய முக்கியமான உறவுகள் மட்டுமே வந்துவிட்டனர்.
அனைவரும் வந்து வாழ்த்திவிட்டு செல்ல எல்லாம் முடிந்து தயாராக அறைக்கு வரவே அத்தனை நேரமாகிவிட வேகமாய் கிளம்பிக்கொண்டிருந்தான் ஆகர்ஷன்.
அந்தநேரம் பார்த்து கதவு தட்டப்பட கௌரவ் என்று நினைத்தவன் சென்று கதவை திறக்க நின்றிருந்தது பிரத்யூக்ஷா.
மணப்பெண்ணாய் பட்டுப்புடவையில், உடலெல்லாம் காப்பிக்கொட்டை நிறத்திலும், ஓரங்கள் சில்வர் கலரிலும் ஜொலிக்க அவள் நிறத்திற்கு அது மேலும் எடுப்பாய், கவர்வதாய் இருந்தது.
“ஓஹ், வாவ்…” என பார்த்ததும் மயங்கும் பாவனை காண்பித்தான் ஆகர்ஷன்.
இதற்கு முன்புமே புடவையில் அவளை பார்த்திருக்கிறான் தான். ஆனால் இன்று அவள் தனக்கானவளாய், தன்னிடம் முழுமையாய் வந்து சேர்பவளாய் அவனின் மகிழ்ச்சியின் எல்லையை விரிவுப்படுத்தினாள்.
அதுவும் அவளே தன்னை தேடி வந்து நிற்க உள்ளமெல்லாம் கள்வண்டின் சரமாரியான படையெடுப்புகள்.
கன்னல் கவிதைகள் பார்வையில் மொழி பெயர்க்க இதயத்தின் கொட்டாரம் ஜாதிப்பூ தோரணம் சூடி பூவாசம் வீசியது.