“ஹேய் பிரத்யூ என்ன பண்ணின இப்போ?…” என அவளின் அருகில் வந்து நின்றவன் கேட்க,
“நத்திங். ஓகே, பார்த்தாச்சா? நான் போகட்டுமா?…” என்றாள் அவனிடம்.
“யூர் விஷ்…” என சொல்லியதுமே கடுப்பாகி போனாள்.
“கல்யாணம் முடிஞ்சதும் என்னோட பர்ஸ்ட் கண்டிஷன் இனிமே இந்த யூர் விஷ் என்னோட ப்ராப்பர்டி. நான் மட்டும் தான் யூஸ் பண்ணுவேன்…” என விரல் நீட்டி எச்சரிக்க,
“ஹப்பா, அவ்வளோ பெரிய ஹிட்லரா நீ?…” என கேட்டுக்கொண்டே ஆகர்ஷன் அறையின் உள்ளே பின்னோக்கி நடக்க அவனிடம் பேசிக்கொண்டே அறைக்குள் நுழைந்தாள் பிரத்யுக்ஷா.
“ஆமா, காதலிக்கும் போது இருக்கறதை விட கல்யாணத்துக்கப்பறம் இந்த வொய்ப்ன்ற வெப்பன் இருக்கே, அதுக்கெல்லாம் பக்கத்துல யாரும் நிக்க முடியாது….”
“ஹ்ம்ம், கொஞ்சம் பயமா தான் இருக்கு….”
“பார்த்தா அப்படி தெரியலையே. பேச்சுல ஒரு திமிர் தெரியுது…”
“ச்சே, ச்சே. நான் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். அதான் ரூம்க்குள்ள வந்துட்டு பேசறேன். அவ்வளோ பயம்…” என்றதும் தான் அழகாய் தன்னை தனியே அவன் உள்ளே இழுத்துக்கொண்டு வந்திருப்பதையே பிரத்யுக்ஷா உணர்ந்தாள்.
“ஓஹ், காட்…” என்றவள் ஆகர்ஷனை தாண்டிக்கொண்டு அறையின் வாசலை நோக்கி செல்லும் முன் கதவை சாற்றியவன் அதன் மீது சாய்ந்து நின்று கை கட்டிக்கொண்டான்.
“இந்த வொய்ப்ன்ற வெப்பனை பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணுவோம் பிரத்யூ…” என்றவன்,
“எங்கேஜ்மென்ட்க்கு இன்னும் டைம் இருக்கு…” என்றான் தன் கரத்தை அவள் முன் நீட்டி மடக்கி மணிக்கட்டை தன் முன் கொண்டுவந்து நேரம் பார்த்துவிட்டு.
“பேசலாமா?…” என அடக்கப்பட்ட சிரிப்புடன் தலையை கோதியபடி கேட்க,
“சீனியர்…” என்றவள் முகத்தை மூடிக்கொண்டு அவன் நெஞ்சில் சாய்ந்துவிட்டாள்.
“ஹ்ம்ம், இந்த சீனியர் எப்போ வருது? இப்போ வருது….” என்றவன் அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு, முகம் நிமிர்த்தி நெற்றியில் அடுத்த இதழொற்றலை பதித்தவன்,
“ஏன் அந்த செயினையும், பேங்கிளையும் போட்டுக்கலை பிரத்யூ?…” என்றான் ஆகர்ஷன்.
கௌசல்யாவின் நகையை இன்னும் பிரத்யூக்ஷா அணிந்திருக்கவில்லை. அதனை பார்த்ததுமே கண்டுகொண்டான்.
மற்ற நகைகளில் சிலவற்றை உடைக்கு பொருத்தமாய் அணிந்திருந்தவள் அதனை மட்டும் தவிர்த்திருக்க,
“எல்லாம் ஒரு உள்நோக்கம் தான். எங்க கண்டுபிடிங்க பார்ப்போம்…” என்றாள் அவனின் முத்த ஊர்கோலத்திற்கு ஏற்ப தன் முகத்தினை இங்குமங்குமாய் நகர்த்திக்கொண்டு அவனுக்கு வாகாய் அவன் கைகளுக்குள் நின்றபடி.
“கண்டுபிடிச்சா என்ன கிடைக்கும்?…”
“இப்போ எதுவுமே எடுத்துக்கலை நீங்க. பிராட் டாக்டர். ம்ஹூம், கிரிமினல் டாக்டர். உங்க க்ரைம் ரேட் ஒன்னு ரெண்டில்லை. எக்கச்சக்கம் தெரியுமா?…” என அவனின் இதழ்களில் அழுந்தியிருந்த தன் கன்னங்களை விலக்கிக்கொண்டு.
“நில்லுடா…” என்று மீண்டும் சிரிப்புடன் அவளை நெருங்க,
“சிட்னில ஒருவார்த்தை சொல்லாம நான் ஊருக்கு கிளம்பும்போது என்னை அழவிட்டது, என்ன விஷயம்ன்னு எதையும் ஓபனா பேசாதது, பிராப்பரா ப்ரப்போஸ் பண்ணாதது, விட்டுட்டு போக பார்த்தது, இது தான் ஹையஸ்ட் க்ரைம். நெக்ஸ்ட், என்ன சொன்னீங்க, நான் உங்களுக்கு வீட்டுல பார்த்த பொண்ணா?…” என்று பல்லை கடித்தாள் பிரத்யூக்ஷா.
“இந்த பத்துநாளா கௌசி அத்தை பாவம். நீங்க சொன்னதை நம்பிட்டு உங்களை பத்தி கண்ணா அப்படி, கண்ணா இப்படின்னு கண்ணா நீ தூங்கடான்னு உங்களை பெருமை பாடியே என்னை தூங்க வச்சிட்டாங்க. அவங்க எப்படி உங்ககூட தான் சிட்னில நான் இருந்தேன்னு மறந்தாங்கன்னே தெரியலை…” என்றவள்,
“அப்பறம் என்ன? பாட்டு பாடனும்ன்னு சொன்னீங்களாமே? இந்த விக்ரம் வேற அம்மாட்ட சொல்லி என்னை பாட சொல்லி காமிக்க வச்சு என்னென்ன கலாட்டா தெரியுமா?…” என்று சொல்ல,
“ஓகே, கொஞ்சம் கொஞ்சமா…” என்றவன் பார்வையும் அவள் மூச்சுவாங்கலுக்கு ஏற்ப கள்ளப்புன்னகையுடன் ஏறி இறங்கியது.
“உங்களை என்ன செய்யலாம்? அவ்வளவு க்ரைம், பார்த்தா குழந்தை மாதிரி சிரிப்பு. மயக்கிடறது. நானும் எக்கச்சக்கமா மயங்கிட்டேன்…”
“இங்க மட்டும் எக்கச்சக்கம் இல்லையா என்ன? நானும் மயங்கிட்டேன்…” என்றவனின் பேச்சில் இன்னுமே காண்டாகிவிட,
“மயங்கித்தான் வேண்டாம்ன்னு விட்டுட்டு போக நினைச்சீங்களா?…” என்று அவனின் நெஞ்சில் ஓரிரண்டு அடி வைத்தவள், கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“என்னால மறக்கவே முடியலையே…” என்று தவிப்புடன் கூறியவள் அவனின் இதயத்தில் முத்தமிட, ஆகர்ஷன் மீண்டும் அவள் முகத்தில் தன் அனுசரணைகளை கூட்டினான்.
“என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு போக உங்களுக்கு எப்படி முடிஞ்சது சீனியர்?…” என்றாள் அவனின் முத்தத்தின் ஸ்பரிசத்தை உள்வாங்கிக்கொண்டு.
“பிரத்யூ…” ஆகர்ஷன் மென்மையான புன்னகையுடன் அவளை எதிர்கொள்ள,
“எந்த சூழ்நிலையிலையும் நான் அப்படி ஒரு டிசிஷன் எடுத்திருக்கவே மாட்டேன் தெரியுமா? அந்த நிமிஷம் அப்போ நான் உங்களுக்கு யார், எந்த இடத்துல இருக்கேன்னு தோண வச்சிருச்சு….” என்றாள் குரலில் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சாதாரணம் போல.
“ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ரொம்ப ரொம்ப. நான் வேணாம்ன்னா உங்களுக்கு அந்த வலி எப்படி இருந்திருக்கும்? அப்போ எனக்கும் வலிக்கும்ன்னு தெரிஞ்சும் உங்களால எனக்கு எப்படி அதை தர முடிஞ்சது? ப்ச், அட போங்க சீனியர்…” என்றவள்,
“ஆனா அதை நான் லைப் லாங் மறக்கவே மாட்டேன். கல்யாணம் முடியட்டும். இருக்கு…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“என்ன வச்சிருக்க எனக்கு?…” என அவன் கண் சிமிட்ட,
“எதுவுமே இல்லைன்னு வச்சிருக்கேன். ஒரு ப்ரப்போஸ் பண்ண முடியலை. இதுல…” என்று பேச்சை நிறுத்தியவள்,
“ஆமா, வேற என்ன இருக்கு? எதுவுமே இல்லை….” என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலக அதற்குள் அறைக்கதவு தட்டப்பட்டது.
இருவருக்கும் எவ்வித பதட்டமும் இல்லை. ஆகர்ஷனை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவன் கவனித்து பார்த்து அட்டகாசமாய் ஒரு புன்னகையை தந்தவன்,
“போச்சு, மாட்டினோம்…” என்றான் அவளிடம் வேண்டும் என்றே.
“என்ன மாட்டினோம்? இதுவே நாளைக்கு இந்நேரம் யாரும் எதுவும் நம்மளை சொல்லுவாங்களா? கல்யாணம்ன்னா எல்லாம் தானே? இதுக்கு போய் பயந்துட்டு….” என்று கதவை சென்று திறக்க அனன்யா நின்றிருக்க அருகில் ஸ்வேதா கையை பிசைந்துகொண்டு பார்த்தாள்.
அவளருகே சாருலதா சாதாரணமாய் பார்த்தபடி நிற்க, முகத்தில் சிறிதளவு அலட்சியம் வேறு அவளிடம்.
“இன்னும் டைம் இருக்கே எங்கேஜ்மென்ட்க்கு?…” என ஆகர்ஷனின் கை கடிகாரத்தை எடுத்து பார்த்துவிட்டு அவர்களிடம் பிரத்யூக்ஷா சொல்ல,
“அதுவரை நீ உன் ரூம்ல இருக்கனும் பிரத்யூ. அங்க எல்லாரும் உன்னை பார்க்க வந்துட்டு எங்கன்னு கேட்கறாங்க…” என்றாள் ஸ்வேதா பதட்டமாய்.
“சொல்லவேண்டியது தானே மாப்பிள்ளையை பார்க்க போனேன்னு….” என்ற பிரத்யூ,
“என்ன அனு அக்கா, இதெல்லாம் சொல்லமாட்டீங்களா? உங்க அண்ணுக்கு என்ன தெரியும்? எப்படி ரெடியாகி இருக்காங்கன்னு நான் தான கவனிக்கனும். அதான் எல்லாம் பெர்பெக்ட்டான்னு பார்க்க வந்தேன்….” என்றாள் அனன்யாவை பார்த்து.