“கௌசி அத்தைக்கு இப்படி ஒரு பொண்ணு. அப்படியே அவ அப்பா மாதிரி…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“பிரத்யூ…” ஆகர்ஷன் கண்டிப்புடன் அழைக்க,
“சரண்டர் பாஸ்….” என்றவளை தன்னருகில் அழைத்து நிறுத்தியவன்,
“சேர்ந்தே போலாம்…” என அவளின் கரம் கோர்த்துக்கொண்டான்.
“என்ன?…” என ஸ்வேதா அதிர்ந்ததை எல்லாம் பொருட்படுத்தாமல், ஆகர்ஷன் புன்சிரிப்புடன் பிரத்யூக்ஷாவோடு ஜோடியாய் மேடையை நோக்கி நடக்க,
“என்ன அனு, இப்போ அழைச்சிட்டு போகவேண்டியதில்லை. அதுவும் முதல்ல பிரத்யூ மட்டும் தானே?…” என்றாள் ஸ்வேதா.
“அதெல்லாம் எதுவும் ஆகாது. வாங்க போகலாம்…” என்று சொல்லி அவர்களுடன் அனன்யா ஸ்வேதாவை இழுத்துக்கொண்டு நடக்க விக்ரம் புகைப்படம் எடுப்பவர்களை அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்.
அத்தனை விளக்கு வெளிச்சத்தோடு, புகைப்பட கருவிகள் காண்பித்த மின்னல் ஒளியில் மணமக்களாய் இருவரும் அனைவரையும் கவர்ந்திழுக்க அனைவரின் கவனமும் அங்கே தான் திரும்பியது.
ஏற்கனவே ஒதுங்கி ஒதுங்கி தான் நின்றிருந்தார் கௌசல்யா. வந்திருக்கும் ஆகர்ஷனின் உறவுகளில் பெரும்பாலானோருக்கு அவரை சரியாய் அடையாளம் தெரியவில்லை.
கிருஷ்ணகுமாரை சிறுவயதிலிருந்து பார்த்திருந்தவர்களுக்கு அதே ஜாடையில் இருக்கும் ஆகர்ஷனை பட்டென்று கண்டுகொள்ள முடிந்தது.
ஆனால் இருமுறை மட்டுமே கௌசல்யாவை அவர்கள் பார்த்திருக்க இப்போது இருப்பவரை அடையாளம் காண பெரிதும் சிரமம் தான்.
அதிலும் சிலருக்கு எங்கோ பார்த்ததை போலிருக்க பெரிதாய் யோசனை இல்லை.
வந்திருக்கும் அனைவரின் பேச்சிலும் அவர் ராம்நாத்தின் மனைவி என்றே தெரிவிக்கப்பட மேலும் கவனிப்பார் யாருமில்லை.
ஆனால் அவரை பார்க்கும் அனைவரின் பார்வையிலும் கௌசல்யா தான் வெந்துகொண்டிருந்தார்.
யாரும் வந்து பேசுவார்களோ, கிருஷ்ணாவை பற்றி கேட்பார்களோ, என்றும், அதில் மகனின் வாழ்வில் எதுவும் இடையூறு வந்துவிடுமோ என பயந்து பயந்து ஒவ்வொரு நொடியையும் கடத்திக்கொண்டிருந்தார்.
அனைவரின் பார்வையிலும் ஆகர்ஷன் ஷ்யாமளா, கிருஷ்ணகுமாரின் மகனாகவே இருக்கட்டும் என்று நினைத்தார்.