சந்தனம் பூசி பொட்டு வைத்துவிட்டு திரும்பியவன் கௌசல்யாவின் கையில் இருந்த அட்சதையை எடுக்காமல் உள்ளங்கையை காண்பித்து நீட்டினான்.
“கை எல்லாம் சந்தனமா இருக்கு கௌசிம்மா. நீங்களே பூவையும், அட்சதை அரிசியையும் எடுத்து குடுங்க…” என்று கேட்க, உதட்டை கடித்துக்கொண்டு நடுங்கும் கைகளால் அதனை எடுத்தார் கௌசல்யா.
“சந்தோஷமா குடுங்க கௌசல்யா…” என்றார் ஷ்யாமளா.
“ஹ்ம்ம்…” என தலையசைத்தபடி அதனை தரவும் அவர் கைகளிலிருந்து மனநிறைவுடன் வாங்கினான் ஆகர்ஷன்.
வாங்கியதும் பிரத்யூக்ஷாவின் தலையில் மொட்டு மல்லிகையையும், அட்சதை அரிசியையும் அவளின் தலையில் தூவ சந்தோஷமாய் முகம் நிமிர்த்தி அதனை ஏற்றுக்கொண்டாள் பிரத்யூக்ஷா.
“கௌசிம்மா இது அடுத்து…” என அனன்யா இன்னொரு நகை பெட்டியை கௌசல்யாவின் கையில் தர புதிதாய் என்னவோ என்று நினைத்து திறந்த கௌசல்யாவிற்கு பெரும் அதிர்வு.
அது அவரின் நகை. ‘அதனை அன்று ஏற்கனவே பிரத்யூக்ஷாவிடம் தந்திருந்தனரே, இது எப்படி இங்கே?’ என ஷ்யாமளாவை பார்க்க,
“இங்க வச்சு தான் இந்த நகையை போட்டுக்கனும்ன்னு பிரத்யூவோட ஆசை. அதான் காவேரி வந்ததும் என்கிட்ட தந்துட்டாங்க. எடுத்து குடுங்க கௌசல்யா…” என்றவரை காலத்திற்கும் கோவில்கட்டி தான் கும்பிடவேண்டும் என்று தோன்றியது கௌசல்யாவிற்கு.
“ஹ்ம்ம், ஒரு,,,, ஒரு நிமிஷம்…” என்ற கௌசல்யா அந்த நகையை நெஞ்சோடு அணைத்து பிடித்து தன் குலதெய்வங்களுடன் சேர்த்தே வேண்டிக்கொண்டவர் அதன்பின்னர் ஆகர்ஷனிடம் தர தாயின் அத்தனை நெகிழ்விற்கும் நெக்குருகும் பார்வையை தந்தான் அவன்.
“உன் உள்நோக்கம் ரொம்ப ரொம்ப அழகுடா பிரத்யூ….” என்ற ஆகர்ஷன் அந்த நகைகளை அவளுக்கு அணிவித்ததொடு உள்ளப்பெருக்கோடு நெற்றியில் முத்தம் பதிக்க,
“அச்சோ…” என்றனர் அருகிருந்தவர்கள்.
ஸ்ரீவத்சன் தலையை திருப்பிக்கொண்டார். காவேரி பயத்துடன் அவரை பார்க்க, தேவான்ஷ், ஸ்வேதா இருவரும் கூட அவரை தான் பார்த்தனர்.
“என் முகத்துல என்னடா இருக்கு?…” என்றவருக்கும் ஏதோ ஒருவகையில் சந்தோஷம் தான்.
அதே மகிழ்ச்சியுடன் நிச்சயதார்த்தம் அழகாய் அரங்கேற ஆகர்ஷன் கீழே வந்து கௌரவ்வின் அருகில் அமர்ந்துகொண்டான்.
அனைத்து சொந்தங்களும் இரவு உணவை முடித்துக்கொண்டு சிலர் கிளம்பியும், சிலர் ஹோட்டல்களில் தங்கவும் சென்றிருக்க ராம்நாத்தினால் நடந்தவற்றை ஜீரணிக்க முடியாமல் கௌசல்யா சிக்க காத்திருந்தார்.
அதிகாலை திருமணத்திற்கு அனைவரும் தயாராகி இருக்க கௌரவ்வை தேடிக்கொண்டு வந்த கௌசல்யாவை பிடித்துவிட்டார் ராம்நாத்.
எதற்கு பயந்து அவரிடம் அகப்படாமல் விலகி விலகி ஓடிக்கொண்டிருந்தாரோ அதை தான் பேசினார் ராம்நாத்.
“அந்த எடுபட்டபய மகனுக்கு எல்லா சடங்கும் நீயே செய்யிறயே? உனக்கு நான் தான இப்ப புருஷன்?…” என்று அமிலத்தை காய்ச்சி ஊற்றுவதை போல பேச கண்ணீர் வழிந்தது கௌசல்யாவின் விழிகளில்.
“இனி ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்கக்கூடாது. கிளம்பு. எவன் என்ன பன்றான்னு பார்க்கறேன்…” என்று அவரை இழுத்துக்கொண்டு புறப்பட பார்க்க கௌசல்யா இரண்டு எட்டிற்கு மேல் நகரவில்லை.
“ஏய் என்ன போர்ஸ் காமிக்கிறியா? என்கிட்டயே?…” என்றவர்,
“மரியாதையா கிளம்பலை அசிங்கப்பட்டு போவ. அப்பறம் அந்த பயலுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்…” என்று பேசி இழுக்க, எங்கிருந்து அத்தனை வலிமையோ கௌசல்யா இறுகி நின்றுவிட்டார்.
“கௌசி…” என்று இரு கைகளாலும் இழுக்க,
“வரமாட்டேன்…” என்று தீனமான குரலில் கூறினாலும் வலுவுடனே தான் நின்றார் கௌசல்யா.
“என்ன வரமாட்டியா? எப்படி வராம போவ? நீ வந்து தான் ஆகனும். இல்ல உனக்கு வாழ்க்கை இல்லை…”
“என்ன வாழ்ந்துட்டேன் நான்? நான் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா?…” என அவரிடம் கேட்டவரின் குரலுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
ஆனால் அந்த முகம் காண்பித்த ஆதங்கமும், அக்னியின் கனலும் ராம்நாத் இதுவரை பார்த்திராதது.
“கௌசி…”
“இந்த வாழ்க்கை எனக்கு நீங்க தரலை. இந்த வாழ்க்கை வேணும்ன்னு நானும் ஆசைப்படலை….” என்றவர் ராம்நாத்தை ஒரே தள்ளாக கீழே தள்ளியிருந்தார்.
“என் பையனை பார்த்த பின்னாடியும் நான் அமைதியா எதையும் காமிக்காம இருக்கறதுக்கு காரணம் உங்க மேல இருக்கிற பயமில்லை. என் பிள்ளைங்களோட எதிர்காலம் பார்த்து தான். அது உங்களுக்கு புரியாதுன்னும் எனக்கு தெரியும்…”
“ஆனா அதை அவசியமாவும் நான் நினைக்கலை. இப்பவும் என் மகன்கிட்ட அவன் பேரை கூட நான் சொல்லலை. நான் தான் உன் அம்மான்னு நிக்கலை. நீங்க வலுக்கட்டாயமா செய்ய வச்ச ஒரு சத்தியம் என்னை நிறுத்துமா?…”
“இல்லை. அது எனக்கு நானே நியாயமா நடந்துக்க வேண்டியதனால. தெரியாம கூட கௌரவ்க்கு எந்த கஷ்டமும் வந்திட கூடாதுன்னு தான். ஏன் பேர் சொன்னா தான் என் மகனா? என் வயித்துல பிறந்தவன். நான் சுமந்திருக்கேன், அவனுக்கு உயிர் பால் குடுத்திருக்கேன். எங்க இருந்தாலும் எத்தனை தூரம் இருந்தாலும் என் மூத்த மகன் கௌசல்யா, கிருஷ்ணகுமார் மகன் இல்லைன்னு ஆகிடுமா?…”
“நான் யாருன்னு என் பிள்ளைக்கும் தெரியும். அவன் வாய்வார்த்தையா சொல்லலை. ஏன் தெரியுமா? எனக்காக தான். பார்க்கிற உங்களுக்கு யாரோ மாதிரி பேசறதா தெரியும். ஏனா உங்களை மாதிரி மனுஷங்களால அந்த உணர்வை புரிஞ்சுக்க முடியாது. இதுவும் எனக்கு அவசியமில்லை…”
“சொந்தம்ன்றது ஊருக்கு மத்தியில இதோ நீங்க எனக்கு கட்டி இருக்கீங்களே இந்த தாலியை காமிச்சு இன்னாருக்கு இன்னார் இவர்ன்னு சொல்றதுல இல்லை. அதெல்லாம் மனசால உணரக்கூடியது. அதோட தெய்வீகம் எல்லாம்…” என்று ராம்நாத்தை மிக கீழாய் ஒரு பார்வை பார்த்தவர்,
“உங்ககிட்ட இதை தெளிவுபடுத்த கூட எனக்கு பேச பிடிக்கலை. இனியும் நீங்க ஏதாவது செய்ய நினைச்சீங்கன்னா நான் கௌரவ்க்கிட்ட மட்டுமில்லாம பிள்ளைங்க எல்லார்க்கிட்டையும் எல்லாமே சொல்லிடுவேன். அதுக்கடுத்து நடக்கிற எதுக்கும் நான் உங்க கட்டுப்பாட்டுல இருக்கமாட்டேன்….” என்று எச்சரித்து,
“என் மகன் கல்யாணம், அவன் நான் பக்கத்துல இருக்கனும்ன்னு ஆசைப்படறான். நான்னா, நானும் எனக்குள்ள தெய்வமா இருக்கற கிருஷ்ணாவும். அது எந்த குறையும், இடைஞ்சலும் இல்லாம நடக்கனும்….” என்றார் கௌசல்யா.
“என்னடி மிரட்டறியா?…” என அதுவரை அதிர்ச்சியில் இருந்தவர் தட்டு தடுமாறி எழுந்து நிற்க,
“எனக்கு அந்த அசிங்கம் எல்லாம் வராது. நான் போறேன். நீங்க பிரத்யூவுக்கு தாய்மாமாவா மட்டும் சபையில நின்னா போதும். நீங்க பிறந்த இந்த ஜென்மத்துக்கு இந்த ஒன்னை பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு வெளியேறிவிட்டார் கௌசல்யா.
ராம்நாத் இப்படியெல்லாம் பேசிவிடுவார் அவர் என்று நினைத்தும் பார்த்ததில்லை.
பொம்மை போல தான் வா என்றால் வருவதும், போ என்றால் போவதுமாக இருக்கும் ஜடத்திற்கு உயிர் வந்ததை போல் நினைத்தார்.
பல்லை கடித்துக்கொண்டு வேறு வழியின்றி கிளம்பி வெளியே வந்து சபையில் நின்றார்.
நின்றதோடு மட்டுமல்லாது கௌசல்யாவை தான் பார்த்தார். முன்பு இச்சையுடன், இப்போது பயத்துடன்.
அதிலும் கௌரவ்வின் அருகில் அவர் செல்லும் பொழுதெல்லாம் இதயத்துடிப்பு எகிறியது ராம்நாத்திற்கு.
நிஜத்திற்குமே நெஞ்சுவலி வந்துவிடும் போலிருக்க, அவரின் பார்வை உணர்ந்து கௌசல்யாவும், ஆகர்ஷனும் திரும்பி பார்த்தனர்.
அவன் பார்க்கவும் தான் ராம்நாத்தும் ஆகர்ஷனை கவனித்தார். தன்னை போல் நெஞ்சில் கை வைக்க, இரு விரல் கொண்டு துண்டிப்பதை போல ‘கட் பண்ணட்டா?’ என்றான் ஆகர்ஷன் மிரட்டலாய்.
‘இவன் வேற டார்ச்சர் பன்றானே?’ என்று மௌனமாய் வந்து மேடையில் நின்றார்.
முதல்நாள் போலெல்லாம் இல்லாது கௌரவ் ஆகர்ஷனின் உடன் தான் இருந்தான். கூடவே விக்ரமும்.
“பொண்ணு வந்தாச்சு ண்ணா, நீங்க நினைச்சா இப்ப கூட ஓடிடலாம்…” என்று பிரத்யூக்ஷா மணமகளாய் ஆகர்ஷனின் அருகில் வந்தமர,
“இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துட கூடாதுன்னு தான் யாரோ சீட்க்கு அடில பேஸ்ட் போட்டு ஒட்ட வச்சிட்டாங்கடா தம்பி. உன் உதவியை தற்சமயம் ஏற்கமுடியாத சூழ்நிலையில அண்ணா இருக்கேன்…”
“எல்லாம் பேக்ட் அண்ணா…” என்று விக்ரம் சொல்லவும் இருவரும் ஹைபை அடித்துக்கொண்டனர்.
“ஆர்ஷ் போதும்ப்பா, திருமாங்கல்யம் வந்திருச்சு பாரு…” என்று கிருஷ்ணகுமார் சொல்ல உறவுகள் அனைவரும் கூடி நிற்க மங்கலநாணை வாங்கிய ஆகர்ஷன் அதன் வழி பிரத்யூக்ஷாவை பார்த்தான்.
மெல்லிய நீர் படலத்துடனான விழிகளில் சந்தோஷமும், கொண்டாட்டமும் கொட்டிக்கிடக்க அவனை பார்த்தாள் பிரத்யூக்ஷாவும்.
“இன்னைக்கு நான் பாடறேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ பிரத்யூ….” என்றவன்,
“கஸ்தூரி மான்குட்டியாம். இது கண்ணீரை ஏன் சிந்துதாம்…” என்று மெல்லிய குரலில் பாடியபடி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டதும் அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் வைக்க,
“சீனியர்…” என்று அவனின் கரத்தை பற்றிக்கொண்டாள் பிரத்யூக்ஷா.
வானின் நிலவாய் அவனுள் கரைந்து அவனுள் மிதந்து அவனோடே தன் வளர்பிறை தொய்வுகளை காலமெல்லாம் அவனின் சரிபாதியாய் மன்னவன் கை சேர்ந்தாள் பெண் நிலா.