அனைவரின் முகத்திலும் அளவற்ற மகிழ்ச்சியும் ஆகர்ஷன் செய்துவைத்த வேலையில் கொஞ்சமே கொஞ்சம் வெட்கமும்.
ஸ்ரீவத்சன் முகத்தில் சற்றே சங்கடம். இதையெல்லாம் அவர் விரும்புவதில்லை. நிச்சயத்தன்று நெற்றியில் கொடுத்தது வேறு.
திருமணத்தின் பொழுது இப்படி கன்னத்தில் கொடுக்க அனைவரின் ஆராவாரம் ஒருபுறம் இருந்தாலும் அதனை தவிர்க்க முடியாமல் கையை பிசைந்துகொண்டு நின்றார்.
சற்றுதூரத்தில் தேவான்ஷின் மாமனார் மாமியார் என்று ஸ்வேதாவின் பக்க சொந்தங்கள் வேறு.
தேவான்ஷ் திருமணத்தில் மிக நெருக்கத்தில் மணமக்கள் நிற்க கூட இல்லை. யாரின் பார்வையிலும் சிறு அசௌகர்யம் வந்துவிடக்கூடாதென்று அத்தனை கவனத்தில் இருந்தார்.
ஆட்டம் பாட்டம் என்று எதுவுமில்லை என்றாலும் அதிகபட்ச கலகலப்புகளும் இன்றி அமைதியான முறையில், வந்தோம், நின்றோம், சென்றோம் என்பதை போலொரு திருமணம்.
இப்போது மகளின் திருமணத்தில் அத்தனையும் தலைகீழ். ஆகர்ஷன் பக்க சொந்தங்கள், இளம் வயதினர், அவர்களின் குடும்ப நண்பர்கள் என்று அனைவருமே கலாட்டாவாய், கொண்டாட்டத்துடன் திருமணத்தை நடத்தி சென்றனர்.
ஸ்ரீவத்சன் வெறுமனே வேடிக்கை பார்ப்பதை போலிருந்தது. அதிலும் திருமணம் என்னவோ அவரின் ஊரில், ஆனால் நடத்துவது ஆகர்ஷன் போலிருந்தது.
ஆனாலும் எதையும் தவிர்க்கவில்லை. அனைத்தையும் தாண்டி ராம்நாத்தின் பார்வை.
அனைவரின் சந்தோஷத்தையும் பார்த்து எதையோ வாயில் முணங்கியபடி கடுகடுவென்று அமர்ந்திருக்க கவனித்தார்.
‘இந்தாளு வேற பார்வையே சரியில்லை’ என்று தான் பார்த்ததும் தோன்றியது.
மற்றவர்கள் தன்னை கவனிப்பதை எங்கே ராம்நாத் கவனித்தார்? ஆனால் பார்ப்பவர்களுக்கு பெண்ணின் தாய்மாமனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதனை அப்பட்டமாக உணர்த்தியது.
அதை ஒருசிலர் ஸ்ரீவத்சனிடமே வந்து கேட்டுவிட்டனர். அதில் தான் ஏகத்திற்கும் கோபம் கூடியது.
தாலிகட்டி முடியட்டும் அதன்பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றிருக்க இதோ இப்போதும் முணுமுணுவென்று பொரிந்துகொண்டிருந்தவரை நோக்கி வந்துவிட்டார் ஸ்ரீவத்சன்.
“எனக்கு மட்டும் இங்க இருக்கனும்ன்னு ஆசையா என்ன? தலையெழுத்து…” என நகர்ந்து சென்றார் ராம்நாத்.
அவரிடம் ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என்றுகூட ஒருவரும் அழைக்கவில்லை.
அதில் ராம்நாத்திற்கு வருத்தம் இல்லையென்றாலும் ஏகத்திற்கும் கோபம். கௌசல்யா, கௌரவ்வின் மீது தான்.
“எவ்வளோ திண்ணக்கம், வீட்டுக்கு வரட்டும், பேசிக்கறேன்…” என பல்லை கடிக்கத்தான் முடிந்தது.
ஒருவழியாக மற்ற சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்கு புறப்பட ஆயத்தமாகினர்.
பிரத்யுக்ஷாவின் வீட்டிற்கு வந்ததும் பால் பழம் உண்டுவிட்டு அமர்ந்திருக்க ஆகர்ஷனின் குடும்பத்தார் கிளம்பிவிட்டனர்.
“நேத்து தான் வந்தீங்க, இருந்து பேச கூட நேரமில்லை. அதுக்குள்ள புறப்பட்டுட்டீங்க?…” என்றார் காவேரி ஷ்யாமளாவிடம்.
“நாளைக்கு ரிசப்ஷனுக்கு பார்க்கனுமே…” என்றவர்,
“ஆர்ஷை பார்த்துக்கோங்க கௌசல்யா….” என சொல்லவும் கௌசல்யா அவரின் கையை பற்றிக்கொண்டார் நெகிழ்ச்சியும், ஆனந்தமுமாக.
“ஒரு நிமிஷம்…” என அவரை தனியே அழைத்துக்கொண்டு சென்ற கௌசல்யா கையெடுத்து கும்பிட்டுவிட,
“அட என்னண்ணி நீங்க? என்ன பன்றீங்க?…” என அவரை அணைத்துக்கொண்டார்.
“இந்த வார்த்தைக்கு நான் சரியானவளா தெரியல. ஆனா என் வாழ்க்கைல எதெல்லாம் நடக்கவே நடக்காதுன்னு நினைச்சேனோ அதெல்லாம் தெய்வம் மாதிரி நடத்தி காமிச்சிருக்கீங்க. இதுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாதே?…” என்றவர்,
“அதுவும் கண்ணாவுக்கு அம்மாவா நீங்க இருக்கும்போது அந்த ஸ்தானத்தை…” என உதட்டை கடித்துக்கொண்டு அழுகையை அடக்கினார் கௌசல்யா.
“என்ன பேச்சு இது? இந்த அம்மா ஸ்தானம் நீங்க எனக்கு குடுத்தது அண்ணி. ஆர்ஷ் பிறந்ததும் எனக்கும் அவன் மகன்னு உங்களோட தாய்மையை என்கிட்ட நான் கேட்காமலேயே அங்கீகாரம் குடுத்த உங்க மனசுக்கு முன்னாடி எதுவுமே இணையில்லை….” என்று சொல்லியவர்,
“இனிமே நீங்க உங்க பிள்ளையை பார்க்க வருவீங்க தானே?…” என்றார்.
கௌசல்யாவிற்கு பதில் சொல்ல முடியவில்லை. ராம்நாத்திடம் தான் பேசியதற்கான எதிர்வினை எப்படி இருக்குமென்று இதுவரை தெரியவில்லை.
என்னவோ இங்கே இருப்பதனால் மட்டுமே அமைதியாக இருக்கிறார் என்று புரிந்தது.
அதிலும் இன்னும் ஸ்ரீவத்சன் வீட்டிற்கு ராம்நாத் வரவில்லை. மண்டபத்திலிருந்து அனைவரும் கிளம்பியிருக்க அவரை இன்னும் காணவில்லை.
மறுநாள் வரவேற்பிற்கு செல்வது வேறு. ஆகர்ஷனின் வீட்டிற்கு எனும்பொழுதே கிருஷ்ணா மனதில் எழுந்து நின்றார்.
‘என் வீட்டு வாசப்படிய மிதிக்க கூட உனக்கு அருகதை இல்லை. என் பேரனை சொந்தம் கொண்டாடிட்டு வீட்டுப்பக்கம் வந்திடாம இருக்கறவரைக்கும் உனக்கு மரியாதை.’ என்ற தன் மாமியாரின் குரல் இன்றும் மறக்க முடியாதே.
நினைத்து நினைத்து தளர்ந்துவிட்டார் கௌசல்யா. பல சமயங்களில் தோன்றிவிடும், இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அவசியமா என தன்னையே மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலைகளை வேறு ராம்நாத் நித்தமும் அவரின் கண்முன் கொண்டுவந்துவிடுவார்.
‘நான் செத்துட்டேன். எப்பவோ என் உயிர் போயிருச்சு’ என தனக்கு தானே சொல்லிக்கொண்டு வாழ்ந்த அந்த நரக நிமிடங்களை நினையாமல் இருக்கமுடியவில்லை.
இப்போதுமே அந்த நினைவுகளின் வரிசையில் முகமெல்லாம் வாடி, பொலிவிழந்து போனது கௌசல்யாவிற்கு.
“அங்க நான் ஏன்? கண்டிப்பா வரவேற்புக்கு வர்றேன்….” என்று சொல்ல,
“வருவீங்க. உங்க பிள்ளைக்காக. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…” என்ற ஷ்யாமளா,
“அந்த கடவுள் கொஞ்சமே கொஞ்சம் இரக்கம் இருக்க கூடியவர் தான். எல்லாருக்கும் எல்லா நேரமும் கஷ்டத்தை மட்டுமே குடுத்திட்டிருக்கமாட்டார்….” என்றார் புன்னகையுடன்.
“சரி நான் கிளம்பறேன். நாளைக்கு பார்ப்போம்…” என விடைபெற, மீண்டும் கௌசல்யாவே ஷ்யாமளாவை இறுக்கமாய் அணைத்து நன்றி தெரிவித்து வழியனுப்பினார்.
சொந்தங்களுமே மண்டபத்துடன் புறப்பட்டிருக்க ஷ்யாமளாவுமே குடும்பத்துடன் கிளம்பியிருக்க வீட்டினர் தவிர வேறு எவருமில்லை.
பிரத்யூக்ஷாவின் அறையில் தான் ஆகர்ஷன் இருந்தான். அறைக்குள் வெகுநேரம் இருக்கமுடியாமல் வெளியே வர விக்ரம் அவ்வழியே வர,
“கௌரவ் எங்கடா?…” என ஆகர்ஷன் விக்ரமிடம்.
“அப்பாவோட காஞ்சிபுரம் கிளம்பிட்டாங்க. நாளைக்கு ரிசப்ஷனுக்கு வந்திருவாங்க…” என்றவன்,
“உங்களை பத்திரமா பார்த்துக்க சொல்லி என்கிட்ட சொல்லிட்டு தான் போயிருக்காங்க…” என்றுவேறு சொல்ல ஆகர்ஷன் பக்கென்று சிரித்துவிட்டான்.
“சரி, பிரத்யூ எங்க? அவளையும் காணுமே?…”
“காவேரி அத்தைய கூட்டிட்டு போனாங்க…”
“ஓஹ், சரி…” என்றவன் பிரத்யூவின் எண்ணிற்கு அழைப்பு விடுக்க, அழைப்பு சென்றதே தவிர ஏற்கப்படவில்லை.
“சரியா போச்சு…” என்றவனுக்கு அந்த வீட்டின் அமைதியில் விச்சித்திரமான உணர்வும், கூடவே சிரிப்பும்.
அனன்யாவின் திருமணத்திலும், அதற்கு மறுநாளிலும் தங்களின் வீட்டில் நிரம்பி வழிந்த சொந்தங்களை நினைத்து பார்த்தான் ஆகர்ஷன்.
இங்கே பிரத்யூக்ஷா குடும்பத்தோடு கூடுதலாய் அவள் கணவனான ஆகர்ஷன், உறவான கௌசல்யா, விக்ரம் இவர்கள் மட்டுமே.
வேறு ஒருவரும் இல்லை. அந்தவகையில் தான் ஸ்ரீவத்சன் மற்றவர்களையுமே வைத்திருந்தார்.
அவர் விரும்பமாட்டார் என்பதை புரிந்து, அழைக்காமல் தாங்கள் ஏன் செல்லவேண்டும் என்றும் யாரும் வரவில்லை.
நேரம் பார்க்க மூன்றை தொட்டது. உடை வேறு மாற்றவேண்டும். இன்னும் அறைக்கு எங்கும் செல்லவில்லை. விக்ரமுடன் நின்றுகொண்டான்.
இடையில் கௌரவ் அழைத்து ஆகர்ஷனிடம் பேசியிருந்தான் மறுநாள் வருவதாய் சொல்வதற்கு.
அவன் தான் ராம்நாத்தையும் அழைத்து சென்றிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.
சாருலதாவும் மண்டபத்தில் இருந்தே சென்னை கிளம்பியிருந்தாள் அதற்குமேல் அங்கே இருக்கமுடியாதென்று.
கௌசல்யா வேறு ஹாலில் இருந்தவரை நிமிடத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டு செல்லவும், உள்ளே ஸ்வேதாவுடன் இருப்பதுமாய் தான் அவர் இருந்தார்.
தன்னோடு வந்தமரும்படி அழைத்தும் கூட வரவில்லை கௌசல்யா. மகனின் கண்களில் சோர்வை கண்டவர்,
“கொஞ்சநேரம் ரெஸ்ட் எடு கண்ணா…” என சொல்லியிருந்தார்.
உடன் இருக்க ஆசை தான். நெஞ்சைமுட்டும் ஆவல் மகனோடு வெகுநேரம் இருக்க கிடைக்கும் அரிய வாய்ப்பு.
ஆனால் அன்று அவன் வாழ்வில் முக்கியமான நாளாகிற்றே. தான் உடன் இருப்பதா என விலகி நின்றார் கௌசல்யா.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொருபக்கம் பறந்திருக்க தாங்கள் பறக்கவேண்டிய இடத்திற்கு செல்லவேண்டுமே என தவிப்புடன் காத்திருந்தான் ஆகர்ஷன்.