“சீனியர்…” என இருபுறமும் தலையசைத்தவள் கண்கள் சிரித்தது அவனின் பேச்சில்.
“இப்பவும் எனக்கு ஆச்சர்யம் தான். எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்களேன்னு?…”
“எப்படி?…”
“நான் சிட்னி வந்த கொஞ்சநாள்ல இருந்தே என்னை புடிச்சும் நீங்க சொல்லலை. ஏன் காமிச்சது கூட இல்லை. உங்ககிட்ட எப்பவும் அன்கம்பர்ட்டபிளா நான் பீல் பண்ணினதே இல்லை. பண்ண விட்டதும் இல்லை நீங்க. ஆனா…”
“ஆனா?…” என்று ஆகர்ஷன் எழுந்துவிட்டான்.
“ஹலோ அங்கயே இருங்க…” என்று மிரட்டியவள்,
“என்னைக்கு நான் வந்து உங்ககிட்ட சண்டை போட்டுட்டு போனேனோ அப்போதிருந்து உங்க பேச்செல்லாம் என்கிட்ட மாறிடுச்சு. டூ பேட்…”
“சீனியர், சீனியர்…” என்றவள் அதற்கு மேல் கத்த முடியாமல் அவன் பின்னே வர அதற்குள் கீழே சென்றிருந்தான் ஆகர்ஷன்.
தானும் செல்லலாம் என்றால் பாதியில் கலைந்திருக்கும் தன் தலையை முழுதாய் எடுத்து முடித்து முகம் கழுவி அவசரமாய் கீழே வந்தாள்.
இன்னும் அவனும் அதே பட்டு வேஷ்டியில் இருக்க, பிரத்யூக்ஷாவும் உடை மாற்றவில்லை.
ஸ்ரீவத்சன் மகள் வந்ததுமே அவளை பார்த்துவிட்டு வேறு எதுவும் சொல்லவில்லை.
“போய்ட்டு வா பிரத்யூ…” என்றுவிட்டார்.
சங்கடமோ என்பதை போல் அவள் ஆழ்ந்து பார்க்க அப்படி எதுவும் தெரியவில்லை சாதாரணம் போல தான் நின்றார்.
“அங்க கெஸ்ட்ஹவுஸ் எல்லாம் நல்லா இருக்கும். நைட் ஃபூட்க்கு சொல்லிட்டேன். ட்ரைவர் ரெடி. உங்களுக்கு பழக்கமில்லா பாதை. அதான் ட்ரைவர்…” என்று சொல்ல புரியாத பாஷை படம் பார்ப்பதை போலிருந்தது பிரத்யூக்ஷாவிற்கு.
“ஓகே தேங்க் யூ…” என்றவன் அவளை திரும்பி பார்க்க, தேவான்ஷ் ஸ்வேதாவும் அங்கே தான் இருந்தனர்.
“டாடி…” என பிரத்யூக்ஷா அவரை பார்க்க,
“இங்கயும் போரடிக்கும். நீங்க போய்ட்டு வாங்க. நாளைக்கு பார்க்கலாம்…” என்று சொல்லிவிட்டார் ஸ்ரீவத்சன்.
கௌசல்யாவிடம், காவேரியிடம் வந்து சொல்லிவிட்டு இருவரும் கிளம்ப இன்னும் எங்கே என்று கூட தெரியவில்லை பிரத்யூக்ஷாவிற்கு.
அவர்களிடம் ஆசிர்வாதமும் வாங்கிக்கொண்டுதான் புறப்பட்டனர். ஆனாலும் கொஞ்சம் சங்கடமும் அவளுக்கு.
எதுவும் சொல்லாமல் அமைதியாய் வர ஆகர்ஷன் அவளை தொந்தரவு செய்யவில்லை.
ஒருபக்கத்தில் அத்தனை களைப்பு. சரியாய் உறக்கம் இல்லாததோடு திருமணம் நல்லவிதமாய் நடந்துவிடவேண்டும் என்ற தவிப்பும், சந்தோஷமும் கூடுதலாய்.
அதனை நினைத்தவள் தலை தன்னை போல் அவனின் தோள் சாய, ஆகர்ஷனும் மென்சிரிப்புடன் அவள் தலையில் தானும் தலைவைத்துக்கொண்டான்.
“கொஞ்சம் கோபம். கொஞ்சம் டென்ஷன்…” மெல்லிய குரலில் அவனிடம் கூற,
“தப்பில்லை…” என்றான் ஆகர்ஷன்.
இலகுவாய் அவன் சொல்லிவிட்டாலும் கொஞ்சம் வருத்தம். தன் வீட்டில் இருந்திருக்கலாமே என்று.
ஆனாலும் அவன் புறமும் பார்க்க தோன்றியது. எத்தனை நேரம் தான் தன் அறைக்குள்ளேயே அவன் அடைந்திருக்க முடியும் என்று.
புரிந்தது தான். இருந்தாலும் இருந்திருக்கலாமோ எனும் மனச்சுணக்கத்தை தவிர்க்க முடியவில்லை.
அதையும் தாண்டி அப்போ தான் ஞாபகமே வந்தது ஸ்ரீவத்சன் ஆகர்ஷனிடம் பேசியா பேச்சுக்கள்.
“ஆமா…” என திடுக்கிட்டு அவள் நிமிர,
“ஹேய் பார்த்துடா, இப்படி எழுந்துட்ட?…” என்றான் கிண்டலாய்.
“ரொம்ப முக்கியம். நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க. ஆமா டாடிக்கு நாம எங்க போறோம்ன்னு தெரியுமா?…” என அவள் கேட்க,
“ஹ்ம்ம், தெரியுமே. அவர்கிட்ட தான் நல்லா தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு கேட்டேன். உங்களுக்கு இங்க பக்கத்துலயும். அடிக்கடி வந்திருக்கலாம். உங்கப்பாவுக்கு வேற இங்க நிறைய தெரிஞ்சிருக்கும்….”
“என்னன்னு கேட்டீங்க?…”
“வெடிங் நைட்க்கு ஸ்டே பன்றதுக்கு மூணு பிளேஸ்ல கெஸ்ட்ஹவுஸ் பார்த்திருக்கேன். உங்களுக்கு தெரிஞ்சவங்க இருந்தாங்கன்னா நம்பர் ஷேர் பண்ணுங்கன்னு கேட்டேன்…” என்று அவன் ஒப்புவிக்க,
“அடப்பாவி டாக்டரே…” என்றாள் நெஞ்சில் கைவைத்து.
“கண்டநேரத்துல கண்டபடி ரியாக்ஷன் குடுக்கிறியே பிரத்யூ. எதுவும் ஹெல்ப் பண்ண முடியாதே?…” என உல்லாசக்குரலில் அவன் ரகசியம் பேச,
“அப்படியே கழுத்தை கடிச்சிடுவேன். என்ன பண்ணி வச்சிருக்கீங்க?…”
“உன் அப்பாட்ட கேட்காம வேற யார்க்கிட்ட கேட்க? இங்க ரொம்ப தெரிஞ்சவங்கன்னா என் அப்பாவோட ப்ரென்ட் தான். அவர்கிட்ட கேட்கலாம்ன்னு சொல்றியா?…”