“ஹ்ம்ம், க்விக். நாம இப்போ கிளம்பினா தான் டென்ஷன் இல்லாம ஏர்போர்ட் போகமுடியும்…” என்றதும் தான் அன்று காலை கிளம்பவேண்டும் என்பதே அவளின் கவனத்திற்கு வந்தது.
“காட், போச்சு. இதுக்குத்தான் சொன்னேன், பேசாம ஊர்லையே இருந்திருக்கலாம்ன்னு…” என்று புலம்பிக்கொண்டே பிரத்யூக்ஷா எழுந்து கிளம்ப ஆரம்பிக்க சின்ன சின்ன இடைவெளிகளில் அவளை முத்தத்தால் குளிர செய்து ஒருவழியாய் அனைத்தையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கி வந்தனர்.
“ட்ரைவர் அண்ணா?…”
“நான் எழுப்பி சொல்லிட்டு தான் வந்தேன். நீ எதையும் விட்டுட்டியா பிரத்யூ?…”
“ஏதாவது எடுத்துட்டு வந்தா தானே விட்டுட்டு போக?…” என்றவளை குறும்பாய் பார்த்தவன்,
“அப்போ இந்த ட்ரெஸ்?…”
“மூச், எதுவும் பேசாம வரனும். இதெல்லாம் உங்களோட ப்ரீ ப்ளான். என்னை சேர்க்காதீங்க சீனியர்….”
“எங்க, இப்போ ஆகர்ஷன் சொல்லு…”
“ம்ஹூம்…” என முறைத்துவிட்டு கதவை திறக்க சலசலவென அருவி ஓடும் சப்தம்.
“பக்கத்துல பால்ஸ் இருக்கும் போல. மழை இல்லாம இருக்கவும் அந்த சத்தம் எவ்வளோ க்ளியரா கேட்குது பாருங்களேன்?…” என்றபடி படர்ந்திருந்த இருளில் அவள் அந்த சத்தம் வந்த திசை நோக்கி விழிகளால் துழாவ,
“பார்த்துட்டே இருந்தா இங்கயே இருக்க வேண்டியது தான். ரிசப்ஷனுக்கு உன் டாடியை நிக்க வச்சிடலாமா?…” என்றான் கிண்டலாய்.
“சீனியர்…” என பல்லை கடித்தவள்,
“எப்படி எங்கப்பாட்ட போய் கேட்க முடிஞ்சது? அதுவும், அவர்கிட்ட போய் அவ்வளோ ஈஸியா?…” என முறைத்துக்கொண்டே அவனை பார்த்தாள்.
“எஸ் மம்மீ…” என்று காவேரியை அணைத்துக்கொண்டவள் ஸ்வேதாவுடன் பேசிக்கொண்டு குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
ஆகர்ஷனுடன் விக்ரம் சேர்ந்துகொள்ள தேவான்ஷ் ஓரிரு வார்த்தை பேச ஸ்ரீவத்சன் வழக்கம் போல அனைத்தையும் மேற்பார்வையிடுவதை போல் பார்த்துக்கொண்டார்.
சென்னை வந்திறங்க அதன்பின் நிற்க நேரமில்லை. நேராக சென்றது ஆகர்ஷனின் வீடு தான்.
விக்ரமுடன் ஸ்வேதாவும், தேவான்ஷும் நேராக மண்டபம் சென்றுவிட்டனர் சொந்தங்களை வரவேற்கவென்று.
மண்டபத்திற்கு தான் செல்லவிருக்கிறோம் என கௌசல்யா நினைத்திருக்க அங்கே ஷ்யாமளா, கிருஷ்ணகுமார், அனன்யா என்று அனைவரும் இருக்க காரை விட்டு இறங்கும் பொழுதே பார்த்துவிட்டார் கௌசல்யா.
‘கிருஷ்ணா வாசம்’ என்னும் தங்கத்தால் மின்னும் அந்த பெரிய பெயர்பலகையை கண்டதுமே விழிகளில் மழுக்கென்று நீர் நிரம்பிவிட்டது.
‘கிருஷ்ணா’ கௌசல்யாவின் கண்ணீரும், மனதும் அலைமோத கண்கள் இருண்டுகொண்டுவர நிற்க முடியவில்லை அவரால்.
“அத்தை…” என்று பிரத்யூக்ஷா பிடித்துக்கொள்ள இன்னொருபக்கம் வந்து நின்றான் ஆகர்ஷன்.
மாலை வரவேற்பு என்பதனால் அனைவருக்கும் அங்கே வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர் ஆகர்ஷனின் குடும்பத்தினர்.
கௌசல்யாவை தெரிந்த ஓரிருவர் கவனித்தாலும் அவருக்கு சங்கடம் என்று இந்த ஏற்பாடு.
என்றாவது தெரியும் தான். ஆனால் அது அன்றே என்றிருக்கவேண்டுமா என்று சொல்லிவிட்டான் ஆகர்ஷன்.
மீண்டும் அந்த வீட்டிற்கு கௌசல்யா வருகையில் யாரின் பார்வையும் அவர் மீது எந்தவிதத்திலும் மனம் நோக விழுந்துவிட கூடாதென்பதில் அத்தனை கவனம் ஆகர்ஷனுக்கு.
அதன்பொருட்டு இன்று அவன் பக்க சொந்தங்கள் வீட்டில் இல்லாதிருக்க கௌசல்யாவுடன் சேர்ந்து நின்றான்.
“ஆரத்தி எடு…” என கிருஷ்ணகுமார் சொல்லவும் அனன்யா எடுக்க,
“இரு அனு நான்…” என்று கௌசல்யா விலக பார்க்க,
“கூட இருங்கம்மா…” என்றான் ஆகர்ஷன் அவரிடம் இறைஞ்சுதலாய்.
“கண்ணா…” என்றவர் மகனை பார்த்தபடி இருக்க திருஷ்டி எடுக்கப்பட்டது அது மணமக்களுக்கு மட்டுமின்றி, கௌசல்யாவிற்குமே.
“உள்ள வாங்க…” என அவரை கை பிடித்து அழைத்து வர, காலில் அணிந்திருந்த காலணியை கழற்றியவரின் முகத்தில் ஏகத்திற்கும் தெய்வீகம்.
இறைவனை தரிசிக்க போகும் பாவனையுடன் கௌசல்யாவின் உடல்மொழியே மாறிவிட்டது.
அவரின் மாமியாரின் பேச்சுக்கள் எல்லாம் எங்கோ சென்றிருக்க தன் ஆத்மதெய்வமான கிருஷ்ணாவின் சன்னிதி இது என்று நினைத்தே உள்ளே நுழைந்தார் அவர்.
உடலெல்லாம் நடுக்கம். முதுமையும், மனவுளைச்சலும் அவரை அதிகத்திற்கும் திடமாய் நிற்கவிடாமல் செய்ய ஆகர்ஷனின் மீது சாய்ந்துவிட்டார்.
“நத்திங் வொர்ரி, சரியாகிடும்…” என்றவன் அவருக்கு குடிக்க தண்ணீர் தர ஸ்ரீவத்சன், மற்றவர்கள் என்று அனைவருமே பார்த்து நின்றனர்.
சிறிதுநேரம் அமர்ந்திருக்க பூஜை அறை சென்று மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும்,
“அத்தை, வாங்க வீட்டை சுத்தி பார்க்கலாம்…” என்றாள் பிரத்யூக்ஷா.
எதற்கு அழைக்கிறாள் என்று மற்றவர்களுக்கு புரியவில்லை. ஆகர்ஷனுக்கு விளங்கியது.
“நானும் வர்றேன்…” என்று எழுந்துகொள்ள ஸ்ரீவத்சனும், காவேரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் மௌனமாய் இருந்தனர்.
ஆகர்ஷனுடன் வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்த்த கௌசல்யா கிருஷ்ணாவின் நினைவுகளையும் கூட்டிக்கொண்டார்.
தன் வீடு எப்படி இருக்கும் என்று கிருஷ்ணா பகிர்ந்த ஒவ்வொன்றோடும் மகனின் இன்றைய வார்த்தைகள் காண்பித்த காட்சிகளை சேர்த்து பார்த்து தன் மனம் அன்றைக்கு வரைந்த கோலம் சரிதானா என்பதை போல கவனித்தபடி வந்தார்.
என்னவோ இப்போதும் கிருஷ்ணாவே அவருக்கு அனைத்தையும் காண்பிப்பதை போல.
எல்லாம் பார்த்து அந்த அறையின் கதவை திறக்கவும் கௌசல்யாவிற்கும் தான் வந்த திசை, திரும்பிய இடம், பார்த்த அறைகள் என்று ஒவ்வொன்றையும் ஒப்புவித்து பார்த்ததில் அந்த அறை கிருஷ்ணாவினுடையது என்று புரிந்தது.
“உள்ள வாங்கம்மா…” என்றான் ஆகர்ஷன் வலிக்காத வார்த்தைகளுடன், வலி மிகுந்த விழிகளுடன்.
“ம்ஹூம்,…” கௌசல்யாவிற்கு உள்ளே செல்லவே முடியவில்லை.
அதனை பார்த்து, கடந்து மீண்டும் தன் நிலை திரும்புவதற்குள் செத்தேவிடுவோம் என்பதை போலிருந்தது.
“வாங்கத்தை. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…” என்ற பிரத்யூக்ஷா ஆகர்ஷனை போல் அவர் வரட்டும் என்று நிற்கவில்லை. அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
உள்ளே நுழைந்ததுமே சுவர் முழுவதும் அவர்களின் புகைப்படம். பார்வையை கண்ணீர் எனும் திரை மறைக்க தலை சாய்த்து அதனை பார்த்துக்கொண்டே மெல்ல நெருங்கினார் கௌசல்யா.
‘என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமே கிருஷ்ணா?’ என மானசீகமாக கேட்டுக்கொண்டே நெருங்கியவர் அந்த புகைப்படத்தினை தீண்டும் முன் நீட்டிய கையை கூப்பிக்கொண்டு மடிந்து அமர்ந்துவிட்டார்.
“கிருஷ்ணா…” என்ற பேரை தவிர வேறு எதுவும் வராமல் கண்ணீருடன் கதறி அழ, தொண்டை அடைக்க அதனை பார்த்துக்கொண்டு நின்றான் ஆகர்ஷன்.
எத்தனை தவிப்பு அவருடையது? எத்தனை காலத்திற்கு இதனை மனதில் போட்டு அழுத்தியிருப்பார்?