விமானநிலையம் முழுவதும் ஜனக்கூட்டங்கள் வருவதும் போவதுமாய் தங்களின் பிரயாண பரபரப்பில் இருக்க பிரத்யுக்ஷா ஆகர்ஷனை முறைத்தபடி அமர்ந்திருந்தாள்.
“இன்னும் எவ்வளோ நேரம் இப்படியே பார்த்துட்டு இருக்க போற பிரத்யு?…” என்றவாறு ஆகர்ஷன் கேட்க,
“இன்னும் பதில் சொல்லலையே நீங்க? திடீர்ன்னு கிளம்பிட்டீங்க நீங்களும்? அதுவும் என்கிட்ட சொல்லவே இல்லை…” என்றாள் முகம் லேசாய் சோர்ந்து.
“அன்எக்ஸ்பெக்டட். அந்த டீம்ல நான் இல்லவே இல்லை. சடனா சேஞ்ச் ஆனது இந்த ட்ரிப்…” என்றவன் அவளிடம் ஹாட் சாக்லேட்டை நகர்த்தினான்.
“இதெல்லாம் போங்கு. வீட்டுலருந்து கிளம்பறப்பவும் நீங்க சொல்லலை…” என்றாள் குழந்தை போல்.
“நீ எங்க என்னை கவனிச்ச? உன் போக்கஸ் முழுக்க உன்னோட அனு அக்கா, ஷ்யாமா ஆன்ட்டி மேல தான். கவனிச்சிருந்தா நானும் கிளம்பறது தெரிஞ்சிருக்கும்…” என்றான் அவன் ஆழ்ந்த பார்வையுடன்.
அவன் கூறியதில் கொஞ்சம் புகைச்சல் இருந்ததை போலிருந்தது ஆகர்ஷனின் குரலில்.
தன்னை இவள் என்ன கவனிக்கறாள் என்ற ஆதங்கம் எழுந்தாலும், கவனிக்கவேண்டாம் இப்போதைக்கு என்றும் அவனின் உள்ளுணர்வு உரைத்துக்கொண்டிருந்தது.
“ப்ச், உங்களை என்ன கவனிக்கனும்? நீங்க இங்க தானே இருக்க போறீங்க? அதான் நோட் பண்ணலை…” என பட்டென்று சொல்லியவள்,
“ஆமா, உங்களை ஏன் நோட் பண்ணனும்? போங்க சீனியர்…” என்று சலித்துக்கொள்ள ஆகர்ஷனின் முகம் போன போக்கில் அனன்யா பக்கென்று சிரித்துவிட்டாள்.
“இன்செல்ட்டிங் மீ…” என பல்லை கடித்தவன்,
“அப்போ உன்கிட்ட நான் ஏன் சொல்லலைன்னு கோவப்படற?…” என்றான் ஆகர்ஷன் அவளிடம்.
கொஞ்சம் கடுப்பாகவும் இருந்தது. தாயும் தங்கையும் வேறு இதனை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் அமர்ந்திருக்க ஆகர்ஷன் பேசிவிட்டான்.
“சரி சொல்லவேண்டாம்….” என தோளை குலுக்கிய பிரத்யுக்ஷா,
“அனு அக்காவோட சுஷ்மாக்கா எங்கேஜ்மென்ட்க்கு பெரிய ப்ளான் வச்சிருந்தேன். என்னோட மம்மீ அனுப்பற ட்ரெஸ்ஸ அன்னைக்கு தான் போட்டுக்கலாம்ன்னு ப்ளான். அதே கலர்ல அனு அக்காவுக்கும் கூட ட்ரெஸ் பர்ச்சேஸ் பண்ணினோம். இப்ப என்னன்னா நான் மட்டுமா?…” என்று கூற,
“இங்க பாருடா பிரத்யு, சுஷ்மா எங்கேஜ்மென்ட் இப்படி தள்ளி வைப்பாங்கன்னு நாம நினைக்கலையே. அதோட அம்மாவும் இங்க வந்து பத்துநாள் ஆகிடுச்சு….” என்று சொல்ல அவர்கள் கிளம்பவேண்டிய விமானத்தின் அறிவிப்பு வந்துவிட்டது.
“ஓஹ், காட்…” என்ற அனு,
“ரொம்ப மிஸ் பண்ணுவேன் அண்ணா…” என்று ஆகர்ஷனின் தோளில் சாய்ந்தவள்,
“டேக் கேர் பிரத்யு….” என்று அவளையும் அணைத்துவிட்டு விடைபெற எழுந்துகொண்டாள்.
“பை…” என கையசைத்து விடைகொடுத்தாலும் பிரத்யுக்ஷா முகத்தில் சொல்லொண்ணா வேதனை அவர்களை பிரிகையில்.
லேசாய் கண்கள் கலங்க அதனை காண்பிக்கவும் மனதின்றி புன்னகையின் பின் மறைத்தவள் விடைகொடுக்க, நிற்க நேரமில்லை ஷ்யாமளா, அனன்யாவிற்கு.
“பார்த்துக்கோ ஆர்ஷ்…” என சொல்லிவிட்டே கிளம்பினார் ஷ்யாமளா.
“ஹ்ம்ம்…” என தலையசைத்து கண்ணமர்த்தியவன் இதழோரம் சிறு புன்னகை.
“ஹாட் சாக்லேட் ஆறிருக்கும். குடிச்சு முடி…” என அவளின் கன்னம் தட்டிவிட்டு அவர் நகர்ந்து செல்ல, செல்லும் வரையில் அவர்களை தான் பார்த்துக்கொண்டிருந்தாள் பிரத்யுக்ஷா.
“ம்க்கும்…” என தொண்டையை செருமியவனின் சத்தத்தில் திரும்பி பார்த்தவள்,
“உங்களுக்கு இன்னும் எவ்வளோ நேரம் இருக்காம்?…” என்று கேட்க நேரத்தை பார்த்துவிட்டு சொல்லியவன்,
“நீ வேணா கிளம்பேன் பிரத்யு. நான் போய்ப்பேன்…” என்று கூற,
“இதை முடிக்கிறவரை இருப்பேன்…” என்று தோளை குலுக்கிவிட்டு மீண்டும் துளித்துளியாய் அதனை பருக ஆரம்பித்தாள் அவள்.
“அடமென்ட்…” என்று தலையசைத்தவன் தானும் அமர்ந்துகொண்டான்.
சிலநொடிகள் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் இல்லை. சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி பிரத்யுக்ஷாவும், அவளையும் கைப்பேசியையும் பார்த்தபடி ஆகர்ஷனும்.
“என்ன மேடம், இத்தனை தடவை சுத்தி பார்த்து மனப்பாடம் பன்றீங்க?…” என்று கேலியாய் அவன் கேட்க,
“ஊருக்கு போய் மூணு வருஷம் ஆகிடுச்சு. இங்க படிக்க வந்துட்டு ஒருதடவை மட்டும் தான் போய்ட்டு வந்தேன். அதுக்கப்பறம் ப்ரெண்டை சென்டாப் பண்ண இங்க வந்தது. அதான் சும்மா பார்த்துட்டிருக்கேன்…” என்றவள்,
“ஆமா நான் இங்க இருந்து இந்தியா போறப்போ என்னையும் அனுப்பிவைக்க வருவீங்களா நீங்க?…” என்றாள் அவனிடம் புன்னகையுடன்.
அந்த கேள்வியில் அவனுள்ளம் திடுக்கிட்டதென்னவோ உண்மை. ஆனாலும் அவள் செல்வாள் என்பது தானே நிஜம்.
“ஹ்ம்ம், பண்ணிட்டா போச்சு…” என்று அவனுமே எதையும் காண்பித்துக்கொள்ளாமல் பேசினான்.
“ஆனாலும் இந்த இடம், இதை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் அப்போ…”
“ஏன் பிரத்யு, நீ ஸ்டடிஸ் முடிஞ்சு இண்டியால தான் சர்வீஸ் பன்றதா இருக்கியா?…” என்றான் சட்டென்று.
“என்ன?…”
“ஏன் காதுல விழுந்துச்சு தானே?…” ஆகர்ஷன் மீண்டும் அந்த கேள்வியை கேட்கவில்லை.
“அதெல்லாம் நல்லாவே. ஆனா நீங்க அப்படி கேட்டதும் தான் ஷாக். படிப்பு முடிஞ்சா அப்பறம் நமக்கு இங்க என்ன வேலை?…” என்றாள் சர்வசாதாரணமாக.
“ஏன் இல்லை? ஏன் நான் இல்லையா என்ன?…” என்று தன்னை காரணம் காண்பிக்க,
“இருக்கலாம். ஆனா நானும் இருக்கமுடியாதே? என்னால என் அம்மாவை விட்டு, ஹப்பா. அதை நான் நினைச்சே பார்க்கமாட்டேன். இவ்வளோ நாள் இருந்ததே பெருசு. எப்போ அங்க போவேன்னு இருக்கு…” என்றவள் விழிகளில் ஏக்கம் பிரதிபலிக்க அந்த ஏக்கத்தினை அவன் விழிகளும் கடத்த துடித்தது.
“படிச்சாச்சு, முடிஞ்சதும் ஊர், அம்மா, ரிலேட்டிவ்ஸ். எக்ஸ்ட்ரா, எக்ஸட்ரா…” என்று சொல்லியவள்,
“ஏன் நீங்க வரமாட்டீங்களா என்ன?…” என்றாள் யோசனையாய் அதுவரை அவனிடம் கேட்காத அந்த கேள்வியை.
“நீ சொன்னதே தான். ஆனா ஆப்போஸிட். படிப்பு முடிஞ்சு எனக்கு இங்க வேலை. எனக்கு பிடிச்ச மாதிரியான இடம். மனஅமைதி. எனக்கு பாக்கனும்ன்னு நான் நினைக்கிற மனுஷங்க. விருப்பமில்லைன்னா விலகி போற தூரம். இப்படி இதுவுமே இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா…” என்றான் அவன்.
“சீனியர், நீங்க நிஜமாவே அங்க வரலையா?…” என பிரத்யுக்ஷா நம்பமுடியாமல் பார்த்தாள்.
“ஏன் வரனுமா?…” அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து ஆகர்ஷன் கேட்க ஒருநொடி என்னவோ மந்திரத்திற்குள் கட்டுண்டதை போல் அவள் தலையசைக்க ஆகர்ஷன் இதழ்களில் விரியா புன்னகை மென் சாரலாய்.
“நிஜமா?…” என்றான் இன்னும் அழுத்தமாய்.
“ஆங், பின்ன? உங்க அம்மா, தங்கச்சி, அப்பான்னு உங்க பேமிலியே அங்க தானே இருக்காங்க. நான் கூட அனு அக்கா இங்க இருக்கறதனாலயும், உங்களுக்கு ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்காகவும் தான் இங்க இருக்கீங்கன்னு நினைச்சேன்…” என்று சொல்லியவள்,
“ஹ்ம்ம், நம்பிக்கை. அதுதானே எல்லாம்…” என்றான் மீண்டும் சிரிப்புடன்.
“சிரிச்சு மழுப்பறது இதுதான். ஆன்ட்டி என்கிட்டையே சொன்னாங்க, இண்டியா வந்து எக்ஸாம் கிளியர் பண்ணிட்டா அவங்க வொர்க் பன்ற ஹாஸ்பிட்டல்ல என்னையும் ஜாயின் பண்ணிக்கலாம்ன்னு…” என்று சொல்ல தலையை மட்டும் அசைத்தான் அவன்.
“ப்ச், அந்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் பேர் கூட, ப்ச் சட்டுன்னு நியாபகம் வரலை. ஆனா நல்ல ஹாஸ்பிட்டல் தானே. உங்களுக்கும் ஜாப் கண்டிப்பா கிடைக்கும். நல்ல ப்யூச்சரும் இருக்கு…” என்று அவள் அவனை சமாதானம் செய்வதை போல சொல்லிக்கொண்டே இருந்தாள்.
ஆகர்ஷன் தலையசைத்து மெல்லிய இதழ் முறுவலை மட்டுமே அவளுக்கு தந்துகொண்டிருந்தான் பதிலாய்.
இப்போது வரை ஷ்யாமளா அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களில் அவரும் ஒருவர் என்பது மட்டுமே பிரத்யுக்ஷா அறிந்தது.
அது அவர்களது, அந்த சாம்ராஜ்யத்தின் ஏகபோக வாரிசு ஆகர்ஷன் என்பது எதுவும் அவள் தெரிந்திருக்கவில்லை.
அதற்கான அவசியமும் ஏற்பட்டிருந்ததில்லை. மறைக்கவேண்டும் என்று நினைக்கவில்லை.