அதேநேரம் தாங்கள் இத்தனை அதிகம் என்றும் சொல்லி பெருமைகொள்ள நினைத்ததும் இல்லை.
இலகுவாய் ஒரு பந்தம். நட்பாய் ஆரம்பித்து நன்முறையில் எல்லைகளை மீறாமல் சென்றுகொண்டிருந்தது.
அதற்கு பெரும்காரணம் பிரத்யுக்ஷா என்றால் மிகையில்லை. பழக்கத்துடன் சரி தங்களின் குடும்பத்தையுமே ஓரளவு சொல்லியிருப்பாளே தவிர பெரிதாய் எல்லாம் கூறிக்கொண்டதில்லை.
அவர்களிடமும் கேட்டுக்கொண்டதில்லை. அவளின் அனுமானம். ஷ்யாமளா, அவரின் கணவர் எல்லாம் மருத்துவர்கள்.
அதன்படி பிள்ளைகளும் மருத்துவ உலகில் கால் பதித்திருந்தனர். இதில் கேட்க என்ன இருக்கின்றது என்று அவள் எண்ணமாக போனது.
இப்போது அவள் பேச பேச ஆகர்ஷனுக்கு சிரிப்பு தான் வந்தது அவளின் கூற்றில்.
‘என்னைக்கு உண்மை தெரிஞ்சு கத்த போறாளோ? மவனே சிக்குவ நீ’ என அவன் மனசாட்சியே அவனை மிரட்ட,
‘இப்பவும் நான் கிளம்பறேனா இல்லையான்னு எதுவுமே கேட்காம இங்க வந்து அவளே பேசி, அவளே அசெம்ஷன்ல என்னவோ நினைச்சிட்டு இருந்தா நான் என்ன பண்ணட்டும்?’ என்று பதில் கூறி அதனை தட்டி வைத்தான்.
அவளை பற்றி தெரிந்து சந்தித்த பொழுதில் அளவான பேச்சுக்கள். அப்போதுதான் அறிமுகமானவரிடம் என்ன சொல்லவேண்டுமோ அதை மட்டுமே சொல்லியிருக்க அதற்குமேல் அவர்களின் பழக்கவழக்கம் இறுக்கம் பெற்றாலும் இதனை சொல்லவேண்டும் என்று என்றைக்கும் நினைத்ததில்லை.
இப்போதும் பிரத்யுக்ஷா பேசிக்கொண்டிருக்க அவளின் பேச்சின் ஊடே தண்ணீரை எடுத்து அருந்தியபடி தலையை மட்டும் அசைத்துக்கொண்டு இருந்தான் ஆகர்ஷன்.
அவன் மனமெங்கும் அவள் படிப்பை முடித்துவிட்டு ஊர் சென்றுவிடுவேன் என்பதிலேயே ஒருநொடி வாடிவிட்டது.
“எவ்வளோ பேசறேன், எல்லாத்துக்கும் சைலன்ட். அப்போ நோ ஊரா? என்னவோ போங்க…” என்றவள்,
“ஆமா நானும் பார்த்துட்டேன். நீங்க இந்தியாவை தவிர மத்த எல்லா இடத்துக்கும் போறீங்க. ஆமா தான?…” என்று கேட்க,
“ஆமாவே தான். ரொம்ப பேசற. இதை குடி…” என ஹாட் சாக்லேட்டை மீண்டும் அவளின் கையில் திணிக்க சிலநொடிகள் மௌனம் அவளிடம்.
“என்ன யோசிக்கிற பிரத்யு?…” என்றான் அவளின் அமைதி பொறுக்காமல்.
“நீங்க மெல்போர்ன்ல இருந்து எப்போ வருவீங்க சீனியர்?…” என்றாள் அவனிடம்.
“ஏன்?…” என்றதும்,
“சரி, சொல்லவேண்டாம். நான் கிளம்பறேன்…” என்று அவள் எழுந்துகொள்ள,
“பார்த்து போய்ட்டுவா. பத்திரம். வீட்டுக்கு ரீச் ஆனதும் எனக்கு டெக்ஸ்ட் பண்ணிடு…” என விடைதர,
“நீங்க என்ன எனக்கிட்ட சொல்லிட்டா வந்தீங்க? அதெல்லாம் செய்யமுடியாது…” என்றதும் அவன் லேசாய் முறைத்துக்கொண்டு தலையசைக்க,
“சரி அனுப்புறேன். ஓகே…” என்றாள் உடனே.
“யூர் விஷ்…” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கூற,
“உங்களை…” என்றவள், கடகடவென்று மிச்சமிருந்த பானம் முழுவதையும் ஒரே மடக்கில் குடித்துவிட,
“ஹேய் பிரத்யு, என்ன பன்ற…” என்றான் அவன் சற்றே கோபமாய்.
“ப்பாஹ்…” என்று உடலை குலுக்கிக்கொண்டவள் தன் காது இரண்டையும் அடைத்துவிட்டு அவனிடமிருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தாள்.
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவளின் பாவனைகளை கவனித்த ஆகர்ஷன் முகத்தில் மிதமான குறுஞ்சிரிப்பு.
“எல்லாம் உங்களால…” என்று சொல்லியவளை பார்த்து முதுகு குலுங்க சன்னமாய் புன்னகைத்தவன்,
“சரி நீ கிளம்பு…” என்று சொல்லி,
“ஒருநிமிஷம் பிரத்யு…” என்றும் நிறுத்தினான்.
“என்ன? எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணியிருக்கீங்களா? அதான் இருக்கனுமா?…” விளையாட்டாய் அவள் கேட்க,
“ஆமான்னு சொன்னா வந்திடுவ நீயும்…” என்று கேலி செய்தவன்,
“ஆனா அங்க வந்து கஸ்தூரி மான்குட்டியாம் பாட்டெல்லாம் போடமாட்டேன்னு சொல்லு…” என்றான் ஆகர்ஷன்.
“வாய்ப்பே இல்லை…” என தோளை குலுக்கியவள்,
“சேஃப் ஜர்னி பாஸ்…” என்றதும்,
“உட்கார்…” என இருக்கையை காண்பித்தான்.
“சரி சொல்லுங்க…” அவள் அமர,
“நான் வர பத்துநாள் ஆகும் பிரத்யு…” என்று சொல்ல தலையசைத்தாள் பிரத்யுக்ஷா.
ஆகர்ஷன் எதிர்பார்த்த எந்தவொரு பிரதிபலிப்பும் அவளிடம் இல்லை. வெகுசாதாரணமாய் சரி என்று சொல்ல உள்ளுக்குள் மீண்டும் வாட்டம்.
‘இட்ஸ் ஓகே ஓகே’ என தன் மனதை தானாய் சமாதானம் செய்துவிட்டு அவளை இன்னும் ஆழமாய் பார்த்தான்.
“பத்துநாள் நைட்ல கார்டன்ல வந்து எல்லாம் நிக்க வேண்டாம் நீ. புரியுதா?…” மீண்டும் கூற,
“ஸ்ப்பாஹ் அனு அக்காவும் இதையே தான் சொல்லிட்டு போனாங்க. இப்ப நீங்களும். நான் என்ன குழந்தையா?…” என்றாலும்,
“ஓகே நிக்கலை…” என்றும் கூற அவள் தவறவில்லை.
“இந்த பேச்சு தான். என்னவோ சொன்னியே நான் கிளம்பறதை பத்தி சொல்லவே இல்லைன்னு. நீ எங்க ஸ்பேஸ் குடுத்த? சொல்லு…” என்று கேட்க,
“ஸ்பேஸ் எல்லாம் கேட்டு வாங்க கூடாது சீனியர். தானா எடுத்துக்கனும். நீங்க குடுத்தா நான் பேசறேன். சொல்லுங்க…” என்று கண் சிமிட்ட,
“ஹ்ம்ம். எடுத்துக்கலாம்…” என்று சொல்லியவனுள் குறுகுறுப்பு.
சட்டென முகத்தை திருப்பியவன் இதழ்கள் புன்னகையையும், பூக்கும் மனதையும் மறைக்க திருப்பிக்கொள்ள பிரத்யுக்ஷா தன் கைப்பேசியில் வந்த அழைப்பை ஏற்றாள்.
“சுஷ்மாக்கா, ஆமா இங்க தான் இருக்கேன். ஆங், அனு அக்கா கிளம்பிட்டாங்க. ஓகே ஓகே. வந்திருவேன்…” என்று பேசி முடித்து வைத்து எழுந்துகொண்டாள் அவள்.
“ஓகே சீனியர், அழாம கிளம்புங்க. கண்ணெல்லாம் கலங்கி இருக்கு. இப்ப தான் தெரியுது என்னை ஏன் பிடிச்சு வச்சீங்கன்னு. எங்க அம்மாவும், தங்கச்சியும் கிளம்பவும் கஷ்டமா இருக்கும்ன்னு தானே?…” என்று அவளாய் அப்போதும் நினைத்துக்கொண்டாள்.
ஆகர்ஷன் தன் சந்தோஷ உணர்வுகளை கட்டுப்படுத்தி கூசி சென்ற புன்னகையை விழுங்கியதன் விளைவாய் கண்கள் நீர்ப்படைந்திருக்க பிரத்யுக்ஷா அதற்கு பூசிய வர்ணம் வேறாக இருந்தது.
“இதை நான் சொல்ல கூடாது. உங்களோட பர்சனல். இருந்தாலும் சொல்லனும்ன்னு தோணுது. பேசாம நீங்களும் பேமிலியோட சேரலாமே….” என்றவள்,
“இங்கயும் வாங்க. உங்களோட ஹாலிடேய்ஸ், ஸ்பெஷல் டேய்ஸ் இந்தமாதிரி எல்லாம் இங்க வந்து நீங்க என்ஜாய் பண்ணுங்க…” என்று கூறினாள் அவனுக்கு.
“நான் நினைச்சா நினைச்ச நேரம் அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாம் இங்க வர்றாங்களே…” என்றான் அதற்கும் பதிலாய்.
“இப்ப நான் சொல்றேன். யூர் விஷ்…” என்று பல்லை கடித்துக்கொண்டு கூறியவள்,
“பை. டேக் கேர்…” என்று சொல்லி செல்ல ஆகர்ஷனின் அடக்கப்பட்ட புன்னகை பெரிதாய் விரிந்தது.
தூரம் சென்று திரும்பி பார்த்தவள் ஒரு தலையசைப்புடன் அவனுக்கு கையசைத்து விழியிலிருந்து மறைய அதுவரை பார்த்துக்கொண்டு தான் இருந்தான் ஆகர்ஷன்.
விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தவள் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்க செல்லும் வழியெல்லாம் தான் பேசியதை நினைத்து தன் மீதே கோபம்.
இதற்கு தான் யாரை பற்றியும் எதுவும் கேட்பதும் இல்லை. தெரிய விரும்புவதும் இல்லை.
விளையாட்டாய் பேசுவது மற்றவை எல்லாம் வேறு. ஆனால் அவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் எல்லாம் அவள் தலையிடுவதே கிடையாது.
அந்த எண்ணமே ஆகர்ஷன், அவனின் குடும்பம் தாண்டி அவள் வேறு எதையும் தெரிந்து வைக்கவேண்டியதாய் தோன்றியதில்லை.
அதுவே ஸ்ரீவத்சன் கேள்விகளுக்கும் பதில்கள் மேலோட்டமாய் இருந்திருக்க அவருக்குமே அத்தனை திருப்தி.
“நேபர், ஜஸ்ட் ப்ரெண்ட்லி டாக். அதை தாண்டி தெரிஞ்சுக்க வேண்டியதில்லை…” என்று சொல்லிவிட்டார் மகளிடமும்.
அதில் உள்ளூர மகிழ்ச்சியும் கூடவே அவருக்கு. தன் மகள் சொல்லிய விவரங்கள் அவள் எந்தளவிற்கு அவர்களுடன் பழகுகிறாள் என்பதை அவருக்கு காண்பித்திருக்க பரம திருப்தி.
இப்போதும் அவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவள் தலையிட்டு கருத்து கூறுவதை போல் நடந்துகொண்டோமே என தன் தலையில் லேசாய் தட்டிக்கொண்டாள்.
இது அவனின் வாழ்க்கை. அவனின் எதிர்காலம். இத்தனை தூரம் இந்த நாட்டில் படிக்க வந்து படித்துமுடித்து நல்ல பணியில் இருப்பவன். அவன் யோசிக்காமலா இருப்பான் என்றவளுக்கு அதற்குமேல் அதனை நினைக்க தோன்றவில்லை.
அடுத்த பத்துநாட்களும் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. அன்றைக்கு சுஷ்மாவின் நிச்சயதார்த்தம்.