சுஷ்மாவின் நிச்சயதார்த்த அழைப்பு என்ற பொழுதும் கூட மகளை பார்க்க யாரும் அங்கே செல்லவில்லையே என்னும் எண்ணத்தில் தான் மகனை, மருமகளை அனுப்ப நினைத்தது.
மகளை விட்டு வருகையில் தன் தாயும், தானும் அங்கே சென்றது. அதன்பின்னர் அங்கே செல்லும் அவசியம் ஏற்படவில்லை.
“யாரா இருந்தாலும் ஒரு லிமிட்…” என்று சொல்லி சொல்லியே தான் அனைவரையும் ஒரு வட்டத்திற்கு வெளியே நிற்க வைப்பவர்.
“இப்போ என்ன? அவங்க நமக்கு அவ்வளவு முக்கியமா? போயே ஆகவேண்டிய அவசியம் என்ன? அவ்வளோ ஒன்னும் விவிஐபி இல்லை அவங்க. நம்ம இங்க வாழ்ற மாதிரி அவங்க அங்க இருக்காங்க. ஜஸ்ட் தெரிஞ்சவங்க…” என்று அவர் நிச்சயத்திற்கு செல்லவேண்டாம் என்பதற்கும் ஒரு கருத்தை முன் வைக்க அது ஸ்வேதா மூலம் பிரத்யுக்ஷாவிற்கு தெரியவந்தது.
“ஊரையே தள்ளி வச்சு ஜஸ்ட் ஸ்டே அவேன்னு இவர் படிச்சுட்டே இருக்க வேண்டியது தான். விடுங்க அண்ணி. இதே வார்த்தையை இவங்களுக்கும் யாராச்சும் சொல்லனும். அப்போ தெரியும்….” என்று நொந்துவிட்டாள்.
“நாம காசு குடுத்து இருக்கோம், இல்லை. ஆனா இவ்வளோ தூரம் நம்மக்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்க, நம்ம பொண்ணை பார்த்துக்கறாங்களேன்னு ஒரு சின்ன மரியாதை கூட இல்லை. என்னவோ போங்க…” என்று கடுப்பாகிவிட்டாள் அவள்.
இப்போதும் வந்திருக்கும் சொந்தங்களில் சில அலட்டல் பேர்வழியும் இருக்கத்தான் செய்தனர்.
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டவளுக்கு யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்கிற பிரித்தாராயும் பக்குவமும் இருக்க அதனை அழகாய் கையாண்டாள்.
தகப்பனை போல இவர்கள் தனக்கு சமமா என்று பார்த்து பேசும் ரகம் அல்லவே பிரத்யுக்ஷா.
மாடியில் இருந்து வீட்டினருக்கு அங்கே நடக்கும் பார்ட்டியை காண்பிக்க காவேரி மனதில் மகள் தங்களை எத்தனை தேடுவாள் என்ற எண்ணமே சோர்வுற செய்தது.
தங்களிடம் தங்களுக்காக புன்னகைத்து மகிழ்ச்சியாய் பேசி சிரிப்பவளின் கண்கள் காட்டிக்கொடுத்ததே.
“குட்டிமா…” என காவேரியின் அழைப்பில்,
“எப்படி பார்ட்டி. சூப்பர்ல…” என்றாள் தாயின் அழைப்பில் இருந்த கவலையில்.
இன்னும் அதே உடையில் தான் அவளிருந்தாள். அவரிடம் சிரிப்புடன் கேட்டதும் காவேரியும் தலையசைக்க யார் யார் பேசினார்கள் என்று பட்டியலிட, வெளிச்சத்தம் அந்த அறையினுள் ஊடுருவவில்லை என்றாலும் அங்கொருவனின் பார்வை அவளின் அருகாமையில் தான் ஆறுதலாகியது.
ரெக்ளைனரில் சாய்ந்து அமர்ந்தவள் பேசிக்கொண்டே இருந்து அழைப்பு துண்டிக்கப்பட்டதும், வேறு எதுவும் தோன்றாமல் காவேரியின் புடவையை எடுத்து தன் மீது போட்டுக்கொண்டு அதிலேயே சுருண்டு தலைசாய்த்துவிட்டாள் பிரத்யுக்ஷா.
அவள் அறையின் எதிரில் தூரத்தில் இருந்து அதனை கவனித்த ஆகர்ஷன் விழிகள் அவள் அங்கே உறங்கிவிட்டதை கண்டு சிறு புன்னகையுடன் தன் அறையின் விளக்குகளை அணைத்துவிட்டு தானும் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
உறக்கம் வரவில்லை. விமானத்தில் நன்றாக உறங்கியிருக்க உடலை மட்டுமே தளர்த்தியவன் கண் மூடி சாய்ந்துகொண்டான்.
மனதினுள் அவள் முதன்முதலில் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்த ஞாபகம் வண்டாய் குடைந்தது.
—————————————–
அன்று அதிகாலையே சுஷ்மாவின் பெற்றோரோடு வேறொருவரும் வெளியே நிற்க கண்டவன் யாரென்று சரிவர கவனிக்காமலே உள்ளே சென்றுவிட்டான்.
முதல்நாள் தான் தன் தாயும், தந்தையும் சேர்ந்தே அங்கே வந்திருக்க, குடும்பத்துடன் வெளியில் கிளம்ப ஆயத்தமாகி இருந்தனர்.
தங்களின் பயணத்திற்கான உடமைகள் அனைத்தும் காரில் ஏற்றி இருக்க செல்லும் வழியில் உண்பதற்கு தேவையானவற்றை எடுத்து வைத்தனர் ஷ்யாமளாவும், அனன்யாவும்.
கதவு திறந்தே இருக்க யாரோ கதவை தட்டும் சத்தத்தில் மனைவி, மகளுடன் நின்றிருந்த கிருஷ்ணகுமார் வந்து எட்டி பார்த்தார்.
“வணக்கம்ங்க…” என்று ஒரு வயதான பெண்மணியும், அவரின் அருகில் பள்ளி படிப்பை முடித்து வந்திருந்த பிரத்யுக்ஷாவும் நின்றிருந்தனர்.
“யார் டாட்?…” என மாடியிலிருந்து ஆகர்ஷனும் இறங்கி வந்தவன் கிருஷ்ணாவிடம் கேட்க,
“தெரியலைப்பா…” என்று மகனிடம் கூறியவர்,
“உள்ள வாங்கம்மா…” என்றார் அந்த பெண்மணியை.
“நீங்க தமிழ் குடும்பம்ன்னு சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தோம்…” என்றவர்,
“உள்ள வாடி…” என்றார் பிரத்யுக்ஷாவிடம்.
அடர்ந்த கூந்தலை போனிடெய்லில் அடக்கியிருந்தவள் நெற்றியில் சிறு பொட்டும், அதற்கு மேல் விபூதி, குங்குமம், மஞ்சள், சந்தனம் என்று வரிசையாய் வீற்றிருந்தது அடர்த்தியாய்.
ஆகர்ஷன் பார்த்ததுமே சிரிப்பை அடக்கிவிட்டு, அங்கிருந்து நகர்ந்துவிட்டான். ஷ்யாமளாவும் யார் என்று வர,
“நான் சுஷ்மா வீட்டுக்கு வந்திருக்கேன். ஊரு கோயம்புத்தூர். என் பேரு மணியமங்களம். இவ என் பேத்தி பிரத்யுக்ஷா. இப்ப தான் பன்னெண்டு முடிச்சிருக்கா. இங்க தான் டாக்டருக்கு படிக்க வைக்க வந்திருக்கோம். விட்டுட்டு ரெண்டுநாள்ல நாங்க புறப்பட்டு போயிருவோம். அதான் அக்கம்பக்கத்தில எப்படின்னு பார்க்கனும்ல…” என்று படபடவென்று பேச எதற்கும் பிரத்யு வாயை திறக்கவில்லை.
மிரண்ட பார்வையுடன் முகத்தில் துளியும் சந்தோஷம் என்பது எதுவும் இன்றி அமர்ந்திருந்தவளை பார்த்தனர் ஷ்யாமளா குடும்பத்தினர்.
“நானும் என் மகனும் தான் துணைக்கு வந்தோம். அவ அம்மாவுக்கு வர தோதில்லை பாருங்க. அதான்…” என்றவர்,
“உங்க பொண்ணா?…” என்று அனன்யாவை பார்த்து கேட்க,
“ஆமாங்க. என்னோட பொண்ணு தான். இங்க தான் டாக்டர்க்கு படிக்கிறா…” என்று ஷ்யாமளா விவரம் சொல்ல,
“எனக்கு இந்த விவரம் எல்லாம் ஏறாது பாருங்க. ஆனா சுஷ்மா சொன்னா இந்த பொண்ணு படிக்கிற காலேஜுல தான் என் பேத்தியும் படிக்க போறான்னு. மனசுக்கு ரொம்ப நிம்மதி. இங்க நம்ம ஆளுங்க இருக்காங்களேன்னு…” என்று கூற என்னடா இது என்றானது அவர்களுக்கு.
“சரிங்க அப்பப்ப பார்த்துக்கோங்க. நான் புறப்படறேன். என் மகனுக்கு தெரியாம வந்துட்டேன். தேடுவான் பாருங்க…” என்று சொல்லிவிட்டு எழுந்தவர்,
“அம்மாடி கண்ணு, என் பேத்திய பார்த்துக்கத்தா. என்னமாச்சும் சந்தேகம்ன்னா கூசாம சொல்லி குடு. சரித்தான?…” என்றும் அனன்யாவிடம் சொல்லிவிட்டு செல்ல,
“பை அங்கிள், பை ஆன்ட்டி…” என்று பிரத்யுக்ஷாவும் கூற,
“அக்காவுக்கும் சொல்லுடி…” என்றார் மணியமங்களம்.
“பை அக்கா…” என்று கிளிப்பிள்ளையாய் சொல்லி செல்ல, ஆகர்ஷன் உள்ளிருந்து கவனித்தபடி தான் இருந்தான்.
அவர்கள் செல்லவும் தான் அவனும் வெளியே வர கிருஷ்ணாவுக்கும் ஷ்யாமளாவுக்கும் அத்தனை சிரிப்பு.
“இவங்க என்னம்மா இப்படி பேசிட்டு போறாங்க?…” என்று அனு கேட்க,
“சுஷ்மா வீட்டுல நம்மை பத்தி பேசியிருப்பாங்க. நாம ரொம்ப வருஷமா இங்க தான் இருக்கோம்ன்னு நல்லவிதமா சொல்லியிருக்கலாம். அதுவும் ஒரே காலேஜ்ன்னும் போது…” என்றார் ஷ்யாமளா.
“நாம கிளம்புவோம். இப்போ இந்த பேச்சு எதுக்கு?…” என்று அவர்களை கிளப்புவதில் தான் இருந்தான் ஆகர்ஷன்.
பெரிதாய் பிரத்யுக்ஷாவை எல்லாம் அவன் கவனிக்கவும் இல்லை. கவனத்தில் பதிந்தது அவள் வந்ததும், அவள் பாட்டி பேசியதும், அவளின் அமைதியும் மட்டுமே.
இரண்டுநாட்கள் கழித்து அவர்கள் கிளம்பும் நேரம் வந்து மணியமங்களம் விடைபெற்றுவிட்டு செல்ல அதன்பின் அவ்வப்போது அனன்யா பிரத்யுக்ஷாவிடம் பேசுவதும் அவள் எப்போதாவது வெளியில் வைத்து அனன்யாவிடம் பேசுவதுமாக இருந்தது.
“பாவம் ண்ணா. சிவில் படிக்கனும்ன்னு ரொம்ப ஆசையாம். ஆனா அவங்கப்பா இங்க அனுப்பி வச்சிருக்காங்க. சரி அங்கயே இருந்து படிக்கிறேன்னு சொன்னதுக்கும் கேட்கலை போல…” என்று சொல்லியிருக்க கேட்டும் கேட்காத பாவனை தான் அவனிடம்.
“குழந்தைங்க மனசெல்லாம் யாருக்கும் பொருட்டே இல்லை. ப்ச், ரிடிகுலஸ்…” என்று அவன் முணுமுணுத்து சென்றது அனன்யாவின் காதுகளை அடைய லேசாய் விழிகள் கலங்கியது.
ஷ்யாமளா, கிருஷ்ணகுமாருக்குமே அவள் அதனை பகிர்ந்திருந்தாள். இப்படி தன் அண்ணன் பேசினான் என்று.
“ஸோ வாட்? அவனுக்கு கோபம் வரும் தானே? பிள்ளைங்களை அவங்க மனசை யார் யோசிக்கிறா அனு? ஒருவேளை அந்த பொண்ணு இங்க சரியா படிக்கமுடியாம ஸ்ட்ரெஸ்ல விழுந்தா யாருக்கு கஷ்டம்?…” என்றார் அவர்.
“ப்பா அண்ணா…”
“உன் அண்ணாவும் அதை தான் யோசிக்கிறான்…” என்று சொல்லிவிட்டார் அழுத்தமாக.
அதன்பின்னான நாட்களில் அனன்யாவின் நெருக்கம் பிரத்யுக்ஷாவிடம் இன்னுமே அதிகமானது.
எப்போதாவது தன் வீட்டிற்கு அழைத்து செல்வதுண்டு. ஆகர்ஷன் இருந்தால் தலையசைப்பு மட்டுமே அவனிடமிருந்து வரும். ஒருவார்த்தை பேசிவிடமாட்டான் அவளிடம்.
“உங்க அண்ணனுக்கு பேச்சு வராதா? காதும் கேட்காதோ?…” என நிஜமாகவே பிரத்யுக்ஷா அனன்யாவிடம் கேட்டதுண்டு.
“இப்படி உன்னை கேட்டுட்டா தெரியுமா?…” என்று அனன்யா சொல்லி சிரிக்கையில் லேசாய் புன்னகைத்து கொள்வான்.
இத்தனை மட்டுமே பிரத்யுக்ஷா பற்றி அவன் அறிந்தது. ஆம், அறிந்துகொள்ள மட்டுமே செய்திருந்தான்.
கேட்டும் இல்லை. தானாகவே அனன்யா அவனிடம் சொல்லிவிடுவாள் பிரத்யுக்ஷா பற்றி.
“செம்ம ஃபன் தெரியுமா அந்த பொண்ணு. ஆனா ஒரு கோட்டை போட்டு வச்சிக்கறா. இதை தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வராதன்னு. ஆனாலும் அவ தான் என்னோட க்யூட்டிபை…” என்றும் கொஞ்சிக்கொள்வாள்.
“ரெண்டுபேரும் அறுந்தவாலு. அதான் செட்டாகிட்டீங்க…” என தோளை குலுக்கி கொள்பவனை தலையணையால் மொத்திவிட்டு செல்வது வழக்கமாகி இருந்தது அனன்யாவிற்கு.