இப்போதும் அந்நாளை எண்ணினால் இதழோரம் புன்னகை நிச்சயம் என்பதை போல் அவளின் பிறந்தநாள் அவன் மறக்க இயலாத நாளும் கூட.
மறக்கவே முடியாத நாளும் கூட. மனதளவில் விலகி ஓடி ஒளியக்கூடிய இடம் இவ்வுலகில் இல்லையே என்று மருகி தவிக்கும் நாளும் கூட.
நிச்சயம் அந்தநாளில் அவன் புன்னகைப்பது என்பதை கூட சிலவருடங்களில் அவன் மறந்திருந்தான்.
அவனறியாமல் இதழ் நெளிவை அவளின் கண்ணீர் தத்து தந்திருப்பதை போலிருந்தது.
கண்ணீர். அந்த கண்ணீருடன் அவன் கடல் கடந்து அங்கே வந்து சேர்ந்திருந்தானே.
அந்தநாளில் அவன் வடித்த கண்ணீருக்கு வாழ்நாள் முழுவதன் சந்தோஷத்தையும் முடக்கியிருந்தான்.
அனன்யா தன் அண்ணனின் மாற்றத்தை கண்டும் காணாததை போல உள்ளம் உகுத்த மகிழ்ச்சியில் அசையாது பிரத்யுக்ஷாவுடன் லயிப்பதை போல ஆகர்ஷனின் மெல்லிய சிரிப்பில் அகமகிழ்ந்து போனாள்.
அதுவும் அவன் அறிந்திருக்கவில்லை. எத்தனைக்கெத்தனை புன்னகைத்தானோ அத்தனை தூரம் ஸ்ரீவத்சன் மீது கோபமான கோபம்.
‘என்ன மனுஷனோ அந்தாள்’ என்று அவர் மீதான மரியாதை எழும் முன் அதல பாதாளத்தில் விழுந்திருந்தது.
இப்படி ஒரு பெண்ணை பக்கத்தில் வைத்து தாங்க முடியாத துரதிர்ஷ்டசாலியாகவே தான் ஸ்ரீவத்சனை எண்ணினான் ஆகர்ஷன்.
முதல்வருடத்தின் மதிப்பெண்ணும், பிரத்யுக்ஷாவின் படிப்பும், கவனமும் ஒருநிலையில் இல்லை என்பதும் புரிந்தது.
“இதுவரை இவ்வளோ கம்மியா என்னோட பர்சென்டேஜ் இருந்ததே இல்லை….” என்று சிறுபிள்ளையாய் படிப்பின் மீதான அச்சத்திலும், எதிர்காலம் என்னவாகுமோ என்னும் பயத்திலும் அனன்யாவிடம் அரற்றினாள் பிரத்யுக்ஷா.
“பிடிச்சதை படிச்சா தான் நீ ப்ரைட் ஸ்டூடண்டா? இது உனக்கொரு சேலன்ச்ன்னு வச்சுக்கோ பிரத்யு. உன்னால முடியும்ன்னு நீ நம்பு. அதுக்குன்னு விழுந்து விழுந்து படிக்கனும்ன்னு இல்லை. முதல்ல இந்த படிப்பை உனக்குள்ள திணிச்சிட்டாங்கன்னு நினைக்கிறதை விட்டு வெளில வா…” என்றான் ஆகர்ஷன்.
பிரத்யுக்ஷாவிற்கு ஆகர்ஷனும், அனன்யாவும் பக்கபலமாய் இருந்தனர் என்றால் மிகையில்லை.
அத்தனை தூரம் பட்டை தீட்டப்பட்ட வைரம் போல அவளை திசைதிருப்பி கவனத்தை மாற்றிவைக்க, அவளின் இயல்பு சட்டென்று கற்பூரமாய் அதனை பற்றிக்கொள்ள வைத்தது.
“என்ன சொல்லுங்க அனு அக்கா உங்க அண்ணனுக்கு இருக்கற கிட்னில உங்களுக்கு ஒன் அன்ட் ஆஃப் கிராம் கம்மி தான்…” என்று அவளையே கிண்டல் பேசுவாள் பிரத்யுக்ஷா.
“கொழுப்பு ராஸ்கல். என்னைக்காவது பாட்டை போட்டுட்டு கண்ணை கசக்கு. வரவே மாட்டேன்…” என்று கூறும் அனன்யா அவளின் முகம் வாடும்முன் ஓடி சென்று அணைத்திருப்பாள்.
“ப்ராமிஸ் பண்ணினா அந்த ஸ்டேன்ட்ல நிக்கனும் அனு அக்கா…” என்று அதற்கும் சேர்த்தே தான் பிரத்யுக்ஷா கிண்டல் பேச,
“தேவையா உனக்கு?…” என்பான் ஆகர்ஷன்.
அதன்பின்னான அவர்களின் நாட்கள் எல்லாம் அழகோவியம் தான். எழுதப்படாத விதியில் அவர்களின் அன்னியோன்யம் அழகாய் வளர்ந்தது.
நினைக்க நினைக்க தித்திக்கும் பொழுதுகள் தான் அவர்கள் கடந்து வந்தது. இப்போதும் மெல்லிய புன்னகையுடன் ஆகர்ஷன் விழிக்க நள்ளிரவை தாண்டி இருந்தது நேரம்.
கீழே பார்ட்டி முடிந்து சுஷ்மாவின் குடும்பத்தினரின் நான்கைந்து பேர் மட்டுமே தோட்டத்தில் இருக்க மற்ற கூட்டம் கிளம்பியிருந்தது.
சிறிதுநேரம் அதனை பார்த்துவிட்டு பிரத்யுக்ஷாவின் அறையை பார்க்க இன்னும் விளக்கு எரிந்ததோடு அதே போல் தான் உறங்கி இருந்தாள்.
“நாளைக்கு கை வலிக்குது, அங்க, இங்க புடிக்குதுன்னு சொல்ல போறா…” என தலையசைப்புடன் பேசியபடி மீண்டும் அறைக்குள் நுழைந்துகொண்டான் ஆகர்ஷன்.
இனி நாட்கள் இருப்பது வெகு சொற்பமே. இன்னும் எட்டு மாதங்கள். முடிந்ததும் பிரத்யுக்ஷா தாய்நாடு கிளம்பிவிடுவாள்.
தன்னை அறியாதவளை, அங்கேயே இருக்கும்படி சொல்லி வற்புறுத்தவும் மனதில்லை.
ஆகர்ஷனுக்கு புரிந்ததிருந்தது பிரத்யுக்ஷா தன்னை காணும் விதமும், பழகும் விதமும்.
“மம்மீ கூட இப்படித்தான் செய்வாங்க. இப்படித்தான் தருவாங்க…” என்று அவன் செய்யும் செயல்களில் பெரும்பாலும் காவேரியை கொண்டுவந்துவிடுவாள் அவள்.
உள்ளமெல்லாம் அந்த நொடி கனத்துவிடும். சிலநேரம் தன் மீதே கோபம் வந்துவிடும் அவனுக்கு.
இப்படி பழகும் பெண்ணை தான் என்ன நினைக்கிறேன் என்று தோன்றாத நேரங்கள் குறைவு.
‘எனக்கு பிடிச்ச பொண்ணா, நான் பார்த்துக்கனும்னு நினைக்கிற பொண்ண நேசிக்கிறது எங்க தப்பாகும்?’ என்னும் அவனின் மனம் அவனுக்கு பரிந்துகொண்டு வந்துவிடும்.
மயிலிறகாய் அவளின் புன்னகை அவனின் கனத்தை இலகுவாக்கும் பொழுதுகளில் சஞ்சலங்கள் எல்லாம் கரைந்துபோகும்.
இப்போதும் அதே கலக்கம். தன்னை உணராமலே அவள் சென்றுவிடுவாளோ என்று.
முதலில் உணரட்டும். தன்னை தேடும் அந்த சிறு பார்வையை தந்துவிட்டால் போதும் என்னும் எதிர்பார்ப்பில் உயிரை நிறுத்தி காத்திருந்தான்.
அவன் வாழ்வில் அவள் மட்டுமே என்னும் தீர்மானத்திற்கு வந்து வெகுவருடங்கள் ஆகிவிட்டது.
பிரத்யுக்ஷா ஆகர்ஷனாக இருந்தாலும் சரி, பிரத்யுக்ஷாவின் ஆபத்பாந்தவனாக இருந்தாலும் சரி என்பதை போல் இருந்தான்.
அது பிரத்யுக்ஷாவிற்கு இறுதியாண்டு என்பதனால் அத்தனையே இருவரும் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பும் குறைய துவங்கியது.
கிடைத்த நேரங்களில் அவளை விசாரித்துக்கொள்வான். தேவையான சமயங்களில் அவள் அவனிடம் தான் தஞ்சம் அடைவாள்.
“உனக்கு சொல்லி கொடுத்தே நான் மறந்திடனும் போல…” என்று பாடத்தின் சந்தேகங்களுக்கென்று சிலநேரங்கள் அவர்களுக்கான பிரத்யேகங்களில் சேர்ந்துவிடும்.
இத்தனைக்கும் இடையில் தினேஷின் குள்ளநரித்தனம். அவன் வீட்டில் தாயிடம் வாங்கியிருந்த பேச்சுக்களுடன் அத்தனை அவமானம் செய்திருந்தார் அவர்.
“ஒரு பொண்ணுக்கிட்ட படிக்கிற இடத்துல அடி வாங்கி இருக்கியே? உன்னை எல்லாம் என்ன செய்யலாம்? அப்படி என்னடா உனக்கு?…” என்று பேசியதோடு, இன்னும் வார்த்தைகளை விட்டிருக்க தீரா கோபம் பிரத்யுக்ஷாவின் மீது அவனுக்கு.
நாளும் பொழுதும் பிரத்யுக்ஷாவை பார்க்கும் நேரமெல்லாம் கனன்று எரியும் நெருப்பாய் வன்மம் தலைதூக்கி இருந்தது.
‘படிப்பை முடிச்சிட்டு அவ அங்க தான வர்றா. பார்த்துக்கறேன்’ என நினைத்தவன் கன்னங்கள் எப்போதும் போல எரிந்தது.
அது பிரத்யுக்ஷா அடித்ததை விட அதிகமான எரிச்சல். ஆகர்ஷனிடம் வாங்கியதன் பலன்.
“தொலைச்சு கட்டிடுவேன் பார்த்துக்கோ. ஒரு கேஸ். இங்க நான் குடுத்தா ஜென்மத்துக்கும் கழுத்துல ஸ்டெதஸ் கூட போட முடியாது. ஒழுங்கா படிச்சோமா போனோமான்னு இருக்கனும்…” என்றவன்,
“உனக்கு ரூம் ஷேர் வேணுமா?…” என்று பளார் பளார் என்று அறைந்திருந்தான்.
கல்லூரியில் பார்க்கும் மென்மையான, சாந்தமான மனிதனாக ஆகர்ஷன் அப்போது தெரியவில்லை தினேஷிற்கு. அவனை இப்படி ஒரு தோரணையில் எதிர்பார்க்கவும் இல்லை.
முட்டிவரை மடிக்கப்பட்டிருந்த சட்டையின் கைகள், ரௌத்திரத்தின் மொத்த உருவமாய் அவன் முன் நின்றிருந்தானே பிரத்யுக்ஷாவிடம் பேசிய அன்றிரவே.
இதோ நாட்கள் சென்ற வேகம் தெரியவில்லை. அன்றைக்கு பிறகு தினேஷ் பேசினாலும் பிரத்யுக்ஷா பதில் சொல்லாமல் இருப்பதில்லை.
ஆனால் விழிகளில் எப்போதும் ஒரு மிரட்டல் இருப்பதைப்போலவே தான் தினேஷிற்கு தோன்றும்.
அதோ இதோவென்று நாட்கள் மாதங்களை நிறைத்து எங்கோ வந்துவிட்டிருந்தது.
பிரத்யுக்ஷா நினைத்ததை போல தான் நடந்தது. சுஷ்மாவின் திருமணத்திற்கும் தன் வீட்டில் இருந்து ஒருவரும் வரவில்லை.
“ப்ச், டைம் இல்ல பிரத்யு. அதுவும் இல்லாம படிப்பு முடியற நேரம் அங்க நானோ, உன் அண்ணன் அண்ணியோ வந்தா உன் கவனம் எல்லாம் படிப்புல ஏறாது. முதல்ல படிச்சு முடி…” என்றிருந்தார்.
“இதுக்குத்தான் சொன்னேன், இதனால தான் நான் எதிர்பார்க்கவும் இல்லை. எல்லாரும் பேமிலியா இருந்தாங்க. அட போங்கய்யா…” என்றிருந்தாள் பிரத்யுக்ஷா தன் அண்ணனிடம்.
சுஷ்மாவின் பெற்றோருக்கு இதில் வருத்தம் என்றாலும் பக்கத்திலா இருக்கிறது வரவில்லை என்று நினைப்பதற்கு என கடந்துவிட்டனர்.
ஆகர்ஷனிடம் அவன் கேட்டதற்கும் பதில் சரியாய் வரவில்லை. பேசினால் இன்னுமே கோபமாகிவிடுவோம் என்று ‘வரலையாம்’ என முடித்துக்கொண்டாள்.