“ஓகே, லீவ் இட். வரலைன்னா ஏன் முகம் இவ்வளோ நீளத்துக்கு போகுதாம்?…” என சிரித்தவன்,
“எம்டி பண்ண எந்த காலேஜ் சூஸ் பண்ணியிருக்க பிரத்யு? உன் இஷ்டத்துக்கு நினைக்காம நல்ல காலேஜா பாரு…” என்று கவனத்தை அப்போதும் மடை மாற்றினான் ஆகர்ஷன்.
“ஹ்ம்ம், அனு அக்காட்டையும், ஆன்ட்டிட்டையும் சொல்லியிருக்கேன். எங்க ஊர்ல இல்லைன்னாலும் சென்னை, இல்ல மத்த ஸ்டேட்ல கிடைச்சாலும் ஓகே…” என்று கூற,
“இதுக்கு நீ இங்கயே படிக்கலாம் தானே? எப்படியும் வெளியூர்ல படிக்கிறதுக்கு இங்க படிக்கிறதுல என்ன இருக்கு?…” என்று சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“என்ன பேசறீங்க சீனியர்? இங்க படிக்கிறதும் அதுவும் ஒண்ணா? அங்கன்னா நினைச்சா நான் ஒரு நைட்ல என்னோட மம்மிட்ட போயிடலாம். இங்க இருந்தா முடியுமா?…” என்று ஆரம்பித்துவிட்டாள் அம்மா புராணத்தை.
“சரியான அம்மா கோண்டு…” என அவளின் தலையில் குட்டியவன் நாட்கள் நெருங்க நெருங்க அவளின் முகம் காண்பிக்கும் சந்தோஷத்தில் தொலைந்துகொண்டிருந்தான்.
கண்ணை மூடும் வேளைகளில் எல்லாம் முடியாத பகலையும், இரவையும் அவன் வேண்டி கடக்க அதற்கென்றே நாட்கள் படுவேகத்தில் கடகடவென்று கை நழுவி ஓடியது.
அன்று அத்தனைமுறை குறுஞ்செய்தியும் அழைப்பும் பிரத்யுக்ஷாவிடம் இருந்து. இன்னும் பத்து நாட்கள். முடிந்தது அவளின் சிட்னி வாசம்.
அவளின் ஒவ்வொரு அழைப்பிற்கும் அவனிதயம் துடித்தடங்குவதை அவனன்றி யாரும் அறிந்ததில்லை.
‘கிளம்பற நேரம் தான் என்னை கொன்னுட்டு போவா’ என மனம் அத்தனை சாடினாலும் தன்னை அவள் எதற்கோ தேடுகிறாள் என்று புரிய அழைப்பை ஏற்க தான் மனதில்லை.
எந்தவித அவசரமோ, ஆபத்தோ இல்லை என்பதை அவள் அனுப்பியிருந்த ஸ்மைலிகளை வைத்தே கண்டுகொண்டான்.
அதற்காகவே பெரிதாய் அவனும் பதட்டம் கொள்ளாமல் தாமதிக்க மீண்டும் குறுஞ்செய்தி ‘சீனியர் பிஸியா?’ என கேட்டு.
மாலை வரை எதற்கும் பதில் அளிக்கவில்லை அவன். வீட்டிற்கும் செல்லவில்லை.
இரவாகிய பின்பு தான் கிளம்பி செல்ல வீட்டின் உள்ளே விளக்குல ஒளிர கண்டு மெல்லிய புன்னகை.
ஒருவேளை ஷ்யாமளா கிளம்பி வந்திருப்பாரோ என நினைத்தபடி தான் உள்ளே நுழைந்தான் ஆகர்ஷன்.
அந்தமாதம் முழுவதும் தன் குரலில் மாற்றம் கண்டு, தாயும் தங்கையும் தான் அவனிடம் பேசிக்கொண்டே என்னவென்று கேட்டுக்கொண்டே இருந்தனர்.
அதற்காகவே அவர் கிளம்பி வந்துவிட்டார் போலும் என நினைத்து உள்ளே வந்ததும் எதிர்பட்டவரை பார்த்தவன் கையிலிருந்தவற்றை அப்படியே சோபாவில் போட்டுவிட்டு உடல் தளர நிற்க,
“ஆர்ஷ்…” என்றவர் வேகமாய் வந்து மகனை அணைத்துக்கொண்டார்.
ஒன்றும் பேசவில்லை ஆகர்ஷன். அவரை அணைத்து இறுக்கிக்கொண்டதில் மகனின் தவிப்பை உணர்ந்துகொண்டார் கிருஷ்ணகுமார்.
“ஓகே, ஓகே மை பாய். டாடி வந்துட்டேன்ல…” என்று அவனின் முதுகை தேற்ற,
“ப்பா…” என்றவனுக்கு சட்டென்று அவரை பார்த்த உணர்ச்சியில் தொண்டை அடைத்தது.
“ஒன்னும் இல்லடா கண்ணா. ஆர்ஷ் அப்பா இருக்கேன். உனக்காக தான் வந்தேன்….” என்று சொல்ல சற்றுநேரம் அவனின் அமைதியான அணைப்பில் கழிந்தது.
“போதுமா, பெரிய பேபியை தூக்கி இடுப்புல வச்சுக்கலாமே?…” என கலாட்டாவான சிரிப்புடன் பிரத்யுக்ஷாவின் குரலும்.
இருவருமே கலைந்து திரும்பி பார்க்க வாசலில் கை நிறைய பொருட்களுடன் நின்றிருந்தாள் அவள்.
“எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ். இப்பவே என்னை மறந்துட்டீங்க நீங்க. ஊருக்கு போனா அவ்வளவு தான். க்ளீன் சிலேட். பிரத்யுவை சுத்தமா தெரியாம போய்டும். அப்படித்தான?…” என முறைப்புடன் உள்ளே வந்தாள் அவள்.
அவளுடன் ஸ்வேதாவும். கையில் அவளின் குழந்தை ஷிவான்யா துறுதுறுவென்ற பார்வையுடன் அவர்களை பார்க்க, பிரத்யுக்ஷா அவர்களை அறிமுகம் செய்துவைத்தாள்.
“உள்ள வாம்மா…” என்றார் கிருஷ்ணகுமார்.
“வா பிரத்யு. வாங்க…” என ஆகர்ஷனும் அவர்களை வரவேற்றான்.
அவள் எதற்கு தனக்கு அத்தனை முறை அழைத்தாள் என இப்போது புரிந்தது அவனுக்கு.
“நீங்க எப்போ வந்தீங்க ப்பா?…” என கிருஷ்ணகுமாரிடம் கேட்க,
“அதை நான் சொல்றேன்…” என்று அதற்கும் குறுக்கில் அவள் விழ,
“அங்கிளும், என்னோட அண்ணா, அண்ணியும் சேர்ந்து தான் வந்திருக்காங்க. அண்ணா வந்த கொஞ்சநேரத்துல அங்கிளும் வந்திட்டாங்களா. உங்களுக்கு கால் பண்ணா எமர்ஜென்ஸி வார்ட்ல இருக்கறதா ரிப்போர்ட்ஸ் வந்திருச்சு…” என்று பதிலுக்கு கிண்டல் பேசினாள் அவனிடம்.
அதையும் சிரிப்புடன் கேட்டுக்கொண்டவன் விழிகள் இன்னும் சிவந்திருக்க அதனை உற்று பார்த்தவள்,
“கண்ணெல்லாம் கலங்கிருச்சு உங்கப்பாவை பார்த்ததும்? இனி நானும் கிளம்பிட்டா உங்களுக்கு போரடிக்கும்….” என்று சொல்லி,
“ஆனா நல்லா அடிக்கட்டும். அப்பவாச்சும் இந்தியாவுக்கு வருவீங்க தானே…” என்றாள் அவனிடம்.
பிரத்யுக்ஷா சொல்லியதும் கிருஷ்ணகுமார் மகனை திரும்பி பார்க்க ஆகர்ஷன் மௌனமாய் புன்னகைத்தான்.
“ஓகே, இப்ப நான் ரொம்ப பிஸி. இந்த கிப்ட்ஸ், மத்த எல்லாம் உங்களுக்காக நான் வாங்கிட்டு வர சொன்னது. எல்லாத்தையும் எடுத்து வைச்சுக்கோங்க சீனியர்….” என்று கூறி,
“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம், நான் இந்த வீக்கெண்ட் கிளம்பறேன். என்னை கூட்டிட்டு போக தான் அண்ணாவும், அண்ணியும் வந்திருக்காங்க தெரியுமா?…” என்றாள் அத்தனை மகிழ்ச்சியுடன்.
அத்தனை நாட்கள் இருந்த மனசஞ்சலம் எல்லாம் மொத்தமாய் மறந்து பௌர்ணமியாய் அவளின் ஒளிர்ந்த புன்னகை.
“உன் முகம் பார்த்தாலே தெரியுதும்மா நீ எவ்வளோ சந்தோஷமா இருக்கன்னு…” என்றார் கிருஷ்ணகுமார்.
“ரொம்ப ரொம்ப. எப்போடா ஊருக்கு போவோம்ன்னு இருக்கு அங்கிள். நாளைக்கு கூட ப்ளைட் டிக்கெட் இருந்திருக்காதான்னு தோணுது…” கண்கள் மின்ன கூறியவளை பார்த்தபடி இன்னும் அமைதியாய் இருந்தான்.
“ஓகே, சீனியர் ரொம்ப எமோஷன்ல இருக்காங்க. நான் நாளைக்கு பார்க்கறேன். பை…” என்று சொல்லிவிட்டு,
“அண்ணி போலாமா?…” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள் பிரத்யுக்ஷா.
மழையடித்து ஓய்ந்ததை போலிருந்தது. சிலநொடிகள் மௌனத்தில் கழிய பிரத்யுக்ஷா கொண்டுவந்தவை எல்லாம் ஆகர்ஷன் பார்வையில் நிறைந்திருக்க, ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்தார் கிருஷ்ணகுமார்.
“ஹ்ம்ம், எல்லாமே கவனிச்சிருக்கா. என்னை தவிர…” என இதழ்கள் லேசாய் வளைந்தது.
“நீ சொல்லியிருக்கனும் தானே? இப்பவும் ஒன்னும் இல்லை. அவங்க வீட்டுல நான் பேசட்டுமா?…”
“ம்ஹூம். அவ இந்தியா விட்டு வரமாட்டா ப்பா. அவளுக்கு அவளோட அம்மான்னா அத்தனை இஷ்டம்…” என்றான் அத்தனை உறுதியாய்.
“நாம இப்ப நினைக்கிற மாதிரியே காலம் எப்பவும் இருக்காது ஆர்ஷ். ஒருவேளை மனசு மாறும். உன்னை பிடிக்கும் போது உனக்காக இங்க வர தோணும் தானே?…” என்றார் கிருஷ்ணகுமார்.
ததாஸ்து என்றனர் தேவதைகள். நிஜம். அவனை பிடிக்கும் என்றதனால் மட்டுமே அவளங்கே வந்து சேர்ந்தாள். அவள் மட்டுமாய்.
காலங்களும் கிருஷ்ணகுமாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப மாற்றம் அடைந்திருந்தது.
காலம் மட்டுமல்லாது அவன் எதிர்பாராத நிகழ்வுகளும் அடுத்தடுத்து மனம் வலிக்க அரங்கேறியது.
அடுத்தநொடி கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்பதனை அனைவருமே மறந்துவிட்டிருக்க மாற்றங்கள் மாற்றத்தை துவக்கி, இங்குமங்குமாய் போடப்பட்டிருந்த முடிச்சுகளின் நுனியை பிடித்து பொம்மலாட்டத்தின் நூலினை இங்குமங்குமாய் இழுக்க ஆரம்பித்தது.
“அது நடக்கும் போது பார்த்துக்கலாம்…” என்று சொல்லியவன்,
“நீங்க என்ன திடீர்ன்னு? வர்றதா சொல்லவே இல்லையே…” என்றான் தகப்பனிடம்.
“சொல்லியிருந்தா உன்கிட்ட இருந்து இப்படி ஒரு டைட் ஹக் கிடைச்சிருக்குமா என்ன?…” புன்னகையுடன்.
“ஹக் தானே? குடுத்துட்டா போச்சு…”
“முகம் தெளிவாகிடுச்சு போல. இப்படி நீ இருந்து பார்த்ததே இல்லையே ஆர்ஷ்…” கவலை அவரின் குரலை விழுங்கியது.