‘கண்டதையும் நினைச்சு குழப்பிக்காம மைண்டை ப்ரீயா வச்சுக்கோ பிரத்யு’ என அவளை அரவணைக்கும் ஆகர்ஷன்.
‘என்ன பண்ணிட்டிருக்க நீ? கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு. இவ்வளோ படிச்சு இன்னைக்கே பைனல் முடிச்சிடுவியா என்ன? போய் தூங்கு’ என அதட்டும் ஆகர்ஷன்.
‘அம்மா பக்கத்துல இல்லைன்னா என்ன? கஸ்தூரி பொண்ணுக்கு நான் இல்லையா?’ என்று ஆதுரம் காண்பிக்கும் ஆகர்ஷன்.
‘சரியான ஹாட் சாக்லேட் பைத்தியம். எங்கையாச்சும் இது கிடைக்கவே கிடைக்காதுன்றப்போ தலையை பிச்சுட்டு சுத்த போற ராஸ்கல்’ என்று அவளை கட்டுப்படுத்தும் ஆகர்ஷன்.
இப்படி ஒவ்வொன்றிலும் அவளின் மனம் அவனையே நாட, திக்கற்ற திசையில் மாட்டிக்கொண்டதை போலிருந்தது பிரத்யுக்ஷாவிற்கு.
பிடிக்குதா என்றால் யோசனையே தேவையில்லை. அத்தனை பிடிக்கும். அதனை தாண்டி, அவன் தந்த பார்வை, இப்போது அவள் இதயம் சொல்லும் நிஜம் இவையெல்லாம் பைத்தியம் பிடிக்க வைத்தது.
அவனை விட்டு தூரம் செல்ல செல்ல உள்மனதின் ஓசையில் அவனின் குரல் ஓங்காரமாய் அவளை இழுத்து கட்டியது.
அமர்ந்திருக்க முடியாமல் அவஸ்தையுடன் இங்குமங்குமாய் நெளிந்தவள் எழுந்து நிற்க,
“என்னாச்சு பிரத்யு?…” என்றான் தேவான்ஷ்.
“ஹாங்…” என பேந்த பேந்த விழித்தவள் எதற்கு எழுந்தோம் என்றே தெரியாமல் பார்க்க,
“ப்ச், என்ன கேள்வி இது? வாஷ்ரூம் போறதுக்கு எழுந்திருப்பா? இதுக்குமா உங்ககிட்ட பதில் சொல்லிட்டு, பர்மிஷன் கேட்கனும்?…” கடுப்பாகிவிட்டாள் ஸ்வேதா.
“ஓஹ், ஓகே ஓகே…”
“என்ன ஓகே? வர வர நீங்களும் உங்க அப்பாவை மாதிரி வர்றீங்க…” என்ற மனைவியின் குற்றசாட்டில் தங்கையையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“வாயை மூடு…” என்றவன் முறைப்பில் ஸ்வேதா மௌனமாக,
“நீ போய்ட்டுவா பிரத்யு…” என அனுப்பினான் தங்கையை.
அவ்விடத்தில் முன்பென்றால் இப்படி ஸ்வேதாவிடம் முகம் காண்பித்ததற்கு தன் அண்ணனை ஒருவழி செய்திருப்பாள் பிரத்யுக்ஷா.
ஒன்றும் பேசாமல் சென்றவள் சென்றவேகத்தில் வந்து அமர்ந்துவிட மீண்டும் மௌனம்.
உண்ணும் நேரமும் கடந்து, உறங்கும் நேரமும் கடந்து கண் மூடி ஆகர்ஷனுடனான பொழுதுகளை அசைபோட துவங்கியது அவள் உள்ளம்.
அவனை பார்த்த அன்றிலிருந்து, பழக ஆரம்பித்த நாளில் இருந்து என ஒவ்வொன்றும் அவளின் நினைவடுக்கில் அடுத்தடுத்து வர மூடிய விழிகளில் இறுக்கம் கூடியது.
ஆம், இப்போது இந்தநொடி அவனை அவள் மனம் எந்தளவிற்கு விரும்புகிறதென புரிய முடிந்தது.
சுகமான வலியொன்று அவளுள் பாயும் கத்தி போல் சிறுக சிறுக உயிரை கொத்தி தின்ன துவங்கியது.
“பிரத்யு, பிரத்யு…” என இரண்டுமுறை ஸ்வேதா அழைத்ததும் தான் விழி திறந்து பார்த்தாள்.
“சாப்பிடு…” என உணவு வந்துவிட்டதும் தர,
“பசிக்கலை அண்ணி…” என்று சுருண்டு படுத்துவிட்டாள்.
இந்தநேரம் அவன் வீடு சென்றிருப்பானா மருத்துவமனைக்கா என்பதை போன்றான எண்ணங்கள் வலம்வர மனக்கண்ணில் பரவிய ஆகர்ஷனின் புன்னகை அவளை பித்து நிலைக்கு தள்ளியது.
“சீனியர்….” இதழ்கள் மெல்ல முணுமுணுக்க,
‘இருக்கேன், சொல்லுடா பிரத்யு’ என அவளோடு இருப்பதை போலவே பிரம்மையை தந்தான் ஆகர்ஷன்.
மீண்டும் கண்ணில் நீர் படர கண்களை திறக்கவே இல்லை அவள். மூடிய இமையிலிருந்து விழிநீர் மட்டுப்படவில்லை.
இன்னும் சத்தமாய் அழவேண்டும் போலிருந்தது. என்னவோ செய்தது. தனது இதயப்பகுதியின் மேல் அணிந்திருந்த ஜர்க்கினின் மீது அவளின் கைகள் இறுக்கத்தை கூட்டியது.
ஒரேநாளில் அவனை விட்டு பிரியும் அந்த நொடியிலிருந்து இப்போது வரையான தாக்கத்தில் மொத்தமாய் துவண்டுபோனாள் பிரத்யுக்ஷா.