“ம்ஹூம், வேற எதுவுமே கேட்கமாட்டேன். நீங்க வருவீங்க. உங்களை பார்த்துட்டு தான் நான் கிளம்புவேன்…” என சண்டையிடாத குறையாக அவள் சொல்லி செல்ல, உள்ளுக்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளின் கனம் தாளாமல் அங்கேயே மடிந்து தரையில் அமர்ந்துவிட்டான் ஆகர்ஷன்.
மறுநாள் அவளை அனுப்பிவிட்டு அங்கிருந்து முழுதாய் தான் திரும்பிவிடுவோமா என்ற நம்பிக்கை சுத்தமாய் இல்லை.
அவனாக, அவனுக்காக, அவனே தேர்ந்தெடுத்த முதல் உறவு அவள். அவளை அவன் தனக்குள் வைத்திருந்த இடமும் வேறு.
அப்படியிருக்க விலகி அனுப்பிவிடமுடியுமா என்று யோசனையில் இருந்தவன் விழிகள் உயர்ந்தது.
பாதி பருகி வைத்துவிட்டு சென்றிருந்தவளின் அந்த பானத்தினை எடுத்துக்கொண்டவன் துளித்துளியாய் ரசித்து பருக, மாறாக விழிகள் கலங்கியது.
இப்போதும் அந்நினைவில் அந்த தாமரை பூங்கொத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் மீண்டும் விமானநிலையத்தில் நடந்ததினை நினைக்க ஆரம்பித்தான்.
———————————–
“பிரத்யு, பிரத்யு எழுந்திரு. பிரத்யு…” என மீண்டும் மீண்டும் ஸ்வேதா எழுப்ப,
“ப்ளீஸ் சீனியர், போய்டாதீங்க…” என்றாள் கண்கள் திறவாமல் அவளிடம்.
“என்ன?…” என்று திகைத்து பார்த்தாள் ஸ்வேதா.
“இன்னுமா எழுப்பற? என்ன பன்ற?…” என்ற தேவான்ஷ் எழுப்புகையில் மீண்டும் என்னவோ பிரத்யுக்ஷா முணங்க திகில் பிடித்தது ஸ்வேதாவிற்கு.
“என்னவாம்?…” என்றான் அவளிடம்.
“தெரியலையே…” என்றவள் பிரத்யுக்ஷாவை பிடித்து ஒரு உலுக்கு.
பதறி எழுந்தவள் கண்கள் ரத்தமாய் சிவந்திருக்க மீண்டும் உடல் கனன்றது காய்ச்சலில்.
“திரும்பவும் வருதோ?…” என்று தொட்டு பார்க்க,
“ப்ச், அதெல்லாம் இல்லை அண்ணி. லேசா தான்…” என்று சொல்லிவிட்டு வெளிப்பக்கம் பார்க்க வந்து சேர்ந்துவிட்டோம் என்று புரிந்தது பிரத்யுக்ஷாவிற்கு.
மனதில் துளியளவு உற்சாகமில்லை. தொலைத்த எதையோ துழாவுவதை போல் கண்கள் இங்குமங்கும் அலைபாய்ந்தது.
“போகலாம்…” என்று எழுந்துகொண்டாள் பிரத்யுக்ஷா.
இத்தனைமணி நேரம் அவனை கடந்து அவன் மூச்சுக்காற்றை சுவாசிக்காமல். என்னென்னவோ மனம் பிதற்ற துவங்கியது.
‘போச்சு, அந்த ஆங்கிள்ல பிடிச்சுருச்சோ. பிரத்யு. என்ன பண்ணிட்டிருக்க?’ என தன்னை தானே கடிந்துகொண்டாள்.
வீடு வரும்வரை சாலையில் அவள் கடந்த விஷயங்களில் எதிலுமே அவளால் லயிக்க முடியவில்லை.
வீடு வந்தவள் ஓடி சென்று காவேரியை அணைத்துக்கொள்ள மகளின் முகம் பார்த்தவர் எண்ணிக்கையற்ற முத்தங்களை வாரி கொடுத்தார்.
ஒவ்வொரு முத்தத்திலும் உச்சந்தலையில் பதிந்த முத்தத்தின் சத்தத்தினை முன்னிறுத்தியது அவளின் உள்மனது.
‘பேட் கேர்ள் நீ. ஷட் அப் பிரத்யு’ என தன்னை தானே கடிந்துகொண்டவள் காவேரியை அணைத்துக்கொள்ள,
“என்னடா? என்னாச்சு?…” என்றுதான் கேட்டார் காவேரி.
மகளின் முகம் சந்தோஷத்தை தாண்டிய ஒரு தவிப்பினை காண்பிக்க அவருக்கு புதிதாய் இருந்தது.
“காய்ச்சல் ம்மா. ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்…” என்ற தேவான்ஷ்,
“பிரத்யு, நீ உள்ள போ. காய்ச்சல் திரும்ப வரும் போல. டேப்லெட் போட்டுட்டு ரெஸ்ட் எடு…” என்று அனுப்பிவைத்தான்.
“வரவர சின்ன ஹிட்லரா மாறிட்டு வர்றீங்க. இப்ப தான் அவ அத்தையை பார்த்திருக்கா. போ போன்னா?…” ஸ்வேதா கேட்க,
“போகனும். அம்மாவே அதை தான் சொல்லுவாங்க. அவளுக்கு முடியலைன்னு சொல்றேன்ல…” என்று கூற,
“ஆமாடா, நீ போய் ரெஸ்ட் எடு. அப்பறம் பேசலாம். இனிமே இங்க தான இருக்க போற…” என்று காவேரி சொல்லவும் அவரிடம் விடைபெற்று தன் அறைக்குள் வந்தாள் பிரத்யுக்ஷா.
‘இனிமே இங்க தானே இருக்க போற’ என்ற காவேரியின் குரல் ஒருபுறம், ‘எப்பவும் நான் இங்க தான் பிரத்யு. இந்தியா வரமாட்டேன்’ என்னும் ஆகர்ஷனின் குரல் ஒருபுறம்.
தலையை பிடித்துவிட்டு அமர்ந்துவிட்டாள். அவளின் மனம் புரிய முழுதாய் ஆரம்பிக்கும் முன்னரே ஆகர்ஷன் இங்கே வரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு வலுத்தது.
அப்படியே அமர்ந்திருந்தால் அவ்வளவு தான் என்று எல்லாவற்றையும் வைத்துவிட்டு சூடான நீரில் குளித்துவிட்டு வந்தவள் கைப்பேசியை எடுத்ததும் பார்த்தது ஆகர்ஷன் அனுப்பியிருந்த செய்தியை தான்.
அவளின் பயண நேர கணக்கின்படி வந்து சேர்ந்திருக்க கூடும் என்று அனுப்பி வைத்திருந்தான்.
பார்த்ததுமே அதுவரை இருந்த சோர்வெல்லாம் பறந்துவிட நேரம், இருக்கும் இடம் என்று எதையும் யோசிக்கவில்லை.
சட்டென வீடியோகாலில் அழைத்துவிட்டாள் ஆகர்ஷனுக்கு. இந்தநேரம் அவன் உறங்கிக்கொண்டிருப்பான் என்பதும் கூட நினைவில் இல்லை.
ஆனால் புன்னகை இதழ்களை நிறைத்திருக்க இப்படி தன்னை தடுமாறி பார்த்திராத தனக்கான பெண்ணின் நாணத்தில் முழுதாய் குளிர் கொல்லும் வெம்மையில் தகித்து தணியாமல் பார்த்தான் ஆகர்ஷன்.