“டாடி நான் ஒன்னு சொல்லனும்….” என பிரத்யு ஆரம்பிக்க, புருவம் உயர்த்தி மகளை பார்த்தவர் பார்வை அவளின் வார்த்தைகளுக்கு அணையிட்டது.
“இன்னைக்கு தான் வந்திருக்க பிரத்யு. நாளைக்கு ப்ரீயா இருக்கும் போது பேசலாம்…” என்றார் மகளிடம்.
ராம்நாத் இருக்கையில் பேசுவதை அவர் விரும்பவில்லை. எதுவாக இருப்பினும் தனியே பேசவேண்டும் என்று வலியுறுத்துவதை பிரத்யுக்ஷாவும் புரிந்துகொண்டாள்.
“ஏன் பிரத்யு இன்னுமா நீ நான்வெஜ் பழகலை?…” என விக்ரம் கேட்க அவள் பதில் சொல்லும் முன்,
“அப்படியே அவ காவேரி மாதிரி. எல்லா விஷயத்துலையுமே காவேரி தான். பேச்சு, சாப்பாட்டு பழக்கம், நான் சொல்ற மாதிரி நடந்துக்கறது இப்படி…” என்றவர் மீண்டும் மீண்டும் மகளை பார்த்துக்கொண்டே இருந்தார்.
காரணம் புரியாமல் பிரத்யுக்ஷா யோசனையாக, மற்றவர்களுக்கு ஸ்ரீவத்சன் என்ன உணர்த்துகிறார் என்று புரிந்தது.
“ஹ்ம்ம், தெரியுமே மாப்பிள்ளை. நீங்க சொன்னதனால அவளோட எதிர்காலத்தையே மாத்திக்கிட்டாளே. அப்படித்தான் இருக்கனும் பிள்ளைங்க. பெத்தவங்க முடிவு பண்ணினா சரியா இருக்கும்ன்ற நம்பிக்கை இருக்கனும் பசங்களுக்கு…” என்ற ராம்நாத்,
அதில் அத்தனை நிஜம். அத்தனை சுலபத்தில் கௌசல்யா வாய் திறந்து பேசிவிடமாட்டார்.
பிள்ளைகளும் அப்படியே. அதுவும் கௌரவ், சாருலதா இருவருமே ராம்நாத்தின் மறுவுருவம்.
விக்ரம் ஒருவன் மட்டுமே அந்த குடும்பத்தில் கலகலப்பான பேர்வழி. அவனும் தந்தைக்கு அடங்கிய பிள்ளை தான்.
ஆனால் ராம்நாத் பார்வையை தாண்டி என்றால் அந்த விக்ரமே வேறு. அதிலும் பிரத்யுக்ஷாவோடு என்றால் இரு தகப்பன்களையும் வைத்து மிமிக்ரி செய்தே அவ்விடத்தை கலகலப்பாகிவிடுவார்கள்.
“மேய்க்கிறது எருமை. இதுல என்ன பெருமை?…” என்று விக்ரம் கூசாமல் போட்டு தாக்கும் ரகம்.
ஆனால் அது எல்லாம் பிரத்யுக்ஷா, கௌசல்யா, காவேரி, ஸ்வேதாவிடம் மட்டுமே தான்.
தப்பி தவறியும் கூட தேவான்ஷ், கௌரவ், சாருலதா முன்னிலையில் பேசிவிடமாட்டார்கள்.
“சரியான ஜெராக்ஸ் காப்பிஸ்…” என்று கடுப்பாவான்.
“நீ தப்பிச்சிட்ட ராசாத்தி. இங்க மூச்சு முட்டுது. பேசாம நெல்லரைக்கும் போது மிஷின்குள்ள விழுந்தா என்னன்னு அப்படி இருக்கு எனக்கு…” என்று புலம்பவும் செய்வான் விக்ரம்.
இத்தனை கட்டுக்கோப்பிலும் தங்களை தாங்களே மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளும் வித்தையை அறிந்திருந்தனர்.
உணவு நேரம் முடியும் தருவாயில் ராம்நாத் கைப்பேசியில் மகனின் அழைப்பு வர,
“கௌரவ் தான்…” என்று எடுத்தார்.
“சொல்லுப்பா…” என்றதும் மறுமுனை பேச,
“ஹ்ம்ம், சரியா தான் சொல்ற கௌரவ். பிரசீட் பண்ணிடு…” என்றவர்,
“ஆமா, இப்பதான் சாப்பிடறோம். இதோ குடுக்கறேன்…” என்று சொல்லிவிட்டு,
“பிரத்யு கௌரவ்…” என்று அவளிடம் கைப்பேசியை நீட்டினார்.
‘ப்பாஹ் ஒரு குடும்பத்துக்குள்ள மட்டும் எத்தனை ஹிட்ல. இவர் பேசற ஒத்தை வார்த்தைக்கு நான் பேச வேற செய்யனுமா?’ என போனை வாங்குவதற்குள் இத்தனை புலம்பிக்கொண்டே வாங்கியவள்,
“ஹலோ…” என்றதும்,
“ஹாய் பிரத்யுக்ஷா, ஹவ் ஆர் யூ?…” என்றான் கௌரவ்.
‘ஸ்ஸ் எத்தனை டன் இரும்பை கரைச்சு குடிச்சாரோ? குரலா இது? இதுல விசாரிப்பு வேற’ என மூக்கால் அழுதுகொண்டே,
“ஹ்ம்ம். நல்லா இருக்கேன்….” என்று முடிக்க,
“ஓகே…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
‘நான் கேட்டேனா விசாரிக்க சொல்லி?’ என கடுப்பான கடுப்பு பிரத்யுக்ஷாவிற்கு.
“என்னம்மா வச்சிட்டானா?…” என்று அதையுமே பெருமையாய் அவர் கேட்க,
“ஹ்ம்ம், ஆமா மாமா…” என்று போனை தந்துவிட்டாள்.
“அவன் ரொம்ப பிஸி. நானும் இங்க வந்துட்டேன். விக்ரமும் இல்லை. அவன் தானே பார்த்துக்கனும்…” என்றவர்,
“ஆனா பாருங்க மாப்பிள்ளை. எல்லா முடிவையும் சரியா எடுத்தாலும் என்கிட்ட சொல்லிட்டு தான் அதை அவன் செயல்படுத்தவே செய்வான்….” என்றார் ராம்நாத்.
“பிள்ளைங்க அப்படித்தான் இருக்கனும்…” ஸ்ரீவத்சன் சொல்லிவிட்டு பிள்ளைகளின் வளர்ப்பு பற்றி மாற்றி மாற்றி பேசிக்கொண்டனர்.
சாப்பிட்டு முடித்து வரும் வரை ஓயவில்லை. ஒருவழியாய் உணவு மேஜை தாண்டி ஹாலுக்கு வர,
“ஓகே ராம்நாத். டேக் கேர்…” என்று ஸ்ரீவத்சன் கை குலுக்க அவரும் விடைபெற்றார்.
“நிஜமாவே இவர் உங்கண்ணன் தானா மம்மீ?…” என சந்தேகத்துடன் காவேரியின் காதை கடித்தாள் பிரத்யுக்ஷா.
“உங்கப்பா குணத்தோட ஒத்து போறதால தான் இன்னும் அண்ணன்ற உறவு எனக்கும், தாய்மாமான்ற உறவு உனக்கும்….” காவேரி பெருமூச்சுடன் சொல்ல,
“நல்ல தாய்மாமா….” என்று சலிப்பு தான் வந்தது.
சொந்த தங்கை வீடு. உரிமையாய் தங்கிவிடமாட்டார் ராம்நாத். கோவை வந்தால் தங்குவதற்கென்றே வீட்டை வாங்கி போட்டுவைத்திருந்தார்.
அத்தனை பெரிதாய் தோட்டத்துடனான வீடு. செல்வ செழிப்பை காண்பிக்கும் விதமாய் இருக்கும் வீடு. பங்களா என்றும் சொல்லும் விதமாய் இருக்கும்.
வரும் உறவுகளிடம் தங்கி இருந்துதான் செல்லவேண்டும் என்னும் பேச்சுக்கள் எல்லாம் ஸ்ரீவத்சனிடம் என்றுமே இருந்ததில்லை.
இப்போதும் கூட விக்ரம், கௌசல்யாவோடு நேரம் செலவழிக்க பிரத்யு, ஸ்வேதா நினைத்திருக்க ராம்நாத் கிளம்பிய பின் அதற்கும் வழியில்லை.
அவர்களுமே சொல்லிவிடமுடியாது இருந்து செல்லலாமே என்று. ஏனென்றால் ஸ்ரீவத்சன் விடை கொடுத்துவிட்டார்.
இந்தியா வந்து சேர்ந்த ஒரே நாளுக்குள் பிரத்யுக்ஷாவின் மனம் வெகுவாய் சோர்ந்துவிட காவேரியை அணைத்தபடி அமர்ந்துவிட்டாள் அவள்.
“பிரத்யு, போய் தூங்கு. மார்னிங் பேசலாம். காவேரி டேப்லேட் போடனும். டைம்க்கு அவ தூங்கனும்…” என ஸ்ரீவத்சன் கூற,
“ஓகே டாடி. குட்நைட்…” என்று எழுந்து சென்றுவிட செல்லும் மகளை பார்த்தபடி நின்றார் ஸ்ரீவத்சன்.
சற்றுமுன் வந்திருந்த அழைப்பில் தான் அவரின் யோசனை எல்லாம். ஹோம் மினிஸ்டரிடமிருந்து வந்திருந்த அழைப்பு.
பேசவேண்டும் என்றவரிடம் மறுநாள் நேரம் கொடுத்து அப்போது அழைக்கும்படி சொல்லி வைத்துவிட்டார் ஸ்ரீவத்சன்.
அவரின் மகனும் பிரத்யுக்ஷா படிக்கும் கல்லூரியில் படிப்பதாக என்றோ அவள் கூறியிருக்க, முதலில் மகளிடம் பேசிவிட்டு அவரிடம் பேசுவதென முடிவுக்கு வந்திருந்தார்.
ராம்நாத்தை வைத்துக்கொண்டும் பிரத்யுக்ஷாவிடம் பேச மனமில்லை. அவர்கள் சென்றபின்னர் கேட்கவேண்டும் என்றால் மனைவியின் மருந்திற்கான நேரம்.
அதை எக்காரணம் கொண்டும் அவர் தள்ளி வைத்ததே இல்லை. காவேரி அத்தனை முக்கியம் அவருக்கு.
யோசனையுடன் காவேரியின் சக்கர நாற்காலியை நகர்த்திக்கொண்டு தங்களின் அறைக்கு சென்றுவிட்டார்.
தன் அறைக்கு வந்த பிரத்யு ஆகர்ஷனின் நினைவோடு உறங்கா இரவை கழித்தாள்.
கண்ணை மூடினால் மீண்டும் மீண்டும் அவன் தாமரை பூங்கொத்தை அள்ளிக்கொண்டு வந்த அந்த காட்சியே இதயத்தை துள்ள செய்தது.
காதலான கனவுகளை கருணையின்றிய நிதர்சனங்கள் மூச்சு முட்ட இறுக்க ஆரம்பித்தது.