தினேஷ் முகம் இறுக அமர்ந்திருந்தான். அவனருகில் அவன் தாய் ஜானகி அமர்ந்திருக்க கோபத்தில் இங்குமங்கும் உலாவினார் ஹோம் மினிஸ்டர் தயாளராஜ்.
“இதுக்குத்தான் டெல்லில இருந்து அவ்வளவு அவசரமா வர சொன்னீங்களா?…” என்று இன்னும் கோபம்.
முதல்நாளில் இருந்து இப்படித்தான் மகனை காணும் சமயங்களில் எல்லாம் கரித்து கொட்டிக்கொண்டிருந்தார்.
அதற்கென்றே அவரின் கண்ணில் படாமல் தப்பித்து தாயின் பின்னிருந்தவன் இப்போது வகையாக சிக்கிக்கொண்டான் காலை உணவிற்கு பின்.
மகனின் செயலில் ஜானகிக்குமே உடன்பாடு இல்லை. மகன் மேல் அவ்வளவு கோபம் தான்.
ஆனாலும் தன்னிடம் தஞ்சமடைந்து காலில் விழாத குறையாக கெஞ்சியவனை அவரால் நம்பாமல் இருக்க முடியவில்லை.
பிரத்யுக்ஷா மீதான கோபம் தாண்டி அவளை விரும்புகிறேன் என்று நிற்கிறானே என்று தான் யோசித்தார்.
“நிஜமாவே எனக்கு பிடிச்சிருக்கு. என்னை இதுவரைக்கும் வேற யாரும் இவ்வளவு கண்டிச்சதில்லை. ஆனாலும் நான் அவக்கிட்ட தப்பா பேசினதையும் தாண்டி என்கிட்ட நல்லவிதமா பழகினவிதம் பிடிச்சதும்மா. என்னை நான் உணர்ந்துட்டேன். இனிமே தப்பு செய்யமாட்டேன்…” என்றிருந்தான்.
வழக்கமான டயலாக், சிம்பந்தி, நான்கு சொட்டு கண்ணீர், தாயின் பாதம் பற்றி சோகமான முகபாவனை. ஜானகியுமே நம்பிவிட்டார்.
மனைவி பிள்ளை என்று அவர்களுக்காக இருக்கும் தயாளராஜ் வேறு என்ன செய்யமுடியும்?
விஷயம் முழுதாய் தெரிந்திருக்கவில்லை அவருக்கு. தினேஷ் மீதான அவரின் கனவே வேறு.
அரசியலில் தனக்கு சமமான ஒருவரின் மகளை மகனுக்கு இணையாக்க வேண்டும் என்று கனவில் இருப்பவர்.
சாதாரண குடும்பம். அவரை பொறுத்தவரை ஸ்ரீவத்சன் பெரிய தொழிலதிபராக இருந்தாலும் கூட தயாளராஜ் முன்னிலையில் மிகமிக சாதாரணம் தான்.
மகனுக்காக மனைவியின் சொல்லுக்காக காதலாகி போனதே என அரைமனதாய் ஸ்ரீவத்சனிடம் பேசியிருக்க அவர் மறுநாள் இந்த நேரத்திற்கு அழையுங்கள் என்று சொல்லிவிட தாங்கமுடியவில்லை.
“எனக்கு போய் அவன் அப்பாயின்மென்ட் குடுக்கறான். எவ்வளோ திமிர் இருக்கும்?…” என்று இப்போதுமே வெறுப்பில் வெந்துகொண்டிருந்தார்.
“படிக்க அனுப்பினா இவன் பார்த்துட்டு வந்திருக்கற வேலையை பார்த்தியா? தகுதி பார்த்து தான் தாரமெடுக்கறதும் கூட. இவனால எனக்கு எவ்வளோ அவமானம்?…” என்று மனைவியை தாளித்தார்.
என்னதான் மினிஸ்டர் மகனாகவே இருந்தாலும் ஒழுக்கத்தில் அவர் தலைசிறந்தவர் தான்.
அப்படி இருப்பவரின் மகன் இப்படி ஒரு ஈனப்பேச்சினை பேசியது தெரிந்தால்? ஜானகிக்கு அதுவேறு பயம்.
ஆனாலும், ‘அவளை ரொம்ப பிடிச்சதனால தான் அப்படி கேட்டுட்டேன் ம்மா’ என நம்ப வைத்த மகனின் சொல்லில் அதையுமே நம்பினார்.
தயாளராஜ் வேறு நேரம் செல்ல செல்ல தினேஷினை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
“என் தகுதிக்கும், அந்தஸ்துக்கும் என் கால் தூசிக்கு வருவானா அவன்? என் அப்பாயின்மென்ட் கேட்டு அத்தனை பேர் கால் கடுக்க காத்துட்டு இருக்காங்க. பெரிய பெரிய விவிஐபிங்க எல்லாம் என் கண்ணசைவுக்கு காத்திருந்தா இந்தாள் கல்யாண பேச்சு பேசனும்ன்னு சொல்லியும் இப்ப நேரமில்லை, நாளைக்கு பேசுங்கன்னு என்ன ஜம்பமா பேசறான்…” என்றவர்,
“நான் கூட நாம யாருக்கு தெரியாம பேசறான்னு நினைச்சேன் ஜானகி. அதுக்காக தான் திரும்ப திரும்ப நானே சொன்னேன். நான் யாரு, எங்க இருந்து பேசறேன். தினேஷ் யாருன்னு சொல்லி. அப்பவும் அப்படிங்களா, சந்தோஷம். இப்ப பேச முடியாது. நாளைக்கு கூப்பிடுங்கன்னு டைம் குடுத்தான்…” என்று சொல்லிவிட்டு தினேஷை பார்த்தார்.
“இப்படி குடும்பத்துல நான் பெண்ணெடுத்தா என்னோட செல்வாக்கும், மரியாதையும் என்னாகறது?…” என்று வேறு கோபத்துடன் கேட்க தினேஷ் மௌனமாய் இருந்தான்.
திருமணம் என்ற ஒன்றை தவிர பிரத்யுக்ஷாவை அத்தனை சுலபத்தில் நெருங்க முடியாது என்பது அவனின் எண்ணம்.
அழகுக்கு அழகு. மருத்துவப்படிப்பு. தன் கோபம் தீர்க்க அருகில் அவள். அவன் எதிர்பார்ப்பின் அளவு இவ்வளவு தான் என தான் நினைத்தது நடந்துவிடும் கனவில் அவன் மிதந்தான்.
அவர்களுக்கு தெரியவில்லை பிரத்யுக்ஷாவை விட ஸ்ரீவத்சனை பற்றி எதுவுமே தெரியவில்லை.
அரசியல் பலம், பணபலம், செல்வாக்கு, சொத்து மதிப்பு, பதவி இப்படி எதற்கும் மசியாதவர் உண்டா என்று இறுமாந்திருந்தனர்.
அதில் முதல் அடியாக இப்போது பேச நேரமில்லை என்று சொல்லி கத்திரித்தார் போன்று பேசிய ஸ்ரீவத்சன் மேல் கட்டுக்கடங்காத கோபம் தயாளராஜிற்கு.
“ஒருவேளை நிஜமாவே வேற எதுவும் அவசர வேலையா இருந்திருப்பாங்களோ என்னவோ? நாமளா ஏன் மரியாதை குறைவுன்னு நினைக்கனும்?…” என ஜானகி அவரின் கோபத்தை தணிக்க பார்த்தார்.
“நீ வாய மூடு. கல்யாணத்துக்கு சரின்னு சொல்லட்டும். அப்பறம் வச்சுக்கறேன் அந்தாளை. என் காலுக்கு கீழ போட்டு நசுக்கலைன்னா பாரு…” என்றவர்,
“எல்லாம் இவனால வந்தது…” என்று வேறு மகனை வசைபாடிக்கொண்டிருந்தார்.
——————————–
கோவையில் ஸ்ரீவத்சன் மகளின் முன் அமர்ந்திருந்தார். முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்து போயிருந்தது.
காவேரி வேறு பயத்துடன் கணவரையும் மகளையும் பார்த்தபடி அமர்ந்திருக்க பிரத்யுக்ஷா எவ்வித பதட்டமும் இன்றி தான் பார்த்திருந்தாள்.
“என்கிட்ட இதை நீ முன்னாடியே சொல்லியிருக்கனும் பிரத்யு…” என்று தினேஷ் பற்றி ஸ்ரீவத்சன் கேட்டிருக்க,
“அவ்வளோ தூரத்துல இருக்கேன். அவனை நானே ஹேண்டில் பண்ணிட்டேன் டாடி. ஒருவேளை என்னால முடியலைன்னா நான் உங்ககிட்ட தானே வருவேன்….” என்ற சொல்லில் அவர் சற்றே பெருமிதம் காண்பித்தார் கண்ணளவில் மட்டும்.
“எதுக்காக அவ்வளோ தூரம் என்னை படிக்க அனுப்பினீங்க? படிக்கிறதுக்கு மட்டுமா? எந்த சூழ்நிலையையும் நான் மேனேஜ் பண்ணிக்கனும்ன்னு தானே? நான் உங்க பொண்ணு டாடி…” என்று ஸ்ரீவத்சனிடம் எப்படி பேசவேண்டுமோ அப்படி பேசினாள் பிரத்யுக்ஷா.
காவேரியும் மறைக்கப்பட்ட புன்னகையுடன் தான் பார்த்திருந்தார் மகளின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு.
“ஹ்ம்ம், ஓகே. நான் இருக்கேன். அந்த ஞாபகம் இருக்கட்டும்…” என்று சொல்லவும் வேகமாய் தலையசைத்தாள் பிரத்யுக்ஷா.
அவள் சொல்லவேண்டியவை, கேட்கவேண்டியவை எல்லாம் பேசியாகிற்று. அத்தனை தெளிவாகவும் விளக்கிவிட்டாள்.
அந்த விளக்கத்தில் தன் முடிவென்ன என்பதையும் மறைமுகமாக மட்டுமின்றி, அதுதான் சரி என்றும் நேரடியாகவே கூறியிருந்தாள்.
“சரி, நீ எழுந்து போ. நான் பேசிக்கறேன்…” என்று பிரத்யுக்ஷாவைவிடம் கூற,
“டாடி நான் சொன்ன இன்னொரு விஷயம்?…” என கேட்க,
“நான் யோசிச்சு சொல்றேன். நைட் பேசலாம்…” ஸ்ரீவத்சன் இவ்வாறு சொல்லியதே அவளுக்கு பச்சைக்கொடி காட்டியதை போல தான்.
இல்லை என்றால் வேண்டாம் என்று ஒற்றை வார்த்தையில் முடித்திருப்பார். அதன்பின்னர் தலைகீழாக நின்றாலும் மாற்றமுடியாது.
அதற்காகவே இரவெல்லாம் எப்படி பேசவேண்டும், அதற்கு அவர் என்ன பதில் சொல்லுவார் என்று தேர்வுக்கு படிப்பதை விட சிரத்தையுடன் அவள் யோசித்து யோசித்து கேள்வியும், பதிலுமாய் இருக்க விடியலில் அவளே ஸ்ரீவத்சன் போல் மாறிவிட்டதை போல தலைசுற்றி போனாள் பிரத்யுக்ஷா.
“ஹப்பா இந்த ஒருராத்திரி டாடியை மாதிரி யோசிச்சதுக்கே அல்லாடிட்டேன். எப்படித்தான் டாடி அந்த லைப் லீட் பன்றாங்களோ?…” என்று கிறுகிறுத்து போய் தான் ஸ்ரீவத்சனிடம் பேச வந்தேதே.
ஆனால் அவர் தினேஷ் விஷயம் பேசுவார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை அவள்.
ஏன் எதற்கு என்று கேட்டதற்கு உனக்கு அவசியமில்லாதது என்றுவிட்டார் ஸ்ரீவத்சன்.
எது எப்படியோ? தான் சொல்லியதை யோசித்தால் அதுவே போதுமானதாக இருக்கும் என தினேஷை பற்றி யோசிக்கவே தோன்றவில்லை.
மகள் எழுந்து சென்றதும் அந்த அறையின் கதவை அடைத்துவிட்டு வந்த ஸ்ரீவத்சன் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
காவேரியும் எதுவும் பேசவில்லை. பிரத்யுக்ஷா இப்படி நடந்ததென்று கூறினாளே தவிர தாயிடம் பகிர்ந்ததை பற்றி எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை என்பதனால் காவேரியும் தெரிந்தார் போன்று காண்பிக்கவில்லை கணவனிடம்.
“ஹ்ம்ம், வரட்டும். பேசிக்கறேன்…” ஸ்ரீவத்சன் தனக்கு சொல்வதை போல கூறிக்கொள்ள,
“என்னங்க? திடீர்ன்னு என்னவோ சொல்றீங்க?…” என்றார்.
“ஹ்ம்ம், நேத்து ஹோம் மினிஸ்டர் கால் பண்ணிருந்தார் எனக்கு….”
“நம்ம பிரத்யுவுக்கு அவங்க பையனை தர்றாங்களாம்…” என்றார்.
“என்னங்க சொல்றீங்க?…” காவேரி குழம்பி போனார்.
“பொண்ணை கேட்டு வந்தாங்கன்னா பொண்ணு கேட்டாங்கன்னு சொல்லலாம். அவர் பேசும் போதே பிள்ளைங்க ஒண்ணா படிச்சிருக்காங்க. பொண்ணை பிள்ளைக்கு பிடிச்சிருக்கு. அதான் தினேஷை உங்க வீட்டு மாப்பிள்ளையாக்க விரும்பறோம்ன்னு சொல்றார்…” என்றதும் காவேரிக்கு திக்கென்றானது.