“அந்த லட்சணத்துல தான் பேசினார். அரசியல்வாதி. யார்க்கிட்ட எப்படி பேசனும்ன்னு தெரியாமையா பேசறார். எதை சொன்னா சந்தோஷப்பட்டு அவங்களுக்கு சம்மதம் சொல்லுவோம்ன்ற மாதிரி பேசி மயக்க பார்க்கறார் ஹோம் மினிஸ்டர். இந்த ஸ்ரீவத்சன் கிட்டயேவா?…” என்றார் அவர் இறுமாப்புடன்.
ஸ்ரீவத்சன் சொல்லி முடிக்க தயாளராஜ் சொன்ன நேரத்திற்கு அழைத்துவிட்டார் ஸ்ரீவத்சனுக்கு.
“அவர் தான்…” என்று அழைப்பை எடுக்கையிலே ஸ்ரீவத்சன் முகம் கடுகடுத்தது.
காவேரிக்கு தான் பயத்தில் மூச்சை அடைத்தது. தன் கணவரை பற்றி தெரியாமல் வந்து விழுகிறார்களே என்று.
“ஹலோ ஸ்ரீவத்சன். நான் ஹோம் மினிஸ்டர் பேசறேன்…” என்று அவர் ஆரம்பிக்க,
“குட்மார்னிங் மிஸ்டர் தயாளராஜ். சொல்லுங்க…” என்றார் ஸ்ரீவத்சன் எதையும் காண்பிக்காத குரலில்.
பெருத்த அவமானம். பெயரை சொல்லாமல் பதவியை அடையாளப்படுத்தி தயாளராஜ் பேச்சை ஆரம்பிக்க அங்கேயே முட்டுக்கட்டை போட்டார் ஸ்ரீவத்சன்.
தயாளராஜிற்கு அடுத்து பேச வார்த்தைகள் வரவில்லை. கோபம் ஒருபுறம், அவமானம் ஒருபுறம். சட்டென நெஞ்சை நீவியபடி அமர்ந்துவிட்டார் மகனை முறைத்தவண்ணம்.
“மிஸ்டர் தயாளராஜ், லைன்ல இருக்கீங்களா ஸார்?…” என்று ஸ்ரீவத்சன் மீண்டும் கேட்க,
“ஹாங், ம்க்கும். இருக்கேன். த்ரோட் இன்பெக்ஷன். அதான். வெய்ட்…” என்றவர் தன்னை ஆசுவாசப்படுத்த சிலநொடிகள் பிடித்தது.
“வெய்ட் பன்றேன். எனக்கு இன்னும் டென்மினிட்ஸ் தான் டைம். ஆபீஸ் கிளம்பனும். சொல்லுங்க…” என்று ஸ்ரீவத்சன் விரைப்பாய் கேட்க பல்லை கடித்தார் தயாளராஜ்.
“நான் நேத்து சொன்ன விஷயம் தான். நம்ம பசங்க கல்யாண விஷயம்…” என்று அவர் முழுதாய் முடிக்கும்முன்,
“வெய்ட் நான் பேசிடறேன். இங்க பாருங்க, எனக்கு இந்த சம்பந்தத்துல விருப்பம் இல்லை….” என்று சொல்லிவிட்டார் பளிச்சென்று.
தயாளராஜ் இதனை எதிர்பார்க்கவில்லை. அவர் குணஇயல்பு இப்படி பேசுகிறார் என என்னவோ யோசித்திருக்க இப்படி பானையை உடைத்ததை போல வேண்டாம் என்பார் என்று யோசிக்கவே இல்லை.
“ஸ்ரீவத்சன், இது நாம பிள்ளைங்க எதிர்காலம்….”
“என் பொண்ணுக்கு மட்டுமென்ன? அவளுக்கும் தான் தயாளன்….” என ஸ்ரீவத்சன்.
“இங்க பாருங்க என் பையன் ஆசைப்பட்டுட்டான்னு தான் நான் இத்தனை தூரம் தன்மையா பேசறேன். இல்லைன்னா நடக்கறதே வேற. பொறுமையா பேசறதால என்னை…” என்றவர் பல்லை கடித்து வார்த்தையை அடக்கிக்கொண்டு,
“நான் என்னோட உயரத்தை கூட பெருசா நினைக்காம இறங்கி வந்து பேசறேன்னு சாதாரணமா எடை போடாதீங்க. புரியுதா? மரியாதையா பொண்ணை கட்டிக்குடுத்துட்டு அடங்கி இருக்க பாருங்க….” என்றார் கோபமாய்.
“நீங்க எங்கயும் இருந்துக்கோங்க. என் பொண்ணுக்கு வரப்போற மாப்பிள்ளை எப்படி இருக்கனும்னு நான் தான் முடிவு பண்ணுவேன். அது உங்க மகன் இல்லை. நீங்க யாரா இருந்தாலும் என் முடிவு இது தான். இந்த அடக்கற வேலையெல்லாம் வேற யார்க்கிட்டயும் வச்சுக்கோங்க…” ஸ்ரீவத்சன் பட் பட்டென்று பேசினார்.
“யார்க்கிட்ட பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா? பொம்பளை புள்ளையை பெத்து வச்சிட்டு கொஞ்சமாச்சும் அச்சம் வேண்டாமா? அதுவும் அரசியல்வாதியை பகைச்சுக்க பார்க்கறீங்களா?….”
“ஹலோ நீங்க யாரா இருந்தா என்னன்றேன். எனக்கெதுக்கு அச்சம்? என் பொண்ணை ஒழுக்கமா நேர்மையா தகப்பன் சொல்லை மீறாம வளர்த்திருக்கேன். உங்க மகன் அப்படியா?…” என்றதும் தயாளன் கோபம் பலமடங்கானது.
“யோவ், அவ்வளோ தான் மரியாதை. என் மகனை பத்தி எனக்கே சொல்றியா நீ? ஒரு நிமிஷத்துல குடும்பத்தை இருக்கிற இடம் தெரியாம அழிச்சிருவேன். என்னை பகைச்சுக்காத…” ஏக வசனத்தில் இறங்கிவிட்டார் தயாளராஜ்.
“இதுதான் உங்க தகுதியும், அறிவும். அது எதுக்கு எனக்கு? எப்படியும் இருந்துக்கோங்க. இங்க பாருங்க, என் பொண்ணுக்கு ஒழுக்கமானவனா தான் நான் பார்ப்பேன்….” என்ற ஸ்ரீவத்சன்,
“படிக்கிற வயசுல, தாய் தகப்பனை விட்டுட்டு அத்தனை தூரம் வந்து படிக்கிற பொண்ணுக்கிட்ட அசிங்கமா பேசியிருக்கான் உங்க மகன். இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு என் பொண்ணை தருவேனா? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா நீங்க குடுப்பீங்களா இப்படி ஒருத்தனுக்கு உங்க பொண்ணை?…” என்று சுளீரென்று கேட்க தயாளராஜ் மகனை பார்வையால் எரித்தார்.
“அங்கயே என் பொண்ணு நல்லா நாலு அறை குடுத்து தான் அனுப்பிருக்கா. நீங்க என்னடான்னா பொண்ணு கேட்கறேன்னு நிக்கறீங்க. விருப்பம், ஆசை இதெல்லாம் ரெண்டாம்பட்சம். முதல்ல ஒரு பொண்ணை எப்படி பார்க்கனும்ன்ற அடிப்படை நாகரீகம் இல்லை….” என்றவர் நடந்ததை சொல்லி,
“பிள்ளைங்களை வளர்த்து படிக்க வைக்கிறவங்களுக்கு குறிப்பிட்ட வயசுல கல்யாணம் பண்ணி வைக்கிற கடமையும் இருக்கு. அதுவும் என் பொண்ணு என் பேச்சை மீறமாட்டா. அவளுக்கு நான் எப்படி மாப்பிள்ளை பார்க்கனும்ன்னு நான் முடிவு பண்ணிக்கறேன்…” என்று சொல்ல தயாளராஜ் அப்படியே அமர்ந்துவிட்டார்.
ஸ்ரீவத்சன் பேச்சுக்களை தினேஷ், ஜானகி இருவருமே கேட்டுக்கொண்டு தான் அமர்ந்திருந்தனர்.
ஜானகிக்கு அதற்குமேல் தாளவில்லை. அதுவும் மகனின் விருப்பம் ஒருபுறம், இப்போது இந்த திருமணம் நடக்கவில்லை என்றால் தன் கணவர் வேறு இதற்கு எதுவும் செய்துவிடுவாரோ என்று ஒருபுறம் பயம்.
சட்டென கைப்பேசியை அவர் வாங்கிக்கொள்ள தயாளராஜ் எதுவும் பேசவில்லை.
“ஹலோ, நான் ஜானகி பேசறேங்க. மினிஸ்டர் வொய்ப்…” என்றார் தன்னை அறிமுகப்படுத்தும் பொருட்டு.
“சொல்லுங்க மிஸஸ் தயாளராஜ்…” என்று அதற்கும் ஸ்ரீவத்சன் முற்றுப்புள்ளி வைக்க, ஜானகி என்னவோ போல் ஆகிவிட்டார்.
“இங்க பாருங்க, என் பையன் பண்ணினது தப்பு தான். அதுக்காக இப்படி மொத்தமா வேண்டாம்ன்னு சொன்னா எப்படி? அவன் அப்பவே தன் தப்பை உணர்ந்துட்டான்…” என்றார் ஜானகி.
“இருக்கட்டும்ங்க. செஞ்ச தப்பை உணரட்டும். ஆனா அது எனக்கு அவசியமில்லாதது. ஒரு பொழுதுனாலும் என் பொண்ணை உங்க பையன் அப்படி பார்த்ததும், பேசினதும் தப்பு தானே. விஷம் ஒரு துளினாலும் விஷம் தான். வேண்டாம்…” என கூற,
“என் பையன் ரொம்பவே உங்க பொண்ணை…”
“நான் சொல்லிட்டேன். என் பொண்ணுக்குமே விருப்பம் இருந்தாலும் இப்படியான பையனுக்கு நான் குடுக்கமாட்டேன். ஆனா அவ என் பொண்ணு. அதனால தான் அடிக்கவும் செஞ்சிருக்கா. இந்த பேச்சை இதோட நிப்பாட்டிடுங்க….” என்றவர்,
“உங்க வீட்டுக்காரர் என்னன்னா நான் மினிஸ்டர்ன்னு பேசறார். மக்கள் நாங்க போட்ட ஓட்டு தானே? எங்கக்கிட்ட கேட்டு வாங்கி தானே அங்க போய் உக்கார்ந்திருக்காங்க. பார்த்து பேசுங்க….” என எச்சரித்து,
“நான் ஒருநேரம் போல இருக்கமாட்டேன். பதவிக்காக, பெரிய வாழ்க்கைக்காக எல்லாம் பொண்ணை கட்டிக்குடுப்பேன்னு நினைச்சா அது தப்புங்க. நான் எதுக்காகவும் என்னோட முடிவுகளை மாத்திக்கமாட்டேன். இனிமே கால் பண்ணாதீங்க…” என்று சொல்லி வைத்துவிட்டார் அவர்.
மிகப்பெரிய அவமானம். அதுவும் ஸ்ரீவத்சன் இத்தனை தூரம் தைரியமாக வேறு பேச தயாளராஜ் ஒருபுறம் இதற்கு பதிலடி குடுத்தே ஆகவேண்டுமென்று யோசித்தாலும் இப்போதைக்கு அதற்கான சூழ்நிலை சரியில்லை என்று இதனை ஆறப்போட நினைத்தார்.
மகனை இழுத்து வைத்து கன்னம் கன்னமாக அறைந்தவர் கோபம் மட்டுப்படவே இல்லை.
“இங்க பாருடா, உன்னை பெத்ததுக்கு எவன்கிட்டையோ எல்லாம் பேச்சு வாங்கிட்டேன். இனி நான் சொல்றவ தான் உனக்கு பொண்டாட்டி. இவனை என்ன செய்யனுமோ அதை நான் செஞ்சுக்கறேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல,
“தேவையாடா உனக்கு? எல்லார்க்கிட்டையும் உன்னால அவமானம்….” என மகனை கடிய, தினேஷின் கோபமெல்லாம் பிரத்யுக்ஷா மீது வெறியாக மாறியது.
—————————————————–
மண்டபம் முழுவதும் அலங்காரத்தில் ஜொலிஜொலிக்க, ஏகே இல்ல நிச்சயதார்த்த விழா என முன்பக்க பேனரில் பூந்தோட்டம் போல் அமைக்கப்பட்டிருந்த போர்டின் நடுவில் விளக்குகளுடன் ரோஜாக்களினால் எழுதப்பட்டிருந்தது.
மாலை நேரம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க காரில் இருந்து இறங்கிய பிரத்யுக்ஷா முகம் அங்கே தனக்கென காத்திருந்தவனை கண்டதுமே வெட்கத்தில் சிவந்துவிட்டது.
உடல் முழுவதும் பேரட் க்ரீனிலும், பாடர் எலெக்ட்ரிக் ப்ளூ வர்ணத்திலும் அசரடிக்கும் காஞ்சிப்பட்டில் அழகோவியமாய் வந்துகொண்டிருந்தாள் அவனை நோக்கி.