அலெக்ஸுக்கும் அது புரிந்தே தான் இருந்தது. மிருதுளா எந்த முடிவு எடுத்தாலும் அவனுக்கு சம்மதமா என்றால் இல்லை தான். ஆனால் அதே நேரத்தில் தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியாமல் அவளை மணக்கக் கேட்பது சரியான முடிவாகவும் தெரியவில்லை. முடிந்த அளவு தள்ளிப் போடலாம் என்றே நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போல் இருந்தது அலெக்ஸின் நிலை. ஒரு பக்கம் மிருதுளாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மறுபக்கம் அவன் செய்ய நினைப்பதை சுதந்திரமாக செயல்படுத்த முடியாமல் ஏதோ மனத் தடை.
முதலில் இலகுவான விஷயத்தை முடிக்கலாம் என முடிவெடுத்தவன், மறு நாள் முதல் வேலையாக ஈஸ்ட்ஹேம் சென்றான். மிருதுளாவுடன் வந்திருந்த போது அங்கிருந்த சில தகவல் பலகைகளை கவனித்து வைத்திருந்தான்.
அதைக் கொண்டு அங்கிருக்கும் *** தமிழ்ச்சங்க அலுவலகத்தை அடைந்தான். வார இறுதியில் அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளியை தமிழ் வகுப்புகள் நடத்துவதற்காக பயன்படுத்தினர். அலெக்ஸ் உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த ஹாலில் மாணவர்கள் அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிக் கொண்டிருந்தனர்.
பாடி முடித்த பின்னர், ஆசிரியர் ஒருவர் திருக்குறள் ஒன்றைப் படித்து அதற்கான விளக்கம் அளிக்க, அந்த வார நிகழ்வுகள் குறித்த அறிவிப்பை செயலாளர் அறிவித்தார். அதன் பின்னர் வகுப்பு வாரியாக குழந்தைகள் அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர். அலெக்ஸ் ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் ஆர்வமாக பார்த்திருந்தான்.
அவன் காத்திருப்பதை கவனித்த செயலாளர் அவன் அருகில் வந்து விசாரித்தார்.
அவரிடம் எந்த அளவு பகிர்வது என தெரியாமல், பொதுவாக தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி கற்றுக் கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கான வழிமுறைகள் குறித்த தகவல் பெறுவதற்காக வந்ததாகவும் தெரிவித்தான்.
அவரும் அவனை வரவேற்று அங்கு நடக்கும் வகுப்புகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்தார். வாரத்திற்கு இரண்டு மணி நேரம் தமிழ் எழுத, படிக்க வகுப்புகள் நடப்பதாகவும், அதனுடனே இலக்கியமும் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்க, இதெல்லாம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அலெக்ஸுக்கு தெரியவில்லை.
அதிலும், ஐந்து வயது முதல் பதினாறு வயது வரை குழந்தைகள் ஒவ்வொரு வகுப்பிலும் இருக்க, அவர்களோடு சேர்ந்து படிப்பது ஒத்து வராத விஷயமாகவே பட்டது. எல்லா தகவல்களையும் பெற்றுக் கொண்டவன் யோசித்து விட்டு மீண்டும் வந்து சந்திப்பதாக கூறி விடை பெற்றான்.
அவன் வெளியே செல்வதற்கு முன் ஒரு இளைஞன் அவன் பின் வேகமாக ஓடி வந்தான். பின் இருபதுகளில் இருப்பவன் போல் தோற்றமளித்தவன், தன் பெயர் ராம்குமார் என்றும், தமிழ்ப் பள்ளியில் தன்னார்வலராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.
அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட அலெக்ஸ், ராமை கேள்வியாகப் பார்க்க,
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா, எதுனால தமிழ் கத்துக்க ஆர்வம் வந்துச்சுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்றான் ராம்.
அவன் ஆர்வமாக கேட்டதைப் பார்த்து அலெக்ஸுக்கு லேசாக வெட்கம் கூட எட்டிப் பார்த்தது.
அவன் சுருக்கமாக மிருதுளாவுடனான தனது காதல் கதையை பகிர, ராமுக்கோ உற்சாகமாகி விட்டது.
“வாவ், கங்கிராட்ஸ் அலெக்ஸ். நீங்க இதை நரேந்திரன் சார் கிட்டயே சொல்லிருக்கலாமே. அவர் வேற ஏதாவது ஆப்ஷன் சொல்லிருப்பாரே. இங்க வீக் எண்ட் சின்ன பசங்களுக்கு தமிழ் எழுத படிக்க சொல்லித் தரோம். ரெகுலரா டீச்சர்ஸ் வருவாங்க. யாருக்காச்சும் வர முடியாட்டி நாங்க வாலண்டியர்ஸ் கவர் பண்ணுவோம்.
எல்லாரும் தமிழ் ஃபேமிலில இருந்து வர்ற பசங்க தான். மோஸ்ட்லி வீட்ல தமிழ் தான் பேசுவாங்க. ஆனா எழுதுறதுக்கு, படிக்கிறதுக்கு தெரியாது. அந்த கேப் ஃபில் பண்ண தான் இந்த ஸ்கூல்.
கூடவே சில பழக்கவழக்கங்கள், இலக்கியமும் சொல்லித் தருவோம். இது உங்களுக்கு அவ்ளோ சூட் ஆகாதே” என யோசித்தான் ராம்.
ராம் சொன்னதைக் கேட்ட அலெக்ஸ் நொந்தே விட்டான். எதை நினைத்தாலும், ஏதோ இழுத்துக் கொண்டே போவது போல் தோன்றியது. ‘இலகுவாக எதுவும் நடக்காது போலயே’ என நினைத்தவன், ராமிடம்,
“தேங்க்ஸ் ஃபார் லெட்டிங் மீ நோ. என் பிரெண்ட் நேத்து தமிழ் படம் பார்க்குறது தான் பெஸ்ட் ஐடியான்னு என்னை கொடுமைப்படுத்திட்டான். வாட் அதர் திங் டு யூ சஜஸ்ட் தென்?” என கேட்டான்.
“ஹா ஹா, படம் பார்த்தீங்களா? உங்க பிரெண்ட் ஒரு ஜீனியஸ் தான்” என சிரித்த ராம்,
“நீங்க இமிடியெட்டா என்ன கத்துக்கனும்னு நினைக்கிறீங்க அலெக்ஸ்? ஐ டோண்ட் திங்க் லாங்குவேஜ் இஸ் எ பிராப்ளம்? எல்லாம் நல்லா தானே போயிட்டு இருக்கு?” என அலெக்ஸிடம் பதில் கேள்வி கேட்டான்.
“யூ ஆர் ரைட், லாங்குவேஜ் பிராப்ளம் எல்லாம் பெரிசா எதுவும் இல்லை. ஆனா உங்களோட கஸ்டம்ஸ் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுகிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். அதுனால சில சமயம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்துடுது.
நான் என்னோட வழக்கத்துல சாதாரணமா நடக்கிற விஷயத்தை அடிப்படையா வைச்சு எதாச்சும் பேசி, மிருவ ஹர்ட் பண்ணிடுவேனோன்னு ரொம்ப யோசனையா இருக்கு” என அலெக்ஸ் பதிலளிக்க, ராமுக்கு அவனை மிகவும் பிடித்து விட்டது. மரியாதையும் கூட.
“ஓகே, நீங்க ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க, நான் நரேந்திரன் சார் கிட்ட ஒரு விஷயம் செக் பண்ணிட்டு வரேன்” என்றவன், உள்ளே சென்று செயலாளர் நரேந்திரனிடம் பேசி விட்டு, சில நிமிடங்களில் அலெக்ஸிடம் திரும்பி வந்தான்.
“மாப்ள, இது வொர்க் ஆகுமா பாருங்க” என்க, அலெக்ஸ்,
“ஹூ இஸ் மாப்ள?” என குழப்பமாக கேட்க,
“நீங்க தான். இட் மீன்ஸ் சன் இன் லா. எங்க ஊரு பொண்ணு கல்யாணம் பண்ண போறீங்க. சோ இனிமேல் எங்க எல்லாருக்கும் நீங்க மாப்ள தான்” என அலெக்ஸின் தோளைத் தட்டியவன்,
“நான் நரேந்திரன் சார்ட்ட பேசிட்டேன். சார் உங்களுக்கு தனியா ஒரு அரை மணி நேரம் இன்ஃபார்மல் லெசன் மாதிரி வைச்சுக்கலாம்னு சொல்லிட்டாரு.
நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். சோ நீங்க எவிரி வீக் இந்த டைம் இங்க வந்துடுங்க. ஒரு மாசம் பார்க்கலாம், எப்படி போகுதுன்னு பார்த்துட்டு அப்புறம் வேணும்ன்ற மாதிரி மாத்திக்கலாம்.
உங்களுக்கு ஓகேன்னா இந்த ஃபார்ம் ஃபில் பண்ணி குடுங்க. ” என அவனிடம் ஒரு தாளை நீட்டினான்.
“தேட்ஸ் கிரேட்” என்ற அலெக்ஸ் மடமடவென விவரங்களை எழுதி ராமிடம் கொடுத்தான்.
அதை வாங்கிக் கொண்டவன்,
“சூப்பர், நம்ம நெக்ஸ்ட் வீக்கே ஆரம்பிச்சுடலாம். நான் ஒரு ரெண்டு நாள் முன்னாடி உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன், என்ன டாபிக் கவர் பண்ணலாம் அப்டின்றத டிசைட் பண்ணிக்கலாம்” என்றவன், ஏதோ ஞாபகம் வந்தவனாய் தலையில் தட்டிக் கொண்டவன்,
“சொல்ல மறந்துட்டேன். இங்க ஜான்சன்னு ஒருத்தர் வருவாரு. கிட்டத்தட்ட உங்க கதை தான். அவர் ஒரு பேராசிரியர். மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் நாட்டுக்கு போனவர், எங்க ஊரு பொண்ண தான் கல்யாணம் பண்ணிருக்காரு. அவர் நம்ம நரேந்திரன் சார் ஃபிரெண்ட் தான். நான் அவர் கிட்டயும் உங்கள அறிமுகப்படுத்துறேன்” என்றான்.
“ஃபெண்டாஸ்டிக், தேங்க்ஸ் ராம்” என்று ராமிடம் விடைபெற்றான் அலெக்ஸ். ராம் தானாக வந்து உதவியது அலெக்ஸுக்கு பெரிதும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அந்த மகிழ்ச்சியுடனே கிளம்பி அவனது மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான். அடுத்த பிராஜக்ட்டுக்கான திட்டமிடுதல் துவங்கியது. சில மாதங்கள் கழித்து செய்யும் வேலை என்பதால், நேரம் எடுத்தது.
அதை முடித்து வெளிப்படுத்துவதற்குள் மிருதுளாவிடம் எப்படியாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்துடனே செயல்பட்டான்.
மிருதுளா அலெக்ஸைப் பார்த்தே சில வாரங்கள் ஆகி விட்டது. அவளது பிறந்த நாளன்று பார்த்தது. அதற்குப் பின் அவனை காணவே முடியவில்லை. அலைபேசியில் சில முறைகள் பேசியது தான்.
அதிலும் பெரிதாக பேச்சுக்கள் இல்லை. மிருதுளாவுக்கு அவனின் ஒதுக்கத்துக்கான காரணம் புரியவில்லை. அவன் பேசியதில் இருந்து பெரிதாக எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. எப்பவும் போல் தான் பேசினான்.
வேலைப்பளு அதிகமாக இருப்பதால் சந்திக்க வரவில்லை என்று கூறி இருந்தான். சில நாட்கள் பொறுமையாக இருந்தவளுக்கும் அவனைத் தேட ஆரம்பித்து விட்டது.
அவன் கூட வராத ரயில் பயணங்கள் நீண்டு கொண்டே செல்வது போல் தோன்றியது. கடந்த சில நாட்களாக புத்தகத்தை எடுத்து பேருக்காக விரித்து வைப்பது கூட நிறுத்தி ஆகி விட்டது.
இருவருக்கும் இடையில் எதுவும் பிரச்சனையா, இல்லை இயல்பான இடைவெளியா என்ற குழப்பம். தானாக எதுவும் கேட்பதும் சரியாக படவில்லை.
மிருதுளா சற்று சோர்வாகவே பேசுவது போல் தோன்ற , கலைவாணி கூட கேட்டுப் பார்த்து விட்டார். அவருக்கு சரியான பதில் வராததால், அவர் மகேந்திரனை ஒரு வழி செய்து விட்டார்.
மகேந்திரனும் அவளுடன் பேசிய போது இதை உணர்ந்தே இருந்தான். அவன் அலெக்ஸுடன் தொடர்பில் இருப்பதால் அவனுக்கு இவர்களுக்கு நடுவே பிரச்சனை என்பது போலெல்லாம் தெரியவில்லை.
வீட்டில் பேசுவதைக் குறித்து ஒரு வேளை குழம்புகிறாளோ, இல்லை வேலையில் எதுவும் பிரச்சனையா என்று தான் மகேந்திரன் யோசித்தான். தங்கைக்கு அருகில் இருந்து, அவள் முகம் பார்த்து அவள் விருப்பங்களை நிறைவேற்ற முடியாத இயலாமை வேறு அவனுக்கு வருத்தத்தை அளித்தது.
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. மிருதுளாவுக்கு மிகவும் சோம்பலாக விடிந்தது. முடிந்த அளவு முந்தைய தினமே வீட்டு வேலைகளை முடித்து விட்டதால், பெரிதாக வீட்டு வேலை எதுவும் இல்லை. ஜெனியும், பீட்டரும் அந்த வார இறுதியில் பாரீஸ் சென்று இருந்தனர். எனவே அவர்களுடனான வழமையான சந்திப்பும் இல்லை.
காலையில் சற்று நேரம் வீட்டினருடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு, அலெக்ஸை சந்திக்க சட்டென ஒரு யோசனை உதித்தது. மளமளவென சமைத்து வைத்திருந்ததை ‘பாக்’ செய்து எடுத்துக் கொண்டவள், அவனை சந்திக்க அவன் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
இரவு முழுதும் கண் விழித்து சுவர் சித்திரம் வரைவதற்கான கடைசி கட்ட ஆயத்த வேலைகளை செய்தவன், அதிகாலையில் தான் உறங்கச் சென்று இருந்தான். ராபர்ட்டும் அவனுக்கு உதவுவதற்காக அலெக்ஸின் வீட்டில் தான் தங்கி இருந்தான்.
அலெக்ஸுக்கு முன்பே அவன் விழித்திருக்க, அழைப்பு மணி அடித்த போது, ராபர்ட் தான் வந்து கதவை திறந்தான். அலெக்ஸின் வீட்டில் அவனைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு சற்று சங்கடமாக இருந்தது. யோசிக்காமல் வந்து விட்டோமோ? என்று ராபர்ட்டை தயக்கமாகப் பார்த்தாள்.
ராபர்ட்டுக்கும் அதிர்ச்சியே. அவன் சத்தியமாக மிருதுளாவை அங்கே எதிர்பார்க்கவில்லை.