மிருதுளா புத்தகத்தில் கண்ணை வைத்து கனவில் மிதந்திருக்க, அவள் அமர்ந்திருந்த பெட்டியின் ஒரு ஓரத்தில் சிறு சலசலப்பு. அதில் கவனம் கலைந்தவள் என்ன நடக்கிறதென திரும்பிப் பார்த்தாள்.
காலை நேரம் என்பதால் பல பதின்பருவ, பள்ளி மாணவ மாணவிகளும் பயணிப்பது புதிதான விசயம் இல்லை தான். அவர்கள் ஆர்ப்பாட்டம் பல நேரங்களில் அதிகமாக தான் இருக்கும். சில நேரங்களில் முகம் சுழிக்கவும் வைக்கும்.
ஆனால் யாரும் ஒரு வார்த்தை என்னவென்று கேட்டு விட முடியாது. அதற்கு பதில் வரும் வார்த்தைகள் காது கொண்டு கேட்க முடியாது என்பது ஒரு காரணம். அதையும் தாண்டி சமீப காலங்களில், இந்த வயதினர் சிறு விசயங்களுக்குக் கூட, சட்டென வன்முறையில் இறங்கி விடுவது இன்னொரு காரணம்.
நகரத்தில் பெரும்பான்மையானோர் பிழைப்பிற்காக இடம் பெயர்ந்து இங்கு வந்திருப்பதால், ‘நமக்கேன் வம்பு’ என்கிற மன நிலையே அதிகம். மிருதுளா முடிந்த அளவு பிரச்சனை வரும் போல் இருக்கும் இடத்தில் இருந்து அகன்று விடுவாள்.
தனியாக இங்கு இருக்கும் போது, வலிய சென்று இக்கட்டில் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும். தனக்கு ஒன்று என்றால் யார் பார்ப்பது என்பது அவள் எண்ணம்.
அதற்காக பொதுவில் இவர்கள் இப்படித்தான் என்கிற வரைப்படுத்துதல் அவளுக்கு இல்லை. ஒரு சிறு பகுதியினர் தவறிழைக்கும் போது, அவர்கள் அந்த வரையறையில் வரும் மொத்தக் குழுவின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுவது இயற்கை தானே.
இதற்கும் பெரும் பகுதியினர் அமைதியாக அவர்கள் அலைபேசியில் மூழ்கி இருப்பார்கள். இன்னும் சிலர் வீட்டுப்பாடங்களை செய்வது கூட கண்டு இருக்கிறாள்.
இதில் நம்முடன் பயணிப்போர் எந்த ரகம் என்று தெரியாத போது ஒதுங்கி இருப்பதே மேல் என்று தான் இருப்பாள். அவள் முதலில் ஏறிய போது இவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின் வந்த தொடர்வண்டி நிறுத்தம் ஒன்றில் ஏறியிருக்க வேண்டும்.
அது கூட தெரியாமல், சுற்றப்புறத்தில் கவனம் இல்லாமல், தன் யோசனைகளில் மூழ்கி விட்டதை எண்ணி தன்னையே கடிந்து கொண்டு, அங்கே நடப்பதில் கவனம் வைத்தாள்.எப்பவும் போல ஏதோ சத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் போலும் என்று தான் முதலில் நினைத்தாள்.
சற்று ஊன்றி கவனித்துப் பார்க்கவும் தான், ஏதோ தீவிர பிரச்சனை என்று புரிந்தது. பெட்டியின் மூலையில் மாணவி ஒருத்தி கண்கலங்க நின்று கொண்டிருந்தாள்.
அவள் நண்பர்களா, இல்லை வேறு யாருமா என்று சரியாக தெரியவில்லை. அவளை விட்டு சற்று தள்ளி சில மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர். இருவருக்கும் இடையில் ஒரு நெடிய மனிதன், அவர்களைத் துளைக்கும் பார்வையுடன் நின்று கொண்டிருந்தான்.
உயரம் ஆறு அடிக்கும் சற்று கூடுதலாகவே இருக்கும் போல. வெளிர் நிற பூனை முடிகள் சிலிப்பிக் கொண்டு அடங்காமல் நெற்றியில் புரண்டது. கருப்பு நிற அரைக்கை சட்டை அணிந்தவன் புஜங்கள் அவன் வலிமையை பறை சாற்றியது.
யாரும் கேட்க போவதில்லை என்ற தைரியத்தில் அந்தப் பையன்கள் ஏதோ ஒரு வகையில் அந்த மாணவியை துன்புறுத்தியிருக்க வேண்டும். இது போன்ற தொல்லைகள் வரும் போது, பொதுவாக, இங்கிருக்கும் பெண்களும் சரியாகத் திருப்பி கொடுத்து விடுவர் தான்.
ஆனால் இந்தப் பெண் சற்று பயந்த சுபாவம் போல் தெரிந்தாள். அவள் நின்ற நிலையே, ஏதோ அத்துமீறின செயலாக தான் இருக்கும் என்று உறுதியாக தெரிந்தது. அந்த மாணவர்களின் திகைத்த பார்வையே, அவர்கள் அவனைப் போன்ற ஒருவன் இதில் நுழைவான் என எதிர்பார்க்கவில்லையென தெரிந்தது.
அவர்கள் திகிலுடன், ஒருவேளை அடித்து துவைத்து விடுவானோ என பயந்து, தொண்டைக் குழி ஏறி இறங்க, அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களில் சற்று பெரியவனாக தெரிந்த ஒருவன், முயன்று கொஞ்சம் தைரியத்தைத் திரட்டி,
“இட் வாஸ் ஜஸ்ட் எ பேன்டர் (வேடிக்கை) மேட்” என்றான்.
அவர்கள் செய்ததை வெறும் கேலி என அந்த நெடியவனால் ஏற்க முடியவில்லை. பேச்சு முழுவதையும் கேட்டுக் கொண்டிருந்தானே.
‘சரி’ நண்பர்களுக்குள் ஏதோ பேச்சு என ஒதுக்க முடியாமல், அந்தச் சிறு பெண் நிறுத்துமாறு கூறியும், அவள் உடல் அங்கங்களை அருவருக்கத் தக்க வகையில் பேசிவிட்டு, கேலி என சமாளிப்பதை அவனால் சுத்தமாக ஏற்க முடியவில்லை.
“லீவ் த கேர்ள் அலோன் லேட்ஸ் (lads). ஸ்டே அவே ஃபிரம் ஹெர்” என அவர்களை மிகக் கடுமையாக எச்சரித்தவன், அந்தப் பெண்ணை அருகில் வருமாறு அழைத்தான். அந்தப் பெட்டியை சுற்றி பார்வையை சுழற்றினான்.
அது வரை நடந்ததை வேடிக்கைப் பார்த்த நல்ல உள்ளங்கள், தங்கள் பணிக்கு செவ்வனே திரும்பின. அதைக் கண்டு கேலியாக உதடுகளை வளைத்தவன் பார்வையில், இன்னும் இதன் தாக்கத்தில் இருந்து விடுபடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா தென்பட்டாள்.
என்ன என்பது போல் நெற்றியை சுருக்கி பார்வையால் வினவ, டக்கென அவளும் தன் பார்வையைத் திருப்பி விட்டாள். அவளருகில் ஒரு இடம் காலியாக இருக்க, அதை கண்களால் சுட்டியவன் அந்தச் சிறு பெண்ணை அங்கு போய் அமருமாறு பணித்தான்.
அவள் அங்கு சென்றதும், அந்தப் பையன்களிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. அதற்குள் அடுத்த நிறுத்தம் வந்திருக்க, அந்தக் குழு பதறியடித்துக் கொண்டு கீழிறிங்கியது.
அதைப் பார்த்தப் பின் தான், அந்தப் பெண்ணும் சற்று ஆசுவாசமடைந்தாள்.
மிருதுளா அந்தப் பெண்ணிடம்,
“ஆர் யூ ஓகே?” என கேட்க, ஆமென்று தலையாட்டியவள், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தாள்.
அதற்கு மேல் என்ன பேசுவது. கேட்கலாமா, வேண்டாமா என சில நிமிடங்கள் பட்டிமன்றம் நடத்தியவள்,
“டு யூ நீட் சம் வாட்டர்?” என தயங்கித் தயங்கி கேட்டாள்.
பொதுவாக, ‘நோ, தாங்க்ஸ்’ என்ற பதில் தான் வரும். அந்தப் பெண் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அவளுக்கும் அந்நேரம் அது தேவையாக இருக்க, மிருதுளா நீட்டிய தண்ணீர் குடுவையை வாங்கி மடமடவென குடித்தாள்.
குடித்து விட்டு மிருதுளாவுக்கு நன்றி கூறியவள், மீண்டும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து விட, மிருதுளா மீண்டும் புத்தகத்திற்கு திரும்பி விட்டாள்.
நடந்ததை கவனித்த அந்த நெடியவன், மிருதுளாவைப் பார்த்து ஒரு மெச்சுதலான பார்வையை வீசிவிட்டு, அவன் அலைபேசியில் மூழ்கி விட்டான்.
அவன் அலெக்ஸ் ஸ்டோன். பின் முப்பதுகளில் இருக்கும் திடமான, தைரியமான ஆண்மகன். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவன், வளர்ப்பு பிள்ளையாக (foster child) பல வீடுகளில் வளர்ந்தவன்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லண்டன் மாநகரத்தின் கிழக்கு பகுதி பெரும்பான்மையாக தொழிலாளர் வர்க்கத்தினருக்கான ஒரு இடமாக தான் பார்க்கப்பட்டது. இன்றும் அதன் தாக்கம், பல மேல் தட்டு வர்க்கத்தினரிடம் இலைமறை காயாக இருக்கும்.
அலெக்ஸ் வளர்ந்த சூழலும் அதற்கு விதி விலக்கல்ல. அவன் சிறு வயது முதலே அந்தப் பகுதியில் தான் வளர்ந்ததால், இன்றளவும் அதை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர, பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை.
அவன் வளர்ந்த வீடுகளில் பலவிதமான அனுபவங்கள். பெரும்பான்மையான அனுபவங்கள் இனிமையானவை. இந்த உலகில் யாரும் இல்லாமல் கையறு நிலைமையில் நிற்பது கொடுமையான விசயம் என்றாலும், அவன் வயிறு வாடாமல், ஒரு அன்னையில் இடத்தில் அவனைப் பேணிய ஒவ்வொரு குடும்பமும் அவனுக்கு தாயின் மறு உருவமே.
அவர்கள் இதை இலவசமாக செய்யவில்லை என்றாலும், தன் பிள்ளை போல் அவர்கள் வீட்டின் ஒருவனாய் இடமளிக்க பெரிய மனது வேண்டும் தானே. தங்கள் நேரத்தையும், சக்தியையும் சில காலம் மட்டுமே தங்களுடன் இருக்கும் குழந்தைக்காக செலவிடுவது, யாரானாலும் சவாலான காரியம் தான்.
அதற்கென்று சில கசப்பான அனுபவங்களும் இல்லாமல் இல்லை. கரிசனையும், அக்கறையும் துளியளவும் இல்லாமல், இதனால் அரசாங்கத்திடம் இருந்து வரும் பணம் சார்ந்த நன்மைகளுக்காக மட்டும், இது போன்ற குழந்தை வளர்ப்பில் ஈடுபடுவோரும் இருக்கின்றனர்.
அது போன்ற சிலரிடம் சிக்கிய போது கூட, வெகு சீக்கிரமாகவே மீண்டு வந்து விட்டதால், அலெக்ஸைப் பொறுத்தவரை அது அதிர்ஷ்டமே. அவனுடன் இந்த முறையில் வளர்ந்த பலருக்கு அவனை விட கசப்பான அனுபவங்கள் கிடைத்திருப்பதும் அவனுக்கு தெரிந்த விசயம் தான்.
அதனாலயே, ஒவ்வொரு அனுபவமும் அலெக்ஸை ஒவ்வொரு விதமாக மெருகேற்றியது எனலாம். சிறு வயதிலிருந்தே ஆதிக்கம் செலுத்துபவர்கள் மேல் ஒருவித வெறுப்பு. பணத்தின் மீது ஒரு பற்றற்ற தன்மை. பெரிதாக கடவுள் நம்பிக்கையில்லை.
அவன் வளர்ந்த குடும்பங்களில் வெகு சிலருடன் இன்றும் தொடர்பில் இருக்கிறான் தான். ஆனால் அதற்கான சட்டத்தில் இருக்கும் விதிகளினால், எல்லாருடனும் தொடர்பில் இருப்பது இயலாத காரியம்.
குடும்பம் என்னும் கட்டமைப்பு இன்றளவும் அவனுக்கு கிட்டாத வரம் தான். அவனுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, மற்றுமொரு மனிதரின் அருகாமையை பெரிதாக அவன் அனுபவித்ததே இல்லை எனலாம்.
அன்னையின் முத்தமோ, தந்தையின் அரவணைப்போ, உடன் பிறப்புகளின் அன்போ எதுவும் ஞாபகத்தில் இல்லை.அதற்காக ஏங்கிய நாட்கள் உண்டு தான்.
அன்புக்காக, அரவணைப்புக்காக, ஸ்பரிசத்திற்காக என ஒரு நீண்ட பட்டியல் இருந்தது. ஆனால் அவன் வளர்ந்த சூழல் அதற்கு இடமளிக்கவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் அதை எதிர்ப்பார்ப்பது கூட ஒருவித பலவீனம் என்னும் மன நிலைக்குத் தள்ளப்பட்டான்.
பதினாறு வயது வரை, வளர்ப்பு பெற்றோர்களிடம் வளர்ந்தவன் அதற்குப் பின் இன்று வரை ஒற்றை மனிதனாகவே காலம் கடத்திக் கொண்டிருக்கிறான்.
பள்ளி இறுதிப் படிப்பை முடித்தவன், தனது படைப்புத் திறன் கொண்டு அதற்கேற்ற சிறு சிறு வேலைகள் செய்து தன்னையே சுயம்பு போல் செதுக்கிக் கொண்டான்.
இன்று அவனது சொந்த முயற்சியால், அவனுக்கென்று ஒரு கலைத்தொழில் அமைப்பு. ‘நானே ராஜா, நானே மந்திரி’ என்று மனம் போல் வாழ்க்கை. யாருக்கும் பதில் சொல்ல தேவை இல்லை.
எப்படி, எங்கு, என்ன பணி எல்லாம் அவன் முடிவு தான். அலெக்சின் திறமையை உணர்ந்தவர்கள், அவன் இழுப்புக்கெல்லாம் சென்றே அவன் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அவன் பெரும்பாலும், அவர்களது விளம்பரங்களுக்கான தேவைகள் அனைத்தையும் நேர்த்தியாக அமைத்துத் தருவான். எல்லா வாய்ப்புகளையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அவன் மனம் கவர்ந்த, அவன் மனசாட்சிக்கு ஒத்துப் போகும் விசயம் சார்ந்த வேலைகளையே தெரிவு செய்வான். இல்லையென்றால், எவ்வளவு பணம் தருவதாக சொன்னாலும், எதிர்மறையான பதில் தான்.
பெண்கள், இன்று வரை அவனுக்குப் புரியாத புதிர். பதின்ம வயதில் ஈர்ப்பெல்லாம் இருந்தது தான். ஆனால் அதற்கும் மேல் தயக்கம். மேல்நிலைப்பள்ளி படிப்பெல்லாம் ஆண்கள் பள்ளியில் தான்.
அதனால் பெரிதாக வாய்ப்புகளும் இல்லை. ஓரளவு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மற்றதெல்லாம் பின்னுக்கு போய் விட்டது. அவனது வேலையில் ஆர்வமாய் சில பெண்கள் வந்து பேசினாலும், அதில் ஏதோ செயற்கைத்தனம் இருப்பது போல் தோன்றுவதால், எல்லாரையும் தள்ளியே நிறுத்தி விடுவான்.
அதற்கும் மேல் யாரையாவது பிடித்திருந்தால் கூட, அவன் குணத்துக்கு ஒருவரை இழுத்துப் பிடிப்பது நடக்காத காரியம். வாழ்வின் அனுபவங்கள் அவனை வெகு கடினமாக மாற்றி இருந்தது.
நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் படியாக யாரும் இல்லை. அலெக்ஸின் போக்கிலேயே சென்று, இன்றளவும் அவன் கூட இருப்பது ராபர்ட் (ராப்) மட்டுமே.
ராப், அலெக்ஸின் உதவியாளன். பெருவாரியான, வெளி வேலைகளை கவனித்து, அலெக்ஸுக்கு தேவையான தனிமையையும், நேரத்தையும் ஒதுக்கி தருவதே ராபின் முதன்மை கடமை.
அலெக்ஸை அவன் குணத்தோடு அப்படியே ஏற்றுக் கொண்ட வெகு சிலரில் ராபர்ட்டும் ஒருவன். அதற்காக ராபிடம் அலெக்ஸ் குழைந்து விடும் ரகம் என்றால், அதுவும் இல்லை.
அலெக்ஸின் மனதில் ராபர்ட்டுக்கான இடமும், மரியாதையும் தனி தான்.
ஏனென்றால் ராபர்ட் இல்லையென்றால், அலெக்ஸின் நிழல் வாழ்க்கை?