அன்றைய உணர்ச்சிகரமான சந்திப்பிற்குப் பின் நாட்கள் நத்தை வேகத்தில் தான் நகர்ந்தது மிருதுளாவுக்கு. மாறியிருந்த ஒரே விஷயம் வாரந்தோறும் தமிழ் பள்ளிக்கு தன்னார்வலராக செல்ல ஆரம்பித்தது தான்.
அலெக்ஸைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமும் அது ஒன்று தான். தொடர்பு அறவே நின்று விடாமல் ஏதோ ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு. இருவருக்கும் அதை இழந்து விட மனமில்லை.
வழமை போல் அலெக்ஸ் அவளுடன் தொடர் வண்டி பயணங்களில் சேர்ந்து கொள்ள வர, மிருதுளா தான் திட்டவட்டமாக மறுத்து விட்டாள். அவனை அருகில் வைத்துக் கொண்டு யோசிப்பது ஒன்றும் எளிதான விஷயம் இல்லையே.
அவளது காயங்களுக்கு கிஞ்சித்தும் குறையாதது அவன் தனிமை. அன்பிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கித் தவிப்பவன் ஆயிற்றே. அதை அவள் உணராமல் இல்லை. அதைத் தீர்க்கும் மார்க்கம் தான் தெரியவில்லை.
அவளுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கையே தவிர சமூகத்திற்கான போராட்டம் அல்ல. நோக்கம் நல்லதாக இருப்பினும் அதற்கான பாதையிலும் நேர்மை இருக்க வேண்டும் என விரும்புவள்.
விருப்பங்கள் எல்லாம் நினைத்த படியே நிறைவேறி விட்டால், பின் வாழ்க்கையில் என்ன சுவாரசியம் இருக்க முடியும். அலெக்ஸ் அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தது எல்லாம் நினைவில் வந்து இம்சித்தது.
அவனிடம் அவள் எதிர்பார்க்கும் நேர்மையும் உண்மையும் இருக்கிறது தான். ஆனால் இருவரின் பார்வைகள் வேறு. பணத்தின் பின் ஓடாத மனம் உத்தமம் அல்லவா. அதற்கான மரியாதையை தந்து தானே ஆக வேண்டும்.
அவனது பார்வைகளையும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் புரிதல் என்பது வேறு. ஒப்புதல் என்பது வேறு. ஒரு நாளும் அவளுக்கு இதில் உடன்பாடு வராது. ஏதோ ஒரு முகமறியா ரெக்ஸி என்ற போது இருந்த துள்ளல், தன் மனம் கவர்ந்தவன் என வரும் போது, சுத்தமாக இறங்கி விட்டது. சகிப்புத்தன்மை என்னும் சட்டத்துக்குள்ளேனும் அடக்க முடியுமா என்று தான் பார்க்கிறாள், அதுவும் கூட இயலாத காரியமாகவே இருக்கிறது.
ஒரு வேளை அவனை இழக்க முடியாமல், சகித்துக் கொள்ளலாம் என்று துணிந்து முடிவெடுத்தால் கூட ஒரு நாளேனும் நிம்மதியாக அவளால் உறங்கி விட முடியாதே. நாளடைவில் அது அவன் மேல் வெறுப்பாகத் திரும்பி அவளையும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கும்.
எப்படி யோசித்தாலும் மிருதுளாவுக்கு தீர்வாக எதுவும் புலப்படவில்லை. மனதை அரித்துக் கொண்டிருக்கும் விஷயம், உடல் நலத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கி விட்டது. அது ஜெனி, மகேந்திரன், கலைவாணி என யாருடைய கண்களிலும் தப்பவில்லை.
ஜெனி கூட பல முறை கேட்டுப் பார்த்து விட்டாள். பலன் என்னவோ பூஜியம் தான். ஏதோ காதலர்களுக்கு நடுவில் ஊடல் போலும் என ஜெனியாலும் அதற்கு மேல் பெரிதாக அழுத்திக் கேட்க முடியவில்லை.
மகேந்திரனும் கிட்டத்தட்ட அது போன்ற அனுமானத்தில் தான் இருந்தான். அவனுக்கு அலெக்ஸ் மிருதுளாவை மணக்கக் கேட்ட விஷயம் தெரியாது. இருவருமே அவனிடம் அதைப் பகிர்ந்திருக்கவில்லை. அது தவிர அவன் அலெக்ஸிடமும் தொடர்பில் இருப்பதால், அவன் சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருந்தான். அலெக்ஸ் தமிழ் பள்ளி செல்வது வரை மகேந்திரனுக்கு தெரியும் என்பதால், அவன் மிக நம்பிக்கையாகவே இருந்தான்.
இதில் எந்த விஷயமும் தெரியாமல், மகள் சில நாட்கள், பழைய விஷயங்களை மறந்து மகிழ்ச்சியாக இருக்கிறாள் என சற்று நிம்மதியாக இருந்த கலைவாணிக்கு, அவளது தற்போதைய நிலை முன்பை விட மோசமான நிலையில் இருப்பது போல் தெரிய நெஞ்சம் பதறியது. அவளிடம் கேட்டாலும் எந்த விவரமும் தெரிவதில்லை. அவளாக அவரை அழைப்பது கூட வெகுவாக குறைந்து விட்டது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர், மகேந்திரனையும், மதிவாணனையும் ஒரு வழி செய்து விட்டார். அவளைப் பார்த்தே தீர வேண்டும் என அடம் பிடிக்க, அவரை சமாதானம் செய்வதற்குள் மகிக்கு விழி பிதுங்கியது.
இது போல யாரிடமும் எதுவும் பகிர முடியாதது வேறு மிருதுளாவுக்கு மன அழுத்ததை கூட்டியது. எல்லா முடிவுகளும் இப்போது அவள் கையில் என்பது போன்ற ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்க, அதை உடைக்கும் வழி தெரியாது தவித்துக் கொண்டிருந்தாள்.
அவள் தவிப்பது அலெக்ஸிற்கும் வேதனையாகத்தான் இருந்தது. ஒவ்வொரு வாரமும் அவள் இன்னும் இளைத்துக் கொண்டு போவது போல் தான் அவனுக்கு தோன்றியது. அதை சொன்னாலும் கூட, அவனைத் தான் காய்ச்சி எடுத்தாள்.
அந்த வாரம், பேராசிரியர் ஜான்சன் வருவதாக அலெக்ஸிடம் ராம் கூறி இருந்தான். மதிய விருந்தில் அவரை சந்தித்த அலெக்ஸ் அவரிடம் கேள்விகளை அடுக்க, அவன் வேகம் பார்த்து அவர் சிரித்தார்.
“அலெக்ஸ், முதல்ல, இந்த ஸ்பீடை குறைங்க. மிருதுளா தாங்க மாட்டாங்க. நீங்க அவங்களுக்காக இந்த மாதிரி கத்துக்கிறதெல்லாம் பாராட்ட வேண்டிய விஷயம் தான். ஆனா இது மட்டுமே போதும்னு என்னால சொல்ல முடியாது” என நிறுத்தியவர், தன் மனைவியை சந்தித்து மணந்து கொண்டதில் இருந்த சிக்கல்களை எல்லாம் விவரித்தார்.
“இன்னும் நான் கத்துட்டு தான் இருக்கேன் அலெக்ஸ். எந்த நாட்டுப் பெண்ணா இருந்தாலும் சரி, அவங்கள நாம புரிஞ்சுகிறதுக்கு இந்த ஆயுட்காலம் பத்தாது. இது ஆண்களுக்கும் பொருந்தும் தான். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொரு தனி நபரும் தனித்துவமானவங்க.
அவங்க எவ்ளோ வெளிப்படுத்துறாங்களோ, அந்த அளவு மட்டுமே நாம அவங்கள புரிஞ்சுக்க முடியும். நான் தமிழ் நாட்டுல சில வருஷங்கள் இருந்தேன். பல ஊர்களுக்கு ஆராய்ச்சிக்காக பயணம் செஞ்சிருக்கேன். அது ஒரு பேக் டிராப் (backdrop) செட் பண்ணுச்சு. அவ்ளோ தான். என்னோட மனைவிய இன்னும் புரிஞ்சுக்க முயற்சி தான் பண்ணிட்டு இருக்கேன்” என்றவர்,
“நீங்க மிருதுளா தான் உங்க துணைன்னு முடிவு பண்ணீட்டீங்கன்னா, அவங்க கலாச்சாரத்தை கத்துக்கனும், புரிஞ்சுக்கனும்னு காலத்தைக் கடத்தாதீங்க. அது உங்க வாழ்க்கை முழுதும் நடக்கிற விஷயம். ஆனா நீங்க அவங்களோட, அவங்க வீட்டில, எங்க அவங்க இயல்பைத் தெரிஞ்சுக்க முடியுமோ, அங்க டைம் ஸ்பெண்ட் பண்ணா ரொம்ப உதவியா இருக்கும்.
ஏன்னா இன்னும் என் மனைவிய விட அவங்க வீட்ல இருக்குறவங்களை சமாளிக்கிறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு. அவங்க அப்பா என்னை வெட்டவா, குத்தவான்னு தான் பார்ப்பாரு. என்னை அவங்க ஊர்ல ஒரு காலேஜ்ல சேர்ந்து வேலை பார்க்க சொன்னாரு. பொண்ணை இவ்வளவு தூரத்தில கட்டிக் கொடுத்துட்டு கண்லயே பார்க்காம இருக்க முடியாதுன்னு ஒரே புலம்பல். ஏதோ என் மாமியார் எனக்கு சப்போர்டிவ்வா இருந்ததினால கொஞ்சம் தப்பிச்சேன்.
சோ, மிருதுளா வீட்ல உங்களை எப்படி ஏத்துக்கிறாங்கன்றதுல்ல தான் விஷயமே இருக்கு. நீங்க இங்க தனியா தான் இருக்க போறீங்க அப்படின்னாலும், அது உங்க உறவுலயும் பிரதிபலிக்கும். மிருதுளா உண்மையிலேயே உங்களோட சந்தோசமா இருக்கனும்னா, அவங்க வீட்டோட நீங்க ஈசியா மிங்கிள் ஆகுனும். அதெல்லாம் இங்க ராம் கிட்ட நீங்க கத்துக்க முடியாது அலெக்ஸ்” என்று தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
‘இங்க முதலுக்கே மோசம். நான் பார்த்துக்கிட்டு இருக்கிற வேலைக்கு மிருதுளாவே இனி என்கிட்ட பேசுவாளான்னு தெரியல. இதுல அவங்க வீட்ல வேற நான் மிங்கிள் ஆகனுமாம். இந்த ஜென்மம் பூரா நான் சிங்கிள்னு தான் தலையெழுத்து போல’ என நினைத்துக் கொண்டவன், அவரிடம் புன்னகைத்து விடை பெற்றுக் கொண்டான்.
“என்ன மாப்ள, மிருவுக்கும் உங்களுக்கும் எதுவும் பிரச்சனையா?” என ராம் வேறு குடைய ஆரம்பித்தான்.
“என்ன பாஸ் பண்றது? உங்க பிராஸஸ் எல்லாம் ரொம்ப சிக்கலா இருக்கே. இன்னிக்கு ஜான்சன் வேற என்னைய சென்னைக்கு பிளைட் புக் பண்ண சொல்றாரு” என அலெக்ஸ் சலித்துக் கொண்டான்.
“கரெக்டா தானே மாப்ள சொல்லிருக்காரு. எங்க ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க…சாட்சிக்காரன் கால்ல விழறத விட சண்டைக்காரன் கால்ல விழறதே மேல். உங்க சிச்சுவேஷன்கு இது தான் கரெக்ட்.
மிருகிட்ட நீங்க ப்ரோபோஸ் பண்ணி அதுக்கப்புறம் அவங்க வீட்ல பேசி கன்வின்ஸ் பண்ணி இதெல்லாம் ரொம்ப டைம் எடுக்கும். அதுக்கு ஜான்சன் சொன்ன மாதிரி டைரக்டா சென்னைலயே நம்ம மிரு வீட்ல பொண்ணு கேட்டுடலாம். என்ன சொல்றீங்க?”
“ம்ம்ம்ம், நான் நாளைக்கே போய் பொண்ணு கேட்டேன்னா, மிரு வீட்ல முதல் வேலையா சரின்னு சொல்லிட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க. நீங்க வேற ஏன் பாஸ் கிளப்பி விடுறீங்க? எதுவானாலும், எவ்வளவு நாளானாலும் மிருதுளா வழியா தான் இதை பேசனும்னு நினைக்கிறேன். பார்க்கலாம்” என தனக்கே நம்பிக்கை வருவதற்கு சொல்லிக் கொண்டான்.
“எது பண்ணாலும் கொஞ்சம் சீக்கிரம் பார்த்துப் பண்ணுங்க. உங்க கல்யாண சாப்பாடுக்கு தான் வெயிட்டிங்’ என்றான் ராம்.
ஆக மொத்தம் எந்த முன்னேற்றமும் இல்லாமல், அலெக்ஸ் கேட்ட கேள்விக்கு பதிலும் இல்லாமல், கிணற்றில் போட்ட கல்லாக மிருதுளா சில மாதங்களைக் கடத்தி இருக்க, அலெக்ஸின் பொறுமையும் குறைந்து கொண்டே வந்தது.
அவர்களது சுற்றத்தின் குழப்பமும் அதிகரித்தது. கலைவாணி தானே கிளம்பி வருவதாக மீண்டும் ஆரம்பிக்க, இந்த முறை மகேந்திரனுக்கும் வேறு வழி இருக்கவில்லை.
அதிகம் பேசாவிட்டாலும், மிருதுளாவின் நிலை வந்தனாவுக்குமே சற்று உறுத்தலாக இருக்க, மகேந்திரனிடம் துருவ ஆரம்பித்தாள். வேறு வழி இல்லாமல், அவளிடம் அலெக்ஸைப் பற்றி தெரிவித்தான்.
“என்னங்க நீங்க, நல்ல விஷயம் தானே நடந்துருக்கு. இவ்ளோ நாள் கல்யாணப் பேச்சே எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு, இங்க வராம இருந்த பொண்ணு. இப்ப அவளுக்கு பிடிச்சிருக்குன்னா, சட்டுன்னு பேசி ஒரு முடிவெடுக்காம உங்க பாட்டுக்கு உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்? அத்தை, மாமாட்ட பேச வேண்டியது தானே”
“இல்லை வந்தனா, நான் அலெக்ஸ் கிட்ட பேசிட்டு தான் இருக்கேன். அவர் என்கிட்ட ரொம்ப பாசிட்டிவ்வா தான் பேசினாரு. தமிழ் கூட கத்துக்கிட்டு இருக்காரு. மிருவுக்கும் பிடிச்சிருக்குன்ற மாதிரி தான் முதல்ல பேசினா. அவ பிறந்த நாள் அன்னிக்கு கூட அவர் வீட்ல இருந்து தான் பேசினா. ரொம்ப ஜாலியா தான் இருந்தா.
இப்ப ரீசண்டா என்ன பிரச்சனைன்னு புரியல. நானும் சில முறை கேட்டுப் பார்த்துட்டேன். ரெண்டு பேரும் வாயத் திறக்க மாட்டேங்குறாங்க. சரி வேலைல ஏதாச்சும் பிரச்சனை, இல்ல அவங்களுக்குள்ள ஏதோ ஊடல், சரி ஆகிடும்ன்ற நம்பிக்கைல தான் அம்மாவை சமாளிச்சுகிட்டு இருக்கேன்.
ஆனா மிரு ரொம்ப நாளாவே டல்லா தான் இருக்கா. மெலிஞ்சு வேற போய்ட்டா. அது தான் எனக்கும் கவலையா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரியல” என மகேந்திரன் யோசனையுடன் கூறினான்.
“ஏங்க, இவ்வளவு விஷயம் நடந்திருக்கு? ஏன் என்கிட்ட எதுவுமே சொல்லல? இப்பக் கூட நானே கண்டுபிடிச்சு கேட்டப்புறம் தான் சொல்றீங்க?” என வந்தனா வெகுவாக வருத்தப்பட, மகேந்திரனுக்கும் இக்கட்டான நிலை.
“ம்ப்ச், நீ வேற படுத்தாத வந்தனா. எனக்கே முழுசா எதுவும் தெரியாம நான் யாரு கிட்ட என்ன சொல்ல முடியும். உன் கிட்ட மட்டுமா சொல்லல. அம்மா, அப்பா கிட்டயும் எதுவும் சொல்லலையே. மிரு தெளிவா என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்குறா” என அவன் சலிக்க,
“சரி, போனது போகட்டும். நான் ஒன்னு சொல்றேன். கேட்பீங்களா?” என்றாள்.
“என்ன? சொல்லு”
“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் கிளம்பி நீங்க லண்டன் கிளம்பி போங்க. மிருவையும், அந்தப் பையனையும் நேர்ல பார்த்து என்ன ஏதுன்னு ஒரு முடிவெடுத்துட்டு வாங்க. இது எதுவும் வேலைக்காகலைன்னா மிருவை கையோடு இங்க கூட்டிட்டு வந்துடுங்க. அப்புறம் அடுத்து என்ன பண்றதுன்னு பார்க்கலாம்”
“என்ன சட்டுன்னு இப்படி சொல்லிட்ட? நான் எப்படி உடனே அங்க போக முடியும்?”
“ஏன் போக முடியாது? இருக்கிற வேலை எல்லாம் ஒதுக்கி வைங்க. ஒரு டூரிஸ்ட் விசா எடுத்துட்டு போய்ட்டு வாங்க. இங்க எல்லாம் நான் பார்த்துக்கிறேன். ஒரு வார்த்தை மாமா கிட்டயாவது சொல்லீட்டிங்கன்னா நல்லது” என்க, அவள் கூறுவதும் சரியென்றே பட்டது மகேந்திரனுக்கு.
உடனே அதற்கான வேலைகளில் இறங்கி விட்டான். மிருதுளாவிடமும் தான் வரும் தகவலை பகிர்ந்தவன், விசாவிற்கு தேவையான ஆவணங்களை அனுப்பும்படி அவளிடம் கேட்டான். அதில் பதட்டமடைந்த மிருதுளா,
“ஏண்ணா நீ அலையற. இங்க இப்ப குளிர் காலம் ஆரம்பிச்சிருச்சு. கொஞ்ச நாள்ல நானே வர்றதா தான் இருக்கேன். உங்களை எல்லாம் பார்த்து பல வருஷம் ஆயிடுச்சு” என அவன் வரவை தவிர்க்கப் பார்த்தாள்.
இங்கு நேரில் வந்து மகேந்திரன் கேள்வி கேட்டால், அவன் முகத்திற்கு நேராக பொய்யாக எதுவும் சொல்ல முடியாதே.
“ஒன்னும் பிரச்சனை இல்லை. நீ நான் கேட்ட டாகுமெண்ட்ஸ் மட்டும் அனுப்பு மிருமா. நான் ஃபாஸ்ட் டிராக் விசா தான் அப்ளை பண்ணப்போறேன். அது ரெண்டு மூனு நாள்ல வந்திடும். நீ நாளைக்குள்ள அனுப்பிட்டேன்னா, நான் அடுத்த வாரம் வந்துடுவேன்” என அவன் திட்டத்தை விளக்கினான்.
அவன் குரலில் இருந்த உறுதியை உணர்ந்தவள், மறு பேச்சு பேசாமல் அவன் கேட்டதை உடனே அனுப்பி வைத்தவள், சில மாதங்கள் கழித்து தானாக அலெக்ஸின் எண்ணிற்கு அழைத்தாள்.
அழைப்பை ஆவலாக ஏற்றவன்,
“ஹேய் ஸாஃப்டி…என்ன ஒரு ஆச்சரியம்? நீயே கூப்பிட்டுருக்க. ஏற்கனவே ஒரே புயலும், மழையும் தான் இருக்கு. இப்ப இன்னும் ஜாஸ்தி ஆகப் போகுதுடி” என உற்சாகமாக கூறினான்
அவன் குரலில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவள், அதைக் குலைக்க விரும்பாதவளாய்,
“வாட்ட்ட், டியா? இதெல்லாம் உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? ராமா?” என போலிக் கோவத்துடன் வினவினாள்.
“ம்ம்ம், டி சொன்னா தான் கேர்ள்ஸுக்கு புடிக்கும் சொன்னான். அது டிஸ்ரெஸ்பெக்ட்டா (மரியாதைக் குறைவு) இருக்காதான்னு கேட்டேன். நீ என்னை விட வயசில சின்னவ தானே அதுனால தப்பு இல்லைன்னு சொன்னான். ஏன் அப்படி சொல்லக் கூடாதா? உனக்குப் பிடிக்கலையா?”
“இது இப்ப ரொம்ம்ம்ம்ப முக்கியம்” என கடிந்தவள்,
“லெக்ஸி, அண்ணா வர்றாங்க” என்க,
“மச்சான் வர்றாங்களா, சூப்பர்” என அதற்கும் அவன் குதிக்க,
‘மச்சானா…அடேய் ராம், நீ மட்டும் கைல கிடைச்ச’ என பல்லைக் கடித்தவள்,
“என்ன சூப்பர்? எனக்கு டென்ஷனா இருக்கு. எதுக்கு வர்றாங்கன்னு தெரியும்ல? நான் என்ன சொல்லுவேன் அவங்க கிட்ட” என தவிப்புடன் கூறினாள்.
“சில் மிரு. ரிலாக்ஸ். இதுவும் நல்லதுக்குன்னு நினைச்சிக்கோ. நீ யோசிக்கிறேன்னு இத்தனை மாசமா எந்த முடிவும் எடுக்கலை. மே பி மகி மச்சான் வந்தா நீ பேசி ஒரு முடிவு எடுக்குறதுக்கு உதவியா தானே இருக்கும்”
“நல்லா பேச்சு மட்டும் பேசுறீங்க லெக்ஸி. நான் அண்ணா கிட்ட என்ன பேச முடியும். ரெக்ஸி பத்தி சொல்லிடட்டுமா? என கடுப்பாகக் கேட்டாள்.
“நீ சொல்ல மாட்ட அப்டின்ற நம்பிக்கைல தான் உன்கிட்ட சொன்னேன். அது மட்டும் இல்லாம, ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சா தான் அது ரகசியம் ஸாஃப்டி” என அலட்டிக் கொள்ளாமல் பதிலளிக்க, அவனது இந்த அலட்சிய பாவனை மிருதுளாவை யோசிக்க வைத்தது.
யோசனையில் அவள் அமைதியாக இருக்க,
“ஓய், ஷேல் வி மீட் டுமாரோ? என் கிட்ட ஒரு ப்ரோபசல் இருக்கு” என்க,
“நம்ம என்ன பிராஜக்டா பண்றோம் லெக்ஸி. ஏற்கனவே ப்ரோபோஸ் பண்ணீட்டீங்களே” என அவள் புரியாமல் கேட்க,
“இது வேற ஸாஃப்டி. அன்னிக்கு மீட் பண்ண டிராஃபல்கர் ஸ்கொயர் இடத்துக்கு வந்துடு. நாளைக்கு உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என அழைப்பைத் துண்டித்து விட்டான்.