மெய்மறந்து அணைப்பில் நின்று கனவில் மிதந்தவர்களை மிருதுளாவின் அலைபேசி சத்தம் தான் நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது. ஜெனி தான் அழைத்திருந்தாள்.
ஐந்து நிமிடம் என்றவன் அரை மணி நேரம் பேசி இருக்க, மிருதுளா வழமையாக பயணிக்கும் தொடர்வண்டியை தவற விட்டிருந்தாள். அவளைக் காணாமல் ஜெனி அழைத்து,
“ஹேய் மிரு, என்ன டிரெயின் மிஸ் பண்ணிட்டியா? ஆர் யூ ஓகே?” என்றாள்.
அதில் அலெக்ஸை முறைத்தவள்,
“நான் இன்னிக்கு ஆஃபிஸ் வரலை ஜெனி. கடைசி நேரத்தில ஒரு பெர்சனல் அப்பாயின்மெண்ட் வந்துடுச்சு. யூ கேரி ஆன். நான் ஜேக்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடுறேன். கொஞ்ச லேட்டா தான் கனெக்ட் பண்ணுவேன்” என்று விவரம் தெரிவித்து அழைப்பைத் துண்டித்தாள்.
“ஏன் ஹனி, நீ கண்டிப்பா கனெக்ட் பண்ணி தான் ஆகனுமா. வி ஆர் நியூலி மேரீட்…ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எதுவும் இல்லையா? அட்லீஸ்ட் லீவாச்சும் போடேன்” என அலெக்ஸ் வேண்ட,
“இதெல்லாம் ஓவர் லெக்ஸி, இன்னிக்கி தான் நான் ப்ரோபோசலே அக்செப்ட் பண்ணிருக்கேன். அதுக்குள்ள ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் வேணுமா…இன்னிக்கு வேலை ஜாஸ்தி இருக்கும், மந்த் எண்ட் க்ளோஸ் பண்ணனும். இன்னொரு நாள் செலிபிரேட் பண்ணலாம்” என மிருதுளா மறுத்தாள்.
“ஹேய் ஸாஃப்டி, ப்ளீஸ், ஐ வாண்ட் டு பி வித் யூ. உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணியே ரொம்ப நாள் ஆயிருச்சு. நீ வேலை முடிச்சிட்டு வா. நான் வெயிட் பண்றேன்” என எப்பொழுதும் போல் இல்லாமல் அடம் பிடிக்க, அதற்கு மேலும் மிருதுளாவுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
அவளுக்குமே அவனைத் தேடியது. மகேந்திரன் வருவதற்குள் இவர்கள் ஒரு இணக்கத்திற்கு வர வேண்டுமே. எல்லாவற்றையும் யோசித்து, சம்மதித்தவள், மதியம் விடுமுறைக்கு விண்ணப்பித்து விட்டு, மின்னல் வேகத்தில் முடிக்க வேண்டிய வேலைகளில் மூழ்கி விட்டாள்.
காலை உணவு குறித்து அலெக்ஸிடம் கேட்க, தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியவன், சமையல் மேடையில் ஓட்ஸ் இருப்பதைப் பார்த்து, அதை கலந்து குடித்து விட்டு, மற்றொரு பக்கம் அவன் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
இது வரை இங்கிலாந்தில் அவனது சுவர் ஓவியத்தினால் எந்தெந்த தனியார் சொத்துக்களுக்கு பாதிப்பு என்பதை ராபர்ட் கணக்கீடு செய்து கொடுத்திருக்க, அதை ஆராய்ந்து கொண்டு இருந்தான்.
குத்து மதிப்பாக அபராதத் தொகை எவ்வளவு வரும், அதை எங்கிருந்து எடுப்பது என்பது குறித்து தான் ராபர்ட்டும், அவனும் தீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தனர்.
மிருதுளா வேலையில் கவனம் வைத்திருந்தாலும், அவர்களது பேச்சும் காதில் விழுந்து கொண்டு தான் இருந்தது. இது வரைக்கும் ரெக்சியின் படைப்புகள் வணிக நோக்கில் விற்பனைக்கு கொடுக்கப்பட்டது இல்லை. அசல் படைப்புகள் பெரிய தொகைக்கு ஏலத்திற்கு விடப்பட்டு, அதில் வரும் பணம் டிரஸ்ட் வழியாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு போய் சேரும் படியான கட்டமைப்பு தான் அவர்களுடையது. அசல் ஓவியத்திற்கு ஒருவர் மட்டுமே உரிமை கொண்டாட முடியும் என்ற வகையில் அமைத்திருந்தார்கள்.
அதை யோசித்துக் கொண்டே வேலையை முடித்தவளுக்கு சட்டென வேறு ஒரு யோசனை தோன்றியது. அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், உணவு நேரம் நெருங்கி இருக்க, குளிர் சாதனப் பெட்டியை திறந்து பார்த்தாள். இரவு செய்த குழம்பும், பொரியலும் இருக்க, அவளது மதிய உணவை உள்ளே வைத்து விட்டு சூடாக சாதம் மட்டும் வைத்து, இருவருக்குமான உணவை எடுத்து வந்தாள்.
“ஹேய் ஸாஃப்டி, லஞ்சுக்கு வெளில போய் இருக்கலாமே? வேலை இருக்கு சொல்லிட்டு எதுக்கு சமைச்சிட்டு இருக்க”
“ஒன்னும் பெரிசா சமைக்கலை. லெஃப்ட் ஓவர் இருந்துச்சு, சாதம் மட்டும் வைச்சேன். உங்களுக்கு இது ஓகேவா?”
“அதெல்லாம் ஓகே தான், ராம் எனக்கு உங்க சாப்பாடு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கான். நானும் அவனும் அப்பபோ போய் ஒன்னொன்னா டேஸ்ட் பண்ணிப் பார்ப்போம்” என்றவன், கைகளைக் கழுவி வந்து, அவள் வைத்த ஸ்பூனை ஒதுக்கி விட்டு, கையால் சாப்பிட ஆரம்பித்தான்.
அதை ஆச்சரியமாகப் பார்த்தவள், அவளும் கையால் உண்ண ஆரம்பித்தாள்.
“பரவாயில்லையே, பக்கா தமிழ் நாட்டு மாப்பிள்ளையாவே ஆகிட்டீங்க போல” என அவனை சீண்ட, அதில் சிரித்தவன்,
“வேற வழி. ஆனா இன்னும் என்னால காரம் எல்லாம் சாப்பிட முடியாது. நார்த் இண்டியன் டிஷஸ் ஓகே. சவுத் இண்டியன் கொஞ்சம் ஸ்பைசியா இருக்கு” என்க,
“அதெல்லாம் பார்த்துக்கலாம். நல்லா நெய் விட்டு சாப்பிட்டா காரம் தெரியாது” என உதடுகளை சுழித்தாள்.
“எனக்கு பிரச்சனை இல்லை. ஆனா நெய்யா சாப்பிட்டா நல்லா வெயிட் ஏறிடும். அது உனக்கு பிரச்சனை இல்லைன்னா, எனக்கும் இல்லை” என அவன் கண் சிமிட்ட, முதலில் புரியாமல் விழித்தவள், பின் முறைத்து அவன் கையில் கிள்ளி வைத்தாள்.
“வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு” என்றவள்,
“லெக்ஸி, எனக்கு ஒரு ஐடியா இருக்கு. சொல்லட்டுமா?” என கேட்டாள். அவன் சம்மதமாக தலை அசைக்க,
“இப்ப பெரிய பிரச்சனை ஃபைன் கட்டுறது தான் இல்லையா? அது சால்வ் பண்ணிட்டா இனிமேல் லீகல் ஏரியால்ல தான் வரைவீங்க, இங்க அண்ட் அபிராட். கரெக்டா?” எனக் கேட்டாள்.
“ம்ம்ம்ம் கரெக்ட் தான், ஏன்னா ஃபைனே ஒரு பெரிய அமௌண்ட் வருது. டிரஸ்ட்ல இருந்து எடுக்க முடியாது. என்னோட பெர்சனல் ஃபண்ட் (fund) எல்லாம் அவ்ளோ வராது. அதை இதுக்குள்ள கொண்டு வரவும் முடியாது” என அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியாமல் யோசனையாக அவளைப் பார்த்தான்.
“நம்ம ஏன் ஒரு ரெக்ஸி ஆர்ட் கேலரி ஓபன் பண்ணக் கூடாது? இது வரைக்கும் ஏலத்தில போகாத ஆர்ட் வொர்க் எல்லாம் அதுல போடலாம். அண்ட் மெர்க்கெண்டைஸ் கூட போடலாம். டிரஸ்ட்லேர்ந்து இதை தனியா வைச்சு, லீகல் செலவு எல்லாம் இந்த ஃபண்ட்லேர்ந்து போற மாதிரி பார்த்துக்கலாம். நீங்க தானே சொன்னீங்க ரெக்ஸி இஸ் அ குளோபல் பிராண்ட்னு. கண்டிப்பா உங்க ஃபேன்ஸ் எல்லாம் சப்போர்ட் பண்ணுவாங்க”
அவளை ஆச்சரியமாகவும், மெச்சுதலாகவும் பார்த்தவன்,
“பிரிலியண்ட் ஐடியா தான். ஆனா இது வரை நான் இதை கமர்சியலைஸ் பண்ணலையே. அதுவும் ஒரு தடவை தனித்துவம் போய்டுச்சுன்னா மொத்தமா எல்லாத்துக்குமே வேல்யூ குறைஞ்சிடுமே” என யோசிக்க,
“நீங்க தானே சொன்னீங்க, ஒன் ஸ்டெப் அட் அ டைம். இந்த மாதிரி முயற்சி செஞ்சு பார்க்கலாம். ஆர்ட்வொர்க் லீகலாக்குறதுக்குன்னே விளம்பரப்படுத்தலாம். லாயர்ஸ் வைச்சு நம்ம ஃபைன் கட்டுறதுக்கும் டைம் கேக்கலாம். எல்லாம் சரியா நடக்கும்” என அவனை ஊக்கினாள்.
“ம்ம்ம்ம், நான் ராபி கிட்டயும், லீகல் டீம் கிட்டயும் கன்சல்ட் பண்ணி பார்க்குறேன்” என அவன் ஒத்துக் கொள்ள, மிருதுளாவுக்கு பெரும் நிம்மதி.
அதற்குள் இருவரும் உணவை முடித்திருக்க,
“என்ன இப்பவாவது வெளில போலாமா? ஐ வாண்ட் டு செலிபிரேட்” என அலெக்ஸ் கேட்க,
“ம்ம்ம், போகலாம். அண்ணா வர்றது பத்தி பேசனும், பேசிட்டு போகலாம்” என்றாள்.
‘என்னடா இது, ஒரு ப்ரோபோசல் செலிபிரேட் பண்றதுக்கு இந்தப் பாடா. எல்லாரோட லவ் லைஃபும் இப்படி தான் இருக்குமா. இல்லை, எங்களுது மட்டும் யூனிக் டிசைனா’ என அலெக்ஸின் மைண்ட் வாய்ஸ் அவனைக் கலாய்க்க, வேறு வழி இல்லாமல், நீள்விருக்கையில் போய் அமர்ந்தான்.
அதை உணர்ந்தவள் போல், அவன் அருகில் போய் அமர்ந்தவள், அவன் கைகளில் தன் கைகளைக் கோர்த்துக் கொண்டவள்,
“என்ன ஓவரா போர் அடிக்கிறேனா உங்களை?” என கேட்டாள்.
“போர் அடிக்கலை, ஆனா ஒரு ஸ்பாண்டேனிட்டி (spontaneity) ரொம்ப மிஸ் ஆகுற மாதிரி இருக்கு ஸாஃப்டி. எந்த விஷயம் ஆனாலும் சட்டுன்னு அந்த மொமெண்ட்ட என்ஜாய் பண்ண முடியாம, ஏதோ ஒரு பிரச்சனை முன்னாடி நிக்குது.
அதை எப்படி தீர்க்குறதுன்னு தான் நாமே ரெண்டு பேரும் பேசிட்டே இருக்கிற மாதிரி இருக்கு. சில சமயம் அது சலிப்பா கூட மாறிடுது. என்னோட இயல்பு இல்லை இது. எது வந்தாலும் பார்த்துக்கலாம் அப்டின்னு விட்டுட்டு, வர்றப்போ சமாளிச்சு தான் எனக்கு பழக்கம்.
ஆனா இப்ப என்னடான்னா பல வருசங்களுக்கு திட்டம் போட்டு, உன்னை எதுவும் அபெக்ட் பண்ண கூடாதுன்னு எல்லாத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்றது ரொம்ப எக்ஹாஸ்டிங்கா இருக்கு” என அவன் சற்று சோர்வாக பதிலளித்தவன், தன் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தவறவில்லை.
“ம்ம்ம்ம், புரியுது, குடும்பஸ்தன்னா சும்மாவா. அதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க?”
“இப்பதைக்கு ஒன்னும் பண்ண வேண்டாம். என்னைய கொஞ்சம் ஃபீல் பண்ண விடு” என்றவன், அவளைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு லேசாக அணைத்துக் கொண்டான்.
அவனிடம் வாகாக பொருந்தியவள், எதுவும் பேசாமல், அவன் முதுகை இதமாக வருடி விட, அலெக்ஸிற்கும் அது தான் தேவையாக இருந்தது போலும்.
சற்று நேரம் மௌனத்திலும், இதமான வருடலிலும் கழிய, தன் இயல்புக்குத் திரும்பியவன்,
“தேங்க்ஸ் ஸாஃப்டி. வீ ஆர் என்கேஜ்ட் டுடே. அது மட்டும் தான் இன்னிக்கு செலிபிரேட் பண்ணப் போறோம். கெட் ரெடி, நம்ம எங்காவது வெளில போயிட்டு, நைட், ஜெனி, பீட்டர் அண்ட் ராபிக்கு பார்ட்டி கொடுக்கலாம். மீதி எல்லாம் அப்புறம் பேசலாம்” என்க, மிருதுளாவும் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அவனுடன் செல்ல தயாரானாள்.
கைகள் தன்னைப் போல் வெளியே கிளம்புவதற்கு ஏதுவாக ஒரு பக்கம் தயாரானாலும், மறு பக்கம், மனமோ, மகேந்திரனைக் குறித்தும், வீட்டில் எப்படி சொல்வது என்பதைக் குறித்தும் தான் சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்த அழுத்தத்தை அலெக்ஸின் மேல் திணிக்க விரும்பவில்லை.
இது வரை அவர்களின் உறவை ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல அவன் பங்களிப்பு மிக அதிகமே. இதையும் அவன் தலையில் ஏற்றி வைப்பது நியாயம் இல்லை என்றே மிருதுளாவுக்கு தோன்ற, அந்தப் பேச்சை அதற்குப் பின் அலெக்ஸிடம் எடுக்கவில்லை அவள்.
அலெக்ஸ் விரும்பிய படி, அந்த நாளின் மீதிப் பொழுது காதலர்களுக்கு இதமாக கழிய, இரவு அவர்களின் நண்பர்களும் சேர்ந்து கொள்ள, மிகவும் உற்சாகமாக நேரம் சென்றது. நண்பர்களின் வாழ்த்தும், கேலியும் அந்த இடத்தை கலகலப்பாக்க, இருவருக்கும் மன நிலை இலகுவாகி இருந்தது.
மிருதுளா, ஜெனியுடனும், பீட்டருடனும் செல்வதாகக் கூறி விட, அலெக்ஸ் ராபர்ட்டுடன் அவன் வீட்டிற்குத் திரும்பி விட்டான். அடுத்து வந்த நாட்களில், நண்பர்கள் இருவரும் மிருதுளா கூறிய யுக்தியின் சாதக, பாதங்களையும், சட்ட சிக்கல்களையும் அலசுவதில் மூழ்கி விட்டனர்.
மிருதுளாவும் அலுவலகப் பணி சேர்ந்து விட, அதில் கவனம் செலுத்தினாள். அதற்குப் பின் அலெக்ஸை சந்திப்பதற்கோ, பெரிதாக பேசுவதற்கோ நேரம் கிடைக்காமல் இருக்க, ஒரு வாரம் முடிவடைந்த நிலையில், மகேந்திரன் லண்டன் வந்து விட்டான்.
அன்று காலையில் அலெக்ஸ், மிருதுளாவை அலைபேசியில் அழைக்க, மகேந்திரனை அழைத்துச் செல்ல அவள் விமான நிலையத்தில் இருப்பதாகக் கூற,
“ஓ மை காட் ” என்றவன் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான். அன்றே மிருதுளா கேட்ட போதே பேசி இருக்க வேண்டுமோ என்று தாமதமாக உறைக்க, ‘சரி, மச்சான் கிட்டயே பேசிக்கலாம்’ என முடிவெடுத்தவன், மளமளவென அவர்களை சந்திக்கக் கிளம்பினான்.