சில வருடங்கள் கழித்து தங்கையைக் கண்ட தமையனுக்கு கண்கள் கலங்கியது. உடல் சற்று இளைத்திருந்தாலும், முகம் தெளிவாகவே இருந்ததை மகேந்திரன் கவனிக்க தவறவில்லை. ஆதூரமாக அவளை அணைத்துக் கொள்ள, மிருதுளாவின் கண்களிலும் கண்ணீர்.
“எப்படி இருக்கண்ணா? ஃபிளைட் எல்லாம் ஓகேவா?” என்று அண்ணனின் அணைப்பில் நின்றவாறே கேட்க,
“எல்லாம் ஓகே தான் மிரும்மா. நீ எப்படிடா இருக்க?” என்றான்.
“எனக்கென்ன ஜம்முன்னு இருக்கேன். நீயே பார்த்து சொல்லேன்?” என்றவள் சிறு பிள்ளை போல் ஒரு சுற்று சுற்றித் திரும்ப, மகேந்திரன் முகத்தில் புன்னகை.
“ஹேய் வாலு, இந்தப் பழக்கத்தை நீ இன்னும் விடலையா?” என்றபடியே நடக்கத் துவங்க,
“எதுக்கு விடனும்?” என்றவள்,
“அம்மா, அப்பா, அண்ணி, தருண், நந்தன் எல்லாரும் எப்படி இருக்காங்கண்ணா?” என கேட்டாள்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க. ஒரு மாசமா அம்மா என்னை துளைச்சு எடுத்துட்டாங்க. நான் போய் என் பொண்ணைப் பார்த்தே தீரனும்னு. அவங்களை சமாளிக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.
நீ வேற ரொம்ப டல்லா இருந்த. அங்க இருந்துட்டு இங்க என்ன நடக்குதுன்னும் புரியல. உங்க அண்ணி தான், இது வேலைக்காகதுன்னு என்னைய பேக் பண்ணி அனுப்பி வைச்சுட்டா” என சிரித்தவன்,
“சொல்லுடா, என்ன பிரச்சனை? வினய் விஷயத்தப்போ கூட நீ இவ்ளோ ஸ்டிரெஸ் ஆன மாதிரி எனக்கு ஞாபகம் இல்லை. எல்லாம் விதி, விட்டுத் தள்ளுங்கன்னு நீ தான் எங்களை தேத்தின. இப்ப என்ன எந்நேரமும் யோசனை?” எனக் கனிவாகக் கேட்டான்.
அதற்கு வெட்கத்துடன், அலெக்ஸ் அணிவித்த மோதிரத்தை காண்பித்தாள்.
“ஹேய், கங்கிராட்ஸ். சொல்லவே இல்லை, இது எப்போ?” என்றவனுக்கு உளமார்ந்த மகிழ்ச்சியே.
“ம்ம்ம், இது ஒரு ரெண்டு நாள் முன்னாடி தாண்ணா. அலெக்ஸ் ரொம்ப நாள் முன்னாடியே ப்ரோபோஸ் பண்ணாங்க.
நான் தான் ஏதோ யோசிச்சிட்டு தள்ளிப் போட்டுட்டே இருந்தேன். அது தான் யோசிச்சிட்டே இருந்தேன். எப்படி சரி வரும்னு ஒரு நம்பிக்கை வரலை.
அப்புறம் லெக்ஸி தான் பேசிப் பேசியே கன்வின்ஸ் பண்ணிட்டாங்க. ஃபைனலி ஐ செட் எஸ்” என பூரிப்பாகக் கூறினாள்.
“சூப்பர், என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தேன்னா, நான் வந்திருக்கவே மாட்டேனே” என போலியாக வருத்தப்பட, மிருதுளா அண்ணனை முறைத்தாள்.
“நான் வேணும்னா அடுத்த பிளைட்லயே ரிடர்ன் போய்டட்டுமா” என்க,
“உதை படுவண்ணா, வா போகலாம்” என்று டேக்ஸி எடுக்கப் போக, எங்கிருந்தோ ஓட்டமாக வந்து அலெக்ஸ் அவர்கள் முன் நின்றான்.
அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத மிருதுளா, அவனை ஆச்சரியமாகப் பார்த்து விட்டு, மகேந்திரனிடம் முறையாக அறிமுகப்படுத்தினாள்.
“கங்கிராட்ஸ் மாப்ள” என மகேந்திரன் அவனையும் வாழ்த்த, அவன் புரியாமல் மிருதுளாவைப் பார்க்க, அவள் கையில் இருந்த மோதிரத்தைக் கண் காட்டினாள்.
அவள் குறிப்பை உணர்ந்து கொண்டவன்,
“தேங்க்ஸ் மச்சான்” என்கவும், மகேந்திரனுக்கு தலை கால் புரியாத சந்தோஷம்.
அவன் அலெக்ஸை ஆரத் தழுவிக் கொள்ள, அலெக்ஸ் வெட்கத்தில் நெளிந்தான்.
இவர்களது அட்டகாசத்தில் பொறுமை இழந்த டேக்ஸி டிரைவர் இரண்டு முறை ஹார்ன் அடிக்க, அதில் சுதாரித்தவர்கள், வேகமாக வண்டியில் ஏறினர்.
வழி நெடுக பொதுவான பேச்சில் கழிய, வீடு வந்ததும் மகேந்திரன் தன்னை சீர்படுத்திக் கொள்ள குளியல் அறைக்குள் புகுந்து கொள்ள, அடுப்பின் அருகில் போக முயன்ற மிருதுளாவை தன் அருகிலேயே நிறுத்திக் கொண்டான் அலெக்ஸ்.
“ம்ப்ச், விடுங்க லெக்ஸி. அண்ணனுக்கு டீ போடனும்” என அவள் கிசுகிசுப்பாக கூற,
‘அட இது கூட நல்லா தான் இருக்கு’ என நினைத்த அலெக்ஸ்,
“அதெல்லாம் போகலாம். ஒரு கிஸ் கொடுத்துட்டுப் போ” என்க, மறுப்பாக தலை அசைத்தவள் கவனம் எல்லாம் குளியலறைக் கதவின் மேல் தான் இருந்தது.
“ஹேய், நம்மள பார்த்தா என்கேஜ்ட் கப்பில் மாதிரியா இருக்கு. பிரென்ட்ஸ்னு கூட சொல்ல முடியாது. நீ அவ்ளோ டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ற ஸாஃப்டி” என்றவன், அவள் கைகளை இன்னும் பிடித்திருக்க, அதை மெதுவாக அவனிடம் இருந்து பிரித்தவள், அவன் கன்னத்தில் வேகமாக சத்தம் இல்லாமல் இதழ் பதித்து விட்டு, தேநீர் தயாரிக்கச் சென்றாள்.
“ஓய், இதெல்லாம் சீட்டிங்” என அவளைத் தொடர்ந்து வந்தவன், சீண்டலைக் கைவிட்டு,
“மச்சான் கிட்ட என்ன பேசனும் ஸாஃப்டி?” என்று தீவிரமாகக் கேட்டான்.
“க்க்க்கும், ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க” என அவள் நொடிக்க, அதற்குள், மகேந்திரன் வந்து விட்டான்.
மிருதுளா இருவருக்கும் தேநீரை நீட்டி, அவளுக்கும் ஒன்று எடுத்துக் கொண்டு மகேந்திரன் பக்கத்தில் சென்று அமர்ந்தாள். ‘இது வேறயா, ஏன் என் பக்கத்தில உட்கார மாட்டாங்களா மேடம்’ என அலெக்ஸ் முகம் சுருக்கி மிருதுளாவைப் பார்த்தான்.
அதற்குள், “சொல்லுங்க மாப்ள, என்கேஜ்மெண்ட் எல்லாம் நடந்திருக்கு, நம்ம போன வாரம் பேசினப்போ கூட நீங்க எதுவும் சொல்லலியே” என்று மகேந்திரன் ஆரம்பிக்க, அலெக்ஸ் திருதிருவென விழித்தான்.
அவன் என்ன திட்டமிட்டா ஒவ்வொன்றும் செய்கிறான். திட்டமிடுவான் தான், ஆனால் செயலாக்கம் எல்லாம் மிருதுளா இழுக்கும் திசையில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது. அதைக் கூற இயலாமல்,
“என்ன பண்றது மச்சான். உங்க தங்கச்சி டெய்லி, புதுசு புதுசா ஒரு பிரச்சனைய கண்டு பிடிச்சா, அதைத் தீர்க்குறதுக்கே எனக்கு நேரம் சரியா இருக்கு.
நான் அவளுக்கு மூனு மாசத்துக்கும் முன்னாடியே ப்ரோபோஸ் பண்ணிட்டேன். மேடம் ரெண்டு நாள் முன்னாடி தான் அக்செப்ட் பண்ணிருக்காங்க” என பெருமூச்சு விட,
“அப்படி என்ன பிரச்சனை மாப்ள” என்று மகேந்திரன் கொக்கி போட்டான்.
சில நொடிகள் மிருதுளாவைப் பார்த்த அலெக்ஸ்,
“ஒன்னா, இரண்டா, ஒரு நூறு இருக்கப்போ எதை சொல்றது. இப்போதைக்கு அடுத்த என்ன பண்ணலாம்னு நீங்க தான் சொல்லனும்” என அவனிடமே திருப்பி விட்டான்.
“ம்ம்ம்ம், காதல், கல்யாணம்னா சும்மாவா. பிரச்சனை எல்லாம் வரத்தான் செய்யும். அடுத்து என்ன கல்யாணம் தான். அதுல பெரிய விஷயம் எங்கம்மாவை சம்மதிக்க வைக்கிறது தான்” என்றவன் மிருதுளாவைப் பார்த்து,
“மிரு, நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்றான்.
“சொல்லுண்ணா”
“நான் அப்பாகிட்ட மேலோட்டமா சொல்லிட்டு தான் வந்திருக்கேன். ஆனா அம்மாக்கு இன்னும் எதுவும் தெரியாது. அவங்க ஒத்துக்க மாட்டாங்க மிரும்மா. பேசாம நம்ம இங்கயே கல்யாணத்தை முடிச்சிட்டு நேரா போய் அவங்க கால்ல விழுந்துட வேண்டியது தான்.அப்பாகிட்ட பேசி அம்மாவை கன்வின்ஸ் பண்ணனும்.
அம்மாகிட்ட சொல்லி, அவங்க வேண்டாம்னு சொல்லிட்டா அதுக்கப்புறம் அவங்களை மீறி எதுவும் பண்ண முடியாது. நீங்க என்ன சொல்றீங்க மாப்ள?” என அலெக்ஸிடமும் கேட்க,
“எனக்கு மிரு என்ன சொன்னாலும் ஓகே தான். விசா, சிட்டிசன்சிப் இதுக்கெல்லாம் இங்க கல்யாணம் நடந்து ரிஜிஸ்டர் பண்ணோம்னா பெட்டர், லீகல் ப்ராஸஸ் எல்லாம் ஈசியா இருக்கும். நம்ம உங்க கெஸ்ட் எல்லாரையும் இங்கிலாண்ட் கூட்டிட்டு வர்றதுக்கு அரேஞ்மெண்ட்ஸ் பண்ணிக்கலாம்” என தன் கருத்தை தெரிவித்து விட்டு அவனும் மிருதுளாவைத் தான் பார்த்தான்.
மகேந்திரன் கூறிய யோசனையைக் கேட்ட மிருதுளா அரண்டு போய் அவனைப் பார்த்தாள்.
“என்னண்ணா இப்படி சொல்ற? அதெல்லாம் சரி வராது. அம்மாகிட்ட சொல்லாம எல்லாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அப்படி பண்ணினோம்னா அம்மா ரொம்ப உடைஞ்சு போயிடுவாங்க.”
“கரெக்ட் தான். ஆனா அம்மா ஒத்துக்கலைன்னா என்ன பண்றது? நீ அதை யோசிச்சியா? அதோட எனக்கு உங்க கல்யாணத்தை சீக்கிரம் முடிக்கனும் மிரு. இந்த மூனு மாசமும் இங்க என்ன நடக்குது, என்ன பிரச்சனைன்னு ஒன்னும் புரியாம அங்க எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. அம்மாவையும் சமாளிக்க முடியலை.
நீ கல்யாணம் முடிச்சி மாப்ள கூட இருக்கன்னா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம். அம்மாவை நான் பேசி சரி பண்ணிடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
முன்னாடியே சொன்னோம்னா, அவங்க சம்மதிக்கற வரை வெயிட் பண்றதுக்கு நம்மகிட்ட டைம் இல்லடா. நான் ரெண்டு வாரம் தான் லீவ் எடுத்துருக்கேன். அதுக்குள்ள ஒன்னு உங்க கல்யாணம் நடக்கனும்.
இல்லைன்னா, நீ என் கூடவே கிளம்பி இந்தியா வந்துடு. அம்மாகிட்ட பொறுமையா பேசி அவங்க சரின்னு சொன்னப்புறம், அலெக்ஸ வர சொல்லி அங்கயே கல்யாணம் வைச்சிக்கலாம்” என மகேந்திரன் தன் நிலையை தெளிவாக அவள் முன் வைத்தான்.
மீண்டும் ஒரு இக்கட்டான சூழல் மிருதுளாவுக்கு. அவளுக்கு அலெக்ஸை விட்டு இந்தியா செல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அவன் இங்கு முடிக்க வேண்டிய வேலைகளை அறிவாளே. ஏனோ அலெக்ஸை விட்டுச் சென்றால் அவனுக்கு எதுவும் ஆகி விடுமோ என்று சொல்ல முடியாத பயம். அந்த யோசனையுடன் அவள் அலெக்ஸைப் பார்க்க,
“ஸாஃப்டி, லெட்ஸ் டேக் த டைம் யூ நீட். நோ பிரஷர்” என்றான்.
“மாப்ள, எங்க அம்மாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது. அவங்க கண்டிப்பா அவ்வளவு சீக்கிரம் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. நீங்களும் சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் தானே சொன்னீங்க” என மகேந்திரன் கூற,
“எனக்குத் தெரியாது தான் மச்சான். ஆனா உங்களுக்கும், மிருவுக்கும் தெரியுமே. நான் இவ்வளவு மெனக்கெடுறதே, மிரு எந்த உறுத்தலும் இல்லாம என் கூட சந்தோஷமா இருக்கனும் அப்டின்றதுக்கு தான். இப்ப அவ அம்மாக்கு தெரியாம கல்யாணம் பண்ணா, அவ கண்டிப்பா சந்தோஷமா இருக்க மாட்டா. வாழ்நாள் முழுசும் இது ஒரு குறையாவே நின்னு போயிடும்.
நான் தனியாள். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தனியா தான் வாழ்ந்திருக்கேன். அதுனால தான் சீக்கிரம் கல்யாணம் வைச்சுக்கனும் சொன்னேனே தவிர மிருவையும் குடும்பத்தை விட்டு பிரிக்கிறதுக்கு இல்லை. நம்ம எல்லாரும் மிருவோட அம்மா கிட்ட பேசலாம். கண்டிப்பா ஒத்துப்பாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு” என அலெக்ஸ் மிருதுளாவுக்கு ஆதரவாகப் பேசினான்.
“ஆமாண்ணா. நானே அம்மாகிட்ட பேசுறேன்” என மிருதுளா தீடிரென துளிர்த்து விட்ட தைரியத்தில் முன் வர,
“நல்லா யோசிச்சிக்கோ மிரு. இதை ஆரம்பிச்சிட்டா முன் வைச்ச காலை பின் வைக்க முடியாது” என மகேந்திரன் எச்சரிக்க, மிருதுளா தன் நிலையில் உறுதியாக நின்று விட்டாள்.
“சரி, உன்னிஷ்டம்” என்றவன்,
“டிலே பண்ண வேண்டாம். இப்போவே பேசலாமா?” எனக் கேட்டான்.
“இப்பவா?” என அலெக்ஸை தயக்கமாகப் பார்த்தாள்.
“ஹேய் மிரு, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க பேசுங்க. நான் கிளம்புறேன். நாளைக்குப் பார்க்கலாம். வேணும்னா நானும் நாளைக்குப் பேசுறேன்” என்றான் அவன்.
“இல்லல்ல, நீங்களும் இருங்க. நா…நான் பேசுறேன்” என்றவள், அண்ணனைப் பார்த்தாள். இது எதுவும் சரியாக நடப்பது போல் மகேந்திரனுக்குத் தெரியவில்லை. கலைவாணியைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியுமே.
ஆனாலும் என்றாவது ஒரு நாள் பேசித்தானே ஆக வேண்டும். சுபஸ்ய சீக்கிரம் என்பார்களே என நினைத்தவன், ஒருவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு, கலைவாணிக்கு காணொளி அழைப்பு விடுத்தான்.
முதல் அழைப்பிலேயே எடுத்தவருக்கு, மகனுடன் மலர்ந்த முகத்துடன் மகளைத் திரையில் கண்ட பின்பே நிம்மதி.
“பிரயாணம் எல்லாம் சுகமா இருந்துச்சா மகேந்திரா?”
“ஒன்னும் பிரச்சனை இல்லைமா”
“ஒரு மெசேஜ் அனுப்பிச்சிட்டு கூட தூங்கி எழ வேண்டியது தானேடா. நான் மிருகிட்ட பேசிருப்பேனே” என அக்கறையாக மகனை விசாரித்தார்.
“ஃபிளைட்ல நல்லா தூங்கிட்டேன்மா, இன்னிக்கு ஒரு நாள் இங்க நைட் வரை முழுச்சிருந்தேன்னா ஜெட் லேக் இருக்காதுமா. அதோட வேலையும் இருக்கே” என மெதுவாக ஆரம்பித்தான்.
“அங்க போயும் என்னடா உனக்கு வேலை? உன்னைப் பார்த்தவுடனே தான் நான் பெத்த மகராசி மூஞ்சியும் பளிச்சின்னு இருக்கே. ரெண்டு வாரம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு மிரு கூட ஊரை சுத்தி பார்த்துட்டு வரவேண்டியது தானே” என சிரித்தார் கலைவாணி.
“ஐடியா நல்லா தான்மா இருக்கு. ஆனா அதை விட முக்கியமான வேலை வந்திருச்சுமா” என நிறுத்த, மிருதுளா சூழலைக் கையில் எடுத்துக் கொண்டாள்.
“மா” என்று அழைத்துவிட்டு, எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் சில நிமிடங்கள் மௌனமாகி விட்டாள். அலெக்ஸுக்கு இவர்களது தடுமாற்றம் எல்லாம் பார்த்து ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது.
முப்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒரு பெண், தனியாக வேறொரு நாட்டில் வேலை பார்க்கும் அளவுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ள பெண். ஆனால் தான் தேர்ந்தெடுத்திருக்கும் வாழ்க்கைத் துணையை பெற்றவர்களிடம் தெரிவிக்கக் கூட இவ்வளவு தயக்கம் ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை.
ஆனால் மிருதுளாவின் தயக்கம் தேவை இல்லை என்பது போல், கலைவாணியே,
“எப்படி இருக்க மிரு? கொஞ்ச நாளா ஒழுங்கா பேசுறதும் இல்லை. ஆளும் ரொம்ப மெலிஞ்சு போயிட்ட. மனசே கேட்கலை. அதுனால தான் அண்ணாவ தொல்லை பண்ணி அனுப்பி வைச்சேன். நீ அங்க வேலை பார்த்தது எல்லாம் போதும். பேசாம அண்ணா கூடயே கிளம்பி வந்துடு.
நான் அப்பாகிட்ட ஏற்கனவே சொல்லிட்டு தான் இருக்கேன். உனக்குப் பிடிச்சா மாதிரி ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம். வயசு ஏறிட்டே போகுது. நீ எவ்வளவு நாள் தான் தனியா இருக்க முடியும்?” என படபடவென அவரது வழக்கமான பேச்சை ஆரம்பித்து விட்டார்.
ஒரு வகையில் மிருதுளாவுக்கு அது நிம்மதியாகக் கூட இருந்தது. அது குறித்து அவளுக்கே ஆச்சரியம் தான். கலைவாணி இந்த விஷயத்தைப் பேசுவதில் முதல் முறை அவளுக்கு சந்தோஷம். அவர் எடுத்துக் கொடுத்ததைப் பற்றிக் கொண்டவள்,
“மா, அ…அது பத்தி தான் நான் பேசனும்மா” என்று ஒருவாறு தைரியத்தைத் திரட்டிக் கூற,
“எது பத்திடி?” என கலைவாணி புரியாமல் கேட்க,
“எ..என்னோட கல்யாணம் பத்தி தான்” என்க, கலைவாணிக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
“மிரும்மா…என் தங்கமே. நல்ல வார்த்தை சொல்லிட்டடாம்மா. கண்ல பார்த்து பல வருஷம் ஆயிடுச்சு. சீக்கிரம் வந்துடு, அம்மா உனக்கு நல்ல பையனா பாக்குறேன்”
“மா…..மொதல்ல நான் சொல்றத பொறுமையா கேளுங்க. நா…நான் இங்க ஒருத்தரை விரும்புறேன். அவர் பேரு அலெக்ஸ்” என்க, அவளைப் பாதியில் நிறுத்தியவர்,
“அலெக்ஸா, அப்படின்னா கிறிஸ்டியனா. ஏண்டி அது எப்படி ஒத்து வரும்?” என்று கேள்வி எழுப்பினார். அவருக்கு அலெக்ஸ் வெளி நாட்டைச் சேர்ந்தவன் என்றெல்லாம் சிறு அனுமானம் கூட இல்லை.
“கிறிஸ்டியன் எல்லாம் இல்லைமா. அவருக்கு மத நம்பிக்கை எல்லாம் கிடையாது”
“ஐயோ, நாத்திகனா. அது இன்னும் மோசமேடி” என்று புலம்ப, மிருதுளா இவரிடம் எப்படி பேசுவது என்று தான் பார்த்தாள். அவள் திணறுவதை உணர்ந்த மகேந்திரன் உதவிக்கு வந்தான்.
“மா, அவ என்ன சொல்றான்னு தான் கொஞ்சம் கேளேன்மா. அலெக்ஸ் இந்த நாட்டுக்காரர்மா. மிருதுளா ஸ்காட்லாண்ட் போனப்போ தான் ரெண்டு பேருக்கும் பழக்கம். ஒரு ரெண்டு நாள் முன்னாடி தான் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிருக்காங்க. அதை தான் மிரு சொல்ல வந்தா” என விஷயத்தைப் பட்டென்று போட்டுடைத்தான்.
மகேந்திரன் சொன்னதைக் கேட்ட கலைவாணிக்கு பேச்சே வரவில்லை. மிருதுளா காதலிக்கிறாள் என்பதே அவருக்கு அதிர்ச்சி தான். அதிலும், ஒரு வெளி நாட்டுக்காரனை காதலிக்கிறாள் என்பதெல்லாம் அவர் கற்பனைக்கும் எட்டாத விஷயம்.
சில நிமிடங்கள் எடுத்து தன்னை சுதாரித்துக் கொண்டவர்,
“என்னடா மகேந்திரா சொல்ற?” என்றவர்,
“மிருதுளா, அண்ணன் சொல்றதெல்லாம் உண்மையா?” என மகளையும் அதட்டினார்.
“ஆ..ஆமாம்மா. நான் அலெக்ஸை தான் கல்யாணம் செய்துக்க நினைக்கிறேன்”
“ஓ..அப்ப எல்லாம் நீயே முடிவு பண்ணிட்டு என்கிட்ட தகவல் சொல்றியா. இதுக்கு தான் நான் கல்யாணப் பேச்சு எடுக்குறப்போ எல்லாம் தட்டிக் கழிச்சியா. நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு தானே சொன்னேன். அப்போ எல்லாம் வேணாம்னுட்டு இப்ப என்னடி அவசரம் உனக்கு?” என்று கடினமான வார்த்தைகளை விட, மிருதுளாவுக்கு கண்களில் நீர் நிறைந்து விட்டது.
அலெக்ஸ் எழுந்து அவள் அருகில் வரப் பார்க்க, மகேந்திரன் கண்களாலேயே அவனைத் தடுத்து விட்டு,
“மா, என்ன பேச்சுமா இதெல்லாம். ரொம்ப தப்பும்மா. நம்ம மிருவைப் பத்தி உங்களுக்கு தெரியாதா” என்று அவரை அதட்டியவன், மிருதுளாவிடம் திரும்பி,
“நீ எதுக்கு அழற? இதுக்கு தான் சொன்னேன். நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு. நீ தான் அம்மாகிட்ட சொல்லாம எதுவும் பண்ண மாட்டேன்னு அடம் பிடிச்ச” என தங்கைக்கும் கொட்டு வைக்க, அவள் அழுகை அதிகமாகியதே தவிர குறையவில்லை.
மகேந்திரன் கூறியதைக் கேட்ட கலைவாணியின் கோபம் இன்னும் கூடியது. மகள் கூறியது ஒரு பக்கம் சந்தோஷம் அளித்தாலும், முன்னரே சொல்லி இருந்தால், வேறு மாதிரி உணர்ந்திருப்பாரோ என்னவோ. கடைசி நிமிசத்தில் ஏதோ கடமைக்குக் கூறுவதாகவே நினைத்துக் கொண்டார்.
“ரொம்ப நல்லா இருக்குடா. அண்ணனும் தங்கச்சியும் கூட்டா சேர்ந்துட்டு டிராமாவா போடுறீங்க. நீங்களே எல்லாம் முடிவு பண்ணிட்டா வீட்ல நானும் உங்கப்பாவும் பெரியவங்கன்னு எதுக்கு இருக்கோம்” என்றவர், மதிவாணனையும், வந்தனாவையும் கூட பஞ்சாயத்துக்கு அழைத்து விட்டார்.
அவர்கள் இருவரும் எந்த அதிர்ச்சியும் காண்பிக்காமல் இருந்ததிலேயே அவருக்குப் புரிந்து விட்டது, அவர்களுக்கும் முன்னரே விஷயம் தெரியுமென்பது. அவ்வளவு தான். அதற்கும் ஒரு பாடு புலம்பித் தீர்த்தவர், பின்னர் அழுகையில் கரைந்தார்.
இது போன்ற சூழல் எல்லாம் அலெக்ஸ் கனவிலும் கண்டிராத ஒன்று. மிருதுளா ஒரு பக்கம் அழுக, கலைவாணி ஒரு பக்கம் அழுக, மகேந்திரனோ, அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா என்பது போல் அசால்ட்டாக அமர்ந்திருந்தான்.
அதற்கு மேல் பொறுமை காக்க முடியாதவன், எழுந்து மிருதுளாவின் அருகில் சென்று அமர்ந்தான்.
“வணக்கம், மிஸஸ் மதிவாணன்” என்று பிரிட்டிஷ் ஆக்செண்டில் தன் ஆழ்ந்த குரலில் அலெக்ஸ் தமிழில் பேச, கலைவாணி அழுகையை நிறுத்தி விட்டு, அரண்டு போய் அலைபேசியைப் பார்த்தார்.