இவனை வைத்துக் கொண்டு இந்தப் பேச்சை ஆரம்பித்திருக்கக் கூடாதோ என மிருதுளாவுக்கும் தாமதமாக தோன்ற, அவள் அழுகையை நிறுத்தி விட்டு அலெக்ஸை கலவரமாகப் பார்த்தாள்.
கலைவாணி யார், எவர் என்றெல்லாம் பார்க்கும் ரகம் கிடையாது. யாரானாலும் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார். தன்னையோ, மகேந்திரனையோ காய்ச்சி எடுப்பது வேறு. அதெல்லாம் அவர்கள் இருவருக்கும் பழக்கம் தான். அலெக்ஸை ஏதாவது மனம் நோகும்படி பேசிவிட்டால் என்ற பயம் தான் அவளுக்கு. இவன் எதுக்கு தானாக போய் தலையைக் கொடுக்கிறான் என்று தான் அண்ணனும், தங்கையும் ஒன்று போல நினைத்தனர்.
அலெக்ஸும் அவர்கள் குடும்பமாக ஒரு விஷயம் பேசுவது தான் அதிகப்படி என்று தான் சொல்லிவிட்டு கிளம்பப் பார்த்தான். அவன் கூட இருப்பது சற்று கூடுதல் தைரியம் என்று மிருதுளா அவனை இருக்க வைத்து விட, இப்போது அவனுக்கு சற்று சங்கடமான சூழல் தான்.
ஆனால் கலைவாணி மிருதுளாவை காயப்படுத்தும் விதமாக பேசி விடவும், அவனது பொறுமை பறந்து விட்டது. அம்மா, மகளைத் திட்டுவதற்கு உரிமை இருந்தாலும், கலைவாணி பேசியது அவனுக்கு சற்று அதிகப்படியாகவே தோன்றியது. எனவே அதை மௌனமாகக் கடக்க முடியாமல், சூழலைத் தன் கையில் எடுத்துக் கொண்டான்.
கலைவாணிக்கு அலெக்ஸ் அங்கிருப்பது தெரியாதே. திடீரென ஒரு வெளி நாட்டவன் திரையில் தோன்றி தமிழில் பேசவும் சில நிமிடங்கள் அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. அவனது தமிழுக்கும், உருவத்துக்கும் சற்றும் சம்பந்தம் இல்லாமல் தோன்ற அவனையே வாய் பிளந்து பார்த்தார்.
அதற்குள், அவன் மிஸஸ் மதிவாணன் என்று அழைத்திருக்க, அவன் தொடையை சுரண்டிய மிருதுளா,
“அப்படி சொல்லக் கூடாது. அத்தைன்னு சொல்லுங்க” என மெல்லிய குரலில் அவனைத் திருத்த,
“அத்தைன்னு சொல்லத்தான் எனக்கும் ஆசை ஸாஃப்டி, ஆனா அதுக்கு அவங்க பொண்ணு கொடுக்க ஒத்துக்கனுமே” என சோகம் போல் சொன்னான்.
இந்த இடைவெளியில் தன்னை சுதாரித்துக் கொண்ட கலைவாணி,
“எப்படி தம்பி தமிழ் இவ்வளவு நல்லா பேசுறீங்க?” என தன் அதி முக்கிய சந்தேகத்தைக் கேட்டார்.
“அது, கொஞ்ச நாளா நான் தமிழ் ஸ்கூல் போறேன் மிஸஸ் மதிவாணன். மிருதுளா ஸ்டிரிக்டா சொல்லிட்டா, தமிழ்ப் பையனா மாறினா தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. அதுனால வாரத்துல ஒரு நாள் தமிழ் லாங்குவேஜ் அண்ட் கல்ச்சர் கத்துக்கிறேன்” என்க, இந்த முறை மிருதுளா அவன் தொடையில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஆ” என அவன் அலற,
“என்னாச்சு தம்பி?” என கலைவாணி கேட்க,
“மிரு கிள்ளி வைச்சிட்டா. இதெல்லாம் உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லிருந்தா. நான் சொல்லிட்டேன்னு கோவப்படுறா” என அப்பாவியாக மிருதுளாவைப் போட்டுக் கொடுக்க, அது நன்றாக வேலை செய்தது.
“என்ன பழக்கம் இது மிரு? மாப்பிள்ளை கிட்ட மரியாதையா நடக்க வேண்டாமா?” என அவரையும் மீறி மனதில் அவனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார் போலும். சட்டென அழைப்பு தம்பியில் இருந்து மாப்பிள்ளையாக மாறி விட்டது.
அதில் குதூகலமான அலெக்ஸ்,
“நல்லா கேளுங்க அத்தை. எப்பவும் கிள்ளி தான் வைச்சிடுவா. அவளுக்கு பிடிக்காதது ஏதாச்சும் நான் பண்ணிட்டேன்னா அவ்ளோ தான், பிச்சு எடுத்துருவா” என தன் கதையைத் தொடர, மிருதுளா ‘அடப்பாவி’ என அவனைப் பார்க்க, மகேந்திரனோ நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.
அவனிடம் பேசிய சில நொடிகளிலேயே கலைவாணிக்கு அவனைப் பிடித்து விட்டது. அவனது கம்பீரமான தோற்றம் தன்னாலே மரியாதையை தோற்றுவித்தது என்றால், இயல்பான பேச்சு ஒரு நெருக்கத்தை தந்து விட்டது. ஆனால், இதனால் அவரது நெருடல்கள் நீங்கி விட்டதா என்றால், நிச்சயமாக இல்லை தான்.
‘ஐஸ் பிரேக்கர்’ என்பார்களே, அது போல அந்தக் இறுக்கமான சூழலை சற்று இலகுவாக்கியவன்,
“மிசஸ் மதிவாணன், என் பேரு அலெக்சாண்டர் ஸ்டோன். நான் ஒரு ஆர்டிஸ்ட். நானும் என் பிரெண்டும் சேர்ந்து ஒரு ஆர்ட் ஏஜென்சி வைச்சிருக்கோம். என்னோட சின்ன வயசுலயே அப்பா, அம்மா இறந்துட்டாங்க. ஃபாஸ்டர் கேர்ல தான் வளர்ந்தேன். பெருசா காதல், கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் உண்டு, என் வேலை உண்டுன்னு தான் இத்தனை நாள் வாழ்க்கைய ஓட்டிட்டு இருந்தேன்.
சில மாதங்கள் முன்னாடி ஸ்காட்லேண்ட்ல மிருவைப் பார்த்தேன். அதுக்கு முன்னாடி லண்டன்ல சில தடவை டிரெயின்ல பார்த்துருக்கேன். ஆனால் பேசினது எல்லாம் கிடையாது. ஸ்காட்லேண்ட்ல பார்த்தது கூட ஒரு ஆக்சிடெண்ட் தான். அப்போ இருந்து உங்க பொண்ணு, இங்க உட்கார்ந்துட்டு போகவே மாட்டேன்னு என்னை தொல்லை பண்றாங்க” என அவன் இதயத்தை தொட்டு காண்பித்தான்.
‘ஆஃபிசர் கொஞ்சம் அடங்குங்க’ என மிருதுளாவின் மைண்ட் வாய்ஸ்.
‘தங்கச்சிட்ட சொல்ல வேண்டியது எல்லாம் என் அம்மாட்ட சொல்லிகிட்டு இருக்கீங்களே மாப்ள, முடிஞ்சது சோலி’ என மகேந்திரனின் மைண்ட் வாய்ஸ்.
இவர்களது மைண்ட் வாய்ஸை எல்லாம் ஒதுக்கித் தள்ளிய அலெக்ஸ், கலைவாணியின் எதிர்வினையை கவனித்துக் கொண்டே அவன் போக்கில் தொடர்ந்தான்.
“நான் கேட்டப்போ அவ்வளவு ஈசியா ஒன்னும் அவங்க சரின்னு சொல்லிடல. முதல் ரீசன் நீங்க ஒத்துக்க மாட்டீங்க. அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவில நிறைய வேறுபாடு இருக்கு, இதெல்லாம் சரி வராதுன்னு தான் சொன்னாங்க.
நான் நடையா நடந்து, உங்க பொண்ணு கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும்றதுக்காகவே பல ஆயிரம் மைல் சும்மாவே டிரெயின்ல டிராவல் பண்ணி, அவங்க கிட்டப் பேசி, என்னைய புரிய வைச்சு, இத்தனை மாசம் கழிச்சு, ரெண்டு நாள் முன்னாடி தான் சரின்னு சொல்லிருக்காங்க.
அவங்களோட தயக்கம் எல்லாத்தையும் மீறி எனக்கு சம்மதம் சொல்லிருக்காங்கன்னா, அதுக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருக்க முடியும் மிசஸ் மதிவாணன். ஷி லவ்ஸ் மீ அண்ட் ஷி டிரஸ்ட்ஸ் (trusts) மீ.
என் கூட இருந்தா அவங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு நம்புறாங்க. அந்த நம்பிக்கைய இந்தக் குறுகிய காலத்தில நான் அவங்களுக்கு கொடுத்துருக்கேன். உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க இந்தத் தகுதி ஒன்னே போதும்னு நினைக்கிறேன்.
என் தோல் வெள்ளையா இருக்கிறத தான் உங்களோட பிரச்சனைன்னா என்னால அதை மாத்த முடியாது. ஆனா மிருதுளா சந்தோஷமா இருக்குறதுக்கு என்னால முடிஞ்ச அளவு, வாழ்க்கை பூரா அவங்களுக்கு துணையா இருப்பேன். அப்படி ஒரு நம்பிக்கைய மட்டும் தான் என்னால தர முடியும்.
என்னை நம்பி, உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணித் தருவீங்களா?” என உருக்கமாக பேசினான்.
அவன் பேசியதில் மிருதுளாவுக்கு கண்கள் கலங்கியது. அவளை நெருங்கி அமர்ந்த மகேந்திரன்,
“ஏன் மிரு, மாப்ள உனக்கு ப்ரோபோஸ் பண்றதுக்கு ஒரு நோட்டே கொடுத்தாரா?” என்க, அண்ணனை போலியாக முறைத்த மிருதுளா,
“இரு, உனக்கு ஏதோ புரியலன்னு சொல்றன்னு லெக்ஸி கிட்ட சொல்றேன்” என மிரட்ட, பயந்தவன் போல் பாசாங்கு செய்தவன்,
“ஐ ஆம் வெரி ஹாப்பி மிரும்மா. அலெக்ஸை நேர்ல பாக்குற வரைக்கும் யோசனையா தான் இருந்தது. இப்போ எனக்கு முழு சம்மதம், ரொம்ப சந்தோஷமா இருக்கு.
முதல்ல உனக்கு பிடிச்சதினாலேயே அவரை எனக்குப் பிடிக்கும். ஆனா இப்போ அவர் பேசுறது பார்க்கும் போது, அவருக்காகவே அவரைப் பிடிக்குது. அம்மாக்கும் சீக்கிரம் பிடிச்சிடும்டா” என அவள் தோள்களை அழுத்தி விடுவித்தான்.
அலெக்ஸ் பேசியது எல்லாம் கேட்ட கலைவாணிக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது தான். மகளுக்காக அவன் மெனக்கெடுவது தாய் மனதைக் குளிர்வித்தது தான். அவனது நேர்மையான பேச்சு அவரைக் கவர்ந்தது தான். ஆனால்….அவனுக்கு யாரும் இல்லை என்பது இன்னுமே நெருடலைத் தந்தது.
“தம்பி, நீங்க சொல்றது எல்லாம் எனக்குப் புரியுது. ஆனா இது எப்படி சரியா வரும் சொல்லுங்க? உங்க பழக்கவழக்கம் வேற, எங்களது வேற. இவ்வளவு வருஷம் அவளைப் பார்க்காம எனக்கு நெஞ்சு அடிச்சிக்குது. எப்படா இங்க கூட்டிட்டு வந்து நினைச்ச நேரம் பாக்குற தூரத்தில வைச்சுக்கலாம்னு தான் நான் பார்ப்பேன். ஏதாவது ஆத்திர, அவசரம்னா உதவிக்கு சொந்தக்காரங்க அவ்வளவு பேரு இருக்காங்க. அங்க உங்களுக்கு யாரும் இல்லைனு நீங்களே சொல்லீட்டிங்க. அப்புறம் எப்படி நான் கண் காணாத இடத்தில அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு நிம்மதியா இருக்க முடியும்?”
இதற்கு அவன் என்ன சொல்வான்? அவனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை அவர் ஒரு காரணமாக முன் வைத்தால் அதை மாற்ற அவனால் இயலாதே. உண்மையான நண்பர்கள் இருப்பதை சொல்லலாம் தான். ஆனால் எல்லாவற்றையும் விளக்கி சொல்வதை விட, தானாக நம்பிக்கை வருவதே நல்லது என முடிவெடுத்து அலெக்ஸ் அமைதி காக்க, மிருதுளாவுக்குப் பொறுக்கவில்லை.
“மா, நான் கல்யாணம் பண்ணா லெக்சியா தான் கல்யாணம் பண்ணுவேன், இல்லாட்டி இப்படியே காலத்தை ஓட்டிடுறேன். எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்தப்போ அங்க அவ்வளவு சொந்தக்காரங்க இருந்து என்னமா பிரயோஜனம்.
ஒன்னு நம்மள பரிதாபமா பார்த்தாங்க, இல்லை என் கிட்ட என்ன பிரச்சனையோன்னு தான் பேசினாங்க. இப்பக் கூட நான் சம்பாரிச்சு கொடுக்கிறதுக்காக தான் வெளி நாட்லயே என்னை விட்டு வைச்சிருக்கீங்கன்னு சொன்னாங்கன்னு நீங்க தான் சொன்னீங்க. சொந்தங்களால நம்ம வேதனைப் பட்டது தான் அதிகம். அது இன்னுமா உங்களுக்குப் புரியலை” என விரக்தியாகக் கூற,
“மிரு, நான் என்ன சொல்ல வர்றேன்னா” என கலைவாணி இடையிட,
“கலை” என்று குரலுயர்த்தி மதிவாணன் அவரை நிறுத்தி விட்டார்.
“வணக்கம் மிஸ்டர். அலெக்ஸ். நான் மதிவாணன், மிருதுளாவோட அப்பா. இது வந்தனா, மகேந்திரனோட மனைவி. அவங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. ஸ்கூலுக்கு போயிருக்காங்க. ஒரு நாள் அவங்க வீட்ல இருக்கப்போ அவங்கள அறிமுகப்படுத்துறேன்.
உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். மகேந்திரன் முன்னாடியே என்கிட்ட சொல்லி இருந்தான். ஆனா உடனே கல்யாணம்ன்றது எனக்குமே புது செய்தி தான்.
மிருதுளா அம்மாக்கு இன்னிக்கு தான் இந்த விஷயமே தெரியும். அவங்க கொஞ்சம் யோசிக்கட்டும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நாங்க எல்லாரும் கலந்து பேசிட்டு, சீக்கிரமே உங்களுக்கு நல்ல முடிவா சொல்றோமே” என தன்மையாக, மறுக்க முடியாத குரலில் கேட்க, அலெக்ஸும் அதை நேர்மறையாகவே எடுத்துக் கொண்டு எழுந்து விட்டான்.
மகேந்திரனும் அவனுடன் கூட வந்து மன்னிப்பை வேண்ட,
“எனக்குப் புரியுது மச்சான், நோ பிராப்ளம். ஷி இஸ் இன் அ ஷாக். என்ன இருந்தாலும் நான் வெளியாள் தானே. என் கிட்ட பேச அவங்களுக்கு சங்கடமா இருக்கும்னு தான் நான் அப்பவே கிளம்புறேன்னு சொன்னேன். நீங்க பேசிட்டு சொல்லுங்க” என்றான் அலெக்ஸ்.
“இல்லை மாப்ள, நீங்க இருந்ததும் நல்லதா போச்சு. உங்களைப் பார்த்ததுமே அம்மாக்கு ஒரு ஐடியா வந்துருக்கும். நீங்க அவங்ககிட்ட நேரா பேசினதே அவங்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் தான் கொடுத்திருக்கும். இல்லாட்டி நாங்க என்ன தான் சொல்லி இருந்தாலும், அவங்க கண்ல பார்த்தப்புறம் எல்லாம் முதல்ல இருந்து ஆரம்பிப்பாங்க.
அம்மா எப்பவும் மனசில எதுவும் வைச்சிக்க மாட்டாங்க. வெளிப்படையா பேசிருவாங்க. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. உங்களை எதுவும் ஹர்ட் பண்ணிருந்தாங்கன்னா ஒன்ஸ் அகெய்ன் சாரி”
“பரவாயில்லை, நான் கிளம்புறேன்” என்றவன் உள்ளே பார்க்க, மிருதுளா, அவள் அப்பாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
“மிருகிட்ட சொல்லிடுங்க, அவளைப் பார்த்துக்கோங்க, நான் ஈவினிங் கூப்பிடுறேன்” என்ற அலெக்ஸ் கிளம்பி விட்டான்.
மிருதுளா பேசி முடித்து விட்டுப் பார்க்க, மகேந்திரன் மட்டும் தான் இருந்தான்.
“எங்கேண்ணா அவரு?”
“இந்த கிரேசி ஃபேமிலில பொண்ணே வேண்டாம்னு தெரிச்சு ஓடிட்டாரு” என தோளைக் குலுக்க, மிருதுளா மகேந்திரனை முறைத்தாள்.
அவன் அவளைக் கண்டு கொள்ளாமல், இந்த முறை மதிவாணனுக்கே அழைக்க, இன்னும் வீட்டு சபை கலைக்கப் படாமல் இருக்க, வந்தனாவும், கலைவாணியும் கூட அவரருகில் தான் இருந்தனர்.
எடுத்தவுடனே, மதிவாணன் பொரியத் துவங்கி விட்டார்.
“என்ன மகி இது? பொறுப்பில்லாம, இப்படி தான் ஒரு மூனாவது மனுஷனை வைச்சிகிட்டு அம்மாகிட்ட விஷயத்தை சொல்றதா?”
“பா, இங்க வந்தப்புறம் தான் எனக்கு இவங்க என்கேஜ்மெண்ட்டே தெரியும். அவங்க முறை எல்லாம் வேறப்பா. இவங்க நினைச்சிருந்தா இந்நேரம் ஒரே வீட்ல தான் குடித்தனம் பண்ணியிருக்கனும். ஆனா நமக்காக அவர் எல்லாத்தையும் தெரிஞ்சுக்க முயற்சி பண்ணி ஒவ்வொன்னும் பார்த்துப் பார்த்து பண்றப்போ, நாமளும் கன்சிடரேட்டா இருக்கனும்ல.
நான் அம்மாட்ட சொல்றதுன்னா பொறுமையா தான் சொல்லனும், பேசாம என் கூட இந்தியா வந்துடுன்னு தான் சொன்னேன். மிரு தான் இப்பவே பேசலாம்னு, கிளம்புற மனுஷனையும் உட்கார வைச்சிட்டா. பாவம் அவரு, நொந்து போயிருப்பாரு”
“ஏண்டா, மிரு சொன்னா உடனே நீ சரின்னுட்டியா? நீ யோசிச்சிருக்கனும் தானே?” என அவர் பிடியிலேயே நிற்க,
“சரி, விடுங்க தப்பு தான். அதையே கிளறி இப்ப என்ன ஆகப் போகுது. அவர் இருந்து அம்மாட்ட பேசினதும் நல்லது தான்” என அவரை சமாளித்தான்.
“என்ன மகேந்திரா நல்லது? என்ன குலமோ, கோத்திரமோ? அநாதை வேற” என கலைவாணி புலம்ப,
“மா” என மகேந்திரன், மிருதுளா இருவரும் ஒரு சேர குரலுயர்த்தினர். மிருதுளாவுக்கு இவ்வாறான பேச்சுக்களைக் கேட்க மிகவும் வேதனையாக இருந்தது.
“என்ன கலை பேச்சு இது…ரொம்ப தப்பு. வார்த்தைகள் ரொம்ப முக்கியம். அந்தப் பையன் எவ்வளவு மரியாதையா நம்ம கிட்ட பேசினார். சின்ன வயசுல அம்மா, அப்பா இறந்துட்டா அதுல இவர் தப்பு என்ன இருக்கு.
ஃபாஸ்டர் கேர்ல வளர்ந்தாலும், ஒன்னும் தப்பான வழியில போகலையே. அவர் அளவுல சரியா தானே வாழ்க்கை அமைச்சிக்கிட்டாரு” என்று மதிவாணன் ஒரு பக்கம் கேட்க, மறுபக்கம் மகேந்திரனோ,
“ஏம்மா, நம்ம குலம், கோத்திரம் பார்த்துத் தானே வினயை கல்யாணம் பண்ணி வைச்சோம், அது எவ்வளவு சீரும் சிறப்புமா முடிஞ்சுதுன்னு கண்ணாலயே பார்த்துட்டோம், இன்னும் ஏன்மா இதெல்லாம் பிடிச்சு தொங்குறீங்க” என்று கலைவாணியை ஒரு பிடி பிடித்து விட்டான்.
“நீங்க எல்லாரும் என்ன வேணும்னா சொல்லுங்க. எனக்குள்ள ஊறிப்போன விஷயம். சட்டுன்னேல்லாம் எதுவும் மாறாது” என்று அவர் நிலையிலேயே நின்றார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த, மிருதுளா,
“முடிவா என்ன தான்மா சொல்றீங்க?” என கேள்வி கேட்க, அதற்கு பதிலில்லை அவரிடம்.
அத்தி பூத்தாற் போல் வந்தனா கூட பேசி விட்டாள்.
“அத்தை, வேற எது பத்தியும் யோசிக்காதீங்க. மிரு சந்தோஷமா இருக்கனும்னு தானே நம்ம நினைக்கிறோம். அதுக்கு இது தான் வழின்னா, நாமளும் சந்தோஷமாவே ஏத்துக்கலாமே அத்தை.
சொந்தக்காரங்க பத்தி எல்லாம் யோசிக்க வேண்டாம். அவங்கெல்லாம் நம்ம எது பண்ணாலும், அதில நாலு குறை கண்டுபிடிப்பாங்க. நீங்க முழு மனசா சம்மதிச்சா தான் மிருவும் அவ புது வாழ்க்கைய சந்தோஷமா தொடங்குவா” என்க, கடைசியில் அது சற்று வேலை செய்தது.
“இப்ப நான் என்ன பண்ணனும்? அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்” என்ற கலைவாணி மகனையும், மகளையும் பார்க்க,
“மா, இங்க நான் இருக்கப்பவே இவங்க கல்யாணம் முடிச்சிடலாம்னு பாக்குறேன். அலெக்ஸ் இங்க கல்யாணம் ரிஜிஸ்டர் பண்றது தான் லீகல் விஷயத்துக்கெல்லாம் வசதின்னு சொன்னாரு. நீங்க என்ன சொல்றீங்கப்பா?” என்ற மகேந்திரன், பெரியவர்கள் இருவரையும் முடிவுக்குள் இழுத்து விட்டான்.
கலைவாணியும் கணவர் முகத்தைப் பார்க்க,
“சட்டுன்னு எப்படி மகி முடிவு பண்ண முடியும்? நமக்கு அவரைப் பத்தி எதுவும் தெரியாதே?” என்ற மதிவாணன் தயங்கினார்.
“அதெல்லாம் பிரச்சனை இல்லைப்பா, நான் மிரு பிரெண்ட் மூலமா கொஞ்சம் விசாரிச்சேன். அலெக்ஸே சொன்னாரே, அதே தகவல் தான் வந்துச்சு, நெகடிவ்வா எதுவும் இல்லை.
நம்ம ஊரு அளவுகோல் வைச்சி, படிப்பு, வேலை எல்லாம் இங்க பார்க்க முடியாது. அவருக்கு எதுல திறமை இருக்கோ, அதுல சிறப்பா செய்யனும்னு வேலைய தேர்ந்தெடுத்திருக்கார். மிருவும் சும்மா இல்லியே, சோ ரெண்டு பேரும் சேர்ந்து அவங்க பொருளாதார தேவைகளை பார்த்துப்பாங்க.
நிறைய இல்லாட்டியும், ரெண்டு பேருக்கும் ரொம்ப க்ளோஸ் பிரென்ட்ஸ் இருக்காங்க. இது வரைக்கும் அவங்க தான் எதாவதுன்னா ஹெல்ப் பண்றாங்க.
இதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான். முதன்மையான விஷயம் மிருவுக்கு பிடிச்சிருக்குன்றது தான். நம்ம எதிர்பார்ப்புகள் வேற தான், அது எனக்கு புரியுது. ஆனா, இது தான் ரியாலிட்டி. சோ, ஒத்துக்கிட்டு அவங்க விருப்பப்படி வாழ்க்கை அமைச்சி குடுக்குறது தான்பா சரியான விஷயம்” என்று அவன் கருத்தைத் தெரிவித்தான்.
மிருதுளாவுக்கு ஒரு பக்கம் இதயம் படபடவென்று அடித்தது. லெக்சியை அவளது குடும்பம் இந்த அளவு ஆராய்ந்தால், ரெக்சியை பற்றி கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக நிர்தாட்சண்யமாக மறுத்து விடுவார்கள். எவ்வளவு சீக்கிரம் திருமணம் முடிந்து, அவன் சட்ட சிக்கல்களில் இருந்து வெளி வருவானோ என்று பதட்டம் ஏறியது. வீட்டினரிடம் இதைப் பகிர முடியாத உறுத்தல் வேறு ஒரு பக்கம் அவளை அலைக்கழித்தது.
மகள் முகத்தில் இருந்த பதட்டத்தைப் பார்த்து, சிறிது நேரம் யோசித்த மதிவாணன்,
“சரி மகி, நீ அங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு. நம்ம இங்க சிம்பிளா ரிசப்ஷன் மாதிரி வைச்சிக்கலாம்” என்று விட, கலைவாணி,
“அப்போ நாம எப்போ போறது?” என்றார்.
“நம்ம போகலை கலை. அதெல்லாம் சரி வராது, எல்லாருக்கும் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. மகேந்திரனே எல்லாம் முடிச்சிட்டு வரட்டும். நம்ம இங்க ஆக வேண்டிய வேலைய பார்ப்போம். யாரு என்ன சொன்னாலும் காதில வாங்கிக்காத. நெருங்கிய சொந்தம் மட்டும் கூப்பிட்டு ரிசெப்ஷன் வைப்போம்” என்று அந்த விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட, அதற்குப் பின்னரே மிருதுளாவுக்கு மூச்சே வந்தது.
உடனே அலெக்ஸுக்கு அழைத்தவள்,
“கெட் ரெடி ஃபார் வெட்டிங் பெல்ஸ் மிஸ்டர். ஸ்டோன்” என்று ஆர்ப்பரிப்புடன் கூறினாள்.