‘ஹென் பார்ட்டி’ பற்றி ஜெனி மிருதுளாவுக்கு புளி போட்டு விளக்க, ‘இதென்னடா புதுக் கதையா இருக்கு’ என்று நினைத்தவள், உதவிக்கு அலெக்ஸை பார்க்க, அவன் ‘உன் தோழியை நீதான் சமாளிக்க வேண்டும்’ என்பது போல் தோளைக் குலுக்கினான்.
அந்த திட்டமிடுதலை ஜெனி பொறுப்பேற்றுக் கொள்ள, ராபர்ட்டும், பீட்டரும் ‘பேச்சிலர் பார்ட்டி’யை பொறுப்பேற்றுக் கொண்டனர். அடுத்த வார இறுதியிலேயே இரு குழுவினரும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டாட்டங்களுக்கு செல்வது என்று முடிவு செய்து, செயல் படுத்தியும் விட்டனர்.
இந்த கலாட்டாக்கள் எல்லாம் மகேந்திரனுக்கும், மிருதுளாவுக்கும் புதிய அனுபவங்கள். ஆனால் கூடவே தமிழ்ப் பள்ளியில் இருந்து ராமும், இருவருக்கும் பொதுவான வேறு சில நண்பர்களும் கூட தத்தம் குழுவினரில் சேர்ந்து கொண்டிருக்க, எல்லாரும் கலந்து பழகுவதற்கும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து விட்டது.
கொண்டாட்டங்கள் முடிந்த மறு வாரமே, சென்னையில் இருந்து மிருதுளாவின் வீட்டினரும் வந்து விட, அதற்குப் பின் அலெக்ஸால் மிருதுளாவைத் தனியே பிடிக்க முடியவில்லை.
கலைவாணிக்கு லண்டனின் நவம்பர் மாதக் குளிர் உடலை உறைய வைத்தது. மிருதுளா தங்கி இருந்த வீடு எல்லாருக்கும் வசதியாக இருக்காது என்பதால், அலெக்ஸின் வீட்டின் அருகேயே அவர்களுக்கு ஒரு ‘சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்’ பதிவு செய்திருந்தான் மகேந்திரன்.
அலெக்ஸை நேரில் பார்த்த மதிவாணனுக்கும், கலைவாணிக்கும் திருப்தியே. குளிர் வாட்டி எடுக்க, அவர்கள் இருவரும் அறைக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கி விட்டனர்.
மகேந்திரனும், வந்தனாவும் ராமின் உதவியுடன் மிருதுளாவுக்கு தேவையானவற்றை கவனிக்க, அந்த சந்தர்ப்பத்தில் அவள் குடும்பத்தினருடன் சற்று நெருங்கிப் பழகும் வாய்ப்பாக எடுத்துக் கொண்டான் அலெக்ஸ்.
பெரியவர்கள் முதலில் தயக்கம் காட்டினாலும், வருணும், நந்தனும் அவனுடன் சீக்கிரமே ஒட்டிக் கொண்டனர். முதல் முறை வெளி நாட்டிற்கு வந்திருக்க, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களை சிறுவர்கள் பட்டியலிட, அலெக்ஸும் சலிக்காமல் எல்லா இடங்களுக்கும் அவர்களை அழைத்துச் சென்றான்.
முடிந்த அளவு, மகேந்திரனும், வந்தனாவும் அவனுடன் இணைந்து கொள்ளப் பார்த்தாலும், மிருதுளாவுடன் அலைவதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. குழந்தைகளுடன் அலெக்ஸ் பழகிய விதத்திலேயே, மிருதுளாவின் தேர்வு சரி தான் என்ற நம்பிக்கையும் வந்திருக்க, சந்தோஷமாக அவன் பொறுப்பில் விட்டு விட்டனர்.
சில நேரங்களில் ராபர்ட்டும் அவனுடன் புலம்பிக் கொண்டே இணைந்து கொள்வான். அலெக்ஸுக்கு ராபர்ட்டை நன்கு தெரியும் என்பதால், அவ்வப்போது அவனையும் சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயம் அவனுக்கு. பிறந்தது முதல் அங்கேயே இருப்பவர்கள் தான், ஆனால் அவர்கள் இருவருக்கும் புகழ் பெற்ற எல்லா சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வாய்ப்போ, நேரமோ பெரிதாக கிட்டவில்லை. அதனால் அந்த வாரம் முழுவதும் அவர்கள் இருவரும் தாங்கள் இழந்திருந்த குழந்தைப் பருவத்தை வாழ்ந்து பார்த்தனர் என்றே சொல்லலாம்.
அடுத்து, மாப்பிள்ளைத் தோழனாக அலெக்ஸுடன் யார் நிற்பது என்ற கேள்வி வர, மிருதுளா வீட்டு வழக்கப்படி மகேந்திரனும், வந்தனாவும் தான் கூட நிற்க வேண்டும் என்று ஒரு பக்கம் கலைவாணி கூற, மறுபக்கம் யாருக்காகவும் அதை விட்டுக் கொடுக்க ராபர்ட் தயாராக இல்லை. ஜெனிக்கு சற்று வருத்தம் இருந்தாலும், அவர்கள் பழக்கவழக்கம், குடும்பத்திற்கு தான் முதலுரிமை என்று புரிந்து கொண்டு, கலைவாணி வந்த பின் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டாள்.
உறவுகளையும், நட்புகளையும் யார் மனதும் புண்படாதவாறு சமன் செய்வதில், அலெக்ஸுக்கும், மிருதுளாவுக்கும் தான் விழி பிதுங்கியது. ஒவ்வொரு சிக்கலாய் தீர்ப்பதற்குள், திருமணம் முடிந்தால் போதுமென்ற நிலை தான் இருவருக்கும்.
கண்ணிமைக்கும் நேரத்தில் கடைசி வாரமும் முடிந்து விட காதலர்கள் இருவரும் ஆவலாக காத்திருந்த திருமண நாளும் வந்தது. தமிழ்ப் பள்ளிக்கு அருகில் இருந்த ஒரு ஹாலிலேயே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
கிடைத்த குறைந்த நேரத்தில் மகேந்திரனும், ராமும் சேர்ந்து முடிந்த அளவு மிக நேர்த்தியாக ஏற்பாடுகளை செய்திருந்தனர். மிருதுளா, ஜெனி, பீட்டர் மற்றும் ஜேக்கை அழைத்திருக்க, அலெக்ஸ், ராபர்ட்டோடு, அவன் இன்னும் தொடர்பில் இருக்கும் அவனது வளர்ப்புப் பெற்றோர் சிலரையும் அழைத்திருந்தான்.
அதற்கு மேல் மிருதுளாவின் குடும்பத்தினரைத் தவிர்த்து, தமிழ்ப்பள்ளி நண்பர்கள் என்று மொத்தமே ஒரு ஐம்பது பேருக்குள் தான் விருந்தினர் அழைப்பு. இந்தக் குறுகிய காலத்தில் குடும்பத்தினர் போலவே மிருதுளாவுடன் அவர்கள் பழகி இருக்க, அவர்களை எல்லாம் பார்த்ததும் தான் கலைவாணிக்கு பெரும் நிம்மதி.
நரேந்திரன், ஜான்சன் தலைமை விருந்தினர்களாக இருக்க, பதிவாளர் முன்னிலையில் திருமணம் நடத்துவதாக தான் ஏற்பாடு செய்திருந்தனர். ஜான்சன் இரு மொழிகளிலும் புலமை பெற்று, தமிழ் கலாச்சாரத்திலும் பரிச்சயமானவராக இருக்க, அவர் பங்கு பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் அலெக்ஸுக்கும், மிருதுளாவுக்கும் இன்றியமையாததாக இருந்தது.
இரு பக்கமும் கலந்து பேசி, யாருடைய நம்பிக்கைகளும், உணர்வுகளும் புண்படாதவாறு, எல்லாரையும் முடிந்த அளவு திருப்திப்படுத்தும் வகையில் நூதனமாகத் தான் நிகழ்ச்சி நிரலை வடிவமைத்திருந்தார் ஜான்சன்.
பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக அலெக்ஸ் நிற்க, மாப்பிள்ளைத் தோழர்களாக புன்சிரிப்புடன் ராபர்ட்டும், மகேந்திரனும் கோட், சூட்டில் நின்றனர். அலெக்ஸுக்காக ராபர்ட் சில முறை வேட்டி அணிய முயற்சி செய்திருக்க, அவனுக்கு அது சங்கடமாகவே இருந்தது.
“சேண்டி, இது இடுப்புல இருக்குற மாதிரியே இல்லை. குளிருக்கு காலெல்லாம் வேற நடுங்குது” என புலம்ப, மகேந்திரன், இருவருமே கோட், சூட்டில் வரலாம் என்று விட்டான். அதற்குப் பின் மகேந்திரன் பின் தான் ராபர்ட் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்பது வேறு கதை.
அவன் பேசும் பாதி விஷயங்கள் மகேந்திரனுக்குப் புரியாது. மகேந்திரன் பேசும் பாதி விஷயங்கள் ராபர்ட்டுக்குப் புரியாது. ஆனாலும், ராமும், வருணும், நந்தனும் கூட இருவருக்கிடையில் மொழிபெயர்ப்பு சேவை செய்ய, அவர்களுக்கிடையில் சற்று புரிதல் வந்திருந்தது. ராபர்ட்டின் பொறாமை உணர்வும் கொஞ்சம் குறைந்து இருந்தது.
ஜான்சன் அலெக்ஸிடம், ‘உடையில் என்ன இருக்கிறது, உன் வசதி தான் முக்கியம்’ என்று தான் சொல்லி இருந்தார். ஆனால் அவன் தான், ராமின் உதவியுடன் இதற்காக பல நாள் சோதனை ஓட்டம் நடத்திக் கொண்டிருக்கிறானே. அதனால் முடிந்த அளவு, மிருதுளாவுக்கு ஏற்றவாறு தன்னைப் பொருத்திக் கொள்ளவே முயற்சி செய்தான்.
அதில் மிருதுளாவை விட கலைவாணிக்கு தான் ஏக பெருமை. அவருடன் முயன்று அவன் தமிழிலேயே வேறு உரையாட, அவரைக் கையில் பிடிக்க முடியவில்லை. அவனுக்குக் கூட யாரும் இல்லை என்ற உறுத்தல், இங்கு வந்திருந்த நண்பர்களைப் பார்த்த பின் மட்டுப் பட துவங்கி இருந்தது.
மகேந்திரன் கூட, மிருதுளாவிடம்,
“மிரு, போற போக்கைப் பார்த்தா, அம்மா மாப்பிளைக்கு கட்சி ஆரம்பிச்சிடுவாங்க போல” என்று கேலி செய்தான்.
‘சொந்தங்களின் எண்ணிக்கையில் என்ன இருக்கிறது? உண்மையான அன்புடன் இருப்பது தானே முக்கியம்’ என்கிற வாக்கில் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கி இருந்தார் கலைவாணி. அவ்வப்போது முரட்டுப் பிடிவாதம் வெளிவரும் தான். யார் சொல்லியும் கேட்கவில்லை என்றால், மதிவாணன் தனது ‘வீட்டோ’ (veto) சக்தியை உபயோகித்து விடுவார். அது போல் ஒத்துக் கொண்டது தான் இந்த மாப்பிள்ளைத் தோழர் முடிவும்.
அலெக்ஸின் எதிரில் அழகிய அடர்சிவப்பும், தங்கநிறமும் கலந்த காஞ்சிப் பட்டில் மிருதுளா ஜொலிக்க, அவளுடன், ஜெனியும், வந்தனாவும் ஒன்று போல் சந்தனப்பட்டுடுத்தி நின்றனர். இரு வாரங்கள் வெயில் படாமல் சற்று மெருகேறி இருந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் மகேந்திரன் பார்க்க, அவனை விலாவில் இடித்த ராபர்ட்,
“ப்ரோ, உங்க அம்மா உங்களை முறைக்கிறாங்க” என்று கிசுகிசுக்க, அவசரமாக திரும்பி கலைவாணியைப் பார்த்தான் மகேந்திரன். அவரோ முதல் வரிசையில் வருணையும், நந்தனையும் தன் அருகில் அமர்த்தி ஏதோ கூறிக் கொண்டிருந்தார்.
அந்தக் குளிரிலும் மிருதுளாவுக்கு கைகள் பிசுபிசுத்து, நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூத்தது. அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸ்,
“ஆர் யூ ஓகே?” என வாயசைத்தான்.
மிருதுளா மறுப்பாக தலையசைக்க, ‘நான் இருக்கிறேன்’ என்பது போல் கண்களை மூடித் திறந்து அவளுக்கு தைரியமூட்டினான்.
திருமண பதிவாளருக்கு முன்பே அவர்களது திட்டங்களை விளக்கி விட்டதால், அவர் மணமக்களிடம் தங்கள் திருமண வாக்குறுதியை பகிரும்படி வேண்டினார்.
இரு அடிகள் எடுத்து வைத்து அலெக்ஸ் முதலில் வந்து நிற்க, மிருதுளாவும் மெதுவாக வந்து நின்று ஆர்வத்துடன் அவனைப் பார்த்தாள்.
பின்னே, ஒரு நூறு முறையாவது அவனிடம் ‘என்ன எழுதி வைத்திருக்கிறாய்’ என்று கேட்டிருப்பாள். அவள் என்ன எழுதுவது என்று வேறு என அவளுக்கு குழப்பம்.
இப்படி எல்லாம் முறை இருக்கிறது என்று முன்னரே தெரிந்திருந்தால், சென்னையிலேயே திருமணம் வைக்கலாம் என்றிருப்பாளோ என்னவோ. அலெக்ஸோ, ஒரு குறிப்பும் கொடுக்காமல், ‘திருமணத்தன்று கேட்டுக்கொள்’ என்று விட, மிக ஆவலாக காத்திருந்தாலும், அவளுக்கு சிறு பதட்டமும் கூட.
அவளை ஆழ்ந்து பார்த்து விரிவாகப் புன்னகைத்தவன்,
“ஸாஃப்டி, முதல்ல ஐ காண்ட் பிராமிஸ் என்னோட கடைசி மூச்சு வரைக்கும், உன் கண்ல தண்ணியே வராதுன்னு. ஆனா ஒரு வேளை வந்துச்சின்னா, ஐ பிராமிஸ் கண்டிப்பா அதுக்கு காரணம் நானா இருக்கமாட்டேன் அண்ட் அதை முதல்ல துடைச்சி விடுறது நானா தான் இருப்பேன்”
அவன் கூறியதில் கூட்டத்தில் சிரிப்பலை எழும்ப, மிருதுளாவுக்கு அதிலேயே ஆனந்தக் கண்ணீர் வந்து விட, அவளருகில் வந்து, அதைத் துடைத்தவன்,
“முதல் நாளே, என் பிராமிஸ பிரேக் பண்ண வைச்சிடாதா டார்லிங், பாரு அனுபவஸ்தர்கள் எல்லாரும் சிரிக்கிறாங்க” என்க, சிரிப்புச் சத்தம் அதிகரித்தது.
கூட்டத்தைப் பார்த்து, “டியர்ஸ் ஆஃப் ஜாய்னா ஓகே தானே” என்றவன், மீண்டும் மிருதுளாவிடம் திரும்பி,
“நீ என் கிட்ட எப்பவும் ஒரு கேள்வி கேப்ப ஸாஃப்டி. எதுனால உன்னை எனக்கு பிடிச்சதுன்னு. ஒன்ஸ் ஃபார் ஆல் அதுக்கான பதிலை இன்னைக்கு சொல்றேன்.
ஏன் பிடிச்சதுன்னு இந்த நிமிசம் வரைக்கும் எனக்கு தெரியாது. அதை நான் யோசிக்கிறதும் இல்லை. வாழ்க்கை முழுசுமே கூட இருந்தாலும் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன்.
ஆனா பிடிக்கும் ஸாஃப்டி.
ஏன், எவ்வளவுன்னு சொல்ல முடியாத அளவுக்குப் பிடிக்கும்.
என்னைய நல்லா தெரிஞ்சவங்களுக்குத் தெரியும், இது வரைக்கும் என்னோட வாழ்க்கையோட பெரும்பகுதி தனியா தான் வாழ்ந்திருக்கேன். தனிமை தான் என்னோட மிகப் பெரிய பலம், பலவீனம். மனசளவில எப்பவும் நான் பெரிசா யாரையும் தேடினது கிடையாது. ஆனா அந்தத் தனிமைய உடைச்சி, சதா உன்னையத் தேடுற அளவுக்குப் பிடிக்கும்.
கல்யாணம்ன்றது என்னோட பிளான்ல எப்பவுமே இருந்தது இல்லை. ஆனா வாழ்க்கைல என்னோட பிளான்ல இல்லாதது எல்லாம் செய்ற அளவுக்குப் பிடிக்கும்.
என்னோட பிளான்ல இருந்தது எல்லாம் விடற அளவுக்குப் பிடிக்கும்.
உன் குடும்பத்தை என் குடும்பமா பார்க்கிற அளவுக்குப் பிடிக்கும்.
உன் மொழியை உனக்காக நேசிக்கிற அளவுக்குப் பிடிக்கும்.
எப்ப வேண்ணா கழண்டு விழலாம்னு பயம் இருந்தாலும் கூட, இந்த வேஷ்டியை கட்டிக்கிற அளவுக்குப் பிடிக்கும்.
கண்ல இருந்து தண்ணீ வந்தாலும் பரவாயில்லைன்னு நீ சமைக்கிற காரக் குழம்பு சாப்பிடுற அளவு பிடிக்கும்.
என் மனசோட அடி ஆழத்தில இருந்து சொல்றேன். நீ மனசளவில ஏற்கனவே என்னோட மேன்மையான பாதி தான்.
ஐ பிராமிஸ் ஐ நெவர் லெட் தேட் பார்ட் ஆஃப் மீ கோ.
ஐ பிராமிஸ் ஐ நெவர் டூ எனிதிங் தேட் வில் ஹர்ட் யூ ஆர் பிரேக் யுவர் டிரெஸ்ட்.
ஆன் திஸ் டே, ஐ பிராமிஸ் டு வெல்கம் யூ இன் டு மை லைஃப், அஸ் மை வொய்ப், சோல்மேட், பிரெண்ட் அண்ட் மை எவிரிதிங்” என்று கேலியாகத் துவங்கி உணர்ச்சிப் பூர்வமாக முடித்தான்.
அவன் பேசுவதை கண் சிமிட்டாமல் கேட்டுக் கொண்டிருந்த, மிருதுளாவுக்கு பேச்சே வரவில்லை. குண்டூசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு, அரங்கமே அமைதியில் இருக்க, பெண்களில் சிலர் கண்ணீரைத் துடைத்தனர். ஆண்கள் நெகிழ்வாகப் பார்த்திருந்தனர்.
கலைவாணிக்கும், மதிவாணனுக்கும் பெண்ணை சரியான இடத்தில் சேர்த்து விட்ட நிம்மதி. அவன் பேசியதில் மிருதுளாவுக்கு, தான் எழுதி வைத்து மனனம் செய்தது எல்லாம் மறந்தே போயிற்று.
பதிவாளர், மிருதுளாவை அவள் வாக்குறுதியைப் பகிருமாறு வேண்டிய போது தான், அவளுக்கு தன் நிலையே உரைத்தது. பதட்டமாக அவள் அலெக்ஸைப் பார்க்க, எப்போதும் போல் கண்களாலேயே அவளுக்கு தைரியமூட்ட, ஆழ்ந்த மூச்சுக்கள் எடுத்து தன்னை சரி செய்தவள், மனனம் செய்ததை எல்லாம் தூரப் போட்டு விட்டு மனதில் வந்ததை வார்த்தையாக்கினாள்.
“நம்ம வீட்ல பேசியே மயக்குறதுக்கு ஒரு ஆள் போதும்னு நினைக்கிறேன், மிஸ்டர். ஸ்டோன்” என மிடுக்காக ஆரம்பிக்க, கூட்டத்தில் மீண்டும் சிரிப்பலை.
அதில் அலெக்ஸும் விரிவாகப் புன்னகைக்க, அவன் பார்வையை எதிர் கொண்டவள்,
“உங்களுக்கே தெரியும், உங்களை மாதிரி எல்லாம் எனக்கு பேச வராது.
பட் ஐ பிராமிஸ், வாழ்நாள் பூரா உங்க லாங்க் லெக்சர்ஸ் எல்லாம் சலிக்காம கேப்பேன்.
உங்களுக்கே தெரியும், உங்களை மாதிரி, எனக்கு ரிஸ்க் எடுக்குறது பிடிக்காது. பட் ஐ பிராமிஸ், எனக்கு பயம்னாலும், கண்ணை மூடிட்டு உங்க கைய பிடிச்சிட்டு, ஐ’ல் வாக் வித் யூ வேரெவர் யூ டேக் மீ.
உங்களுக்கே தெரியும், உங்களை மாதிரி ஈசியா ஒரு விஷயத்துக்கு என்னைய மாத்திக்க முடியாது. பட் ஐ பிராமிஸ், எனக்கு கம்போர்ட் சோன்ல இல்லாத விசயம்னாலும், ஐ’ல் டிரஸ்ட் யூ அண்ட் டிரை இட்.
உங்களுக்கே தெரியும், உங்களை மாதிரி எல்லாம் எனக்கு பிரச்சனைகளை ஃபேஸ் பண்ற தைரியம் இல்லை. பட் ஐ பிராமிஸ், உங்களோட கண்ணோட்டங்களை கடன் வாங்கியாவது, இஸ் த கிளாஸ் ஹாஃப் புல்னு நேர்மறையா, எதையும் ஒரு வாய்ப்பா பார்க்க முயற்சி பண்றேன்.
ஐ பிராமிஸ் டு பி யுவர் கம்பானியன் அண்ட் டேக் அவே யுவர் லோன்லினஸ்.
ஐ பிராமிஸ் டு ஆட் கலர்ஸ் டு அவர் லைஃப் அண்ட் லைட் இட் அப்.
ஆன் திஸ் டே, ஐ பிராமிஸ் டு கம் இன் டு யுவர் லைஃப், அஸ் யுவர் வொய்ப், சோல்மேட், பிரெண்ட் அண்ட் பீ யுவர் எவிரிதிங்” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் திருத்தமாக உச்சரித்தாள்.
பதிவாளர் சட்டப்படி அவர்களை கணவன், மனைவியாக அறிவித்து விட, அலெக்ஸ் நெருங்கி மிருதுளாவின் கைகளை பிணைத்துக் கொள்ள, எல்லார் முகத்திலும் புன்னகை.
இருவரும் திருமணப் பத்திரத்தில் கையொப்பம் இட, நரேந்திரன் திருமாங்கல்யத்தை எடுத்துத் தர, அதை மிருதுளாவின் கழுத்தில் அணிவித்தவன், ராபர்ட்டைப் பார்க்க, அவன் சிறு நகைப்பெட்டியை நீட்டினான். அதில் அலெக்ஸின் தாயின் திருமண மோதிரம் பத்திரப்பட்டிருக்க, அதையும் மிருதுளாவின் கைகளில் அணிவித்தான்.
இந்த முறை மிருதுளா தயாராக வந்திருக்க, வந்தனா அவளிடம் அலெக்ஸுக்கான திருமண மோதிரத்தை நீட்ட, அதை அவனது கைவிரலில் அணிவித்தாள். அவன் அவளுக்கு செய்திருந்த நிச்சய மோதிரத்தைப் போலவே செய்யச் சொல்லி, வாங்கி இருந்தனர்.
அவள் அணிவித்ததும் அதை ஆச்சரியமாகப் பார்த்தவனுக்கு, பெரும் மகிழ்ச்சியே. முதன் முறையாக கைகளில் தவழ்ந்த மோதிரம் மிருதுளாவின் மீதான அவன் உரிமையைப் பறை சாற்ற, இனம் காண முடியாத இன்ப அவஸ்தை அவனுக்கு.
இந்த சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும், அலெக்ஸின் பக்கம் வந்திருந்தோர் அனைவரும் “கிஸ் ஹர்”, “கிஸ் ஹர்” என்று கோரஸாக சத்தமிடத் துவங்க, அலெக்ஸ் மிருதுளாவை குறும்பாகப் பார்க்க, கலைவாணியோ கலவரமாகப் பார்த்தார்.
மிருதுளாவை லேசாக அணைத்து, அவள் நெற்றியில் இதழ் ஒற்றியவன்,
“நோ பிடிஏ (PDA*) இன் அ தமிழ் வெட்டிங் ஃபோக்ஸ் (folks)” என்று கண் சிமிட்டினான்.
அதன் பின்னர் ராபர்ட்டும், ஜெனியும் மணமகன், மணமகள் சார்பாக அவர்களை வாழ்த்திப் பேசினர். அலெக்ஸின் வளர்ப்பு பெற்றோர் அவனைக் குறித்த சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள, மொத்தத்தில் வெகு நெகிழ்வான தருணங்களே.
பின்பு மெல்லிசை துவங்க, நண்பர் குழாம் சிறிது நேரம் நடனத்திலும் இறங்கி விட்டது.
நடனம் முடிவதற்குள் அரங்கத்தின் பின் பகுதியில் வட்டமாக உணவு மேசைகள் தயாராக வைக்கப்பட்டு சிறிய பெயர்ப்பலகை போல் ஒவ்வொரு மேசையிலும் வைத்திருந்தனர். அவரவர்க்கு ஏற்றார் போல் இருவகையான உணவுகளும் பரிமாற்றப்பட்டது.
சிறியவர்கள் அனைவருக்கும் கொண்டாட்டமே. கலைவாணிக்கும், மதிவாணனுக்கும் எல்லாம் புதிதாக இருந்தாலும், அலெக்ஸும், மகேந்திரனும் சில முறைகள் அவர்களுக்கு திருமணம் எப்படி நடக்கும் என்று விளக்கி இருந்ததால் கொஞ்சம் இயல்பாக இருந்தனர்.
அலெக்ஸ் பக்க விருந்தினர்களை ஒவ்வொருவராக முறையாக அறிமுகப்படுத்தினான்.
மகேந்திரன் எங்கு இருந்தாலும், என்ன செய்து கொண்டிருந்தாலும் பெற்றோர் மீது ஒரு கண் வைத்திருந்தான். ராமும், நரேந்திரனும் கூட வந்து அவ்வப்போது அவர்களுக்கு தேவையானதை செய்ய, எந்தக் குறைவும் இல்லை.
அலெக்ஸும் மிருதுளாவைத் தன் கைப்பிடியிலேயே தான் வைத்திருந்தான். ஜெனியும், ராபர்ட்டும் கூட அவனைக் கேலி செய்து தீர்த்து விட்டனர். ஆனால் அதை எல்லாம் அலெக்ஸ் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
ஏதோ வெகு நாளாக தேடி அலைந்த பொக்கிஷம் கையில் கிடைத்த உணர்வு அவனுக்கு. அதை முழுமனதாக அவள் கைப்பிடித்தே அனுபவித்தான். மிருதுளாவுக்கும் அது புரிந்தே இருக்க, அவன் இழுப்பிற்கு இசைந்தே அவனுடனே சுற்றினாள். மகேந்திரனும், வந்தனாவும் கூட கேலி செய்ய, சிரிப்புடனே அதையும் கடந்து விட்டாள்.
திருமண விருந்து முடிந்து, மணமக்கள் நேராக மிருதுளாவின் குடும்பத்தினர் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தனர். அங்கு கலைவாணி கூறிய படியெல்லாம் வந்தனா மணமக்களுக்கு சாங்கியங்கள் செய்ய, முன்பே மகேந்திரன் கூறி இருந்ததால், அலெக்ஸும் கவனமாக எல்லாவற்றையும் செய்தான்.
மிருதுளாவின் கால்களை தன் கைகளில் ஏந்தி மெட்டி அணிவிக்க, அவளுக்கு கூச்சத்தில் உடல் நடுங்கியது. சுவாரசியமாக அவளைப் பார்த்துக் கொண்டே, கால்களை தரையில் வைத்தான்.
அடுத்து கலைவாணி சாந்தி முகூர்த்திற்கு நேரம் பார்க்கவேண்டும் என்று ஆரம்பிக்க, இந்த முறை மகேந்திரன் தான் தலையிட்டு அவர்கள் இருவரையும் அலெக்ஸின் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான்.
அப்போதும் கலைவாணி வந்தனாவிடம், அலெக்ஸின் வீட்டை தயார் செய்யச் சொல்ல, அலெக்ஸுக்கு எல்லாம் புதிதாக இருந்தாலும், அவர்களது கவனிப்பும், அக்கறையும் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வைத்தது.
வந்த சிறிது நேரத்திலேயே, கலைவாணி கூறியதெல்லாம் வந்தனா முடித்து விட, இருவரும் மணமக்களை வாழ்த்தி விட்டு கிளம்பி விட்டனர். இருவருக்கும் கணவன், மனைவியாக கிடைத்த முதல் தனிமை. அதின் ஏகாந்தத்தை ஆழ்ந்து அனுபவித்தனர்.
பலவிதமான தடங்கல்களுக்கு பின்னர் பெற்றோரின் ஆசிகளுடன் எந்தக் குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடித்திருக்க, மிருதுளாவுக்கு நிம்மதிப் பெருமூச்சு. அலெக்ஸின் காத்திருப்பும், அவளுக்காக அவன் எடுத்த முயற்சிகளும், அவள் குடும்பத்தினருடன் ஒன்ற அவனது பிரயத்தனங்களும் அவளை வெகுவாக நெகிழ்த்தி இருந்தது.
அவள் திருமணப் புடவையிலேயே பால்கனியில் நின்றிருக்க, வெளியே பனி பொழியத் துவங்கி இருந்தது. பெரும்பாலும் லண்டனில் நவம்பர் மாதம் பனி விழுவது கிடையாது. அந்த வருடம் முன்னதாகவே பனி பொழிய, மிருதுளா ஆர்வமாக அதைப் பார்த்து நின்றாள்.
பட்டு வேட்டி அசௌகரியமாக இருக்க, அலெக்ஸ் அப்போது தான் அதை மாற்றி விட்டு, இலகுவான உடை அணிந்து அவள் பக்கம் நின்றவன்,
“ஹேய் வைஃபி” என்று அவள் இடையில் கைகோர்த்துக் கொண்டு
“டிரஸ் சேஞ்ச் பண்ணலையா?” என்றான்.
“ம்ம்ம், பண்ணனும். குளிருக்கு இதுவே, வார்மா, நல்லா இருக்கு” என்றவள், நடுக்கும் குளிரில் அவனது கைகள் இதமான வெம்மையைத் தர, அவன் கைகள் மேல், தன் கைகளைப் பதித்து அவன் தோளில் சலுகையாக சாய்ந்து கொண்டாள்.
இதமாக, இருவரும் கூடு சேர்ந்த பறவைகளாய் அந்தத் தருணத்தை அனுபவித்தனர். சில நிமிடங்கள் பேச்சே தேவை இல்லாத மௌனத்தில் கழிய,
“ஏதாவது சாப்பிடிறியா? மதியம் நீ ஒழுங்காவே சாப்பிடல” என்றான் அலெக்ஸ்.
“ம்ஹூம், பசிக்கல. ஐ ஆம் வெரி ஹாப்பி லெக்ஸி” என்றவள், தன் மறு கையால் அவனை அணைத்துக் கொண்டாள்.
“மீ டூ ஸாஃப்டி. என்னால எக்ஸ்பிரஸ் பண்ணவே முடியல” என்றவன் அவளைத் திருப்பி தன்னுடன் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
வாகாக அவனுடன் இழைந்தவள்,
“இது நம்புற மாதிரி இல்லையே” என அவனை குறும்பாக பார்க்க,
“சீக்கி (cheeky), வார்த்தையால தான் எக்ஸ்பிரஸ் பண்ண முடியலைன்னு சொன்னேன். எனக்கு தெரிஞ்ச மாதிரி எக்ஸ்பிரஸ் பண்றதுக்கு பெர்மிஷன் கொடுப்பியா?” என்று கண் சிமிட்டினான்.
அதில் முகம் சிவந்தவள், மௌனமாகவே இருக்க, அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.
அவன் முகம் பார்க்க முடியாமல், கழுத்து வளைவில் முகம் பதித்துக் கொண்டவள் சிணுங்க, அது அலெக்ஸின் மனம் கவர்ந்த இசை ஆகிற்று.
அவளை அலங்கரிக்கப்பட்டு இருந்த படுக்கையில் விட்டவன், அவள் பாதத்தின் அருகில் அமர்ந்து, அவள் கால்களை தன் மடியில் வைத்துக் கொண்டான்.
அதில் கூச்சமாக உணர்ந்தவள், எழுந்து அமர்ந்து,
“லெக்ஸி, என்ன பண்றீங்க?” என்றாள்.
அவள் பாதங்களை வருடிக் கொண்டே இருந்தவன்,
“உனக்கு ஒன்னு தெரியுமா ஸாஃப்டி?” என ஆழ்ந்த குரலில் வினவினான்.
“என்ன?” என்று அவள் கிசுகிசுப்பாகக் கேட்க, அவள் மூக்கோடு உரசியவன்,
“ஐ ஆல்ரெடி ஃபீல் எக்ச்டஸி. அப்படி ஒரு நிம்மதியா இருக்கு. ஆழ்கடல் அமைதின்னு சொல்வாங்கள்ள. அது மாதிரி.
நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னது, இட்ஸ் நாட் ஃபார் அ பிசிகல் இண்டிமஸி. நீ என் கூட இருக்கல்ல, தேட் ஃபீல் இஸ் அமேசிங். என் கூட என் வீட்டில என்னோட ஒரு பார்ட்டா, அன்கண்டிஷனல்லா நீ இருக்கல்ல திஸ் இஸ் சம்திங்.
தனிமை மட்டுமே துணைன்னு தான் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. பேருக்கேத்த மாதிரி ஸ்டோன் தான். நத்திங் கேன் அஃபெக்ட் மீ. ஆனால் இப்ப மனசுக்குள்ள என்னமோ உருகி வழியுது. பறக்குற மாதிரி இருக்கு.
ஆஃப் கோர்ஸ், ஐ லாங் ஃபார் யூ பிசிகலி டூ. பட் நவ், ஐ ஆம் த்ரில்ட். இந்த வெயிட்டிங் கேம் கூட நல்லா தான் இருக்கு. லெட்ஸ் டேக் இட் ஸ்லோ, நேச்சுரலி, வென் இட் ஆல் பால்ஸ் இன் ப்ளேஸ்.
இப்போ ஆல் ஐ நீட் இஸ் அ கிஸ். மே ஐ ப்யூட்டி?” என்று காந்தக் குரலில் கேட்க, மிருதுளாவின் இமைகள் சம்மதமாக தானாக மூடியது.