திருமணம் முடிந்த கையோடு, அலெக்ஸை இந்தியா அழைத்துச் செல்வதற்கான வேலைகளை மிருதுளா துவங்கி விட்டாள். வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய, சில நாட்களிலேயே மகேந்திரன் தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டான்.
போவதற்கு முன், வந்தனாவும், கலைவாணியும் மிருதுளா தங்கி இருந்த வீட்டைக் காலி செய்ய உதவினர். மிருதுளா ஜெனியுடன் ஏற்கனவே அலெக்ஸின் வீட்டில் தேவையானவற்றை ஒழுங்கு செய்திருக்க, எல்லாம் இலகுவாகவே முடிந்து விட்டது.
மிருதுளாவின் குடும்பத்தினர் சென்னை கிளம்பியதுமே அலெக்ஸ் தேனிலவு பயணத்தைத் துவங்கி விட்டான். மிருதுளா எவ்வளவு கேட்டும், எந்த இடம் என்று சொல்லாமல், ‘சஸ்பென்ஸ்’ என்று முடித்து விட்டான்.
‘ரொம்பத்தான்’ என மிருதுளாவும் முகத்தைக் தூக்கி வைத்துக் கொண்டு சில தினங்கள் சுற்றினாலும், அவன் அழைத்து வந்த இடத்தைப் பார்த்து விழி விரித்தாள். ‘கிளாஸ்கோ’ (Glasgow) செல்வதற்கான ரயிலில் ஏறிய போது கூட ஸ்காட்லேண்டில் ஏதோ இடம் என்று தான் நினைத்திருந்தாள்.
ரயிலில் இருந்து இறங்கி, ‘லண்டன் குளிரே நமக்கு தாங்காது, இதுல டிசம்பர்ல ஸ்காட்லேண்ட். விளங்கிரும்’ என யோசித்துக் கொண்டே, சிற்றுந்தில் அவனுடன் பயணிக்க, ஸ்ட்ரதைர் என்ற பெயர்ப் பலகையைப் பார்த்ததும், வேகமாக அலெக்ஸை திரும்பிப் பார்த்தாள்.
அவன் சிரிப்புடன், கண் சிமிட்ட, அவன் கை வளைவில் கை கோர்த்துக் கொண்டாள். இந்த முறை தேனிலவுக்கான மரவீட்டைப் பதிவு செய்திருக்க, புதுமணத் தம்பதிகளை வரவேற்க அது அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிற்றுந்தில் இருந்து இறங்கி, ஏரியை ஒட்டி மற்ற மரவீடுகளுக்கு சற்று தொலைவில், மறைவாக அமைந்திருந்த வீட்டிற்குள் நுழைவதற்குள்ளேயே மிருதுளாவுக்கு குளிர் உடலைத் துளைத்து எடுத்தது.
“லெக்ஸி, யூ ஆர் ஜோக்கிங் ரைட்? இந்தக் குளிர்ல நான் ஃப்ரீஸ் ஆகிடுவேன்” என்பதற்குள் மிருதுளாவுக்கு பற்கள் தந்தி அடித்தது.
அவர்களது உடைமைகளை ஹாலில் இறக்கி வைத்தவன், அவளை நெருங்கி தன் கம்பளி மேலாடைக்குள் அவளை இழுத்து, கைகளை பரபரவென தேய்த்து விட்டான்.
“இதுக்கு நம்ம வீட்லயே இருந்திருக்கலாம். இந்தக் குளிர்ல எப்படி வெளில போக முடியும்?” என அவள் சிணுங்க,
“இந்த இடம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் பிளேஸ் ஆகிடுச்சு ஸாஃப்டி. கல்யாணம்னு முடிவு பண்ணப்பவே இங்க தான் வரனும்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம முதன் முதல்ல இங்க பார்த்தப்போ, உன் கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசுறதுக்குள்ள நான் பட்ட பாடு, ஹப்…ப்பா. சோ, இந்த முறை ஐ ஹேவ் ஆல் ரைட்ஸ்.
நான் போனவாட்டி தனியா போன இடத்துக்கெல்லாம் உன்னைய கூட கூட்டிட்டு போனும்னு தான் முதல்ல நினைச்சிருந்தேன். ஆனா டிசம்பர்ல அது பாசிபிள் இல்லை.
அதுமட்டுமில்லாம, நாம எதுக்கு வெளில போகனும்? நீ ப்ரீஸ் ஆகாம, ஃபுல்லா வார்மா இருக்கிறதுக்கு நான் கேரண்டி ஸாஃப்டி” என்றவன் சொன்னபடியே, அச்சு பிசகாமல் தன் வாக்குறுதியை நிறைவேற்றி, அன்பினால் அவளை அர்சித்தான்.
அடுத்தடுத்து பயணங்கள் இருப்பதால், மிருதுளா ஒரு வருடத்திற்கு பணி இடைவெளி எடுத்திருந்தாள். அலெக்ஸும் வேலைகளை ஒதுக்கி வைத்திருக்க, எந்த இடையூறும் இல்லாமல் தம்பதிகள் தங்கள் தனி உலகத்தில் வாழ்ந்தனர்.
நேரத்திற்கேற்றாற் போல் அறைக்கே உணவு வரவழைத்து உண்டவர்கள், ஒருவர் கவனிப்பில் மற்றவர் மூழ்கித் திளைத்தனர். அலெக்ஸ் ஏங்கிய படியே, நிதமும் அவள் முகம் பார்த்து விழிக்கும் காலைப் பொழுதுகள் தனிச்சிறப்பு.
மனதின் பூரிப்பு, முகத்திலும் பிரதிபலிக்க, மனைவியின் வதனம் பார்க்க தெவிட்டவில்லை அந்த புதுக் கணவனுக்கு. கடந்த வாழ்க்கையின் கசடுகள் மறைந்து, இயல்பான மிருதுளா முழுவதுமாக திரும்பி இருந்தாள். அதை மீட்டெடுத்ததில், அவனுக்கு பெருமகிழ்ச்சி. அவள் தூங்கும் போது மட்டும் தான் இப்படி நிர்மலமாக அவளை ரசித்துப் பார்க்க முடியும்.
விழித்திருக்கும் பொழுதுகள் எல்லாம், இவ்வளவு நாட்களுக்கும் சேர்த்து வைத்து மிருதுளா கதை பேச, அதைக் கேட்பதற்கே அவனுக்கு நேரம் போதாது. மௌனராகத்தில் ஆரம்பித்து ராஜா ராணி வரை, கணவன், மனைவி காதல் கதைகளாக வேறு தொலைக்காட்சியில் அவனைப் பார்க்க வைத்திருக்க, அலெக்ஸுக்கே கண்ணில் நீர் வந்து விடும் போல் இருந்தது. சிரிப்புடன் அவள் அலப்பறைகளை ரசித்தவன், அவள் இழுப்புக்கெல்லாம் இன்பமாக தான் இசைந்து கொடுத்தான்.
தேனிலவில் இருந்து லண்டன் வந்தவுடன் சில நாட்களிலேயே, சென்னை கிளம்பி விட்டனர். மிருதுளாவின் வீட்டில், அலெக்ஸுக்கு ராஜ உபசரிப்பு.
பார்ப்பவர்களிடம் எல்லாம், ‘ராசா கணக்கா மாப்பிள்ளை’ என்பதே கலைவாணியின் அறிமுகம். வந்தனாவை ஒரு நிமிடம் உட்கார விட மாட்டார். ‘அதைச் செய், இதைக் கொடு’ என்று ஏவிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அலெக்ஸ் கையெடுத்து கும்பிடும் நிலை தான்.
எதை மறுத்தாலும், அவர் மனம் புண்பட்டு விடுமோ என்று அவன் எல்லாவற்றுக்கும் மிருதுளாவின் முகம் பார்க்க, அவ்வப்போது ஒவ்வொருவராக அவனை கலைவாணியின் அன்புத் தொல்லையில் இருந்து காப்பாற்றி விடுவர்.
நெருங்கிய சொந்தங்கள், நண்பர்களை அழைத்து விமரிசையாக வரவேற்பு நடந்திருக்க, அலெக்ஸுக்கு தான் சங்கோஜமாக இருந்தது. ராபர்ட்டினால் வர முடியாது போய் இருக்க, நல்ல வேளையாக ராம் வந்திருந்தான். ராமும், மகேந்திரனும் தான் அவன் கூடவே இருந்து விருந்தினர்களுடன் அந்த சூழலை சமாளிக்க உதவினர்.
வரவேற்புக்கு விஜயும், அவன் அன்னையும் கூட வந்திருக்க, மகேந்திரனுக்கு அது சற்றும் விருப்பமில்லை தான். ஆனால் மதிவாணனால், சகோதரியை விட்டுக் கொடுக்க முடியாதே. அவர்களும் மனதார தம்பதிகளை வாழ்த்தி விட்டுத் தான் சென்றனர்.
இருவரும் தனியாக மிருதுளாவிடம், வினய் செய்ததற்காக மன்னிப்பை வேண்ட, அந்தப் பேச்சே அவளுக்குப் பிடிக்கவில்லை. அலெக்ஸை சங்கடமாகப் பார்க்க, அவனோ முகத்தில் எதையும் காண்பிக்கவில்லை. எல்லாரிடமும் புன்னகையுடனே பேசியது போல அவர்களிடமும் பேசி, அனுப்பி விட்டான்.
அவர்கள் அந்தப் பக்கம் சென்றதும், அவள் பக்கம் குனிந்து, குரலைத் தாழ்த்தி,
“இப்ப என்ன குழப்பம் ஸாஃப்டி?” என வினவ,
“குழப்பம் எல்லாம் எதுவும் இல்லை. அத்தையையும், விஜய் அத்தானையும் பார்க்க சங்கடமா இருக்கு” என்றாள்.
‘இன்னும் என்ன பொத்தான்’ என முகம் சுருக்கியவன்,
“நீ சங்கடப்பட என்ன இருக்கு? ஆக்சுவலி ஐ ஆம் தேங்க்ஃபுல் டு தெம். வினய் சொதப்பினதுனால தானே நீ எனக்கு கிடைச்ச. அண்ட் கட் தேட் அத்தான். இட் சவுண்ட்ஸ் இண்டிமேட் இன் த மூவிஸ் வீ வாட்ச்ட்” என பொறாமையில் பொசுங்க, மிருதுளா கலகலவென நகைத்தாள்.
மகளின் சிரிப்புச் சத்தத்தில், அவளைத் திரும்பிப் பார்த்த கலைவாணிக்கு மனம் குளிர்ந்தது. சற்று முன்னர் விஜயுடன், நாத்தனார் மணமக்களின் அருகே சென்ற போதே, அவர் மதிவாணனிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்திருந்தார். மகள் முகம் சட்டென்று வாடியதை கவனித்திருந்தாரே. நிமிடங்களில் அவள் புன்னகையை மீட்டெடுத்த மருமகன் மேல் பேரன்பு பெருகியது.
“லெக்ஸி, விஜய் அத்தான் என்னோட கசின், குழந்தைலேர்ந்தே அந்த மாதிரி தான் கூப்பிட்டுப் பழக்கம். இதென்ன புதுசா பொசசிவ்னெஸ் உங்களுக்கு” என அவனை சீண்ட,
“எல்லாம் பழக்க தோஷம், எப்பவுமே உன் கிட்ட ஒட்டி, உரசிட்டே இருக்கேன்னா, அதுனால உன்னோட பழக்கம் எல்லாம் எனக்கு வந்துடுச்சு போல” என கிசுகிசுக்க, அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
அவன் கூறுவதும் உண்மை தான். கடந்த சில வாரங்களில் இருவரது குணாதிசயங்களும், சற்று இடம் மாறி தான் விட்டது போலும். ஆனாலும் அதற்கு அவன் கூறிய காரணம் கொஞ்சம் அதிகம் தான் என்பது போல், அவனை முறைக்க, அவன் முத்தமிடுவது போல் உதடுகளை லேசாக குவிக்கவும், சட்டென்று அவன் கை பிடித்து கீழிழுத்தாள்.
“என்ன பண்றீங்க?” என்று அவன் காதருகில் பல்லைக் கடித்துக் கேட்க,
“டிரையிங் டு கிஸ் யூ?” என்று ‘இதெல்லாம் ஒரு கேள்வியா’ பார்வை பார்த்தவனை,
“உதைபடுவீங்க” என்று மிரட்டினாள்.
“ஏய், நான் உன் புருஷன்டி. நான் ஒரு கிஸ் கூட பண்ணக் கூடாதா?” என்று வீம்புக்கென்று “டி”யில் அழுத்தம் கொடுத்து அவளை வம்பிழுக்க, ‘உன்னை முதல்ல உதைக்கனும் ராம்’ என்று ராமிற்கு அர்ச்சனை செய்தவள்,
“பண்ணலாம், ஆனா இங்க இல்லை. நோ பிடிஏ (PDA) சொல்லி இருக்கேன்ல” என ஞாபகப்படுத்தினாள்.
“அப்ப நீ அத்தான் சொல்லாத” என்று ஆரம்பித்த இடத்திற்கே வர,
“ரொம்ப கெட்டுப் போய்ட்டீங்க லெக்ஸி. இனிமே நோ தமிழ் ஸ்கூல் அண்ட் கட் யுவர் பிரெண்ட்சிப் வித் ராம். எல்லாம் தேவை இல்லாத விஷயம் மட்டும் தான் கத்துருக்கீங்க” என்றாள்.
“அப்படின்ற, ரைட்டு. அப்போ நான் என்னோட குருவை மாத்துறேன்”
“யாரு உங்க குரு?” என்று மிருதுளா புரியாமல் பார்க்க, அலெக்ஸ்,
“அத்தை” என பிள்ளைத் தமிழில் சத்தமாக கலைவாணியை அழைக்க, அவர் போட்டது போட்டபடி, அடுத்த நிமிடம்,
“என்ன மாப்பிள்ளை?” என்றபடி, அவன் அருகில் வந்து நின்றார்.
‘இப்ப என்ன சொல்ற?’ என்பது போல் அலெக்ஸ் அவளை கெத்தாகப் பார்க்க,அவன் பதிலளிக்கும் முன், ‘மவனே, யாருகிட்டகிட்ட, இப்ப உன்னை எப்படி சிக்க வைக்கிறேன் பாரு’ என நினைத்தவள், முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு,
“மா, உங்க மாப்பிள்ளைக்கு ரொம்ப பசிக்குதாம். நேத்து நீங்க கொடுத்த ஜாங்கிரியும், திருநெல்வேலி அல்வாவும், ரொம்ப சூப்பரா இருந்ததாம். அது இன்னிக்கு கிடைக்குமான்னு கேட்கத் தான் கூப்பிட்டாங்க” என்று மாட்டி விட, இதை எதிர்பார்க்காத அலெக்ஸ், ‘அடிப்பாவி’ என அவளை வாய் பிளந்து பார்த்தான்.
பின்னே ஒரு வாரமாக அவர்கள் உபசரிப்பில் தினமும் சீரகமோ, ஓமமோ சேர்த்து தண்ணீரை சுட வைத்து குடித்துத் தான் பொழுது ஓடுகிறது. காரம் கூட கொஞ்சம் பழகிக் கொண்டான், ஆனால் அதீத இனிப்பும், எண்ணெயில் பொரித்தவைகளும் சுத்தமாக அவனால் சாப்பிட முடியவில்லை.
எனவே, கலைவாணி அவளை நம்பாத பார்வை பார்க்க, அலெக்ஸ் அதற்குள் மிருதுளாவைப் பார்த்து ‘ப்ளீஸ், நோ’ என வாயசைத்தான்.
‘அது அந்த பயம் இருக்கட்டும். சின்னப் புள்ளத்தனமா எங்கிட்ட வைச்சிகிட்டா சேதாரம் ஆயிடும் அப்பு’ என்று அவனை கேலியாகப் பார்த்தாள்.
இவர்கள் ஓட்டும் மௌனப்படம் கலைவாணிக்குப் புரிந்து விட்டதோ என்னவோ, அவர், ‘நல்ல பிள்ளைக’ என தலையில் அடித்துக் கொண்டு, சிரிப்புடனே கீழ் இறங்கி விட்டார்.
இப்படியாக கலகலப்புக்கும், கேலிக்கும், அன்புக்கும், அக்கறைக்கும் பஞ்சம் இல்லாமல் அலெக்ஸின் முதல் மறுவீட்டுப் பயணம் அமைந்து விட, அந்த சில வாரங்கள் அன்பு மழையில் நனைந்தான் எனலாம்.
ஒரு திருமணத்தால், புதிதாக ஒரு குடும்பமே கிடைத்திருக்க இவ்வளவு நாள் கிடைத்திராத பாசப் பிணைப்பு, இப்போது அவனை அதிலேயே திளைக்கச் செய்ய, அகலாத பிரமிப்பு அலெக்ஸுக்கு. எப்படி இவர்களை விட்டு மிருதுளா தனியாக இருந்தாள் என்பதே அவனுக்கு இப்போது புரியவில்லை. இன்னுமே அவளை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
தாயும், மகளும் சீராடியதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தானே. கலைவாணிக்கு அவரது பயங்கள், கவலைகள் எல்லாம் தீர்ந்து மகள் வாழ்க்கை சீராகி விட, அவருக்கு வேறென்ன வேண்டும். மிருதுளாவிடமும் அதையே தான் கூறி இருந்தார்.
இங்கிலாந்து திரும்பியதும், ராபர்ட் ஏற்கனவே ஆரம்ப கட்ட வேலைகளை செய்து வைத்திருக்க, ரெக்ஸியின் அடையாளத்தை சட்ட விதிகளுக்குள் உட்பட்டவைகளாக மாற்றுவதற்கு ஏதுவான எல்லா வேலைகளும் அசுர வேகத்தில் நடந்தது.
திட்டமிட்ட படியே, அலெக்ஸ், மிருதுளாவை சூரிக் (Zurich) அழைத்துச் சென்று விட்டான். அவனுக்கு வேலை மாற்றம் என்பது போல் வீட்டினரிடம் சொல்லி அவர்களை சமாளிப்பதற்குள் மிருதுளாவுக்கு விழி பிதுங்கியது.
இருவரும் சூரிக்கில் இருக்கும் போதே பல்வேறு நாடுகளில் ஓவியக் கண்காட்சி போல் நடத்தி, அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டு இதற்காக ஏற்படுத்தி இருந்த அமைப்பு மூலம் சட்ட சிக்கல்கள் எல்லாம் நிவிர்த்தி செய்யப்பட்டது. அதற்கே இரு ஆண்டுகள் ஆகி இருந்தது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு….
ஸ்ட்ராட்ஃபோர்ட் தொடர்வண்டி நிலையம்….
அலெக்ஸ், தோளில் தன் இரண்டு வயது மகள் எலிசபெத் ஸ்டோனைத் தட்டிக் கொடுத்தபடி, நின்றிருக்க, அவன் அருகில் மிருதுளா நின்றிருந்தாள். ஒருபக்கம் மிருதுளாவின் கைப்பிடித்து ஆறு வயது லில்லி நிற்க, அவளை ஒட்டி அவள் இடையில் தலையை சாய்த்து நான்கு வயது ஒலிவியா.
மூன்று வருடங்களுக்கு முன், அலெக்ஸும், மிருதுளாவும் இங்கிலாந்து திரும்பிய பின் முதல் வேலையாக தங்களை வளர்ப்புப் பெற்றோராக பதிவு செய்ததும் கிடைத்த வைரங்கள் தான் லில்லியும், ஒலிவியாவும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள், பெற்றோரை விபத்தில் பலி கொடுத்திருக்க, அரசின் பராமரிப்பில் இருந்தனர். இருவரையும் ஒரே வீட்டில் சேர்த்துக் கொள்வதற்கு யோசித்து விட்டு பலரும் ஒதுங்கி விட்டனர். ஆனால் அழைத்து வந்த தினத்தில் இருந்து, மிருதுளாவும், அலெக்ஸும் அவர்களுக்கு பெற்றோராகவே மாறி விட்டனர்.
எலிசபெத் பிறப்பதற்குள் இரு சிறுமிகளும் தங்கள் புது சூழலில் நன்றாகப் பொருந்தி விட, அவள் பிறந்த போது தங்கள் குட்டித் தங்கையை ஆரவாரமாக வரவேற்றனர்.
ராபர்ட் அவனது பெண் தோழியை அறிமுகப்படுத்தவும், சிறுமிகளுடன் நேரம் செலவழிக்கவும், எல்லாரையும் ஹைட் (Hyde) பார்க் வருமாறு அழைத்திருந்தான். அதற்காகத் தான் அலெக்ஸின் அரசியும், இளவரசிகளும் அவனை இழுத்து வந்திருந்தனர்.
இல்லாவிட்டால், ரெக்ஸியும், லெக்ஸியும் எப்பவும் பிசி தான். ஒன்றுக்கு மூன்றாக குழந்தைகள் இருக்க, மிருதுளாவின் சட்டங்களுக்கு உட்பட்டு இரட்டை குதிரை சவாரி செய்வது ஒன்றும் எளிதல்லவே. ரெக்ஸியின் செயல்பாடுகள் எல்லாம் இப்போது சட்டத்திற்கு உட்பட்டதாகவே இருந்தாலும், அவன் அடையாளம் இன்னும் ரகசியமாகத் தான் வைக்கப்பட்டு இருந்தது.
முந்தைய நாள் இரவு தான் அவன் வெளிநாடு சென்று திரும்பி இருக்க, லிசி குட்டி அப்பாவிடம் அட்டை போல் ஒட்டிக் கொண்டிருக்கிறாள். அது புரிந்தது போல், லில்லியும், ஒலிவியாவும், மிருதுளாவைப் பிடித்துக் கொண்டனர்.
மிருதுளா பட்டயக் கணக்காளர் தேர்ச்சி பெற்றிருக்க, ஜேக் பணி ஓய்வு பெற்றதும், அவர் இடத்திற்கு பதவி உயர்வு பெற்று இருந்தாள். கணவன், மனைவி இருவரும் அவரவர் பணியில் சலிக்காமல் ஓடினாலும், இது போன்ற காட்சிகளும் அவ்வப்போது நடக்கும் தான்.
சுற்றி இருந்தவர்கள் ஒரு நிமிடம் இந்தக் குடும்பத்தை கவனித்துப் பார்த்துத் தான், அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்குத் திரும்பினர். அவர்கள் ஏற வேண்டிய தொடர்வண்டி வந்து விட, சிறுமிகளை அழைத்துக் கொண்டு மிருதுளா ஏறி விட, அவர்கள் பின் மூவருக்கும் அரணாய் அலெக்சாண்டர் ஸ்டோன்!
எந்தளவு தனிமை அவன் வாழ்க்கையில் ஆட்சி செய்தோ, இப்போதோ அதற்கு நேரெதிர். பெரும்பாலும் வெளியில் செல்வதே அலெக்ஸுக்குப் பிடிக்காது. தனியாக இருக்கவும் பிடிக்காது. வீட்டில் இருக்கும் நான்கு பெண்ணரசிகளுடனும் அவன் நேரத்தை செலவிடுவதே பேரானந்தம். இன்றும் ராபர்ட்டை வீட்டிற்கு தான் அழைத்திருக்க, அவன் தான் பிடிவாதமாக, வெயில் காலத்திலாவது பிள்ளைகள் சூரியனைப் பார்க்கட்டும் என்றிருந்தான்.
“என்ன, இன்னும் மூஞ்சி தூக்கி வைச்சிருக்கீங்க?” என மிருதுளா கணவனை அதட்ட,
“இன்னிக்கு அவசியம் வெளில போகனுமா? ராபி தான் உளர்றான்னா நீயும் ரொம்ப படுத்துற ஸாஃப்டி” என சலித்தான் கணவன்.
அவன் சலிப்பில், மனைவி கிளுக்கிச் சிரித்தாள்.
“லெக்ஸி, இப்ப ஒத்துக்கிறேன். சேர்க்கை சரி இல்லைன்னு” என அவனை வார, அதையெல்லாம் அவன் கண்டு கொள்ளவில்லை. பின்னே, மிருதுளாவின் குணம் எல்லாம் அவனுக்கு செவ்வனே இடம் மாறியது போல் தான் அவன் இப்போதெல்லாம் நடக்கிறான்.
“நல்ல விஷயம் வந்தா பரவாயில்லை, நீங்க இப்படி வீட்டுப் பறவையா ஆக்ட் பண்றதெல்லாம் ரொம்ப கமெடியா இருக்கு” என அவள் கடுப்பாகக் கூறினாள்.
அவளுக்கு இவன் பண்ணுவதற்கெல்லாம் ராபர்ட் அவளைத் தான் காரணம் சொல்வான் என்ற கடுப்பு.
‘சேண்டி இப்படி, சேண்டி அப்படி, கல்யாணத்துக்கப்புறம் உனக்கு பயந்து தான் இதெல்லாம் பண்ண மாட்டேன்றான்’ என அவளை சீண்டுவதே வேலை அவனுக்கு. இன்னமும் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு அலெக்ஸ் தான், அவ்வப்போது விழி பிதுங்கி நிற்பான்.
“ஓய், நான் பண்றது ஆக்ட் மாதிரியா இருக்கு. ராபி சொல்ற மாதிரி நீ என்னை நிஜமாவே மாத்திட்ட போல” என கண் சிமிட்ட, மிருதுளா அவனை முறைத்தாள்.
அதில் சிரித்தவன்,
“நீ இப்படி யோசிச்சுப் பாரேன். எனக்கு வாழ்க்கை பத்தின உன்னோட கண்ணோட்டம் புரிஞ்சிருச்சு. ரொம்ப பிடிச்சும் இருக்கு. அதுனால அதை ஃபாலோ பண்றேன்னு வைச்சிக்கலாம். அதே மாதிரி தான் நீயும். என்னோட கண்ணோட்டம் உனக்கு பிடிச்சிருக்கு. அதுல எது ஒத்து வருதோ அதை நீ ஃபாலோ பண்ற.
நம்ம லவ் லைஃபோட பெரிய சீக்ரெட் இது தான். நான் உன்னைய மாத்த முயற்சி பண்ணல, எப்பவும் பண்ண மாட்டேன். நீயும் என்னைய மாத்த முயற்சி பண்ணல. நானா தான் உனக்கேத்த மாதிரி மாறனும் முயற்சி பண்றேனே தவிர நீ எதையும் ஃபோர்ஸ் பண்ணது கிடையாது. அப்படியே இருப்போம் ஸாஃப்டி, நோ டென்ஷன்” என்க, அதற்குள் லிசி குட்டி சிணுங்க ஆரம்பித்து விட்டாள்.
“ம்க்கும், உங்க லெக்சருக்கு உங்க பொண்ணே சிணுங்க ஆரம்பிச்சிட்டா” என நொடித்தவள்,
“சரி என்னவெல்லாமோ மாத்திக்க டிரை பண்றீங்களே, இந்த லெக்சர் அடிக்கிறது மாறுமா, மாறாதா?” என ஒரு கண் மூடி, அவனை குறும்பாகப் பார்க்க,
“அதெல்லாம் செட் இன் ஸ்டோன். எப்பவும் மாறாது, மிஸஸ். மிருதுளா ஸ்டோன்” என விரிவாகப் புன்னகைத்தான்.