ஹரித்திரனின் கணக்கீடு மிக சரியே என்பதை போல தான் சம்ருதிக்ஷாவின் நடவடிக்கைகள்.
அதிர்வெல்லாம் அன்றைய ஒருநாள் மட்டுமே என்பதனை போல அவனை மறுநாள் மிக திடமாகவே எதிர்கொண்டாள் சம்ருதிக்ஷா.
மெல்லிய சிரிப்புடன் அந்த மாற்றத்தையும் அளவீட்டில் வைத்துக்கொண்டான் ஹரித்திரன்.
இப்படி அவனின் கணக்கீட்டினுள் அவளிருப்பதை கண்டுகொண்டால் என்றால் அது இன்னுமே தீக்ஷாவின் இறுக்கத்தை கூட்டிவிடும் என்று அதையும் கவனியாததை போல கடந்துவிட்டான் ஹரித்திரன்.
அதன்பின் பேசவேண்டிய சூழ்நிலை வந்துவிட்டாலும் அவளின் இடம் தாண்டி ஒருவார்த்தை அவனை அதிகமாய் பேசவிடுவதும் இல்லை. தானும் பேசுவதில்லை.
காலை வணக்கம், மாலை வணக்கம் என்று ஏதேனும் தெரிவித்தாலும் முகம் மாறுவதில்லை.
அவனுக்கான பதில் அவனின் உத்தியோகத்திற்கான மரியாதையுடன் அவளிடமிருந்து கிடைக்க பெற்றது.
உண்மையில் அதில் வெறுப்பான வெறுப்பு தான் ஹரித்திரனுக்கு. அதற்கென அவளை தொந்தரவு செய்து, அந்த எல்லையை தாண்டி செல்லவும் முனையவில்லை.
“நீ வேடிக்கை பார்த்துட்டே இரு ஹரி. இவ்வளோ நாள் உனக்குள்ள முடங்கின. இப்ப அவளை பார்த்தும் முடங்கி கிடக்கற…” என்று சுகன்யாவின் மகன் குமரன் அலுப்புடன் பேச,
“ப்ச், அவன் சரியா தான் இருக்கான்…” என்றார் சுகன்யா தன் மகனிடம்.
“என்ன சரியா இருக்கான்? வேலைக்கு சேர்ந்து பத்து நாளும் கண்ணுலையே படலை. சரி பார்த்த பின்னாடியாச்சும் பேசுவான்னா இதோ ஒருமாசம் ஜஸ்ட் லைக் தட்ன்னு போயிருச்சு. இன்னும் ஹாய், பைலையே இருந்தா இவனுக்கு அறுவதாம் கல்யாணம் தான்…” குமரன் கொந்தளித்து பேச,
“அடங்குடா…” என்று அவனின் தோளில் தட்டிய ஹரித்திரன் பெருமூச்சுடன் சுகன்யாவையும் பார்த்தான்.
“அத்தனை சீக்கிரம் அவளோட இழப்புல இருந்து வெளிவர கூடிய சூழ்நிலைல தீக்ஷா இல்லை. ஏற்கனவே கஷ்டத்துல இருக்கிற பொண்ணு. அத்தனை சுலபமா மறக்கமுடியாதே?…” என்ற ஹரித்திரன்,
“நான் போய் பேசினாலும் அது அவளோட காயத்தை இன்னும் அதிகப்படுத்தற மாதிரி தான் இருக்கும். சொல்ல போனா தீக்ஷாவுக்கு என் மேல ஒரு அபிப்ராயம் இருக்குன்றதையே நான் பெருசா நினைக்கிறேன். பார்க்கலாம் இந்த காலம் எங்களுக்கு என்ன வச்சிருக்குன்னு…” என்றான்.
“சரித்தான், அதுக்குள்ள எங்கப்பாவும், நம்ம அத்தையும் சேர்ந்து உன் தலைமேல உக்கார்ந்து எதாச்சும் பொண்ணை கட்டினாலே ஆச்சுன்னு ஆட போறாங்க…” என்று கத்திவிட்டு கீழே சென்றுவிட்டான் கோபமாய்.
“அவனை விடு ஹரி, நீ உன் மனசுக்கு என்ன படுதோ அதை செய்…” என்றார் சுகன்யா.
“என்ன சித்தி அவ்வளோ நம்பிக்கையா என் மேல?…” ஹரித்திரன் சிரிக்க,
“மண்ணாங்கட்டி, இப்படி செய்யாத, இதை செய்ன்னு நான் சொன்னா மட்டும் நீ செய்யவா போற? அதுக்கு உன்னோட ஒத்து பாடிட்டு கூட போயிருவேன். ஆறுதல்பட்டுக்கலாம் பாரு…” என்றார் சலிப்புடன்.
“எப்படி சித்தி நீங்க சித்தப்பாவுக்கு மேட்ச் ஆனீங்க?…” இப்போதும் கிண்டலாய் கேட்க,
“நான் மேட்ச் ஆனதால தான் இந்த குடும்பத்துக்கே விமன் ஆஃப் தி மேட்ச்ன்னு இருக்கேன். இப்படியெல்லாம் சொல்லி மனசை தேத்திக்கனும். வேற வழியில்ல ராசா…” என்றார் வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு.
“இங்க இருக்கீங்களா? அப்பா கூப்பிட்டாங்க ண்ணா…” என தன் அண்ணனை தேடி வந்தாள் ஹரிணி.
“அதை ஒரு கால் பண்ணி சொல்லலாம்ல. இவ்வளோ தூரம் மாடியேறி வரனுமா?…” என்றார் சுகன்யா.
“அவ என்ன இருப்பா? அதுவும் மத்தியான நேரத்துல? நானே நீ இங்க இருக்கன்னு கூப்பிட தான் வந்தேன்…” என்றவர் ஹரித்திரனின் புன்னகை கண்டு ஹரிணியை கவனிக்க,
“சரித்தான். போவோம் போவோம்…” என்று சிரிப்புடன் கிளம்பினார்.
ஹரித்திரனும் அமைதியாக அவரின் பின்னே செல்ல கையில் வைத்திருந்த கைபேசியுடன் ஹரிணி வெட்க புன்னகையில் நின்றவள் அவர்கள் சென்றதும் காதில் போனை வைத்தாள்.
“ஹ்ம்ம், கிளம்பிட்டாங்க, சொல்லுங்க…” என்று தன் எதிர்கால கணவனிடம் பேச ஆரம்பித்திருந்தாள்.
“ஆனாலும் எங்க இருந்துதான் இப்படி முகம் பார்த்து கண்டுபிடிக்க கத்துக்கிட்டியோ? இந்த நாலுவருஷம் உன்னை நல்லா மாத்திருச்சுடா ஹரி…” என்று பேசிக்கொண்டே வந்தார்.
கீழே நடுக்கூடத்தில் கமலனும் அமர்ந்திருக்க அவரிடம் சந்தனநம்பி பேசிக்கொண்டிருந்தார்.
“இவ்வளோ நேரமா இந்த மொட்டை வெயில்ல என்ன செஞ்சிட்டிருந்த நீ? கூப்பிட போனா போனவாக்குல வராம அங்க என்ன கதை பேசிக்கிட்டு?…” என்று கடுப்பாய் மனைவியை கேட்க,
“லீவ் நாள் தான் அவனோட பேச முடியுது. அதான் அப்படியே நின்னுட்டேன்…” என்ற சுகன்யா ஹரித்திரனை பார்க்க அவன் கமலனை கண்டுகொள்ளவே இல்லை.
“சொல்லுங்க ப்பா…” என்று சந்தனநம்பி எதிரில் சென்று நின்றான்.
“உக்கார் ஹரி….” என அமர சொல்லியவர் அங்கே இருந்த சில பத்திரிக்கைகள் மாதிரிகளை எடுத்து காண்பித்தார்.
அவர் சொல்லவும் தனக்கெதிரில் இருந்தவற்றில் அந்த சலுகை விலைப்பட்டியலை மட்டும் கையில் எடுத்துக்கொண்ட ஹரித்திரன்,
“பத்திரிகை மாடல் எல்லாம் நீங்களே செலெக்ட் பண்ணுங்க. இல்லைன்னா ஹரிணிக்கிட்ட கேளுங்க. ப்ரைஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன்…” என்று தன் நிலைப்பாட்டை சொல்லவுமே கமலனுக்கு கோபமான கோபம்.
“நீ என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்க? அதான் எல்லாம் முடிஞ்சதே? நடந்தது நடந்து போச்சு. திரும்ப அதையே நினைச்சிட்டு இந்த குடும்பத்தின் நிம்மதியை பாழாக்க போறியா?…” என்று கோபமாய் கேட்க,
“கமலா, விடு….” என்றார் பட்டென்று சந்தனநம்பி.
“என்ன நம்பி? நீயும் அவன் சொல்றதுக்கு சரின்ற மாதிரி பேசற? நானும் போனா போகுதுன்னு பார்த்துட்டு இருக்கேன், மதிக்க மாட்டேன்றான். சொல்ற பேச்சு எதுவும் கேட்கலை. என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன்? இத்தனை வயசாகியும் கல்யாணமும் பண்ணமாட்டேன்னு எவ்வளோ பேச்சு?…” என்ற கமலன்,
“அந்த பொண்ணை தான் பிடிச்சிருக்குன்னு எவ்வளோ திண்ணக்கமா பேசினான் பார்த்த தானே? இப்படியே அவன் போக்குல விட்டேனா இந்த ஜென்மத்துல இவனுக்கு கல்யாணம் நடக்காது…” என்றார் அத்தனை வேகமாய்.
கமலன் பேச பேச ஹரித்திரன் ஒருவார்த்தை எதிர்க்கவில்லை. தன் தந்தையை தான் பார்த்தான் அவன்.
“இருக்கட்டும் ப்பா. இருந்துட்டு போகட்டும். அதுதான் அவன் தலைவிதின்னா யாரும் எதுவும் செய்யமுடியாது. அதுக்காக என் பிள்ளைக்கு பிடிக்காத விஷயத்தை செய்யவைக்க என்னால முடியாது. போதும், அவன் மனசை புரிஞ்சுக்காம நான் இருந்ததும், செஞ்ச பாவமும் போதும்…” என்று சொல்லிவிட்டார் சந்தனநம்பி.
“அப்படி போடு…” என்று இதனை கவனித்த சுகன்யா கூற,
“போச்சு, சண்டையாக போகுது…” என்று புவனா அதனை தடுக்க நினைத்து வர பார்க்க,
“மூச், போனீங்க நானும் கிளம்பிருவேன்….” என்று பிடித்து நிறுத்திவிட்டார்.
“இங்க இருந்து அசைய கூடாது. இன்னைக்கு தான் உங்க புருஷன் மண்டை மேல லைட் எரியுது. அது என் புருஷனுக்கு உரைக்கட்டும். நீங்க கம்முன்னு இருங்க…” என்று அடக்கிவிட்டார் சுகன்யா.
கூடத்தில் அவர்களுடன் அமர்ந்திருந்த குமரனுமே இதனை எதிர்பார்க்கவில்லை. ‘நல்லா வேணும்’ என்று தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன நம்பி, பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு?…” கமலன் தன் அண்ணனை கோபமாய் பார்க்க,
“போதும்டா, இதுக்கு மேல அவன் வாழ்க்கை எப்படி அமையனுமோ அமையட்டும். அவனை விட்டுடு. இப்ப என் பயமெல்லாம் என் பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கனும். இதுக்குள்ள நீ ஹரியை கொண்டுவந்து திரும்ப என் பிள்ளை என் பார்வைல இருந்து தூரமா போயிடாம இருக்கனும்…” என்றார் தழுதழுப்பாய்.
“என்ன பேசற நம்பி? ஹரிணி கல்யாணத்தை வச்சாவது அவனுக்கு ஒரு கால் கட்டு போடனும்ன்னு நான் சொன்னா நீ உன் பிள்ளை கட்டுப்பாடில்லாம சுத்தட்டும்ன்னு நினைக்கிற? நாளைக்கு தப்பா எங்கியாச்சும் போய் நிக்க போகுது…” என்றார் அவர்.
“அப்பா என்ன பேசறீங்க?…” என குமரன் எழுந்துவிட்டான்.
“உனக்கு என்னடா? சித்ராவை போய் கூட்டிட்டு வரனும்ன்னு சொன்ன, கிளம்பு உன் மாமனார் வீட்டுக்கு. வந்துட்டான் பெரியவங்க பேசும்போது கூட கூட பேசிக்கிட்டு. இதுவா என் வளர்ப்பு?…” என்றதும் கடுப்பாய் குமரன் கிளம்பிவிட்டான்.
“குத்தி காமிக்கிறீங்களா சித்தப்பா? எனக்கு தெளிவாவே புரிஞ்சிடுச்சு….” என்று ஹரித்திரன் அவரிடம் பேச ஆரம்பிக்க,
“ஹரி, தம்பி நீ உள்ள போ. நான் பேசிக்கறேன்…” என்று நம்பி பதறிவிட்டார்.
“ஏன் நான் உள்ள போகனும்? நீங்க என்னை சரியா வளர்க்கலைன்னு மறைமுகமா சொல்றார் உங்க தம்பி. அதை கேட்க வேண்டாமா ப்பா? அவர் சொன்னதும் குமரன் கிளம்பிட்டா சரி. இதுவே உங்க பேச்சை நான் கேட்கலைன்னா உங்க வளர்ப்பு தப்பாகிடுமா? இது என்ன நியாயம்?…” என்ற ஹரித்திரன்,
“எங்கப்பா என்னை சரியா வளர்க்க போய் தான் அவ்வளோ பிரச்சனை நடந்தும் நான் இப்பவரைக்கும் யாரையும் எதுவும் சொல்லாம இருக்கேன். இதுலையே புரியவேண்டாமா உங்களுக்கு?…” என்றான் ஹரித்திரன் குரல் உயர்த்தாமல்.
“ஏன் புரியாம? கங்கா மட்டும் எப்படியாம்? அப்ப அந்த வளர்ப்பு எங்க போச்சு?…” என்று கமலன் ஹரித்திரனை மட்டம் தட்டிவிடும் வேகத்தில் பேச சந்தனநம்பி உடைந்து போனார்.
“அதுக்கு காரணமே நீங்க தலையில தூக்கிவச்சு கொண்டாடுவீங்களே உங்க வளர்ப்பு பிள்ளையான உங்க அக்கா மகன். அவர் தான? வளர்த்தா இப்படி வளர்க்கனும்ன்னு சொல்லி சொல்லி நீங்க பெருமை பட்டுக்கிட்ட அவர் தான் அந்த பொய்யை சொன்னது. என் அக்காவும் தப்பு பண்ணலைன்னு சொல்லலை. ஆனா தப்புன்னு தெரிஞ்சதும் என்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்கவும் யோசிக்கலை…” என்றான்.
அந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் அவன் பேச பேச சந்தனநம்பி ஒருவாறு அலண்டுபோய் அமர்ந்துவிட்டார்.
‘என்ன நடக்கிறது தன் வீட்டில், குடும்பத்தில்?’ என்று நிம்மதியிழந்து வாடியவருக்கு இன்னுமே பதட்டம் கூடியது.
மகளுக்கு திருமணம். மனம் போல் மாங்கல்யம் என்பதை போல அவள் வாழ செல்லவிருக்கும் குடும்பமும் அத்தனை பரிசுத்தம்.
தங்களுக்குமே பணத்திற்கு பணம், எந்தவித கஷ்டங்களும் இல்லை. ஆனாலும் மனதில் சந்தோஷமில்லை.
நிறைவாய் ஒருவாய் உணவை அவரால் உண்ண முடியவில்லை. நாளுக்கு நாள் அவரின் பாரம் அதிகரிக்க தான் செய்தது.
அதிலும் தன் உடன்பிறந்தவனே பேசிய வார்த்தைகள் அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“ஹரி ரொம்ப பேசற நீ…” என்ற கமலன்,
“என்ன நம்பி, கேட்டுட்டு இருக்க?…” என்றார் தன் அண்ணனிடம்.
“என்னடா, என்ன செய்ய சொல்ற? ஏற்கனவே நிம்மதி இல்லாம இருக்கேன். இப்ப நீயும் சேர்ந்து எவ்வளோ பேசிட்ட?…” என்றவர்,
“உன்கிட்ட இதை எல்லாம் எதிர்பார்க்கலைடா கமலா. நான் எல்லாரையும் என் குடும்பம், என் பிள்ளைங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அது இல்லைன்னு காமிக்கிற மாதிரி பேசிட்டேல? தாங்க முடியாலைடா…” என்றார் தன் நெஞ்சை தடவியபடி.