வீடு வரும்வரை சம்ருதிக்ஷா மனதில் அலைபாய்ந்த எண்ணங்கள் அவளை தடுமாற செய்தது.
வேண்டாம், வேண்டாம் என்று விலகி சென்றாலும் இதோ அவனின் பாதைக்கே தன்னை இட்டுச்செல்லும் இந்த விதியை என்ன செய்துவிட முடியும்?
புதைக்கப்பட்ட விருப்பங்கள் எங்கே விதையிலிருந்து வேர் விட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மேலும் மேலும் தன்னையே உள்ளுக்குள் காயப்படுத்திக்கொண்டிருந்தாள்.
வீட்டிற்கு வந்ததுமே வண்டியை நிறுத்திவிட்டு கூடத்தின் இருக்கையில் அமர்ந்தவளுக்கு இருப்பு கொள்ளவில்லை.
“ம்மா…” என்று நினைக்கையிலேயே அப்போதுதான் பதற்றம் பிடித்தது.
“தப்பு பண்ணிட்டேன். வேண்டாம்ன்னு அம்மாவை கூட்டிட்டு வந்திருக்கனும். தப்பு பண்ணிட்டேன்…” என்று தன் நெற்றியில் அடித்துக்கொண்டவளுக்கு அங்கே தாய் என்ன செய்கிறாரோ என்ற பதற்றம்.
தனது கைப்பேசியை வண்டியிலேயே வைத்துவிட்டு வந்திருக்க, அதனை தேடி சென்று எடுத்து வந்தாள்.
மண்டபத்திற்குள் வீட்டிற்கும் நான்கு கிலோமீட்டர் தொலைவு தான் என்பதனால் போய் அழைத்தே வந்துவிடுவோமா என்றும் நினைத்தாள்.
தாயை மாடியில் விட்டுவிட்டு வந்து தனது வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் நேரம் ஹரித்திரனை பார்த்தவளுக்கு, அந்தநொடி தோன்றியது ஒன்று தான்.
அவன் வீட்டு திருமணத்திற்கு வரமுடியாதென்று சொல்லியும் தான் சென்று நின்றதும், தன்னை கண்டு அவனின் கண்ணில் வெளிப்பட்ட அளவற்ற அந்த மகிழ்ச்சியும் அவ்விடத்திலிருந்து புறப்பட தூண்டியிருந்தது.
நிச்சயம் அதில் வென்றுவிட்டோம் என்பதை போன்ற கர்வ புன்னகையோ, சந்தோஷமோ இல்லை.
மாறாக தன்னை ஆற்றுப்படுத்தும் விதமான மென் புன்னகை. சவாலாய் பார்த்திருந்தால் கூட சமாளித்திருப்பாளோ என்னவோ?
அந்த அரவணைப்பான பார்வையில் தொனித்த ஆறுதலும், அன்பும் தீக்ஷாவின் மனதை புரட்ட முயன்றது.
எங்கே அவன் நெருங்கி எதுவும் பேசிவிட்டானென்றால் எனும் அச்சத்தில் கிளம்பி வந்திருந்தவளுக்கு வீடு வந்தடைந்த பின்னர் தான் தான் சென்ற காரியமும், அங்கே தாயை விட்டுவிட்டு வந்ததுமே ஞாபகம் வந்தது.
இத்தனை யோசனைகளுடன் உடனடியாக நர்மதாவிற்கு அழைப்பு விடுத்தாள் சம்ருதிக்ஷா.
இரண்டாம் முறை தான் அவரால் அழைப்பை ஏற்க முடிந்தது. எடுத்ததுமே அவர் பேசும்முன்,
“ம்மா, நீங்க கிளம்பி இருங்க. நான் கூப்பிட வர்றேன். அங்க…,,, அங்க,,, நீங்க, ம்மா அங்க இருக்க வேண்டாம்….” என்று சொல்லியவள் வேறு யாரும் அங்கே அவரை பார்த்திருக்க கூடுமோ என்று கவலையாக இருந்தது.
“ருதி…” அமைதியான நர்மதாவின் குரலும், அதில் எவ்வித பதட்டமும் இல்லாத நிதானமும் மகளை அடையவில்லை.
“ம்மா கிளம்பிருங்க, சரியா? நான் இப்பவே வர்றேன். நீங்க புறப்படுங்க. மெஷினை பேக் பண்ணி எடுத்துட்டு கீழ வாங்க ம்மா…” என்றாள் தீக்ஷா.
“ருதி, ருதி…” என்று மீண்டும் நர்மதா சொல்ல,
“நான்… நான் கீழ வந்தப்போ தான்….” என்றவளுக்கு குரலே எழும்பவில்லை.
“ருதி நான் சொல்றதை…” என்றவரின் பேச்சை கவனிக்கவே இல்லை தீக்ஷா.
“ம்மா இது அவங்க வீட்டு கல்யாணம் போல. உங்களை விட்டுட்டு வந்துட்டேன். அவசரப்பட்டு வந்துட்டேன்…” என்று பேச பேச,
“ருதி…” என்றார் நர்மதா சற்று அழுத்தம் கூட்டினார் மகளை நிதானிக்க செய்யும் பொருட்டு.
“ம்மா…” தீக்ஷாவின் குரலில் என்ன இருக்கிறதென்று அவரின் தாயுள்ளம் அனுமானிக்க முயன்றது.
இத்தனை தூரம் அவர்களை பற்றி வேறு எதுவும் நினைக்க அவசியமில்லை என்று கூறியுமே இவ்வளவு பதறும் அளவிற்கு என்ன என்று நினைத்தார்.
“எனக்கு தெரியும். நீ கிளம்பவும் பார்த்துட்டேன்…” என்று சொல்லியவரின் குரலில் அத்தனை அமைதி.
“அம்மா எப்படி உங்களால…”
“ருதி, அம்மா சொல்றேன்ல. நானே வேலையை முடிச்சிட்டு கிளம்பி வர்றேன். கிளம்பும்போது சொல்றேன். நீ வா…” என்றார்.
“அங்க, அந்த குடும்பம்…” தீக்ஷாவிற்கு தாயை அவர்கள் எதுவும் பேசிவிட கூடுமோ என்ற அச்சம்.
ஏற்கனவே தங்கள் குடும்பத்தை எப்படி அவமதித்து அனுப்பினார்கள் என்று ஒன்றுவிடாமல் அறிந்து வைத்திருந்தாளே.
“ருதி புரியுதா?…” என்றார் மகளிடம்.
“அவங்க யாரும் உங்களை எதுவும் சொல்லலைல?…” என்றாள் மீண்டும் தீக்ஷா.
“என்ன சொல்லுவாங்க? என்ன சொல்லனும்? சொல்ல அவசியம் என்ன? எதுவுமில்லை. நீ ரெஸ்ட் எடு. லீவ் தானே இன்னைக்கு. தூங்கு. நானே வந்திடறேன்…”
“இல்ல, இல்லம்மா, நீங்க முடியும்போது சொல்லிடுங்க. நான் பிக்கப் பண்ணிடறேன்…”
“அம்மா சொல்றேன்ல ருதி. நான் வருவேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட்டார் நர்மதா.
அவரின் பேச்சுக்களை கவனித்துக்கொண்டு சற்று தள்ளி நின்றிருந்த சுகன்யாவும், புவனாவும் இயலாமையுடன் பார்த்தனர்.
“இப்ப இந்த அளவு போட்டு பாருங்க. இல்லைன்னா ஆல்ட்டர் பண்ணிடுவோம்…” என்று ப்ளவுஸை எடுத்து கொடுத்தார் நர்மதா.
“இதோ இப்ப பார்க்க சொல்றேன்…” என்று மாப்பிள்ளையின் தாய் செல்ல,
“வேற எதாச்சும் இருக்கா? இல்லை அவ்வளோ தானா?…” என்றார் அவர்.
“கொஞ்சம் வெய்ட் பண்ண முடியுமா? ப்ளீஸ்…” என்று அவர்கள் சொல்லவும்,
“ஹ்ம்ம்…” என்று அமர்ந்துகொண்டார் நர்மதா.
மேலும் அரைமணிநேரம் கடந்தது. இதுவரை இப்படி யாரின் வீட்டிற்கும், விழாவிற்கும் அங்கே சென்று தைத்து கொடுக்கும் சூழ்நிலை வந்ததே இல்லை.
முதல்நாள் காலை கடை திறந்ததுமே வந்து மணமகனின் அக்காவிற்கு வேறு ஒரு ப்ளவுஸ் தைக்கவேண்டும் என்று சொல்ல, நர்மதாவால் முடியாதென மறுக்க முடியவில்லை.
“ஒரு நாள்ல ஆரி வொர்க், அதுவும் இந்த டிஸைன் சாத்தியம் இல்லைங்க…” என்றிருந்தார் நர்மதா.
“ப்ளீஸ் மேடம், மாட்டேன்னு சொல்லாதீங்க. எங்க வீட்டுல எல்லாருக்கும் நீங்க தான் தைச்சு கொடுத்திருக்கீங்க. என் பொண்ணுக்கு தைச்சிருந்த ப்ளவுஸ்ல ஊதுபத்தி விழுந்து பொட்டு பொட்டா ஓட்டை ஆகிருச்சு. சாமி கும்பிட எல்லா ட்ரெஸ் எடுத்து வச்சப்போ தவறுதலா நடந்திருச்சு. பொண்ணுக்கு நாத்தனார். அவளுக்கு ரொம்ப முக்கியம் இல்லையா?…” என மாப்பிள்ளையின் தாயும்,
“அவங்க வேற எங்க நர்மதா போவாங்க? நீங்க தான் கொஞ்சம் பாருங்க…” என்றார் அவர்களுடன் வந்த சுமதியும்.
“புரிஞ்சுக்கோங்க. ஒரே நாள்ல முடிக்க முடியாது. அதுவும் சேரிக்கு மேட்சா இவங்க கிராண்ட் வொர்க் கேட்கறாங்க…” என்றார் நர்மதா.
அவர்கள் கேட்ட நேரத்தில் கொடுக்கவேண்டும் என்றால் நிச்சயம் முழுக்க முழுக்க அதை மட்டுமே பார்க்கும்படி இருக்கும்.
அதிலும் அந்த வேலைபாட்டை எடுத்தால் அத்தனை சுலபத்தில் முடிக்கவும் முடியாது என்று நர்மதாவிற்கு தெரிந்திருந்தது.
“கடைசி நேரம் இப்படியாகும்ன்னு நினைக்கலைங்க. வேற நம்பிக்கையா எங்கயும் போக முடியலை…” என்றவர்,
“சரி, நாளைக்கு மார்னிங் முகூர்த்த நேரத்துக்குள்ள எந்த டிஸைன் உங்களால பண்ண முடியும்ன்னு காமிங்க. அதுல ஒன்னை நாங்க சூஸ் பன்றோம்…” என்று அவர்கள் விடவில்லை நர்மதாவை.
வேறு வழியின்றி நர்மதா அந்த நிறத்திற்கான பொருத்தமான சில டிஸைன்ஸ் காண்பிக்க அதில் ஒன்றை தேர்வு செய்தனர் மணமகன் வீட்டார்.
“தேங்க் யூ சோ மச். நீங்க கண்டிப்பா திருப்தியா பண்ணுவீங்கன்னு நம்பிக்கை இருக்கு….” என்று சொல்ல, நர்மதாவும் ஒப்புக்கொண்டார்.
நிவாஷினி, மற்ற இரண்டு பணி பெண்கள் இவர்களை வைத்து விடியவிடிய உறங்காமல் அதனை முடித்திருந்தனர்.
வேலைபாடுகளை முடித்து, அடுத்து தைப்பதற்கு ஒருமணி நேரம் தான். பழக்கப்பட்டவர். அவரின் அனுபவம் சிரத்தையாகவே முடிக்க முடிந்தது.
இதில் எளிதான வேலைப்பாடும் என்பதனால் கூடுதல் நிம்மதி. அவசரத்தில் அலங்கோலமாகிவிடாமல் இருந்தாலே போதும் என்றிருந்தது.
“இனிமே இந்தமாதிரி லாஸ்ட் மினிட்ல எந்த வேலையும் வாங்கி வச்சுக்காதீங்க ம்மா. இது உங்களுக்கும் பிரஷர், அவங்களுக்கும் பிரஷர்….” என்றிருந்தாள் சம்ருதிக்ஷா.
உண்மையில் சரியான நேரத்திற்கு, சரியாக கொடுத்துவிட வேண்டும் என்ற பரபரப்பு இருந்தாலும், கூடவே பதட்டமும்.
உறக்கமின்றி, அவசரமாய் ஏதோ உண்டுவிட்டு இதனை கொடுக்கவேண்டுமே என்று சிறிதும் ஓய்வின்றி அமரவேண்டிய சூழ்நிலை.