வேறு என்ன சொல்லமுடியும்? சொல்லவும் தோன்றவில்லை. இப்போதைக்கு பேசுவதும் சரியாக இருக்காதென்று பேச்சை மாற்றியிருக்க,
“அப்படியா? முதல்லையே தெரிஞ்சிருந்தா பிரச்சனையை சரி பண்ணி அவங்களை சமாதானம் செஞ்சிருக்கலாம். ரொம்ப நல்ல மனுஷி. அவங்க பொண்ணுங்களும் அவ்வளோ தங்கம். தனியா குடும்பத்தை பார்த்துக்கறாங்க….” என்று ஹரிணியின் மாமியார் சொல்ல,
“ஹ்ம்ம், பாவம்…” என்றார் வருத்தமாய் சந்தனநம்பி.
“இதுல என்ன பாவம் இருக்கு? ஆம்பளைங்க தனியா பார்த்தா ஒரு பெருமை. பொம்பளைங்க தனியா குடும்பத்தை காத்தினாங்கன்னா பரிதாபமும், பாவமுமா? அவங்களை பார்த்தா பாவப்படவா தோணுது? பார்த்ததும் மரியாதையா, கம்பீரமா இருக்காங்க. மத்த பொண்ணுங்கக்கு எடுத்துக்காட்டா இருக்காங்க. இதுல பாவம் எங்க இருந்து வந்துச்சு?…” என்று புன்னகையுடன் சொல்லியவர்,
“அவங்களோட தைரியமும், துணிச்சலும் எல்லாருக்குமே அவசியம். யாரோட பரிதாபத்தையும் பார்க்க நினைக்கலை. உங்களுக்கு தெரியாதுல, நர்மதாவை கொண்டுவந்து விட்டுட்டு போனது அவங்களோட மூத்த பொண்ணு தான்….” என்றதுமே, ‘அவளும் வந்தாளா?’ என அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
“இந்த நைட் டைம்ல பொண்ணை கூட்டிட்டு போகனுமேன்னு அவங்க பயந்து நிக்கலை. அவங்களை கொண்டுவந்து விட்டுட்டு போனாங்க அவங்க பொண்ணு. இப்பவுமே என் பொண்ணை வர சொல்றேன்னு தான் சொன்னாங்க. நான் தான் வேண்டாம்ன்னு சொன்னேன். வயசு பொண்ணை வரவழைக்கிறதான்னு நினைச்சு இல்லை. கண்ணு முழிச்சு வேலை பார்த்திருக்காங்க. இதுல அவங்களுக்கு இந்த அலைச்சல் வேண்டாமேன்னு தான்…” என்றார் தெளிவுடன் அவர்களிடம்.
“அதனால சட்டுன்னு யாரையுமே பாவம்ன்னு சொல்லாதீங்க சம்பந்தி. அவங்க பாவமில்லை. ஹரிணி, தருண் கல்யாணம் முடிஞ்சதும் உங்க பிரச்சனை என்னன்னு பேசி சரி பண்ணுங்க. இந்தமாதிரி உறவுகளை எல்லாம் நாம இழக்க கூடாது. உங்களுக்கு பேச கஷ்டம்ன்னா சொல்லுங்க, நாங்களுமே வர்றோம்…” என்றவர்,
“தருணுக்கு கூட அவங்க மேல அவ்வளோ மரியாதை. அவங்களை கஷ்டப்படுத்தறோம்ன்னு தெரிஞ்சா வருத்தப்படுவான். இப்பவும் அவனே போய் ட்ராப் பண்ணிருப்பான். நான் தான் மாப்பிள்ளை வெளில போகவேண்டாமேன்னு ஹரி தம்பியை போக சொன்னேன். இப்போதான் தெரியுது ஏன் எல்லாரும் அப்படி ஷாக்காகி நின்னீங்கன்னு…” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார் அங்கிருந்து.
சந்தனநம்பி முகத்தில் ஈயாடவில்லை. எத்தனை தெளிவாய் பேசி சென்றுவிட்டார் தன் பெண்ணின் மாமியார் என்று திகைப்பிலிருந்து வெளிவர முடியாமல் நின்றார்.
“என்னண்ணே உங்களுக்கு உரைச்சதா?…” என்று தணிகைவேலிடம் சுகன்யா கண்ணை காண்பிக்க,
“மிளகாய் செம்ம காரம் இல்ல? அதை தான் சொன்னேன். எனக்கு உரைச்சிடுச்சு. புரிஞ்சா பிழைச்சுக்கலாம்…” என்றவர்,
“புவிக்கா, உங்க சம்பந்தி செம்ம ஷார்ப். நம்ம ஷாக்கையும் கவனிச்சதோட இல்லாம, மனுஷங்களை எப்படி எடை போடனும்ன்னு பார்த்து பழகிருக்காங்க. நடந்த விஷயம் மட்டும் தெரிஞ்சது, ஹரிணிக்கு ஒண்ணுமில்லை. ஆனாலும் பார்த்துக்கோங்க…” என்று சொல்லிவிட்டு அவரை கையோடு இழுத்து சென்றார் சுகன்யா.
சந்தனநம்பிக்கு முகம் விழுந்துவிட்டது. அதிலும் அங்கே வைத்து நர்மதாவை எதிர்பார்க்கவே இல்லை.
இதில் தீக்ஷாவும் வந்து சென்றிருக்க, மகன் அவரை வீட்டில் விட சென்றிருக்க இந்த நகர்வுகள் எதை நோக்கி செல்கிறதென்ற தள்ளாட்டத்துடன் அங்கேயே பெய்யும் மழையை பார்த்தபடி அமர்ந்துவிட்டார்.
வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த ஹரித்திரனும் வீடு எங்கே என்று கேட்கவில்லை.
நர்மதாவும் வீடிருக்கும் திசையை அவனிடம் கூறவில்லை. அவன் செல்லும் பாதையை கவனித்தபடியே சென்றவருக்கு தங்களின் இருப்பிடத்தை அவன் அறிந்து வைத்திருந்ததில் ஆச்சர்யம் எதுவும் எழவில்லை.
அதை அனுமானிக்கவே அவனிடம் வாய் திறவாமல், செல்லும் வழி கூறாமல் அவரிருந்தார்.
ஹரித்திரன் அவரை கண்ணாடியின் வழியே பார்ப்பதும் சாலையை பார்ப்பதுமாய் இருந்தவன் என்ன சொல்லி அவரை அழைப்பதென்ற திண்டாட்டத்துடன் முகம் கசங்க பார்த்திருந்து வீடு நெருங்கவும்,
“நான்….” என்று ஆரம்பித்ததும், அதற்கு பதிலாய் நர்மதாவின் வார்த்தைகள் அவனை வீழ்த்திவிட்டது.
தீக்ஷா இன்னும் உறக்கம் வராமல் வராண்டாவில் நடந்துகொண்டிருக்க வாசலின் முன்னே கார் வந்து நின்றது.
இருட்டில், மழையில் யாருடன் வருகிறார் என்று தெரியாமல் பூட்டை திறந்து கிரில் கேட்டை விரித்து வைத்து குடையுடன் நின்றாள் தயாராய்.
மண்டபத்திலிருந்து கிளம்பியதுமே நர்மதா மகளுக்கு அழைத்து வந்துகொண்டிருப்பதாய் மட்டும் சொல்லி வைத்திருக்க படபடப்புடன் காத்திருந்தவள், அவர் ஹரித்திரனுடனே வருவார் என்று நினைக்கவே இல்லை.
கார் நின்றதும் நர்மதா கதவை திறக்க முயல அது திறவாமல் சண்டித்தனம் செய்தது.
அவரின் முயற்சியை வெறுமையாய் பார்த்தவன், மழையோடு இறங்கி விறுவிறுவென்று வந்து வெளியிலிருந்து அவரின் பக்க கதவை திறந்து வைக்க நர்மதா இறங்கி நின்றார்.
அதற்குள் தீக்ஷாவும் குடையுடன் அவரை நெருங்கிவிட நர்மதா குடைக்குள் சென்றதும் கதவை அறைந்து சாற்றியவன் தீக்ஷாவின் புறம் திரும்பாமல் கூட நனைந்தபடி காரில் ஏறி சென்றுவிட்டான் வேகமாய்.
அவன் வந்தது அதிர்வென்றால் அவன் காண்பித்த இந்த பாராமுகம் பேரதிர்வாக இருந்தது தீக்ஷாவிற்கு.
“என்ன ருதி, இங்கயே நின்னுட்ட?…” என்ற நர்மதாவின் அழைப்பில் திகைப்புடன் அவள் திரும்பி பார்க்க,
“மழை அதிகமாகிடுச்சு. உள்ள போ. கதவை பூட்டனும்…” என்று அழுத்தமாய் சொல்லிய நர்மதா தீக்ஷா உள்ளே சென்றதும் கதவுகளை இழுத்து மூடினார்.
வெட்டப்பட்டு, வெந்து, எரிந்து சாம்பல் நிலைக்கு செல்லும் மரத்துணுக்குகளில் விருட்சங்கள் துளிர்ப்பதில்லை.
நர்மதா சொல்லியதன் இந்த பொருளில் தான் தன் எதிர்பார்ப்போடு வெந்து கொண்டிருந்தான் ஹரித்திரன்.