வருத்தத்துடன் அவனை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றவர் கதவை லேசாய் சாற்றிவிட்டு விலகினார்.
அவர் சென்றதும் கதவை அடைத்து சாற்றிய ஹரித்திரனால் அதற்குமேல் திடமாய் இருக்கமுடியவில்லை.
கட்டிலில் அமர்ந்தவனின் இரு கைகளும் அவனின் தலையை தாங்கிக்கொண்டது.
நர்மதாவின் பேச்சுக்கள் இப்போது அவனின் காதில் குத்தீட்டியாய் அவனின் உயிரை கிழித்துக்கொண்டிருந்தது.
முறை சொல்லி அத்தை என்று அழைப்பதா, இல்லை மேடம் என்று அழைத்து பேச்சை ஆரம்பிப்பதா என தனக்குள் உழன்று ‘நான்’ என்று அவன் ஆரம்பித்த நொடி அவனின் பேச்சை மறுத்திருந்தார் நர்மதா.
“வேண்டாம். நீங்க கஷ்டப்பட்டு முயற்சி பண்ணாதீங்க. என்ன பேச போறீங்கன்னு புரியுது. அதுக்கு அவசியமில்லை…” என்று சொல்லவுமே காரை நிறுத்திவிட்டான் ஹரித்திரன்.
அதிர்ந்துபோய் அவரை திரும்பி பார்த்தவனின் முகம் அவரிடம் கோடி முறை மன்னிப்பை யாசித்தது.
“எந்த மன்னிப்பும் இழந்த எதையும் மீட்டு தராது. மன்னிப்பு நம்மை நாமே சமாதானம் செஞ்சுக்கற மருந்து. எங்க காயம் எல்லாம் எப்பவோ காய்ஞ்சு வலியோடவே வடுவாகிருச்சு. இப்ப அதுக்கு மன்னிப்புன்ற மருந்து தேவை இல்லை. அதனால உங்க மன்னிப்பை வீணடிக்க வேண்டாம்…” என்றவர்,
“வேற எதுவும் பேசனுமா?…” என்று கேட்க அவனிடம் வார்த்தைகள் பிடிபடவில்லை.
“என்ன?…” நர்மதா ஆச்சர்யமாக பார்க்க, அதுவே ஒருவிதத்தில் எள்ளல் பார்வையாய் தான் தோன்றியது ஹரித்திரனுக்கு.
“இப்பவும் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். எப்பவும் வெய்ட் பண்ணுவேன். என் வாழ்க்கை அது தீக்ஷாவோட மட்டும் தான்…”
“ஓஹ்…” என்றவரின் அந்த சொல்லுக்குள் ஓராயிரம் அர்த்தங்கள்.
அவரும் ஓரளவு கணித்திருந்தார் ஹரிணியின் மாமியார் லாவண்யா சொல்லியதில் இருந்து மணப்பெண்ணின் அண்ணனுக்கு இனி தான் திருமணம் என்று.
அதிலும் அந்த நிச்சயம், கோவிலில் சந்திப்பு இதை எல்லாம் அலசி பார்த்தவருக்கு அன்றைக்கு நடந்தது ஹரிணியின் நிச்சயதார்த்தம் என்றும் புரிந்திருந்தது.
இதனால் பெரிதாய் அவர் மகிழ்ந்துவிடவில்லை. அதை அவரின் முகமே காண்பித்துக்கொடுக்க,
“காலவிரயம்…” என்றார் அவனிடம்.
ஹரித்திரன் அவரிடம் எப்படி தன்னை புரியவைப்பது என்று அல்லாடி போய் பார்க்க,
“அத்தனை அன்பா என் பொண்ணு மேல? ஆனா இது எப்படி சாத்தியம்ன்னு நீங்க வெய்ட் பன்றீங்க?…” என்றவர்,
“நம்பிக்கை இல்லாதவாங்க மத்தில வாழறது உயிருள்ள பிணமா நடமாடறதுக்கு சமம். அப்படித்தான் என் பொண்ணு வாழனும்ன்னு நினைக்கறீங்களா நீங்க?…” என்ற வார்த்தைகள் சுளீரென்று அவனை தாக்கிவிட்டது.
“பொய் சொல்றது எவ்வளோ தப்போ, உண்மைய மறைக்கிறது அதைவிட தப்பு இல்லையா? திரும்பவும் உங்க அக்கா வீட்டுக்காரர் என் பொண்ணு எதாச்சும் செஞ்சான்னு சொல்லி, அதை உங்க குடும்பத்துக்குள்ள அவர் சொல்றது நிஜம்ன்னு நினைச்சு யாரும் என் பொண்ணை நம்பலைன்னா?…” என்றவர்,
“உங்க குடும்பம்ன்னு சொன்னது உங்களையும் சேர்த்து தான். நீங்க எதுவுமே அன்னைக்கு செய்யலைன்றதை எந்தவிதத்துலையும் நியாயப்படுத்த முடியாதே? வேடிக்கை பார்க்கிறதும் தப்பு தானே?…” என்று கேட்க ஹரித்திரன் மனது சுக்கலாய் நொறுங்கியிருந்தது அவரின் வார்த்தைகளில்.
“விடுங்க, இப்ப யாரையும் நான் தப்புன்னு சுட்டி காண்பிக்க நினைக்கலை. அதுல எனக்கு விருப்பமும் இல்லை. இப்போ நான் சொன்னதுக்கு காரணம் என் பொண்ணை உயிரோட பிணமாக்க நான் தயாரா இல்லை. நீங்களும் இதை விரும்பமாட்டீங்க, யோசிப்பீங்கன்னு நம்பறேன்…” என்றவர்,
“வாழக்கையை ஆரம்பிக்க விருப்பமும், பிடித்தமும் மட்டும் போதாதே. நம்பிக்கை வேணும். அது இல்லாத இடம் நரகம். என் பொண்ணுக்கு அது வேண்டாம்…” என்று சொல்லிவிட்டு கதவை திறக்க முயல அது சிக்கிக்கொண்டது.
அதற்குமேல் அங்கே நிற்கவோ, அவரிடம் பேசவோ, சமாதானம் செய்யவோ எதுவுமே ஹரித்திரனுக்கு தோன்றவில்லை.
அங்கேயே அவரை இறக்கிவிட்டு வந்துவிட்டான் மொத்தபாரத்தையும் தான் சுமந்தபடி.
எந்தவிதத்திலும் இதற்கு அவர்களை குறைசொல்லவோ, குற்றம் சொல்லவோ அவனால் முடியவில்லை.
அது அதைவிட தனக்கு இழுக்கு என்று தான் நினைத்தவன் முயன்று தன்னை நிலைபடுத்திக்கொண்டிருந்தான்.
‘என் பொண்ணுக்கு நீ என்ன தர போற?’ என்ற தாயின் கேள்வியில் வேள்விக்குள் வீழ்ந்துவிட்டது அவனின் காதல் கொண்ட மனம்.
கதவு தட்டும் ஓசையில் எழுந்து சென்று கதவை திறக்க சுகன்யாவும், புவனாவும் நின்றனர்.
“ஹரி…” என்று புவனா ஆரம்பிக்க,
“என்னம்மா, நீங்க இங்க? நான் தான் வர்றேன்னு சொன்னேன்ல. போங்க நீங்க…” என்றான் ஹரித்திரன்.
“காபி குடி ஹரி…” என்று சுகன்யா நீட்டியதும் வாங்கிக்கொண்டவன் சூட்டையும் தாங்கிக்கொண்டு மடமடவென்று குடித்து முடிக்க,
“அப்போ உன் வாழ்க்கை, எதிர்காலம்?…” தணிகைவேல் கலங்கிய கண்களுடன் கேட்க,
“ஏன் நான் வாழறேன் தானே? விலகி நிக்கிறது தான் சரி மாமா. என்னால யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது…” என்றவன்,
“சில அனுபவங்கள் தான் வாழ்க்கையோட பாடமா நமக்கு அமையும். என் வாழ்க்கைல ஒவ்வொரு கட்டத்துலையும் ஒவ்வொருத்தவங்க பாடம் கத்துக்குடுக்காங்க. இதுவும் அனுபவம் தான்…”
“ஹரி…” என்றவரை மேலும் பேச அவன் அனுமதிக்கவில்லை.
“கிளம்புங்க. நானும் ரெண்டுமூணு நாள்ல ஆபீஸ் புறப்பட்டுடுவேன்…” என்று அவரை சமாதானம் செய்து அனுப்பிவைத்தான் ஹரித்திரன்.
ஹரிணியின் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட பத்துநாட்கள் கழித்துதான் அலுவலகம் வரமுடிந்தது அவனால்.
வந்தவனுக்கு அடுத்த சோதனையாய் அவனின் குழுவில் சம்ருதிக்ஷாவும், வினோதாவும் இணைக்கப்பட்டிருந்தனர்.