“கல்யாணம் ஆனா போய் தானே ஆகனும்? அதுவுமில்லாம ஹரிணி கிளம்பி ஒருவாரம் தானே ஆகியிருக்கு….” என்றவனை அவர் திண்டாடி பார்க்க கண்டு,
“பேசனும்ன்னா நேரடியா பேசுங்க ப்பா. இல்லையா விட்டுடுங்க. கஷ்டப்படுத்திக்க வேண்டாம். ஏற்கனவே உங்களுக்கு உடம்பு சரியில்லை…” என்று சொல்லிவிட்டு ஹரித்திரன் எழுந்து நிற்க,
“இல்ல, பேசனும். நீ உட்கார். உட்கார்…” என்று மகனின் கை பிடித்து அமர செய்தவருக்கு வார்த்தைகள் வரவில்லை.
நான்குவருடங்களுக்கு முன்பிருந்த மகன் என்றால் இலகுவாய் பேசிவிடுவார். அப்போது அவனிருந்த விதமே வேறு.
“சரிங்கப்பா, உங்க விருப்பம். உங்களுக்கு சரின்னா எனக்கும் சரி…” என்று எத்தனை பூஞ்சை உள்ளம் கொண்டிருந்தவன் அவன்.
நினைத்து பெருமூச்சு விட மட்டுமே முடிந்தது நம்பியினால். அந்த நினைவே கசப்பையும் தேடி தந்தது.
“அன்னைக்கு அன்னைக்கு…” என்றவர் புவனாவை பார்க்க, இதில் தான் பேச எதுவும் இல்லை என்பதனை போல புவனா உதவிக்கு வரவே இல்லை.
“என்னை பார்த்துட்டே நிக்கிற புவி. நீ பேசேன்…” என்று கேட்கவே செய்துவிட்டார்.
இங்கே தான், இதற்கு தான் அவர் வந்து நிற்பார் என்று முன்கூட்டியே கணித்திருந்தான் ஹரித்திரன்.
“அதான்ப்பா, ஹரிணி கல்யாணத்துல. அந்த கும்பகோணத்துக்கார அம்மா…”
“ஓஹ், என்ன பேசுவாங்க? அவங்க என்கிட்ட பேச என்ன இருக்கு?…” எதிர்கேள்வி கேட்க அலண்டுபோய் பார்த்தார் மகனை.
“நான் என்ன கேட்கறேன்னு உனக்கு புரியுதா ஹரி?…” பாவமாய் நம்பி கேட்க,
“நீங்க இன்னும் பேசவே இல்லையேப்பா. என்ன கேட்கறீங்கன்னு புரியும்படி உடைச்சு கேளுங்க. இப்பல்லாம் உடைச்சு பேசினா கூட அதுல என்ன இருக்குன்னு நான் யோசிக்கவேண்டியதா இருக்கு. இதுல நீங்க பொத்தாம்பொதுவா பூடகமா பேசறீங்க. எனக்கு எப்படி புரியும்?…” என்றான் நிதானத்துடன்.
விழிபிதுங்கி போய் பார்த்தார் நம்பி. மகனிடம் இந்தளவுக்கா மாற்றம் என்று நினைக்கையில் அத்தனை வருத்தம்.
“சரிப்பா, அந்தம்மா…” என்று ஒருவழியாக தானுமே உடைத்து பேசிவிடலாம் என்று துவங்க,
“நர்மதா அவங்க பேர். உங்களுக்கு தங்கச்சி மாதிரி தானே? பேர் சொல்லியே சொல்லுங்க…” என்று சொல்லியவன் அவரின் அதிர்வை கண்டு,
“நீங்க ஒன்னும் புதுசா சொல்லலையே. முன்னாடி தங்கச்சின்னு கூப்பிட்டீங்க தானே? அதுவும் இல்லாம உங்களை விட வயசுல சின்னவங்க தானேப்பா?…” என்றும் சொல்ல அயர்ந்து பார்த்தார் மகனை.
“பேசுங்கப்பா…” ஹரித்திரன் முகம் மாறாமல் அவரை பார்க்க,
“ஹ்ம்ம், ஆமா ஆமா…” என்று தலையாட்டிய நம்பி,
“அவங்க உன்கிட்ட எதுவும் பேசினாங்களா?…” என்றார்.
“ஏன்? உங்ககிட்ட எதுவும் பேசினாங்களா மண்டபத்துல?…” என்றான் பதிலுக்கு அவரிடம்.
“புவனா என்னால முடியலை. நான் என்ன சொல்லட்டும்?…” என்று மனைவியின் புறம் திரும்ப,
“என்னப்பா, நீங்க என்கிட்ட கேட்கும்போது நான் பதில் சொல்லனும்னா என்ன நடந்ததுன்னும் நான் தெரிஞ்சுக்கனுமே? லாவண்யா த்தை கூட்டிட்டு வரப்போ என்னவோ பேசிட்டிருந்தாங்க அவங்க. அதான் உங்ககிட்ட கேட்டேன்…” என்றான்.
“ஹ்ம்ம், வேற ஒண்ணுமில்லை….” என்று சொல்லிவிட்டு,
“நீ நீ எதுவும் பேசினியா ஹரி? இங்க நடந்த விஷயத்தை எதையும் சொன்னியா?…” என்றார் பதட்டமாய்.
தவறு தங்கள் மேல் இருக்கிறதென்று அவர்களுக்கு தெரியும் தான். ஆனாலும் அது தங்களுக்கு தெரியும் என்னும் விஷயம் தெரியுமா என்று தான் இப்போதைய கேள்வி.
“இப்ப என்ன தெரிஞ்சுக்கனும்? சுத்தி வளைக்காம பேசுங்க…” என்றான் ஹரித்திரன்.
“நான் அவங்களை திரும்ப நேர்ல பார்க்கிற மாதிரி இருந்தா கண்டிப்பா நடந்ததுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கறேன் ஹரி…”
“ஹ்ம்ம், சரி, அப்பறம்?…” என்றான் அடுத்து என்ன என்னும் பாவனையுடன்.
“உன் வாழ்க்கையும், எதிர்காலமும் கூட எனக்கு முக்கியம் தானே?…” என்ற நம்பி,
“பிள்ளைங்கன்னு வந்தா பெத்தவங்களுக்கு கவலை இருக்கும் தானே? இது ஒன்னும் புதுசு இல்லையேப்பா?…” என்றான் சாதாரணம் போல.
“ஹரி இங்க நடந்தது தப்பு தான். நம்ம வீட்டு ஆளுங்க நடந்துக்கிட்டதும் தப்பு தான். மன்னிப்பு கேட்கவும் சரி. உண்மையா உணர்ந்து தான் சொல்றேன். ஆனா எனக்கு உன் வாழ்க்கையும் முக்கியம். அவங்க பொண்ணு குடுப்பாங்கன்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை…” என்றார் நம்பி வேகமாய்.
“இதை சொல்லத்தான் இவ்வளோ பேச்சா?…” லேசாய் சிரித்துக்கொண்டவன் எழுந்து நின்றான்.
“என்ன பார்க்கறீங்க? இதுக்குமேல எந்த நம்பிக்கைல பொண்ணை குடுப்பாங்க. அந்த நம்பிக்கையை இந்த வீடும், நாமளும் எப்பவோ இழந்துட்டோம். திரும்ப அவங்க பொண்ணை உயிரோட எரிக்க அவங்க தயார் இல்லையாம்….” என்று சொல்லிவிட்டு திரும்பிவிட்டான் ஹரித்திரன்.
“ஹரி, ஹரி நில்லுப்பா…” என்று பதறி நம்பி எழுந்து வர,
“அதான் சொல்லிட்டேனேப்பா. இனிமே இந்த பேச்சு வேண்டாம்…” என்றான் அவரை பார்த்து.
“அப்படி எப்படி விடமுடியும் ஹரி? உன்னோட வாழ்க்கை. உனக்குன்னு ஒருத்தர் வேண்டாமா?…” என்றார் மகனிடம் சந்தனநம்பி.
“அதான் நீங்க இருக்கீங்களே?…” அத்தனை இலகுவாய் வந்தது ஹரித்திரன் பதில்.
“என்னப்பா சொல்ற? எங்களுக்கு அப்பறம்? உனக்கு துணையா, உன்னோட வாழ்க்கை துணையா?…” என்றவர்,
“நாங்க எவ்வளோ நாளைக்கு இருப்போம்? எங்களுக்கு பின்னாடி உனக்கு யார் இருப்பா? உன்னோட எதிர்காலம்?…” என்று துடித்து போய் அவர் கேட்க,
“எனக்கு நான் தான் துணை. வேற யார் வேணும்? ஏன் என்னால என்னை பார்த்துக்க முடியாதா என்ன?…” என்றவன் முகத்தில் மிளிர்ந்த அந்த புன்னகை.
பெற்றவரின் மனதை சில்லு சில்லாய் சிதறடிக்க சந்தனநம்பி நெஞ்சில் கை வைத்து பார்த்தார் மகனை.
“அவ்வளோ தானே? நான் போய் என் வேலையை பார்க்கறேன். புது டீம் வேற மாத்திருக்கு. நிறைய வொர்க் இருக்கு…” என்றவன்,
“ம்மா, எனக்கு ப்ளாக் காபி ப்ளாஸ்க்ல வேணும். ப்ளீஸ்…” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டான் ஹரித்திரன்.
மகன் சொல்லிவிட்டு சென்றதும் அவன் போகும் திசை பார்த்து நின்றவர் மனம் தாளமாட்டாமல் புவனாவிடம் திரும்பினார்.
“என்ன புவி இது? இவன் இப்படி சொல்லிட்டு போறான்?…” என்றவர்,
“இல்லை அந்த பொண்ணை தான் கட்டுவேன்னு சொன்னா நான் போய் பேசியாவது பார்ப்பேன். ஆனா எப்படி சொல்லிட்டு போறான் பாரு…” என்றார் ஆற்றாமையுடன்.
“அவன் இப்படி சொல்ற அளவுக்கு அவங்க குடும்பம் கஷ்டப்பட்டிருக்காங்க. நமக்குன்னு வந்தா தான் வலி தெரியும் இல்லையா? ஹரி சொன்ன மாதிரி எந்த நம்பிக்கையில பொண்ணை குடுப்பாங்க? கேட்டதும் குடுக்கற மாதிரி பணம், பொருளையா இழந்திருக்கிறோம். நம்பிக்கையை…”என்ற புவனா,
“சாகற வரைக்கும் மறக்கமுடியாதே? அதோட பொண்ணை குடுத்துட்டு தினம் தினம் இங்க இருந்து என்ன பிரச்சனை வருமோன்னு நெருப்புல நிக்க முடியுமா அவங்க?…” என்றார் சுளீரென்று தாக்குவதை போல.
“என்னம்மா, என்ன பண்ணிடுவோம்? இங்க என்ன சிங்கம் புலியா இருக்கு, அந்த பொண்ணை அடிச்சு தின்ன? நம்ம அப்படியெல்லாம் செய்யகூடியவங்க இல்லையே?…” என்றார் நம்பி.
“இப்பவுமா புரியலை உங்களுக்கு? மிருகங்களை கூட நம்பிடலாம். இங்க உறவுன்னு உங்க தம்பியும், அக்காவும் இருக்காங்க. அந்த பொண்ணோட சந்தோஷத்தை தின்னுடுவாங்க. அவங்கம்மாவோட நிம்மதியை தின்னுடுவாங்க. உறவாகறதுக்கு முன்னாடியே நம்ம பொண்ணு அவங்க உணர்வை கொன்னுட்டா…” என்ற புவனா,
“இதுக்கு மேலையுமா அவங்க நம்மளை நம்பி பொண்ணை குடுப்பாங்க? அப்படி எல்லாம் நீங்களும் நானும் நினைக்க போறதில்லை. ஆனா நம்மன்னா நாம மட்டும் இல்லையே? எல்லாரும் சேர்ந்து தானே நாம…” என்றார் வேதனையுடன்.
“புரியுது புவனா, அதுக்குன்னு அந்த பொண்ணை எதுவும் சொல்லுபோது நாம பார்த்துட்டா இருப்போம்? அப்படியெல்லாம் விட்டுடமாட்டோம்ல…”