நொடிகள் நிமிடங்களாக சம்ருதிக்ஷா இன்னும் அவ்விடம் விட்டு அசைந்தாள் இல்லை.
ஹரித்திரனும் நின்ற இடத்திலிருந்து அவளை பார்த்தபடி தான் நின்றிருந்தான். அது அவர்களின் அலுவலகம்.
வெகுநேரம் இங்கே இருக்கவும் முடியாதென்பதனால் ஆழ்ந்த பெருமூச்சுடன் வந்து தீக்ஷாவின் எதிரில் அமர்ந்தான் ஹரித்திரன்.
விழிகளில் நீர் கோர்த்திருக்க இமைகளை மட்டும் உயர்த்தி அவனை ஏறிட்டாள் தீக்ஷா.
“ஊஃப், இப்போ என்ன பிரச்சனை?…” என்றான் ஹரித்திரன் அலைபாயும் நெஞ்சத்துடன்.
இந்த வயதில், இத்தனை அலைப்புறுதல்கள். மனம் சலிப்பாய் உணர்ந்தது இந்த வாழ்க்கையோட்டத்தை நினைத்து.
கூடுதலாய் ஒரு தவிப்பு அவனுள் எழாமல் இல்லை. இந்தநேரம் தங்களின் திருமணம் முடிந்திருந்தால் என்னும் நினைவு அவனுள் ஒருவித குளிர்வை தந்ததோடு,
“ஹ்ம்ம், குழந்தைங்க கூட இருந்திருக்கும்…” இதழ்கள் சத்தமின்றி முணுமுணுத்தது அவளுக்கு கேட்காமல்.
மீண்டும் ஒரு அதிர்வு ஹரித்திரனுள். இது என்ன? வேண்டாம் என்று விலகி இருக்க நினைத்த தருணத்தில் என்று தலையை பிடிக்காத குறையாய் நினைத்தவன்,
“ஷிட் ஹரி…” என்று தன்னை தானே சத்தமாய் நிந்தித்துகொண்டான்.
அவனின் இந்த பேச்சில் இமைகளோடு முகத்தையுமே நிமிர்த்தி பார்த்தாள் தீக்ஷா.
அவளின் பார்வையில், எதையோ சொல்ல நினைக்கும் இந்த முகபாவனையில் ஹரித்திரன் சுதாரித்தான்.
“என்ன விஷயம்ன்னு சொல்லுங்க சம்ருதிக்ஷா…” அவன் அவனின் அதிகாரியாக பேச, அதுவரை தவிப்புகளுடன் போராடியவள் அந்த அழைப்பில் முகம் மாறினாள்.
“வெல், குட்…” என்று எச்சிலை கூட்டி விழுங்கியபடி தன்னை நிதானித்துக்கொண்டாள்.
சற்றுநேரத்தில் என்னவெல்லாம் தோன்றிவிட்டது? ஆம், அவன் மீதான எண்ணங்களை அவனிடம் வெளிப்படுத்திவிடும் அளவிற்கு அவளை உந்தி தள்ளியிருந்தது.
அதிலும் அந்த புகைப்படம், ஹரித்திரன் கைப்பேசியில் அவள் கண்ட புகைப்படம் தீக்ஷாவின் மனதை அசைத்து பார்த்திருக்க, இதோ அதனை முறித்து போட்டுவிட்டான் ஹரித்திரன்.
“நீங்க ஓகே தானே?…” மீண்டும் அவன் கேட்கவும், இப்போது கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டவள் திடமாய் நிமிர்ந்து பார்த்தாள்.
“யாப், ஓகே…” என்று சொல்லியதோடு ஒரு வீம்பு.
“எதுக்கு அந்த போட்டோவை ஸ்க்ரீன்ல வச்சிருக்கீங்க?…”என்றாள் அவனிடம்.
தன்னையே வேண்டாம் என்று விலகி செல்லுகையில் அந்த புகைப்படம் மட்டும் எதற்காம் என்னும் கோபம்.
அவன் மீது அதன் வெம்மை தணியாமல் இன்னும் கனன்றுகொண்டிருந்தது அவளின் காதலை போலவே.
“வாட்? கம் அகைன்…” ஹரித்திரன் புரியாததை போல கேட்க,
“உன்னையும் கொன்னுட்டு, என்னையும் கொன்னுடு. மத்தவங்களாவது நிம்மதியா இருப்பாங்க…” என்று சொல்லியவள் எழுந்து நிற்க,
“உட்கார் நீ…” என்றான் ஹரித்திரன்,
“என்ன சொல்ல போற? எனக்கு எதுவும் வேண்டாம். தெரிஞ்சுக்க அவசியமும் இல்லை. தெரிஞ்சு ஆகப்போறதும் இல்லை…” என்றவள் தன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள்.
“என்னை எதுக்குமே நம்பவேண்டாம். பிடிச்சதை இழுத்து பிடிக்க நினைக்கறேன். ஆனா வெறுப்பு, கோபமும் பிடிக்கிறதுக்கு மேல அதிகமா இருக்கு. என்னால முடியலை…” என்று பேசியவள் குரலில் விரக்தியின் விளிம்பு நிலை.
“இப்போ சமீபமா நீ எப்படி என்கிட்ட இருந்தியோ, அப்படி மட்டும் இரு. ப்ச், ஸாரி, இருங்க பாஸ். இதுதான், இது மட்டும் தான் சரி…” என்றதும் ஹரித்திரனுக்கு அவளின் மனநிலை புரிந்தது.
“ப்ளீஸ் லிசன். நான் என்ன சொல்றேன்னு கேளு தீக்ஷா…” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்.
ஆம், அளவுகடந்த சீற்றம். தன்னை, தன் எதிர்காலத்தை, தன் முடிவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கட்டிவைத்து அதில் அவர்களின் எண்ணங்களுக்கு மகுடம் சூட்டுகின்றனரே என்ற ஆத்திரம்.
காண்பிக்க முடியாதளவிற்கு அவனுள் அடைந்து கிடக்க இதோ, இந்தநொடி தீக்ஷாவின் மனப்போராட்டம் அவனையும் பேச வைக்க சொல்லிவிட்டான் நர்மதாவின் பேச்சை.
“வேற என்ன செய்ய முடியும் என்னால?…” என்றவன் அவளின் தீ பார்வையில்,
“கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு கேட்டா உடனே சரின்னு சொல்லிடுவியா நீ? இப்பவும் உன் பார்வைல நான் தப்பு. அந்த தப்போடவே இருந்து…”
“ஷட்அப் யூ…” என்றவள் தன் கோபத்தை இழுத்து பிடிக்கும் முன் மூச்சடைத்தது.
“தீக்ஷா…”
“இருந்துக்கோ. இருந்துக்கோ…” என்று கத்தியவள்,
“மத்த எல்லாருக்குமே உண்மையா இருக்கனும்ல. இருந்துக்கோ. ஆனா உன்னை மாதிரி உறுதியா என்னால இருக்க முடியாம இப்ப வரை நான் தள்ளாடிட்டு இருக்கேன் பாரேன். என் புத்தியை…” என்று தன் தலையில் அடித்துக்கொண்டவள்,
“இப்பவும் நான் நெருப்புல தான் நிக்கறேன். நடைபிணம் போல தான் வாழறேன். நீ ஒன்னும் எனக்கு புதுசா எதையும் தந்திட போறதில்லை. போடா…” என்றவள் கதவின் அருகே சென்றுவிட்டாள்.
“அவ்வளோ தான் உனக்கு. அந்த போட்டோவை டெலிட் பண்ணிடு. பண்ணனும்…” என்று எச்சரிக்கை போல அவனுக்கு உத்தரவிட அதுவரை அதிர்ச்சியில் உறைந்து நின்றவன் முகத்தில் மெல்லிய இளக்கம்.
“முடியாது…”என்றான் முகம் மாறாமல்.
“பிடிக்காத பொண்ணோட போட்டோவை வச்சிருக்கியே, உன் வயசுக்கு இதெல்லாம் ஒரு பொழைப்பா? நீயெல்லாம்…” என்று ஏக வசனத்தில் பேச ஹரித்திரன் முகத்தில் புன்னகை.
இரு கைகளையும் பேன்ட் பாக்கெட்டினுள் நுழைத்திருந்தவன் மேஜையின் முன் வந்து சாய்ந்து நின்றான்.
“பொண்ணுக்கு மாப்பிளையை பிடிக்காதாமா?…” என்றவன் கேள்வியில் மீண்டும் என்னவோ துவங்குவதை போலிருந்தது தீக்ஷாவிற்கு.
“ஆமா, சுத்தமா பிடிக்காது. உன்னை மாதிரி ஒருத்தனை பிடிக்கவே பிடிக்காது…”
“ஆனா எனக்கு பிடிச்சிருக்கே. பொண்ணுக்கும் பிடிக்கும்ன்னு தெரியும். மறைக்க முயற்சி பண்ணாதே தீக்ஷா…” என்றும் அத்தனை உறுதியாய் கூறியவனை, தீக்ஷா கோபமாய் பார்க்க, தீக்ஷாவின் அருகில் வந்தவன் கதவை இன்னும் பெரிதாய் திறந்து,
“முதல்ல இங்க இருந்து கிளம்புங்க சம்ருதிக்ஷா…” என்று அலட்சியம் போல கூறி சென்றான்.
ஆனாலும் ஹரித்திரன் முகத்தில் அவளின் உணர்வின் வெளிப்பாட்டில் அத்தனை நிம்மதி.
இப்போது அடுத்தவர்களை பார்த்து, என்னை விட்டுவிட்டாயே என்பதை போலான குமுறல் தானே அவளுடையது.
அவனால் அதை புரிந்துகொள்ள முடிந்தது. என்ன செய்யவேண்டும் என்று யோசித்தவனுக்கு, முதலில் ஹரிணி ஏன் அங்கே சென்றாள் என்று அறியவேண்டியதிருந்தது.
திருமணம் பற்றி என்றால் என்னவென்று ஒருவித பரபரப்பும் சூழ ஹரிணிக்கு அழைக்க முயன்றான் ஹரித்திரன்.
“அண்ணா…” என அவளின் குரல் கேட்டதும் இவன் பேசும் முன்,
“ஹரி உங்களை தான் தேடிட்டிருந்தேன்…” என்று குணாலும் அவனை தேடி வந்துவிட்டான்.