“இவ்வளோ நேரமா ருதி? என்ன டவுட்? ஆமா பாஸ் எதுவும் சத்தம் போட்டுட்டாரா என்ன? முகமே டல்லா கண்ணெல்லாம் சிவந்துபோய் இருக்கு?…” என்றாள் வினோதா.
“டவுட் தானே? க்ளியராகாது அது. ஏனா உன் பாஸ்க்கே பதில் தெரியாதாம்…” என்று சொல்லிய தீக்ஷா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க,
“வரவர நீ சரியே இல்லை ருதி. அநியாயம் பன்ற….” வினோதா குழப்பமாய் பார்த்தாள்.
“இங்க எதுவுமே சரி கிடையாது வினோ. அவங்கவங்க சூழ்நிலை எப்படி வளைக்குதோ அப்படித்தான் வளைவாங்க. சரி, தப்பு எல்லாம் குப்பைக்கு போகும். யாரும் யாரையும் பார்க்கமாட்டாங்க. அவங்க மனசு, உணர்வு எதுவும் பார்க்கமாட்டாங்க. எல்லாருக்கும் அவங்க சுயநலம் மட்டும் தான் பிரதானம். மத்தவங்க எப்படி போனா என்ன?…” என படபடவென்று பொரிந்து தள்ள வினோதா ஆவென்று பயந்து பார்த்தாள் தீக்ஷாவை.
தீக்ஷாவை இத்தனை தூரம் கோபப்பட்டோ, அதிர்ந்தோ பேசி பார்த்ததில்லை வினோதா.
ஆனால் இன்று அத்தனைக்கும் மேல் ஆக்ரோஷத்துடன் கண்ணில் கனல் பொங்க பேசியதை பார்த்து அதிர்ந்துவிட்டாள்.
“என்ன ருதி இது? என்னவோ லவ் பெயிலியர் மாதிரி…” கேலியாய் பேச்சை மாற்ற முயல, இன்னுமே தீக்ஷாவிற்கு வலியை தந்தது.
“நம்பிக்கை பொய்யா போனாலும் இப்படித்தான் இருக்கும் வினோ. நம்மை அறியாமலே குருட்டு நம்பிக்கை ஒன்னு வச்சிருப்போம். காலம் கடந்தாலும் சிலது நம்ம தாண்டி போகாதுன்னு. ஆனா மொத்தமா உடைச்சிட்டு போயிடும் தெரியுமா?…” என்றவள்,
“இதுல நானுமே விதிவிலக்கில்லை. நானும் தான் தப்பு. நானுமே என்னை பிடிச்சவங்க என் மேல வச்ச நம்பிக்கையை உடைக்க தான் செய்யறேன். அது புரியவும் செய்யுது. ஆனாலும் முடியலை. எந்த பக்கம் போகன்னு தெரியலை…” என்று சொல்ல,
“ருதி, என்ன இது? அமைதியா இரு…” என்று வினோதா சொல்லியும்,
“வேண்டாம்ன்னு நினைக்க நினைக்க மனசு அதை நோக்கி போகும்போது இன்னொருத்தவங்களோட நம்பிக்கை அங்கே சிதைஞ்சு போகுது. யார் பக்கம் நிக்க, எந்த நம்பிக்கையை காப்பாத்த, யாருக்காக உண்மையா இருக்கன்னு தெரியாம நான் படும்பாடு இருக்கு பாரேன். அதனால உண்டாகற ஸ்ட்ரஸ் இருக்கே…” என்றவள் பேசி பேசி வார்த்தைகள் குழற மயங்கி சரிந்தாள்.
“ருதி…” என்று வினோதா பதறி அவளை தாங்கிக்கொள்ள அவ்விடத்தில் இருந்தவர்கள் கூடிவிட்டனர்.
ஹரித்திரனும் வந்துவிட உடனடியாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாள் தீக்ஷா.
“இதென்ன பல்ஸ் இவ்வளோ தாறுமாறா ஏறுது?…” என்று மருத்துவர்கள் அவளை பரிசோதிக்க ஹரித்திரன் மனதிற்குள் செத்துக்கொண்டிருந்தான்.
இத்தனையிலும் வினோதா அவனிடம் தீக்ஷா பேசியதை வேறு பகிர்ந்திருக்க தானுமே அவளுக்கு எந்தளவுக்கு மனவுளைச்சலை தந்திருக்கிறோம் என்று புரிந்தது.
தீக்ஷா பேசிய நம்பிக்கை என்னவென்றும் தெரிந்தது அவனுக்கு. வெறுக்கும் தன் மீதான பிடித்தம் ஒருபுறம், அவளின் தாயின் வார்த்தைகள் ஒருபுறம் என்று அவள் அல்லாடிக்கொண்டிருப்பதும் புரிந்தது.
“இன்பார்ம் பண்ணிருக்கோம். அன்ட் அவங்க என்னோட பியான்சி தான்…” என்றும் கூற வினோதாவிற்கு மயக்கம் வராத குறை தான்.
“மயக்கத்துல இருக்காங்க. கொஞ்சநேரத்துல கண் முழிச்சிடுவாங்க. நீங்க போய் பாருங்க…” என்றதும், ஹரித்திரன் வினோதாவை கூட கண்டுகொள்ளவில்லை.
தீக்ஷாவை அனுமதித்திருந்த அறைக்குள் நுழைந்தவன் அவளின் அருகே ஸ்டூலை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டான்.
மார்பின் குறுக்கே கைகட்டியபடி அமர்ந்திருந்தவன் மனதினுள் அவள் வார்த்தைகளும், தவிப்புகளும் அனலாய் தகித்துக்கொண்டிருந்தது.
தன் நிலையை விட அவள் நிலை இன்னும் கவலைக்கிடம் தானே என நினைத்தவனுக்கு எந்த சூழ்நிலையிலும் இனி அவளை விட்டுத்தரும் மனநிலை இல்லை.
முகம் இறுகி போய் அமர்ந்திருந்தவன் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.
நர்மதாவின் பேச்சுக்கள் அவனின் முன் தடுப்பு சுவர் எழுப்பினால், தீக்ஷாவின் நிலை அதனை தரைமட்டமாக்கியது.
“இனி நீயே வேண்டாம்ன்னாலும் நான் விலக போறதில்லை தீக்ஷா…” என ஸ்திரமான முடிவிற்கு வந்துவிட்டான் ஹரித்திரன்.
“ஆத்தீ இங்க என்ன நடக்குது?…” என்று வெளியே நின்ற வினோதாவிற்கு நெஞ்சை பிடிக்காத குறை தான்.
மீண்டும் மீண்டும் நர்மதாவின் எண்ணிற்கு முயல அழைப்பு அங்கே செல்லவே இல்லை.
“பேசாம வீட்டுக்கே போயிருவோமா?…” என்ற யோசனையுடன் அங்கேயே இருந்தாள் வினோதா.
ஹரித்திரன் சொல்லியதில் நம்பியும், நம்பாத நிலை தான் அவளினது. தலைசுற்றி போயிருந்தாள்.
“இந்த நேரம் பார்த்து போன் ஆஃப்ல இருக்கு…” என்று நொந்துகொண்டாள் வினோதா.
———————————————–
ஹரிணி நர்மதாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் தான் பேசியதற்கு அவரிடம் என்ன பிரதிபலிப்பு என்று.
நர்மதா முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே அது உணர்வற்று தான் இருந்தது.
“நடந்த விஷயம் எல்லாம் நான் சொல்லிட்டேன். ப்ளீஸ், அண்ணா மேல எந்த தப்பும் இல்லை. சொல்ல போனா அண்ணாவுமே ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க….” என்றாள் ஹரிணி.
“இப்போ இதுக்கு நான் என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்கறீங்கம்மா?…” என்றார் நர்மதா அப்போதும் அவளை நெருங்கவிடாமல் விலகி வைத்து.
ஹரிணியும், லாவண்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள நிவாஷினி நடப்பதை எல்லாம் கவலையுடன் வேடிக்கை பார்த்தாள்.
சம்ருதிக்ஷாவிற்கு அவர்கள் வந்திருக்கும் செய்தியை அனுப்பிவிட்டு அவள் அழைக்கட்டும் என்று கைப்பேசியை டேபிளின் மீது வைத்திருக்க அது சார்ஜ் இன்றி உயிரிழந்திருந்தது.
அதை கவனிக்க முடியாதபடிக்கு ஹரிணி பேசிய பேச்சுக்கள் எல்லாம் திகைக்க செய்ய பார்த்தபடி நின்றிருந்தாள் நிவாஷினி.
தருண் அவர்களை கொண்டுவந்து விட்டுவிட்டு பேசட்டும் என்று வெளியே கிளம்பியிருந்தான்.
இப்போது பெண்கள் மட்டுமே அங்கிருக்க ஹரிணிக்கு எப்படியாவது தங்களின் நிலையை அவர்களுக்கு புரியவைத்துவிடும் அவதி.
லாவண்யா கேட்டதுமே உண்மையை முழுவதும் சொல்லியிருக்க இதனை எதிர்பார்க்கவில்லை அவர்.
“மன்னிப்பு கேட்கிறதை ஏற்கனவே தள்ளி போட்டுட்டீங்க. இதுக்கு மேல ஏன் பேசாம இருக்கனும்? இப்ப கஷ்டம் உங்க யாருக்கும் இல்லை. வாழவும் முடியாம, சேரவும் முடியாம தனக்கு தானே தண்டனை கொடுக்கற மாதிரி மாத்தி மாத்தி தண்டிச்சிக்கிட்டு இருக்காங்களே ஹரியும், ருதியும். அவங்களுக்கு தான்….” என்ற லாவண்யா,
“நீ என்னோட வா. முதல்ல அவங்களோட மனநிலை எப்படி இருக்குன்னு தெரிஞ்சுப்போம். பேசலாம். பேசினா ஆறாத விஷயமே இல்லை….” என்று மருமகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தார் லாவண்யா.
இப்போது ஹரிணி எல்லாவற்றையும் சொல்லியிருந்தும் நர்மதா அதனை பெரிதாய் நினைக்கவே இல்லை.
எங்களுக்கு இது அவசியமில்லை என்பதை போல தான் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
முதலில் ஹரிணி சொல்லட்டும் என்று தான் லாவண்யா மௌனம் காத்திருக்க இப்போதும் நர்மதா அதனை ஏற்காததில் வருத்தமாய் பார்த்தார்.
“இந்த விஷயத்துல நான் கொஞ்சம் பேசலாமா?…” என்றார் நர்மதாவிடம் லாவண்யா.
“நான் யாரையுமே குற்றம் சொல்லலையேங்க. இப்ப இது பேசவே தேவை இல்லைன்னு சொன்னேன். யாரையும் மன்னிக்கிறதுக்கு நான் என்ன பண்ணிட்டேன்? எதுவுமில்லை…” என நர்மதா சொல்ல,
“ஒரு சகோதரியா நினைச்சு சொல்லனும்ன்னு விரும்பறேன். கேட்கிறதுல தப்பில்லையே? உங்களை வற்புறுத்தவோ, மனசை மாத்தவோ நான் பேசலை. எனக்கு தோணும் சில விஷயம். உங்ககிட்ட சொல்லலாமேன்னு நினைக்கறேன். கண்டிப்பா அட்வைஸ் கிடையாது…” என்றார் புன்னகையுடன் லாவண்யா.