நர்மதாவின் பார்வையில் லாவண்யா என்ன நினைத்தாரோ ஹரிணியின் பக்கம் திரும்பினார்.
“ஹரிணி, நீயும் நிவாஷினியும் கடையில இருங்க. நான் பேசிட்டு வர்றேன்…” என்றார்.
“அத்தை…” என அவள் தயங்கி நர்மதாவை பார்க்க,
“அம்மாவை விட்டுட்டு நான் போகமாட்டேன்…” என்று நர்மதாவின் கையை பிடித்துக்கொண்டாள் நிவாஷினி.
“இங்க பாரும்மா, முன்னாடி நான் இங்க வந்தது ஒரு கஸ்டமரா தான். ஆனா இப்ப வந்திருக்கறது உங்களோட சொந்தமா. நீங்க அப்படி நினைக்கறீங்களான்னு தெரியலை. ஆனா நான் அப்படித்தான் நினைச்சு இங்க வந்திருக்கேன்…” என்ற லாவண்யா,
“என்ன நர்மதா, நான் சொல்றதுல உங்களுக்கு எதுவும் கருத்து வேறுபாடு இருக்காங்க?…” என்றார் அவரிடம்.
அன்பை கொடுத்து பாசத்துடன் நின்று அழைக்கும் அந்த உறவை நர்மதாவினால் உதற முடியவில்லை.
தங்களுக்கு துரோகம் இழைத்தவர்கள் மீதே எவ்வித குற்றமும் சொல்லாத நர்மதா, லாவண்யாவை பார்த்து லேசாய் தலையசைத்தார்.
“நிவா, நீ போய் கடையில இரு. அம்மா கூப்பிடுவேன்…” என்று சொல்லியவர்,
“நீயும் கிளம்பு ஹரிணி…” லாவண்யா சொல்லவும் மீண்டும் நர்மதாவின் அருகே வந்தாள் ஹரிணி.
“ப்ளீஸ், மன்னிப்பை தவிர கேட்க எங்ககிட்ட எதுவுமில்லை. மன்னிச்சிடுங்க…” என்று மீண்டும் மன்னிப்பை கேட்டுவிட்டு நிவாஷினியுடன் வெளியே சென்றாள்.
“சொல்லுங்க, என்ன பேசனும்?…” என்ற நர்மதா,
“இப்பவும் சொல்றேன். யாரையும் நான் கட்டுப்படுத்தி வைக்கலை. யாருக்காகவும் நான் இப்படி இருக்கலை. யாரையும் தண்டிக்கவும் நினைக்கலை…” என்று முதலிலேயே சொல்லிவிட லாவண்யா முகத்தில் புன்னகை.
“இங்க மனுஷங்களை காரணம்ன்னு சொன்னாலும், சொல்லக்கூடிய சூழ்நிலையில வச்சது விதின்னு தான் நம்பனும். யாருமே சரின்னு சொல்லலை. ஆனா நாம தவறா இருந்திட கூடாது பாருங்க…” என்ற லாவண்யா,
“ஹரிணியை திரும்ப மறுவீடு அழைச்சிட்டு வரப்போறப்போ தான் தெரியும் உங்க பொண்ணு தான் ஹரிக்கு பார்த்த பொண்ணுன்னு. அதுக்கு முன்னாடி ஹரிணி, தருண் நிச்சயம் முடிஞ்ச நேரத்துல என்னோட தங்கச்சி பொண்ணுக்கு ஹரி தம்பியை கேட்டோம்…” என்றார்.
“இதையெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?…” நர்மதா தவிர்க்க பார்க்க,
“ஜஸ்ட் ஒரு ஷேரிங்ன்னு வச்சுக்கோங்களேன்…” என்ற லாவண்யா,
“அதை பத்தி பேச என் வீட்டுக்காரரும், என் கொழுந்தனும் போயிருந்தாங்க. அன்னைக்கே ஹரி தன் மனசுல வேற யாரோ பொண்ணு இருக்கிறதாவும் சொல்லிருந்தார். அது உங்க பொண்ணுன்னு இப்ப தான் தெரிஞ்சது…” என்றார்.
“இதுக்கு நான் என்ன பண்ணட்டும்? இல்ல என்ன பண்ணனும்? சொல்லுங்க…” நர்மதா கேட்க,
“இன்னுமா நான் பேசறது உங்களுக்கு புரியலை?…”
“புரியாம இல்லைங்க. ஆனா இதுல முடிவெடுக்க வேண்டியது நான் இல்லை…”
“நர்மதா ப்ளீஸ், நடந்து முடிஞ்சது மிகப்பெரிய பிழை தான். அதுக்காக வாழ வேண்டியவங்களை, வாழ்க்கைக்காக காத்திருக்கிறவங்களை தண்டிக்கிறதை விட, தெரிஞ்சும் தெரியாம மௌனமா கடந்து போறது இன்னுமே தப்பில்லையா?…” என்றார் லாவண்யா.
“இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஒரு யூகம்ன்னு வச்சிக்கலாமே?…” என்றார் லாவண்யா.
நர்மதாவிற்கு அவரிடம் எப்படி புரியவைப்பதென்று தெரியவில்லை. ஆனால் அக்கறையாய் வந்தவரை அவமதிக்க தோன்றவுமில்லை.
அதைவிட தனியே சுமந்துகொண்டிருக்கும் பாரத்தோடு இளைப்பாற முடியாமல் நடந்தவருக்கு மரத்தின் நிழலை போல் தோற்றமளித்தார் லாவண்யா.
“இது பிள்ளைங்களோட எதிர்காலம். நம்ம கண்ணு முன்னாடியே அவங்க கஷ்டப்படறது சரியா? நான் இதை ஹரிக்காக மட்டும் பேசலை. அவங்க வீட்டுல பண்ணினது தப்பு தான். அதை ஹரி தீர விசாரிக்காததும், இத்தனை வருஷ இடைவெளியும் பெரும்தப்பு…”
“அதுக்காக அதே மாதிரி நாமளும் இருக்க முடியுமா சொல்லுங்க. இப்ப ஹரி நிறையவே உணர்ந்திருக்கான். உங்க பொண்ணை நினைச்சிட்டு நாலு வருஷமா வாழ்ந்திருக்கான்…” என்றார் லாவண்யா.
அவர் சொல்லியதை கேட்ட நர்மதாவின் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு மட்டுமே.
“நான் சொல்றது உங்களுக்கு புரியுதா நர்மதா? இன்னைக்கு நான் நியாயம் பேசறேன்னு பேசலாம். ஆனா வலியை அனுபவிச்சவங்களுக்கு மட்டுமே தெரியும் இழப்போட வீரியம் என்னன்னு….” என்று சொல்ல நர்மதாவின் முகமும் கொஞ்சம் கொஞ்சமாய் மாற துவங்கியது.
லேசாய் விழிகளில் நீர் படலம். அதனை மறைக்க முயன்றவர் மனதின் ரணம் இன்னும் ஆறாத வடுவாய்.
“உண்மை தான். கேட்கிறவங்களுக்கு அது ஒரு நிகழ்வு மட்டுமே. ஆனா அனுபவிச்சவங்களுக்கு தான் நிதர்சனம் புரியும். எங்களோட நிதர்சனம் எங்க எல்லாரையும் ரொம்பவே சாய்ச்சிடுச்சு. இதுக்கெல்லாம் ஆரம்பம்ன்னு பார்த்தா இந்த கல்யாண பேச்சு தான்…” என்றவர்,
“மனுஷங்க எப்போ வேணாலும் மாறுவாங்க. அதுக்கு சாவியா யார் இருக்காங்கன்றதை தீர்மானிக்கிறது சூழ்நிலை மட்டும் தான். விலகனும்ன்னு முடிவு பண்ணிட்டா பிடிச்சவங்ககிட்ட கூட பிடிக்காத காரணம் ஆயிரம் கண்டுபிடிப்போம். அப்படித்தான் எங்க மேல குறை பார்த்தாங்க என் மூத்தார் வீட்டுல…”
“உறவு விட்டு போக கூடாதுன்னு இழுத்து பிடிக்க நினைச்ச நாங்க அவங்களோட ஒவ்வொரு விஷயத்துலையும் நல்லதும், அக்கறையும் எங்கன்னு தேடி காரணம் கண்டுபிடிச்சு ஓய்ஞ்சு போய்ட்டோம். அது எவ்வளவு நாளைக்கு தாக்குப்பிடிக்கும்?…”
“ருதியோட கல்யாணம் பேச்சு வார்த்தையோட நின்னதனால குடும்பமே மனமுடைஞ்சு போனோம் தான். என் பொண்ணும் தான். அவளுக்கு அவ்வளோ பிடிச்சது அந்த பையனை. ஆனா அதுக்கு மேல அத்தனை அவமானத்துக்கு மேல அது சரிவராதுன்னு தெரிஞ்சதும் அவ மனசை மாத்திக்க முயற்சி பண்ணினா…”
“அதுவும் எங்களுக்கு தெரிஞ்சது. இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். ஒருவருஷம் போகட்டும்ன்னு தான் நாங்களும் தள்ளி வச்சிருந்தோம். சென்னைக்கு வந்துட்டு திரும்பினதுல இருந்தே என் கணவருக்கும், அவர் அண்ணனுக்கும் சின்ன சின்ன மனஸ்தாபம்….”
“உன்னால, உன் பொண்ணால நாங்களும் போய் அவமானப்பட்டு அடிவாங்கிட்டு வந்திருக்கோம்ன்னு சின்ன சின்ன விஷயத்துலையும் குத்திக்காட்டி பேசினாங்க. மூத்தவர் தானேன்னு என் புருஷனும் பெருசா மனசுல வச்சுக்கலை…”
“கோபக்காரர் தான், பரவாயில்லை விடு. அண்ணன் தானேன்னு சொல்லி சொல்லி விட்டுக்குடுத்து போனார். இந்தமாதிரி பேச்சுக்கள் தான் அங்க குடும்பம் ஒண்ணா இருக்க தூண்டுதலா இருந்தது…”
“எல்லாத்துலையும் அப்படி இருக்க முடியாதுன்றதை மனுஷங்களோட சுயரூபம் எங்களுக்கு காண்பிச்சு குடுத்துச்சு….” என்ற நர்மதா லாவண்யாவின் அருகில் வந்தமர்ந்தார்.
“என் பொண்ணுக்கு மறுபடியும் வரன் தேடினோம். அந்ததடவை நல்லா விசாரிச்சு கேட்டுட்டு தான் வீட்டுல பேசினோம். அப்போதான் என்னதான் உறவுன்னு நாம நினைச்சாலும் மத்தவங்களும் அதை நினைச்சா மட்டுமே அதோட மதிப்பு புரியும்ன்னு நாங்க தெரிஞ்சுகிட்ட காலம் அது…”
“மாப்பிள்ளை வீட்டுல சரின்னு சொல்லி வரதட்சணையா பெருந்தொகை கேட்டாங்க. எங்களால முடியாதது இல்லையேன்னு தான் சம்மதிச்சோம். ருதிக்கு எல்லாருக்கும் சொல்லும்போது தான் தெரியவந்தது. அதுவும் என் மூத்தார் போட்ட சத்தத்துல…”
கல் போன்ற பாவனையுடன் தான் இவற்றை எல்லாம் பகிர்ந்துகொண்டிருந்தார் நர்மதா.
“ஏற்கனவே பஞ்சாலை நஷ்டத்துல போகுது. இதுல எந்த காசை வச்சு அவளுக்கு நகை போட்டு கட்டி குடுப்பன்னு கேட்டதோட, என் பிள்ளைங்க தெருவுல போகவான்னு நிறையவே வார்த்தையை விட்டுட்டாங்க. என் பொண்ணும் கல்யாணமே வேண்டாம்ன்னு பரிதாபமா நின்ன என் புருஷனை பிடிச்சுக்கிட்டு சொல்லிட்டா…”
“எங்க நேரமோ என்னமோ தெரியலை. கொஞ்சநாள்ல பஞ்சாலையும் விபத்து. பயர் ஆக்ஸிடன்ட் ஆகிடிச்சு. அதுக்கும் காரணம் எங்க கவனக்குறைவுன்னு சொல்லி நஷ்டத்தொகையை எங்க பக்கம் பிரிச்சுவிட்டு அவங்க பணத்தை எடுத்துக்கிட்டாங்க…”
“இதென்னங்க அநியாயம்? ஒரு குடும்பமா தொழில் செய்யும் போது இது எந்தவகையில சரி வரும்? நீங்க கேட்கலையா?…” என்றார் லாவண்யா தாங்கமுடியாமல்.
“கேட்கவேண்டியவரே விடுன்னு சொல்லுபோது நான் என்ன கேட்க? பிள்ளைங்களை நினைக்கலை. எதிர்காலம் என்னாகும்ன்னு நினைக்கலை. எல்லாத்தையும் எதிர்க்க முடியாம, தனக்குள்ள ஏத்துக்கிட்டு தன்னை தானே தண்டிச்சு எங்களையும் விட்டுட்டு போயாச்சு. யாரை குறை சொல்ல?…”
“அது எப்படிப்பான்னு வாய் திறந்து கேட்கவேண்டியவருக்கு கேட்க விருப்பமில்லை. கேட்டு வாங்கனுமா, இருக்கறது போதும்ன்னு தாராளமா நினைச்ச பின்னாடி என்ன செய்ய முடியும்? என்னால அங்க போராட முடியாது. எல்லாம் முடிஞ்சது….”
“மொத்தமா கிளம்பி நானும் பிள்ளைங்களோட வந்துட்டேன். அதுக்குமேல அங்க இருக்க முடியும்ன்னு தோணலை. யாரை நம்பியும் நாங்க இல்லைன்னு எங்களை மட்டும் நம்பினேன். ஏனா இந்த காலத்துல யாரும் எதுக்கும் காரணமாகிட முடியாது இல்லையா?…” என்று சொல்லியவர் லாவண்யாவை பார்த்து,
“மனசு விட்டு பேச யாராச்சும் வேணும் தானே? உங்களுக்கு நான் இருக்கேன்னு நினைக்கும் போது எனக்கு சந்தோஷம் தான்…” என்ற லாவண்யா,
“இவ்வளோ தெளிவா பேசறீங்க. ஆனா ஹரியை புரிஞ்சுக்கலையே. நீங்க சொன்ன மாதிரி அவன் கருவியா இருந்துட்டான். கங்கா பண்ணின தப்பை தெரிஞ்சு திரும்ப உங்க முகத்துல எப்படி முழிக்கன்னு தெரியாம அவனுக்கவனே தண்டனை கொடுத்துக்கிட்டான். அப்படி விலகி போனது தான் அவன் அறிஞ்சு செஞ்ச தப்புன்னு நான் சொல்லுவேன்…” என்றார்.
“இந்த உலகம் யாரையும் நம்பி இல்லைன்னு நான் சொன்னதுக்கு காரணமே இதுதான்….” என்றவர் ஹரித்திரனிடம் தான் பேசியதை கூறிவிட்டு,
“அவங்கவங்க வாழ்க்கைக்கு அவங்க தான் போராடனும். போராட முடியலைன்னு உக்கார்ந்து வருத்தப்பட்டு எதுவுமாக போறதில்லை. நான் இப்படி சொல்லிட்டதால எனக்காக விலகி போவாங்களா என்ன? அப்போ அவங்களுக்குன்னு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டாமா?…” என்றார் நர்மதா.